Tuesday, 8 November 2016

ஆண்மையின் தவறான புரிதல்

#ஆண்மையின்_தவறான_புரிதல்
 
சமீபத்தில் ஒரு பெண் கணவரின் கடிதம் என்ற பெயரில், சராசரி ஆண்களின் கீழ்மையான மனநிலையை வெளிப்படையாய், சில வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார், ஒரு பெண் இப்படி எழுதலாமா என்றதோடு, அவரின் உள்நோக்கம், வெளிநோக்கம் என்ற விமர்சனங்களையெல்லாம் காண நேர்ந்தது!

உண்மையில் இந்த ஆண்கள் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேசுவார்களா? அப்படியென்றால் எப்படிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அப்படிப் பேசுவார்கள்? எந்த மட்டத்தில் உள்ளவர்கள் அப்படிப் பேசுவார்கள்?, யோசித்துப் பார்த்தால், பெண்களிடம் கேளுங்கள் என்று சொல்வேன்! ஆமாம், தினந்தோறும் வீட்டில் வதைபடும், பேருந்தில் வதைபடும், சாலையில் வதைபடும், பணியிடத்தில் வதைபடும் பெண்ணினத்துக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு, "தே...." என்றும், "தே பையன்" "தே மூ" என்றும் யாரை நோக்கி கூறினாலும், அதில் உள்ள குறிப்பு அந்த ஆணையோ பெண்ணையோ பெற்றவளையே குறிக்கிறது!

எப்போதும் பெண்மையைக் கொண்டு பெண்ணையே தூற்றும் போது, இதைப் பற்றிப் பெண்கள் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?

சாலையில் செல்லும்போது, திடீரென்று, ஏதோ ஒரு போர்னோ (நிர்வாண) படத்தை நம் காலடியில் போடுவார்கள், பெண்கள் ஆடை அணிந்து வாகனத்தில் செல்லும்போது, பயணிக்கும்போது, அவளுக்கே தெரியாமல், அவள் நெகிழ்ந்திருக்கும் ஆடையை அல்லது இவர்களுக்கு உவப்பில்லாத (அப்படிச் சொல்லிக்கொள்வார்களே ஒழிய, அதை ரசிக்கத் தவற மாட்டார்கள்) ஆடையை அணிந்திருந்தால், கலாச்சாரம் என்று அதைப் பொதுவெளியில் போட்டு விமர்சிப்பார்கள், அவ்வப்போது தம் நடுவிரலை காட்டி அசிங்கமாய் யாரோ ஒரு பெண்ணிடம் தம் வக்கிரத்தை வெளியிடுவார்கள்!

ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தால், தம் மீது தவறு இருந்தால், உடனடியாகத் தரக்குறைவான வார்த்தைகளில் பெண்ணையும் அவளைப் பெற்றவளையும் (கவனிக்கப் பெற்றவனை அல்ல) இகழ்வார்கள்! "ஓ + ஆத்தா" என்ற வார்த்தை மிகச் சகஜமாய்ப் பெரும்பாலான ஆண்களின் வாயில் இருந்து வரும், பெண்ணிடம் என்று இல்லை, சக ஆண்களிடமும் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்!

"ஓத்தா" என்பதைப் பிரித்து எழுதினால் அதிலும் "ஆத்தா" என்று பெண்ணை இகழும் பதமே வருகிறது!
இந்த வார்த்தைகளை எழுதுவது நாகரீகம் இல்லை என்றாலும் வேறு எப்படி இதைச் சொல்வது?

பொதுவெளியில் ஒரு ஆண் வயது வித்தியாசம் இல்லாமல் தன்னைச் சார்ந்த அல்லது சாராத யாரோ ஒரு பெண்ணிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசும்போது அந்தப் பெண்ணின் சுயம் பாதிக்கப்படும் போது அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும்? திருப்பி அதே போல் பேச வேண்டுமா? எழுதவதே தவறு என்று சொல்லும்போது, பேசினால் என்ன மாதிரி விமர்சனம் பெண்ணுக்கு வரும்? அப்படியே பேசினாலும் கூட, பெண்ணை இகழும் வார்த்தைகளுக்கு ஆண் பதம் என்ன?
 இதுவரை நாம் கேட்டறியவில்லை!

பொதுவெளியில் இப்படிப் பேசும் ஆண்களை, கீழ்மட்ட ஆண்கள்தான் என்று எண்ணிவிட வேண்டாம், "பீப் சாங், சூப் சாங்" எழுதிய நடிகர்கள் எல்லாம் அரசாங்கப் பள்ளியில் படிக்கவில்லை, தனியார் பள்ளிகளில் படித்த மரியாதைதான் அவர்கள் பாடல்களின் அடித்தளம்! அரசாங்கப் பள்ளி, தனியார் பள்ளி, படித்த பெற்றோர் படிக்காத பெற்றோர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் மட்டுமே ஆண்களின் வார்த்தை பிரயோகங்களுக்குப் பெரும் அடிப்படை இல்லை! ஓவ்வொரு வீட்டிலும் அப்பா என்பவர் தன் மனைவியை, மகளை, சகோதரியை, உறவுகளை,நட்பை எப்படி நடத்துகிறார், எப்படிப் பேசுகிறார் என்பதைத்தான் அவரின் ஆண் வாரிசு கற்கிறது, பள்ளியில், கல்லூரியில், அந்த ஆண் வாரிசின் சக ஆண் நட்புகளைப் பொறுத்து அவர்களின் வார்த்தை அகராதி, வன்மத்தின் அகராதி மேலும் உருப்பெறுகிறது, வளர்ப்பும் சூழலும் ஆணை, ஓர் பெண்ணின் மீதான அவன் வார்த்தைப் பிரயோகத்தை வடிவமைக்கிறது!

இதில் மோசமான பகுதி என்னவென்றால், அதை யாரும் கண்டிப்பதில்லை, ஆண் "ஆடையின்றித் திரிந்தால்", "பெண்ணை வன்புணர்ச்சி செய்தால்", "சிறுவயது பெண்ணைத் திருமணம் செய்தால்", "குடித்தால்", "புகைத்தால்", "கொலை செய்தால்", "திருடினால்", "விபத்து ஏற்படுத்தினால்", "பெண்ணைத் தரக்குறைவாகக் கிண்டல் செய்தால்", "பெண்ணின் விடியோவை எடுத்துக் கிழவி என்று கிண்டல் செய்தால்", "அந்த ஆண்ட்டி சூப்பர் பிகர்" என்று வக்கிரமான பதிவு போட்டால், எப்படி எதை ஆண் பெண்ணுக்கெதிராய்ச் செய்தாலும், அவையாவும் வெறும் "செய்தியே" ஆணின் வக்கிரம் விவாதப்பொருளாவதில்லை, ஆணின் மோகம், புகழ் தாகம், விளம்பர மோகம், வளர்ப்பு, கீழ்த்தரமான எண்ணம், அவனின் ஒழுக்கம் எதுவுமே விவாதம் இல்லை, அந்தச் செய்தி மட்டுமே பிரதானம்!

இதையெல்லாம் ஒரு பெண் செய்தால்? பெண் குடித்துவிட்டுக் காரோட்டி விபத்து ஏற்படுத்தினால், விபத்தைத் தாண்டி "அந்தப் பொண்ணு.." "பெண்" தான் செய்தி, பெண் குடிக்கலாமா? பெண் புகைக்கலாமா? பெண் ஆணின் கையைப் பிடித்து இழுக்கலாமா? பெண் வெளிப்படையாய் ஆணை விமர்சித்து, அதே தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து விமர்சிக்கலாமா?, பெண் ஆண்களை "அந்த அங்கிள் மொக்கை பிகர்" என்று சொல்லலாமா?, பெண் அலங்கோலமாய்த் திரியலாமா? இப்படி அரிதாய் நடக்கும் எந்த நிகழ்வென்றாலும், செய்தி என்பது அங்கே "பெண்" மட்டும்தான்!

சில தெருக்களில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அப்படியொரு வார்த்தைகளில் இகழும் போது, தன் மனைவியைத் தானே விலைமகள் என்ற பொருளில் உரத்துக் கூறி கீழ்நிலைக்குச் செல்பவனிடம், அவளின் வாழ்க்கை அவனுக்கு மனைவி என்ற உறவா அல்லது பணம் இல்லாத விலைமகள் என்ற உறவா என்ற சந்தேகம் வருவதுண்டு, மனைவியை இகழும் ஆண், தன் அம்மாவை எப்படி நினைத்துக் கொள்வான், தன் மகளை எப்படிப் பார்ப்பான் என்ற சந்தேகங்களும் அதையொட்டி வருவதுண்டு!

உளவியல் ரீதியாக இது ஆணுக்கு அதிர்ச்சி, பெண்ணின் கல்வியை முழுதாய் மறுக்க முடியவில்லை, பணியிடத்தில் அவளின் வளர்ச்சியைச் சகிக்க முடியவில்லை, எதையும் தடுக்க முடியாதபோது, பெண்ணின் மீதான ஆணின் அதிர்ச்சி, காழ்ப்பு, அவள் செய்தியாகும் போது, அவளையே செய்தியாக்கி வடிகால் ஏற்படுத்திக் கொள்கின்றனர்!

அந்தச் சில ஆண்களுக்கு மட்டுமே இது, "ஆண்களே அடுத்த முறை, மிகக் கீழ்த்தரமாகப் பெண்ணைப் பற்றி எழுதும்போது, அல்லது சாலையில், பொதுவெளியில், வீட்டில் பேசும்போது, ஒரே ஒரு நிமிடம் உங்களைப் பெற்றவளையும், சகோதரியையும், மகளையும், மனைவியையும் நினைத்துக் கொள்ளுங்கள், "தே ..." "ஓ ..." என்று எங்கோ யாரோ ஒருவரின் பெண்ணை நீங்கள் இகழும் போது, நீங்கள் ஒரு சரியான பெற்றோரால் வளர்க்கப்படவில்லை, உங்கள் நட்பு வட்டம் கீழ்தரமானது, உங்கள் கல்வி நிலை அடிமட்டம் என்றுதான் நீங்களே உங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறீர்கள், உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளும் அந்த நிலை மிகப்பரிதாபம்தான்!

நீயும் இந்தியனே!

குண்டும் குழியுமான ரோடுகளில்
பயணிக்கும்போது
சாலைகள் இல்லாத பாதைகளில்
உருளும் போது
சமையல் எரிவாயு உருளைக்கு
அதிகப்பணம் கொடுக்கும்போது
தீபாவளி, பொங்கலென்று
அரசு வருமானம் உள்ளவனுக்கும்
உழைத்த பணத்தை
உவப்பில்லாமல் தரும்போது

அவசர ஊர்தியின் பயணத்தையும் கூடத்
தேங்கவைக்கும் மந்திரிகளின்
அலுவல் செல்லும் போலி அவசரத்தைக்
காணும்போது
யாரோ ஒரு பெண்ணின் உறவுகளை
சாராயக்கடை வாசலில்
வீதியெங்கும் கடக்கும்போது
அரசு அலுவலகங்களில்
பிச்சைக்காரர்களைப் போல்
மக்களை நடத்தும் படித்த முட்டாள்களை
நோக்கும்போது
சாதியென்றும் மதமென்றும் நம் சக மனிதர்கள்
தாக்கப்படும்போது
விரும்பமில்லா மொழியைத்
தலையில் திணிக்கும் போது
எளிதில் நடந்துவிடும் குற்றத்தில்
நீதியை வேண்டினால் மட்டும்
நடையாய் நடக்க வைக்கும்
சட்ட அமைப்பின் சிலந்திக்கூட்டில்
சிக்கும்போது
மழை வெள்ளத்தில்
உயிர்களும் பொருட்களும்
அடித்துச்செல்லப்படும்போது
பார்க்கும் திசையெங்கும்
மழலைகள் பிச்சைக்காரர்களாய்
குழந்தைத் தொழிலாளர்களாய்த்
திரியும் போது
கல்வியும் மருத்துவமும்
பணத்தின் வசம் வாழும்போது
போராடுபவர்கள் தேச விரோதியெனச்
சித்தரிக்கப்படும் போது
மீண்டும் ஒருவனோ ஒருத்தியே வந்து ஒட்டுக்கேட்கும்போது
ஏதோ ஓர் இலவசத்தைப் பெற்றுக்கொண்டு
இத்தனையையும் கடக்கமுடிந்தால்
#நீயும் இந்தியனே!

தம்பி நீ கீழே இருந்தது போதும், மேல வந்துடு ராசா!

"ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர்களைத் தடுக்க முயன்ற காவலரின் கால் உடைந்தது, தவறி விழுந்த இளைஞர்கள் படுகாயம், வாகன ஓட்டிகள் மறியல், பின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விலகல்!" என்று செய்தி
சில நாட்களுக்கு முன்பு யாரோ ஒருவரின் பதிவாக, "ஹெல்மெட் அணியாவிட்டால் என்ன, அவன் மண்டைதானே உடையப்போகுது, காவல்துறைக் கண்டுகொள்ளக் கூடாது!" என்று ஒரு கோரிக்கை
மற்றொருபுறம் "பெருகும் விபத்துக்கள், காவல்துறையின் நடவடிக்கை என்ன?" என்று பொதுவழக்கில் காவல்துறைக்கு நீதிமன்றத்தின் கேள்வி!

காவல்துறை மீது எப்போதும் போலப் புகார்கள் ஒருபுறம் இருக்கட்டும், ஹெல்மெட் அணியாமலேயே இளைஞர்கள் செல்லட்டும், ஆனால் அவர்களாகவே பிற வாகனங்களின் மீது இடித்து விழுந்தாலும், அல்லது பிற வாகனங்கள் அவர்களின் வாகனங்கள் மீது இடித்து அவர்கள் விழுந்தாலும், அவர்கள் மண்டையுடைந்துக் காயமோ மரணமோ ஏற்பட்டால், மோதிய மற்றொரு வாகனத்தை வழக்கில் இருந்து விடுவிக்குமா சட்டம்?
"இருவேறு வாகனங்கள் மோதினால் பெரிய வாகனத்தின் மீதுதான் தவறு" என்ற ரீதியில் தான் இங்கே வழக்குகள் நடக்கும், சாலையில் மக்களும் உணர்ச்சிவசப்பட்டுப் பொங்கி, கிடைத்த வாகனத்தை அடித்து நொறுக்குவார்கள்!

"தலைக்கவசம் அணிந்தாலும் இறக்கிறார்கள்!" என்று ஒரு கும்பல் வாதம் செய்யும், பெரிய விபத்துக்கள் ஏற்படும்போது அதைத் தவிர்ப்பதற்கில்லை, எனினும் ஒரு சிறிய மோதலில் கூட நிலைகுலைந்துச் சாலையில் விழும் பைக்கோட்டிகள் தலையில் அடிபட்டு இறந்துபோவதுதான் அதிகம்!

பல வருடங்களுக்கு முன்பு என் பள்ளி நண்பனொருவன், குடும்பச் சூழ்நிலையில் பள்ளி இறுதியாண்டை மட்டும் முடித்துவிட்டு வேலைக்குச் சென்றான், தந்தை இறந்துவிட மனநிலை சரியில்லாத மூத்த தமைக்கையின் பொறுப்பையும் அவனே எடுத்துக் கொண்டு, இரண்டு குழந்தைகளும், மனைவியும், அம்மாவும் என ஒரு குடும்பத்தை அந்த வேலையைக் கொண்டே நிர்வகித்து வந்தான், எப்போதும் நிறுவனப் பேருந்தில் செல்லும் அவன், அன்றொருநாள், உடன் பணிபுரிந்த ஒருவனின் அழைப்புக்கிணங்க அவனுடன் பைக்கில் சென்றிருக்கிறான், ஒட்டியவன் தலைக்கவசம் அணிந்திருக்க இவனுக்குத் தலைக்கவசம் இல்லை, ஓட்டுபவருக்கு மட்டுமே தலைக்கவசம் என்பது இங்கே எழுதப்படாத விதிதானே? அந்த விதிதான், பின்னால் வந்த லாரியின் மூலம் நண்பனின் விதியை முடித்தது, வண்டியோட்டியவன் உயிர்பிழைக்க, பின்னால் இருந்தவன் தலையில் அடிபட்டு இறந்து போனான்!

அவன் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றபோது, மனநிலை சரியில்லாத அக்கா, பாசத்துடன் எங்களுடன் பேசியபோது, எல்லோருக்கும் கண்ணீர் வந்தது, மனைவி அதிகம் படிக்கவில்லை, ஒரு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றும் சாமர்த்தியமும் இல்லை, எங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவிட்டு வந்தோம், அவனின் மனைவி குழந்தைகளோடு அவளின் அம்மா வீட்டிற்குச் சென்று விட, அவனின் தமக்கையை ஏதோ ஒரு காப்பகத்தில் அவர்கள் சேர்த்துவிட்டதாக அறிந்தோம், ஒரு சின்ன விபத்து, ஒரு சின்ன அலட்சியம், ஒரு சகோதரியை அனாதையைப் போல் எங்கோ ஒரு காப்பகத்தில் விட்டது, இரண்டு சிறிய குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி, எல்லோருக்கும் ஒரு மீளாத் துயரைத் தந்துவிட்டுச் சென்றது!

"ஹெல்மெட் போடேன்" என்று சில நண்பர்களிடம் சொன்னாலும், "அட பக்கத்துக்குத் தெருதான்", "எனக்கு ஒன்னும் ஆகாது", "தலைமுடிக் கொட்டிடும்!"...இப்படி வியாக்கியானம் பேசும் நண்பர்களிடம் அதற்கு மேல் என்ன சொல்ல முடியும், அவர்களின் பாதுகாப்புக்கு வேண்டுதல் வைப்பதைத் தவிர?

ஒருவர் நான் நெடுஞ்சாலையில் சரியாய் சிக்னலில் இடதுபுறம் திரும்ப, வலதுபுறம் போக வேண்டியவர் அதிவேகமாய் வந்து ஓட்டுனரின் இருக்கையை இடித்து விழுந்தபோது, அந்தச் சத்தத்தில் அவர் மண்டையுடைந்து இறந்துவிட்டாரோ என்று பதட்டம்தான் எனக்கு முதலில் இருந்தது, நல்லவேளையாகத் தலைக்கவசம் அணிந்திருந்தார், பைக்கோட்டிகள் இப்படி வந்து விழும்போது, அவர்களால் எத்தனை பேருக்கு மனஉளைச்சல், பொருட்செலவு?

சென்னையில் ஓர் இடத்திற்கு, பேருந்தில், ஆட்டோவில், ரயிலில், ஷேர் ஆட்டோவில், ரிக்க்ஷாவில், கால் டாக்ஸியில் அல்லது நடந்தும் கூடச் செல்லலாம், அத்தனை வாகனங்கள் இருக்கிறது, இருந்தாலும் பெட்ரோல் டேங்கின் மீது ஒரு குழந்தை, அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே ஒரு குழந்தை, அம்மாவின் கையில் ஒரு குழந்தை என்று ஒரு குடும்பமே பைக்கில் செல்லும் காட்சிகள் சாலையில் சர்வசாதாரணம்!

சில மாதங்களுக்கு முன்பு கோட்டூர்புரத்தில், அண்ணா நூலகத்தைத் தாண்டி, கிண்டிச் செல்லும் திருப்பத்தில் உள்ள சிக்னலில், மூன்று லேன்கள் கொண்ட சாலையில் கார்கள் வரிசையாய் சிக்னலுக்காக நின்று கொண்டிருக்க, "டமார்" என்று அடுத்தடுத்து வாகனம் மோதிய சத்தம், ஒரு சிகப்பு நிற டாடா இண்டிகா கார் ஒன்று, இடதுபுறம் நின்றிருந்த என் காரின் பின்புறம் மோதி, பின் அப்படியே ஒடித்து அடுத்த வரிசையில் இருந்த இன்னோவாவை உடைத்து, பின்பு அதற்கு அடுத்த வரிசையில் இருந்த ஒரு மாருதியை இடித்து நின்றது, யாரோ ஒரு ஓட்டுநர், எந்த வரிசையில் காரை நிறுத்துவது என்று தெரியாமல், அத்தனை வேகமாய்ச் சட் சட்டென்று மூன்று வாகனங்களைச் சேதப்படுத்தி நிறுத்தினார், எல்லோரும் இறங்கிச் சண்டையிட, அந்த இடத்தில் குழந்தைக் குட்டிகளோடு ஒருவேளை இருசக்கர வாகனங்கள் நின்றிருந்தால் நிச்சயம் ஒரு பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் என்றே தோன்றியது!

யோசித்துப் பாருங்கள், இப்படி வாகனம் ஓட்டத்தெரியாமல் ஒட்டி, சட்டென்று இடித்துவிடுபவர்களை என்ன செய்யமுடியும், கோபமுற்று அடிப்பதோ, அந்த வாகனத்தை அடித்து நொறுக்குவதோ, விபத்தில் போன உயிரை மீட்காது! அதுவும் பெற்றோரின் அலட்சியத்தில், ஒரு பேருந்து செலவை அல்லது ஆட்டோ செலவை குறைக்க,குடும்பத்தையே பைக்கில் அத்தனை அலட்சியமாய்க் கூட்டிச்செல்லும் குடும்பத்தலைவர்கள் தாமே முதலில் கொலைகாரர்கள்?

நம்முடையைச் சாலைகள் சரியில்லை, நம்முடைய விதிமுறைகளை வகுத்தவர்களுக்கே எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று சொல்லும் சட்டம், அதைச் சார்ந்த அரசுதான், பார்க்கிங் வசதியுடன் பார்களை நடத்துகிறது, "பாருக்கு" வருபவன் வாகனத்தில் வருகிறான், குடித்துவிட்டு அந்த வாகனத்தில் தான் வீட்டுக்குச் செல்கிறான், காவல்துறை என்ன செய்யும்? அவர்களுக்கே இது குழப்பம்தான்!

முதன்முதலில் விபத்தில் மூளைச் சாவு ஏற்பட்டு உடல் உறுப்புகளைத் தானம் செய்த மாணவன் செய்ததும் தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஒட்டியதுதான், அந்த விபத்து உடல் உறுப்புத் தானம் பற்றிய விழிப்பை ஏற்படுத்தியது, ஆனால் தலைக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவு ஏனோ இன்னும் வரவில்லை!

பதினெட்டு வயது நிரம்பாத பிள்ளைகள் ஸ்கூட்டர்களை ஒட்டிக்கொண்டு செல்வது தினசரி நிகழ்வு, அது அவர்களின் பெற்றவர்கள் தந்தது என்றால், அவர்கள் அன்பற்றவர்களாகத்தானே இருக்க முடியும் ?
கணவன் தலைக்கவசம் இல்லாமல் சென்றால் அமைதியாய் இருக்கும் மனைவி அன்பற்றவளாகத்தானே இருக்க முடியும்? மனைவியைப் பிள்ளைகளைத் தலைக்கவசம் இல்லாமல் வாகனத்தில் அழைத்துச் செல்லும் கணவன் அன்பற்றவனாகத்தானே இருக்க முடியும்? இது எல்லாம் இல்லை, எத்தனை சொன்னாலும் கேட்பதில்லை என்றால், அவர்களைக் காவல்துறைக் கண்டிக்காமல் என்ன செய்யும்? கண்டிக்கும் காவல்துறைக்குப் பணத்தைக் கொடுத்து தப்பிக்க நினைப்பவர்கள், மீண்டும் மீண்டும் அதே தவறைச் செய்தால், அட கடவுள்தான் என்ன செய்வார், "தம்பி நீ கீழே இருந்தது போதும், மேல வந்துடு ராசா!", என்றுதான் சொல்வார்!

உலகத்திலேயே சிறந்த ஓட்டுநராக நாம் இருந்தாலும், நம் சாலைகள் சிறந்த சாலைகள் இல்லை, நம் சட்டம் சிறந்த சட்டம் இல்லை, நம் சாலையில் செல்பவர்கள் எல்லாம் சிறந்த ஓட்டுநர்களும் இல்லை, குடிக்காத "குடிமகன்களும்" "குடிமகள்களும்" இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும், குடும்பத்திற்கு ஏற்படும் மீளாத்துயரைக் கொஞ்சம் கற்பனை செய்துபார்த்தால் அடுத்த முறை வாகனம் எடுக்கும்போது தலைக்கவசத்தையும் எடுப்பீர்கள், உங்களுக்கு மட்டுமல்ல உங்களுடன் பயணிப்பவர்களுக்கும் சேர்த்து!

இறுதியாசையில்


முற்பகுதியை
பிறந்த வீடும்
பிற்பகுதியை
புகுந்த வீடும்
பறித்துக் கொண்ட
வாழ்க்கையை
மீட்டெடுத்துக்கொள்ள
தன் உற்றத் தோழியிடம்
அவள் உடலை
எரிக்காமல்
ஒரு கல்லறையில்
புதைக்கச் சொன்னாள்
கல்யாணி
அது மட்டுமாவது
தன் வீடாய்
இருக்கட்டுமென்ற
#இறுதியாசையில்!

Monday, 24 October 2016

‎அப்பா எனும் ஆண்


மேல்தளத்தின் வெற்றுப்பரப்பின்
சுவற்றில் சாய்ந்துக்கொண்டு
பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்த
தன் பக்கத்துவீட்டுக் கடைக்குட்டியும்
தான் பெற்ற ஆறு பெண்களின்
மூன்றாவது மகளின்
தோழியுமான மீனுவின்
கன்னம் கிள்ளி "படிக்கிறியா கண்ணு?"
என்று கேட்டான்
ஐம்பதின் விளிம்பிலிருந்த பரந்தாமன்
"ஆமாம் அங்கிள்" என்று சொன்ன
பன்னிரண்டு வயது குழந்தையின்
தோள் தட்டி கழுத்தில் வருடி
நெஞ்சுத் தொட்ட நொடியில்
அவன் கையைத்தட்டிச் சுவற்றில் தள்ளி
உமிழ்ந்துவிட்டு ஓடினாள் மீனு
மீனுவைக் காண வந்த
பரந்தாமனின் மகள்
அப்பா அப்பா என்று உருகி
எப்போதும் போல
அப்பாவின் புராணம் பாட
தன்னை விட வயதில் மூத்த
தோழியிடம் சொல்ல ஏதுமின்றி
அமைதியாய் சிரித்தாள் மீனு
அவ்வப்போது
வீட்டிற்கு அழைத்த தோழியின்
அழைப்பை மறுக்க
நட்பையே துறந்து
அப்பாவிடம் அழுது
வீடு மாற்றிப் போனாள் மீனு
எப்போதும் போல்
எல்லோரிடமும்
அப்பாவின் புராணம் பாடுகிறாள்
மீனுவின் தோழி பானு!

பிள்ளைகளைச் சூழ்ந்திருக்கும் உலகம்



இன்று ஒரு வேலையாகக் கோபாலபுரத்தில் இருக்கும் டி ஏ வி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகள் அமைந்திருக்கும் சாலையைக் கடக்க நேர்ந்தது, இருபக்கமும் வாகனங்களை நிறுத்தி, பெரும் போக்குவரத்து நெரிசல், சென்னையில் பள்ளிகள் அமைந்திருக்கும் எல்லாச் சாலைகளிலும் இதுதான் பிரச்சனை என்றாலும், சிறிய பிள்ளைகள் கூடத் தங்கள் வாகனத்துக்காக அப்படியும் இப்படியும் உடன் பெரியவர்கள் இல்லாமல் ஓடியது அச்சத்தையே தந்தது, அவ்வப்போது காணும் காட்சிகளைக் கண்டும், கேட்கும் நிகழ்வுகளைக் கொண்டும், சில கருத்துக்களைக் குழந்தைகளின் நலனுக்காகப் பகிர்கிறேன்;

1. பள்ளியின் வாகனம் என்றாலும் தனியார் வாகனம் என்றாலும், பெற்றவர் அளவுக்குப் பிள்ளைகளின் மேல் யாருக்கும் அக்கறை இருக்காது! உங்களுக்கு ஒரே பிள்ளை, அவர்களுக்குப் பத்தில் ஒன்று பதினொன்று, அவ்வளவே! அதுதான் விபத்துகள் நிகழும்போது பள்ளிகளின் மற்றும் காவல்துறையின் எண்ணமும்!

2. பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குப் பெற்றோரோ, அல்லது வீட்டில் உள்ள ஒருவரோ அவர்களைப் பள்ளியில் விட உடன் செல்லுதல் அவசியம்!

3. பத்தாவது படிக்கும் மாணவன், ஒரு தனியார் வேனில், விளையாட்டுக்காகப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றதை இந்தச் சனிக்கிழமை காண நேர்ந்தது, உள்ளே உள்ள அவனது மற்ற நண்பர்களுக்கு அது ஒரு விளையாட்டாய் இருந்தது! பெரிய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். வளர்ந்தப் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கவனியுங்கள்! முடிந்தால் அவர்களின் நட்புகளை அவ்வபோது சந்தித்து நட்புடன் பழகி, தேவையற்ற பழக்கங்களைக் களையலாம்!

4. உங்கள் பிள்ளைகளை வீட்டிலோ தெருவிலோ வாகனம் இறங்கிவிடும் நேரத்திற்கும் முன்பு நீங்கள் அங்கே காத்திருங்கள், உங்கள் பிள்ளையைப் பத்திரமாய்க் கையைப் பிடித்து இறக்கி, பாதுகாப்பான இடத்திற்கு வரும்வரை உங்கள் பார்வையை அவர்கள் மீதும் வாகனத்தின் மீதும் வைத்திருங்கள்! பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு வேகம் மட்டுமே இருக்கிறது, விவேகம் இல்லை!

5. தனியார் ஆட்டோவை ஏற்பாடு செய்தாலும், அதில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று நீங்கள் கண்காணிக்க வேண்டும். ஒரு பிள்ளையை ஒருவர் ஏற்றிவிட, காலியாய்ச் சென்ற ஆட்டோ, மற்றொரு தெருவில் நிறையப் பிள்ளைகளைப் புளி மூட்டை போல் ஏற்றி, ஆட்டோவின் சீட்டுக்கு மேல் உள்ள சிறிய இடத்தில் கூடப் பிள்ளைகளை அமரவைத்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பணம் மட்டுமே முக்கியம்!

6. பெண் குழந்தைகள் என்றாலும் ஆண் குழந்தைகள் என்றாலும் குட் டச் (நல்ல தொடுகை), பேட் டச் (கீழ்த்தரமான தொடுகை) பற்றிக் கற்றுக் கொடுங்கள்! ஓர் ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்ற பள்ளி வாகனத்தில், பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் அந்தக் குழந்தையைத் தொடக் கூடாத இடங்களில் தொட்டுத் துன்புறுத்தி இருக்கிறான். பிறகு பெற்றவர்கள் சென்று பள்ளியிடம் முறையிட, அந்த மாணவனின் அரசியல் பின்புலத்தால், பள்ளி நிர்வாகம் மெத்தனமாய் இருக்க, அந்தக் குழந்தையை வேறொரு பள்ளியில் சேர்த்தார்கள். வெளியாட்கள் என்றில்லை, பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் எந்த வயதினராலும் எந்தப் பாலினம் என்றாலும் நிகழ்த்தப்படலாம், கவனம் அவசியம்!

7. தெரிந்தவர் அறிந்தவர், பல காலம் எங்களுக்குத் தெரியும் என்று தனியார் ஆட்டோ ஓட்டுனர்களை, பிற வாகன ஓட்டிகளையும் மட்டும் நம்பி சிறு குழந்தைகளைத் தனியே அனுப்புவது தவறு.

என் மகன் ஒன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, அவனைப் பள்ளியில் விட்டுவிட்டு நான் திரும்ப, அப்போதுதான் வந்து நின்ற வேனில் இருந்து, மகனின் நண்பன் இறங்கும்போது கீழே விழுந்தான், அவன் விழுந்ததைக் கவனிக்காமலோ அல்லது கவனித்தும் அந்த வாகனம் சென்று விட்டது, விழுந்த வேகத்தில் அந்தப் பிள்ளை நடைபாதையில் வாந்தி எடுக்க, அவனுக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவன் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களிடம் எந்த அக்கறையையும் இல்லை! சில வருடங்கள் கழித்துச் சமீபத்தில் பேசியதில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அந்தத் தோழி அவர்கள் வீட்டில் இருந்து தனியே வர அனுமதியில்லை என்றது சற்றே விந்தையாக இருந்தது! யாரோ ஓர் ஓட்டுனரை நம்பி, ஏதோ ஒரு வாகனத்தை நம்பியே அந்தப் பிள்ளை இதுநாள் வரை பயணிக்கிறான்! செல்வம் போனால் சேர்த்துக் கொள்ளலாம், குழந்தைகளுக்கு நேரமில்லையெனில், அவர்களின் பாதுகாப்புக்கு உடன் வர மதம் பெரியவர்கள் பெண்ணுக்கு அனுமதி தரமாட்டார்கள் எனில் பிள்ளைகள் எதற்கு?

எல்லாவற்றையும் தந்தைதான் செய்ய வேண்டும் என்று இல்லை, உங்கள் வீட்டு பெண்களுக்கும் சுதந்திரம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

8. பன்னிரண்டு வயதிற்கும் அந்தச் சிறுமிக்கு, என் பிள்ளைகளுக்காக நான் பள்ளியில் காத்திருந்த போது, அந்தப் பெண்ணின் அருகில் வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்ணின் தோளில் கைவைத்து, பின் கன்னத்தைக் கிள்ளி, "ஏண்டி கழுதை, இங்கே நிக்குறே, சனியனே வா!" என்று அழைத்தான், என்னால் முடிந்தது அன்றைக்கு அவனைக் கண்டித்தது, ஆனால் இதுபோலத் தரக்குறைவாக எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளிடம் பேசுகிறார்கள், தொடுகிறார்கள் என்று உங்கள் பிள்ளைகளிடம் கேட்கிறீர்களா? அவர்கள் மதிப்பெண் என்று மட்டும் கேட்க முடிந்த உங்களுக்கு, பள்ளியில் அவர்கள் படும் அவதியையும், வெளியில் படும் அவதியையும் கேட்டு தெரிந்து, அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவைகளைச் சீர்ப்படுத்துங்கள்! இல்லையெனில் வருங்காலத்தில் துன்பமே மிஞ்சும்!

9. சமீபத்தில் பத்திரிகையில் ஒரு நிகழ்வைப் படித்தேன், அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்ல, அப்பா இரவு நெடு நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்ப, அம்மாவும் நெடுந்தூரம் பயணம் செய்து மாலையில் வரும் போது, மிகுந்த சோர்வில் தன் மக்களிடம் நேரம் செலவிட முடியாமல், வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு உறங்கிவிடுவாராம்.

தன் பெண்ணைப் பள்ளி விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு முதிய உறவினர் ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்று விடுவது தின வழக்கம்! கொஞ்ச நாளாய் மகள் அம்மாவிடம், "அம்மா என்கூடப் பேசு, நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல, "நாளைக்கு நாளைக்கு" என்று தட்டிக் கழித்திருக்கின்றனர்.

சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த முதிய உறவினர் வீட்டுக்குச் செல்ல மறுத்த மகள், தன் அம்மாவிடம் பூனைக்குட்டிகளை வாங்கித் தர சொல்லி அடம் பிடிக்க அம்மாவும் வாங்கித் தந்திருக்கிறார்! பூனைக் குட்டிகள் வந்த சில நாட்களில் மகளிடம் பெரிய மாற்றம், அது அம்மாவுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. இருந்தாலும் மகள் வளர்க்கும் பூனைகளைக் காணும் பொருட்டு அவள் அறைக்குச் செல்ல, அங்கே அந்தப் பூனைக் குட்டிகளைச் சங்கிலியில் பிணைத்தும், ஒன்றின் காதுகளை வெட்டியும், குட்டிகளின் உடல் முழுதும் குண்டு ஊசியால் குத்தியும், அதன் ரோமங்களைத் தீய்த்தும் வைத்திருந்திருக்கிறாள், பக்கத்துக்கு வீட்டில் உள்ள பெண்மணிகளும் அவளிடம் வந்து, "உன் மகள் அந்தப் பூனைகளைக் கொடுமை படுத்துகிறாள், இப்படியே விட்டால் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்!" என்று சொல்ல, அப்போதுதான் அம்மாவுக்கு மகளின் மனநிலைப் புரிந்தது!

ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல, மகள் தன்னை அந்த முதிய உறவினர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும், தன் அம்மா தன்னிடம் காது கொடுத்து, பேச மறுத்ததாகவும், அதனால் அந்த முதிய உறவினரின் நினைவு வரும்போது, இந்தப் பூனைக்குக் குட்டிகளைக் கொடுமைப்படுத்துவது அவளுக்கு அந்த உறவினரையே துன்புறுத்துவது போலத் தோன்றுவதால் அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்லி இருக்கிறாள்!

உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் காதுகளும், மனமும் நேரமும் வேண்டும், இல்லையென்றால் ஏதோ ஒரு உயிர் உங்கள் பிள்ளைகளின் துன்புறுத்தலுக்கு ஆளாகும்! நாயை கல்லால் அடிப்பது, பூனையைத் துன்புறுத்துவது, பட்டாம் பூச்சியைப் பிய்த்து எறிவது என்று பிள்ளைகள் செய்யும் செயல்களை ஊக்குவிக்காதீர்கள், அது அவர்களின் மனச்சிதைவின் ஆரம்ப அறிகுறி! இப்படியே வளரும் பிள்ளைகள் சிறந்த கணவனாகவோ, மனைவியாகவோ ஆதல் அரிது!

10. வெளியில், தெருவில், பக்கத்துக்கு வீட்டில் விளையாடச் செல்லும் பிள்ளைகளிடமும் கவனம் அவசியம்!

11. இன்று மொத்த எலக்ட்ரானிக் பொருட்களையும் பிள்ளைகளிடம் கொடுக்கிறீர்கள், அதில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கிறீர்களா? அதில் அவர்கள் நல்லதையும் தெரிந்து கொள்ளமுடியும், தேவை இல்லாத குப்பைகளையும் காண முடியும், வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

12. வெளி உலகை, பாதுகாப்பு நிறைந்ததாக நாம் மாற்ற முடியாது, முடிந்தவரை நம்மில் இருந்து வந்த உயிரை, நாம் சரியாக வழிநடத்தலாம், பாதுகாப்பை உறுதி செய்யலாம்!

Thursday, 29 September 2016

நட்பு


எதற்கோ
அழுதழுது வீங்கிய
இமைகளைக் கழுவி
பூச்சிக் கடித்ததென்றும்
உறக்கமின்மையென்றும்
ஒவ்வாமையென்றும்
சொல்லக் காரணங்களுண்டு
ஏனையோரிடம்

விழிவட்ட வளைவிலிடும்
மையை
இமைகளின் மேலோரத்தில்
மெலிதாய் வரைந்து
மிகக் கவனமாய்
செய்யப்பட்ட
ஒப்பனைகளுடனும்
ஓட்ட வைத்த புன்னகையுடனும்
எப்படிச் சென்றாலும்
படித்து விடுகிறாள்
உயிர்த்தோழி
விழியினூடே ஆழ்மனதை

"அழுதியா என்ன?"
அவளின்
ஒற்றைக் கேள்வியில்
உதிர்ந்துவிடுகிறது 
ஒப்பனைகள்!!

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...