Monday, 4 August 2014

மழை வரும் வேளை!

வீசிச் சென்ற
நெருப்பின் கங்குகளை
சில பன்னீர்த் துளிகளில்
அணைக்க முயல்கிறாய்
நான் வடுக்களைச் சேகரிக்கிறேன்
உனக்கு ஓர் அழகிய கோலமாக்க

கற்களை வீசி 
இடறச் செய்த என் பாதையில் 
சில ரோஜா செடிகளைப் பதியமிடுகிறாய்
நான் முட்களைச் சுமக்கிறேன் 
உனக்கு மலர்களைப் பரிசளிக்க

வெடிகளை வீசி 
தகர்த்திட்ட மனக்கோட்டையில் 
அன்பின் அடித்தளம் எழுப்ப விழைகிறாய்
நான் காற்றில் நச்சைக் களைகிறேன் 
உனக்கு அன்பையே சுகந்தமாக்க

காற்றாய் புயலாய்ச் சுழன்றடிக்கிறாய்
அவசரமாய்த் தழுவி செல்கிறாய்
புயல் ஓய்ந்து - மழையாய்
நீ வரும் வேளையில்,
அன்பே, என் பயணம்
காற்றில் சிதைந்த மலராய்
எப்போதோ தொடங்கிவிட்டிருக்கலாம்!
 

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...