Wednesday, 12 April 2017

லஞ்சம்

KTS எண்டர்பிரைசஸில் இருந்து சிலிண்டர் போட வரும் இளைஞர், பில்லுக்கு மேலே இருபது ரூபாய் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள் என்று கேட்கிறார், முதல் மாடியில் ஐம்பது ரூபாய், அதற்கு மேல் நூறு ரூபாய் என்று இந்த "குறைந்தா போய்விடுவீர்கள்" வசனம் அப்படியே தொடரும், இந்த சிலிண்டர் விஷயத்தில் நீ தலையிடாதே என்று வழக்கம் போல் அம்மாவின் உத்தரவு!

யோசித்துப்பாருங்கள், இருபது நூறு ரூபாய் என்பதுதான் அவரவரவர் தகுதிக்கேற்ப ஆயிரங்களாக, லட்சங்களாக, கோடிகளாக ஊழல் பாம்பின் படமாக தலைவிரித்தாடுகிறது, புற்றீசல் போல பெருகி தேசத்தை அரித்துக்கொண்டிருக்கிறது! 

கோடிகளில் நீ கல்வி நிறுவனம் அமைக்க, வியாபாரம் தொடங்க எனக்கு சில கோடிகள் கொடுத்தால் குறைந்தா போய்விடுவீர்கள் என்று அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கேட்பார்கள், கோர்ட்டுக்கு எதற்கு அலைய வேண்டும், சில நூறு ரூபாய் கொடுத்தால் அலைச்சல் மிச்சம் என்று போக்குவரத்து துறை சொல்லும், பாலம் கட்ட, சுரங்கம் வெட்ட, கட்டிடங்கள் கட்ட இப்படி பெரியதாய் நடப்பதை ஊழலென்றும், சிறிய அளவில் நடப்பதை அன்பளிப்பென்றும் சொல்ல பழகிக்கொண்டோம்!

"எப்படியும் கொள்ளையடிக்கப் போறானுங்க, அதுல சில ஆயிரம் நமக்கு கொடுக்கும் போது, வாங்குறதில் என்ன தப்பு?" என்று ஆர் கே நகர் கேட்பது போலாத்தான் இந்த தேசத்தில் பெரும்பான்மையோரின் மனநிலை!

பிரச்சனை எப்போது வெடிக்கும் என்றால், அன்பளிப்பு, ஊழல், திருட்டு, லஞ்சம் என்று "பிச்சைக்கு" பல்வேறு பெயரிட்டு வளர்த்துவிட்டப் பிறகு, ஒரு இக்கட்டான நேரத்தில் "பிச்சை" கிடைக்கவில்லை என்று அப்பாவிகளின் உயிர் போகும்போது, வேலைவாய்ப்பு மறுக்கப்படும் போது, கல்வி மறுக்கப்படும் போது, சில அயிரங்களுக்கு விற்ற ஓட்டுக்களுக்கு ஈடாக இந்த தேசத்தின் வளங்கள் சுரண்டப்படும்போது, நாடே சுடுகாடாய் மாறும்போது, மழைப்பொய்த்து விவசாயிகள் கோவணத்தாண்டிகளாய் தெருவில் நிற்க, ஆளும் வர்க்கம் அதே தமிழினத்தின் தலைமைகளும் ஏஸி காரில் பவனி வரும்போது வெடிக்கும், மக்களுக்கு வலிக்கும்!

தமிழகம் என்ற தேசத்தில் "வலி" என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரையும் தாக்கும்போதே "பிச்சை" என்பது ஓட்டுக்காக வாங்கினாலும் பிச்சைதான் என்று மக்களுக்குப் புரியும்!

அதுவரை, "இந்த அன்பளிப்பில் குறைந்தா போய்விடுவீர்கள்?" என்ற பிச்சைக்கார மனநிலையை விட்டு மனிதர்கள் வெளியே வரமாட்டார்கள்!
சாலையில் முதிய வயதில் வறியவர் ஒருவர், பசிக்காக பிச்சையெடுத்து உண்கிறார், அதே சாலையில் பெரிய அளவிலான பிச்சையில் கிடைத்த பென்ஸ் காரில் யாரோ ஒரு அரசியல் தந்திரி போகிறான், முந்தைய வறியவரை எனக்கு மரியாதையோடு விளிக்கத்தோன்றுகிறது!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...