Wednesday, 12 April 2017

வருங்கால தேசத்தை போராட்டங்களில் மட்டுமே காப்பாற்ற முடியும்

ஒன்று நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் இல்லையென்றால் தமிழகம் அழிய வேண்டும் என்று நினைக்கிறது போலும் மத்திய அரசு, அணுவுலைகள் ஆரம்பித்து, தங்களுக்கு வேண்டாம் என்று பிற மாநிலங்கள் சொன்ன அத்தனை திட்டத்தையும் தமிழகத்தில் திணிக்கிறது!

மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களே பெரும்பான்மை, தனியாரில் இருந்து அரசு எந்திரம் வரை மக்களின் மொழி மற்றும் மாநில உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்து ஒன்றுப்பட்டு நின்று மாநிலத்தை பாதுகாத்துக்கொள்கிறது!

தமிழகத்தில் நிலைமை தலைகீழ், அரசு எந்திரங்களில், அதிகாரங்களில் சிறிது சிறிதாக மற்ற மாநிலத்தவர் புகுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள், ஆள்பவர்களுக்கு அவர்களின் பதவியையும் சொத்துக்களையும் காப்பாற்றவே கவலை, செய்த ஊழல்கள் அவர்களை மிரட்டி வைத்திருக்கிறது, அல்லது அழிவுக்காக பேசப்பட்ட பேரம் கண்ணை மறைக்கிறது! 

"எது எப்படி இருந்தாலும் தமிழகத்திலிருந்து நியூட்ரினோ திட்டத்தை மாற்றும் எண்ணமேயில்லை அதை செயல்படுத்தியே தீருவோம்" என்று அத்தனை அழுத்தமாக சொல்லும் மத்திய அரசு, வேறு எந்த மாநிலத்தை நோக்கியாவது இப்படிச் சொல்ல முடியுமா? குறைந்தபட்சம் "காவிரி ஆணையத்தை அமைத்தே தீருவோம், கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் தந்தே ஆகவேண்டும் என்று தன் சுட்டுவிரலை நீட்டமுடியுமா? " தமிழகத்தில் மட்டும்தான் குள்ளநரிகள் ஆட்டம் போடும், இங்கே ஆடுகள் சிதறிக்கிடக்கின்றன, ஆடுகளுக்கு காவலாக ஓநாய்கள் ஆட்சி செய்கிறது! தண்ணீர் இல்லையென்றால் தரமாட்டோம், விவசாயம் அழிந்தால் என்ன வளங்களை உறிஞ்சிக்கொள்வோம் என்ற ரீதியில் தமிழகம் நடத்தப்படுகிறது!

இங்கே மக்கள் போராடினால் காவல்துறையும் அதை தனிப்பட்ட போராட்டமாகவே காண்கிறது, இந்த மாநில மண்ணைக் காப்பாற்றும் போராட்டம் எல்லோருக்குமானது என்று அதிகார மையமும் மக்களும் உணர்வதில்லை, மண்ணிற்கான போராட்டங்களில் கூட சாதியம் புகுந்தப்பட்டு மக்களைப்பிரிக்க மத்திய மத அரசு காய் நகர்த்துகிறது! சிதறிக்கிடக்கும் மக்களை ஒன்றுதிரட்டவே இங்கு போராட வேண்டிய நிலைதான்! ஒருவேளை இந்தப்போராட்டங்களில் தமிழக மக்கள் தோற்றுப்போனால் தமிழகம் முழுமையான அடிமை தேசமாக மாறிவிடும்!
மீண்டும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் சிக்கியது போல், மத்தியத்தின் மதவாத ஆட்சியில் காலனியாக தமிழகம் சிறிது சிறிதாக மாற்றப்பட்டு, சுதந்திரத்திற்கு முன்பான அத்தனை கொடுமைகளும் மீண்டும் நிகழலாம்!

கல்வியும் வெளிச்சமும் மக்களின் அவசியத்தேவை, எந்தக்கட்சி சாதியப்பாகுபாடுகளுக்கு அவசியமின்றி, அனைவருக்கும் "தரமான கல்வி" "இலவசம்" என்று சொல்லி செயல்படுத்துகிறதோ, அந்தக்கட்சி மட்டுமே தமிழக மக்களுக்கு அறிவு வெளிச்சம் தரமுடியும், அந்த வெளிச்சம் பட்டித்தொட்டி முதல் பாய்ந்து விட்டால், அதன்பிறகு "பகுத்தறியும்" பண்பை மக்கள் பெற்றுவிடுவார்கள்!

ஆனால் இங்கே பயணம் அதைநோக்கியதாக இல்லை! எதையெதையோ புறக்கணிக்கும் மக்களுக்கு சாராயத்தை புறக்கணிக்க முடிவதில்லை, ஒன்றில் ஊறிப்போனபின் விட்டுவிடுதல் கடினம் என்று மக்கள் நினைப்பதுபோல, ஆட்சியாளர்களும் ஊழலில் ஊறிப்போய் கிடக்கிறார்கள்!
கடுமையான சட்டங்களில் முதலில் நம் தேசம் துபாயைப் போல் மாறி, பின் படிப்படியாக சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட ஜப்பானிய மக்களின் தேசமாக மாற வேண்டும்! அந்த நாளை படிப்படியான போராட்டங்களால் என்றாவது ஒரு தலைமுறை காண நேரிடும், அதுவரை இந்த மாநிலத்தை, வருங்கால தேசத்தை போராட்டங்களில் மட்டுமே காப்பாற்ற முடியும்!
#கூடங்குளம் #கெயில் #நியூட்ரினோ #ஹைட்ரோகார்பன் #மீத்தேன் #காவிரி #முல்லைப்பெரியாறு

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...