Monday, 21 March 2016

காட்சிப்பிழை_மனிதர்கள்‬

தினந்தோறும் விழுந்து
காயப்படும் தாழம்பூவின்
நறுமணம் காயப்படவில்லை
சிதைத்து மிதித்து அறியாமல்
செல்லும் மனிதர்களையும்
அது சபிக்கவில்லை
நடைபாதையில்
அழுக்கடைந்த உடையில்
அமர்ந்திருக்கும்
அந்த வறியவன் மட்டும்
அனுதினமும்
அதைக் கையில் ஏந்துகிறான்
ஒரு நீண்டப் பெருமூச்சில்
தான் சாய்ந்திருக்கும் அந்த
தாழம்பூ மரத்தடியிலேயே
அதை வைத்து வணங்குகிறான்
அவனை மனநிலைப் பிறழ்ந்தவன்
என்று பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்


வயிறு ஒட்டிய நாயது
ஏதோ ஒருவனின் கல்லின்
வன்மத்தில் நொண்டியது
யாரோ ஒருவனின் காமத்தில்
கர்ப்பப்பை நிரம்பிய பெண்ணொருத்தி
பஞ்சடைந்த விழிகளுடன்
பராரியாய் அந்தப் பாதையோரத்தில்
அமர்ந்திருக்கிறாள்
சூல் கொண்ட கருணையுடையவள்
அந்த நாயினை அணைத்து
ஏதோ பேசுகிறாள்
சிலர் விட்டெரிந்த உணவினை
அதற்கும் பகிர்ந்து சிரிக்கிறாள்
அவளைப் பிச்சைக்காரி என்று
பரிகசித்துக் கடக்கிறார்கள்

ஏதேதோ காரணம் சொல்லி
ஈயென ஈரப்பவர்களுக்கெல்லாம்
ஈயும் மனிதர்களையும் ஏமாளிகள் என
பட்டம் சூட்டி நகைக்கிறார்கள்

சொல்லெறிந்தால் சொல்லெறியாமல்
இருப்பவர்கள் ஊமைகளென்றும்
கல்லெறிந்தால் கல்லெறியாமல்
இருப்பவர்கள் கோழைகளென்றும்
ஏமாற்றிக் கடப்பவர்களைத் தண்டிக்காமல்
அமைதியாய்க் கடப்பவர்கள் ஏமாளிகளென்றும்
நீட்டியோ முழக்கியோ கதைக்கிறார்கள்

ஆயுதங்கொண்டு தன்னைப் பிளக்கும்
மனிதகுலத்துக்குப்
பூமியது நீரையும்
வளத்தையும் பொன்னையும்
வழங்குவதுபோல
சில மனிதர்கள் வாழ்கிறார்கள்
காட்சிப்பிழையாய் கலியுகத்தில்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...