Monday, 29 February 2016

‎நடிகர்களும்_நடிகைகளும்‬

#‎நடிகர்களும்_நடிகைகளும்‬
நக்மா ஏதோ கருத்து சொன்னார் என்பதற்காக, கருத்துக்கு எதிர்கருத்துக் கூறி வாதிடாமல், நக்மா நடிகை என்ற ஒரே காரணத்திற்காக, அவர் நடித்த படங்களில் எத்தனை பேருக்கு முத்தம் கொடுத்தார் என்று தனிப்பட்ட அவர் நடிப்பை, அவரின் அரசியல் சார்ந்த கருத்துக்குப் பதிலாக நடத்தையாக, திரைக் காட்சியின் புகைப்படங்களைப் போட்டு, விமர்சித்து இருந்தார் ஓர் இளைஞர், நக்மா என்றில்லை, குஷ்பூவுக்கும் இதே நிலைமைதான்!

ஒருவேளை இவர்கள் நடிகைகள் இல்லை என்றாலும், பெண் என்ற ரீதியில் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்தே தாக்குதல் செய்வார்கள்! அவர்களை அவ்வளவு கேவலமாக விமர்சித்தாலும், எந்த நடிகை எந்தக் கடைத் திறப்புக்கு வந்தாலும், முண்டியடித்து வெட்கம் கெட்டுப் போய் முதலில் ஓடிச் சென்று அவர்களின் புற அழகை ரசிப்பதும் இப்படிப்பட்ட உத்தமர்கள்தான்.

ஊருக்கே தெரிந்து, கமல் தன் வாழ்க்கைத் துணைகளை மாற்றியிருக்கிறார், தன் திரைப்படம் வெளிவரும்போதெல்லாம் அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி, போக்குக் காட்டியிருக்கிறார், நடிகர் ரஜினிகாந்த் அடித்த அரசியல் பல்டிகளுக்கு, ரசிகர்களுக்குக் கொடுத்த பல்புகளுக்கு யாரும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யவில்லை, விஜய் கோக் எடு கொண்டாடு என்றார், பின் குளிர்பான ஆலைகளுக்கு எதிராகத் திரையில் விமர்சனம் செய்து நடித்தார், பிரபுதேவா தன் மனைவியைப் பிரிந்து நயன்தாராவுடன் வாழ்ந்தார், ஊரே நயன்தாராவை மட்டும் திட்டியது, நகைச்சுவை என்ற பெயரில் எல்லா நடிகர்களும், சக மனிதனை, அவனின் வெளிப்புற உடல் அழகை விமர்சித்து நடிப்பதே நகைச்சுவை என்கிறார்கள், யாரும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை, அவர்களின் நடத்தையை விமர்சிக்கவில்லை!

இந்த நடிகர்கள் யாரும் திரையில் நாயகிகளைத் தொட்டு நடிப்பதில்லையா? திரையில் தெரியும் பிம்பங்களைத் தாண்டி அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்கள் என்பது நமக்கு அவசியமில்லை, அவர்கள் மட்டுமல்ல எந்த மனிதராய் இருந்தாலும் ஒரு கருத்துக்கு எதிர் கருத்து என்பது ஆக்கபூர்வமாய் இருத்தல் வேண்டும், எந்தக் கருத்தும் கிடைக்கவில்லை என்றால், குடும்பத்தையே வீதிக்குக் கொண்டு வந்து அசிங்கப்படுத்துவது ஒரு மோசமான மனநிலையே ஆகும்

அதிலும் பொது வெளியில் வரும் பெண்களுக்கே அச்சுறுத்தல்கள் அதிகம், அதுவும் நடிகைகள் என்றாகி விட்டால், கேலியும் கிண்டலும் அதிகம்!
சமூகம் வகுத்த, சட்டம் வகுத்த ஒழுக்க விதிகள் அனைவரைக்கும் பொதுவானது, தனிமனிதத் தாக்குதல் நடத்துபவர் ஆணாய் இருந்தாலும் பெண்ணாய் இருந்தாலும், அவரை மிகவும் பலகீனமானவராய் நாம் கருதுதல் வேண்டும்!

வார்த்தைகளில், நடத்தையில் ஒருவரின் நடத்தையை "விமர்சிப்பவர் நடத்தையும்" கேள்விக்குரியதே!

காதலை ஏற்றுக் கொள்ளவிட்டால் ஆசிட் ஊற்றுவது, வக்கிரமான படங்களைப் பகிர்வது, வக்கிரமான முறையில் தனிமனிதத் தாக்குதல் நடத்துவது, பெண் என்றாலே படுக்கைக்குதான் என்று நினைப்பது, பெண் தன் சதையை விற்றே சாதிக்கிறார் என்று ஆழ்மனதில் நம்பி காழ்ப்புக் கொள்வது, பெண் துரோகம் செய்தாள் என்று கொலை செய்வது, எந்தத் தோல்விக்கும் குடியே மருந்து என்று குடித்துச் சீரழிவது என்று பெரும்பாலும் இதுபோன்ற காரியங்களை ஆண்களே செய்வதால், ஆண்களின் வளர்ப்புமுறை என்பது கவலைக்குரியதாகிறது!

இவள் பெண், அவன் ஆண், என்று வளர்ப்பதைக் காட்டிலும், உன்னைப் போல அவளும் ஒரு மானிடப் பிறவி, அவளைப் போல நீயும் ஒரு மானிடப் பிறவி, உணர்வுகள் என்பது பொதுவுடைமை, அதில் ஒழுக்கம் என்பதும் பொதுவுடைமை, நீ செய்யும் தவறுகளை எல்லாம் அவளும் செய்வாள் என்றும்,
தவறு செய்யாமல், தோல்வியில் துவண்டு, சாராயத்தில் மூழ்காமல், தன் தோல்விகளுக்கு, தவறுகளுக்குத் தனிமனிதத் தாக்குதல் நடத்தி யாரையும் விமர்சிக்காமல் உன் அம்மா, அக்கா, தங்கை, தோழி, காதலி, மனைவி, பிற உறவுகள் இருப்பது போன்றே நீயும் இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி வளர்த்தல் வேண்டும்!

ஆண்மை, பெண்மை என்று ஒரு மையும் இல்லை, உருவங்களைக் கடந்து தன்னைப்போல் பிறரையும் நேசித்தால் இங்கே பிரச்சனைகளுக்கே இடமில்லை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...