Monday, 29 February 2016

"என்னமா இப்படி பண்றீங்களேமா?

அப்போது அம்மா ஆட்சி;
பள்ளி முடித்து, சென்னைப்பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன், ஏதோ ஒரு வேலையை முடித்து விட்டு, பல்கலைக்கழகத்தைத் தாண்டி, சாலையைக் கடந்து, கடற்கரையை ஒட்டியப் பேருந்து நிறுத்தத்தை நோக்கி 'நடைபாதையில்' (கவனிக்க பிளாட்பார்மில்) நடந்துக் கொண்டிருந்தேன், நல்ல உச்சி வெயில் நேரம், மே மாதம்!
எனக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடைக்கும் நான்கடி இடைவெளி மட்டுமே, நடைபாதையில் நின்றிருந்த ஒரு காவலர் என்னை நடக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினார், ஒரு இரண்டு எட்டில் நிழற்குடையின் கீழே நின்று கொள்கிறேன் என்று சொன்னதை அவர் ஏற்றுக் கொள்ளவேயில்லை, என்னைப் போலவே பல மாணவ மாணவியர் கொளுத்தும் வெயிலில் மூன்று மணி நேரத்துக்கும் மேல் அப்படியே நிற்க வைக்கப்பட்டோம், முதல்வர் நான்கு மணி நேரம் கழித்தே சாலையைக் கடந்தார், உடல் முழுதும் தீய்ந்து கொப்புளங்கள் ஏற்பட்டது!
அப்போது அய்யாவின் ஆட்சி;
நந்தனம் சிக்னல் தாண்டி, ஏதோ ஒரு அலுவலகத்தைத் தேடி, நடைபாதையில் (கவனிக்க இங்கும் நடைபாதைதான்) ஓர் ஓரமாய் நடந்துக் கொண்டிருந்தேன், அப்போது அங்கே ஏதோ ஒரு கட்டிடத்தின் வாசலில் நின்றுகொண்டிருந்த காவலர், மேற்கொண்டு நடக்காமல் அப்படியே நிற்க சொன்னார், ஏன் என்ற கேள்விக்கு, முதல்வரின் பாதுகாப்பு வண்டிகள் முதலில் செல்லும் அப்போது நடந்தால் பாதுகாப்பு காரணங்களுக்காக 'சுட்டு விடுவார்கள்' என்று சொன்னதுதான் ஜனநாயகத்தின் உச்சம், இங்கே முதல்வர் ஒரு மணி நேரம் கழித்து சாலையில் விரைந்தார்!
ஓட்டுக் கேட்க வரும்போது மக்களுக்கு அருகிலும், ஆட்சி அமைத்தப் பின் மக்களை கொலைகாரர்களாக, வேண்டாதப் பொருட்களைப் போல தள்ளி வைத்துப் பார்ப்பது எல்லா கட்சிகளும்தான், உண்மையில் உங்கள் எல்லோரையும் பார்த்து மக்கள்தான் கேட்க வேண்டும், "என்னமா இப்படி பண்றீங்களேமா?

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...