Monday, 29 February 2016

சாதி_மத_அரசியல்‬

ஒரு கெயில் குழாய் வெடித்தால் நஷ்டம் என்பது அந்த விவசாயிக்கு மட்டுமல்ல, இந்தப் பூமிக்கு!
ஓர் அணுவுலை வெடித்தால் அங்கே சாகப்போவது அங்குள்ள மனிதர்கள் மட்டுமல்ல, சில தலைமுறைகள்!
ஆய்வுக்கென்று ஒரு மலை வளம் அழிக்கப்பட்டால் பாதிப்பு அங்கு மட்டுமல்ல, ஒரு மழைப் பருவம் நமக்கும் பொய்த்துப் போகும்!
ஊழல் எங்கு நடந்தாலும், பாதிப்பு எங்கு நிகழ்ந்தாலும் அதன் தாக்கம் நிச்சயம் ஒருநாள் நம்மையும் தாக்கும்!
இதைப் புரிந்து கொள்ளாமல், "அவங்க என்ன ஊழல் செஞ்சாலும் என்ன, நம்ம சாதிக்காரங்க" என்றும், "ஆபத்து அங்கேதானே இங்கில்லையே?" என்றும் நீங்கள் நினைத்தால், அதைப் போல முட்டாள்தனம் வேறு இல்லை, பதவியே இல்லையென்றாலும், "பணம்" என்ற ஒன்று இல்லாவிட்டால் உங்கள் சாதியினன் கூட உங்களைத் தலையில் தூக்கி வைத்து ஆடப்போவதில்லை!
உங்கள் சாதி என்பதால் ஓர் ஆபத்தான திட்டத்திற்கு யாரோ ஒரு மந்திரி பணம் ஒன்றே பிரதானம் என்று இடும் கையெழுத்து ஏற்படுத்தும் ஆபத்து, சாதி பார்த்து விலகி நிற்காது! (உதாரணம்: அதிகரித்து வரும் புற்றுநோய், குடியால் பாதிக்கப்படும் குடும்பங்கள், கட்டிடங்களாக மாறிக் கொண்டிருக்கும் விவசாய நிலங்கள் மற்றும் சமீபத்து மழை)
ஹிந்து என்று மதத்தின் அடிப்படையில் கட்சியைப் போற்றினாலும், நாளை அதே கட்சிதான் கீழ் சாதி ஹிந்துக்களை வேரறுக்க முனையும், மக்களைப் பிளவுப் படுத்தும்! எந்த மதச் சாயமும் வெளுத்துப் போகும் ஒன்றே!
"சாதியும் மதமும் வெறும் மனித முக அடையாளங்களைத் தாண்டி, நட்பு, காதல், கட்சி, அரசியல், வியாபாரம் என்று எல்லாவற்றிற்கும் ஒரு கொண்டாடப்படும் அகத்தின் அடையாளமாய் மாறிப்போய்க் கொண்டிருக்கிறது"
நம் அரசியல் கட்சியின் நிலைபாட்டைக் கொஞ்சம் இந்த அடையாளங்களைத் தாண்டி "எவன் அதிகபட்சம் (இன்றைய காலகட்டத்தில்) நல்லவன் என்று உறங்கிக் கிடக்கும் மனசாட்சியைத் தட்டிக் கேட்டுப் பின் ஓட்டுப் போடுதல் நமக்கும் நாளைய தலைமுறைக்கும் நலம்!
‪#‎சாதி_மத_அரசியல்‬

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...