Monday, 29 February 2016

கல்வி

நாங்கள் குடியிருக்கும் தெருவில், காவல்காரராய் பணியாற்றும் ஒரு தாத்தாவிடம் அவ்வப்போது பேசுவேன், சமீபத்தில் தன் ஏழு வயது பேத்தியுடன் வந்திருந்தார், பள்ளிக்கு அனுப்பாமல் உங்களுடன் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது,
"எங்கம்மா?! பள்ளிகோடத்துக்கு அனுப்புனா, அது கிளாஸ்லேயே ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் போய்டுதுன்னு அனுப்பிடறாங்க, அதுவும் இருக்க மாட்டேங்குது" என்றார்,
"டாக்டர் கிட்டே போய்க் காமிக்க வேண்டியதுதானே, சொந்தத்தில் கல்யாணம் பண்ணீங்களா" என்று கேட்ட போது,
அவருடைய முதல் மகளை உறவில் திருமணம் செய்து கொடுத்ததாகவும், முதல் மகளுக்கு மகன் பிறந்தவுடன், அவருடைய மாப்பிள்ளை இரண்டாவது மகளையும் இழுத்துக் (!) கொண்டு ஓடிப்போய்த் திருமணம் செய்து கொண்டு, அவளுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்திருக்கின்றது என்றும், அதில் இரண்டாமவள் தான் இந்தக் குழந்தை, அவர்கள் அனைவரும் சித்தாள் வேலைக்குப் போவதாகவும், பணம் சம்பாதிப்பதே குறியாய் இருப்பதாகவும், இந்தக் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவில்லை என்று கூறினார்

அந்தக் குழந்தை என் கையைப் பிடித்து "அக்கா விளையாடலாம் வா" என்று அழைத்தாள், மகனுடன் மற்றும் அவன் நண்பர்களுடன் இறகுப் பந்து விளையாடிக் கொண்டிருந்தேன், அந்தச் சிறுமியின் கையைப் பிடித்து விளையாட வைத்தப்போது, அவளுக்கு உடம்பு முழுக்க உதறிக் கொண்டிருந்தது, நரம்புக் குறைபாடோ, டிஸ்லெக்ஸ்க்ஷியாவோ இருக்கக்கூடும் என்று தோன்றியது. அவளின் பாட்டியிடம் சிறிது பணம் தந்து முதலில் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினேன், அவர்கள் அம்மாவை அழைத்து வாருங்கள் என்று சொல்லி இருக்கிறேன், இதுவரை வரவில்லை ......

இது ஓர் உதாரணமே, இது போல் எத்தனையோ குழந்தைகள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள், படித்தவர்களிடமே கொஞ்சம் கொஞ்சமாய் இப்போதுதான் விழிப்புணர்வு வந்திருக்கிறது, படிக்காதவர்களிடம் இன்னமும் விழிப்புணர்வு போதவில்லை!

ஒரு குழந்தைத் தன் இயல்பை மீறி வகுப்பறையில் நடந்து கொள்கிறது என்றால், அது ஏன் என்று தனியார் பள்ளிகளும் யோசிப்பதில்லை, அரசாங்கப் பள்ளிகளும் யோசிப்பதில்லை, பிள்ளைகளைக் கவனிக்க அவர்களுக்கு நேரமில்லை, சிரத்தையெடுத்துப் பெற்றோரிடம் பேசி, சரியான ஆலோசனை வழங்க அவர்களுக்கும் விழிப்புணர்வு இல்லை, பிள்ளையைப் பள்ளியை விட்டு அனுப்பவதே ஒரே தீர்வாக இருக்கிறது!

சிகிச்சைக்குப் பணம் இருக்கிறதா இல்லையா என்பதை விட முதலில் விழிப்புணர்வு இருக்கிறதா இல்லையா என்றே நாம் பார்க்க வேண்டி உள்ளது!
சொந்தத்தில் திருமணம் செய்வது தவறு என்று எத்தனை மருத்துவர்கள் கூறினாலும், இன்னமும் அது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.
பெண் பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் இருப்பது, அதிக வயது வித்தியாசத்தில் திருமணம் செய்து வைப்பது என்று எல்லாமே ஒரு பலகீனமான சந்ததிகளின் காரணிகள் தான்!

ஆணோ பெண்ணோ, அவர்களைப் படிக்க வையுங்கள், சிறந்த கல்வி, குறைந்தபட்சம் அவர்களுக்கு எது சரி எது தவறு, எதை எப்படி அணுகுவது, சரியான துணையை எப்படித் தேர்ந்தெடுப்பது, யாரைத் தேர்ந்தெடுப்பது, குழந்தைகளை எப்படிக் கவனித்துக் கொள்வது, எது சரியான மருத்துவம், எது சரியான உணவு (இன்னமும் நிறையப் பேர் தம் குழந்தைகளுக்கு வாயு அடைக்கப்பட்ட குளிர்பானங்களையும், துரித உணவு வகைகளையும் வாங்கியே வயிற்றை நிரப்புகின்றனர், வீட்டில் அரைக்கச் சோம்பல்பட்டு, வண்ணக் கலவை நிறைந்த மசாலாக்களையும் வாங்கிச் சமைத்துத் சாதாரண உணவையும் விஷமாக்கும் வேலைகள்தான் நடக்கிறது பெரும்பாலும்) போன்ற இன்ன பிற அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் குறைந்தபட்ச விழிப்புணர்வையாவது தரட்டும்!

ஒரு பெண் பிள்ளையைப் படிக்க வைத்தால் அந்தக் குடும்பமே வாழும், எதிர்காலச் சந்ததிகளும் ஆரோக்கியமாய் வளரும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...