Wednesday, 15 April 2020

நவீன_மன்னராட்சி

மொத்த தமிழகத்திலும் சாராயம் ஓடும்
விவசாயம் அழித்து சாலைகள் போடும்
சாலைகள் முழுக்க சுங்கச்சாவடிகள் அமைக்கும்
குண்டும் குழியுமான சாலைகளுக்கும் காசு பறிக்கும்

பள்ளிகள் மூடி கல்விக்கனவு குலைத்துவிடும்
நீட் நுழைத்து ஏழைகளை ஏட்டுச்சுரைக்காயுடன்
தள்ளி வைக்கும்
மீத்தேன் உறிஞ்ச நீர் வற்றும்
காப்பர் உருவாக்கி உயிர் உறிஞ்சும்

நீயூட்ரினோ என்று மலைகள் சுரண்டும்
சாமியார்கள் வளத்தில் காடுகள் அழியும்
காடுகள் அழிந்து யானைகள் களவுப்போகும்
யானைகள் துரத்தி சிலைகள் எழும்

புகையிலையிலும் ஊழல் செய்யும்
தெர்மாக்கோலிலும் அணைகள் கட்டும்
ஆட்சியைப்பிடிக்க பேரம் பேசும்
பணமதிப்பிழப்பென்று சில்லறைகள் தேடும்

கேள்வியென்று வந்துவிட்டால் ஊரைச்சுற்றும்
தேர்தல் மேடைகளில் கண்ணீர் விடும்
ஊழல்வாதிகள் ஒன்றுசேர உளவுத்துறை உதவும்
அவ்வப்போது மிரட்டி வைக்க வருமானவரித்துறை வரும்

துறைகளுக்கொரு அமைச்சர்கள் பெயருக்கு மட்டும்
கரன்சி வரும் வழித்தவிர வேறில்லை நாட்டம்
வீதிக்கொரு சாதிக்கூட்டம் சமூகநீதி பேசும்
எதிர்ப்பவன் சாதியறிந்து அரிவாளில் வெட்டும்

சாமியார்கள் தயவில் கோடிகள் புழங்கும்
கேடிகளின் வன்முறையில் குரல்வளை நசுங்கும்
சில்லறைக்கடன்களுக்கு கோவணம் பறிபோகும்
வரைமுறையற்ற கடன் கொள்ளைகளுக்கு தள்ளுபடி கருணையாகும்

திரையில் நடித்தவர்கள் மேடையில் நடிப்பது எதார்த்தம்
ரசிகர்கள் தொண்டர்கள் என்று விழும் விட்டில்பூச்சிகளும் அதிகம்
போராளிகள் மாயமாவது மறந்துவிடும் நாடகம்
வாக்குறுதிகளை மறந்துவிடுவது அரசியலுக்கான நரித்தந்திரம்

திருடர்களின் வகைக்கொரு கூட்டணி கொண்டாட்டம்,
மக்கள் மட்டுமே எதிரிகள் என்பது வேடிக்கைவிநோதம்
வேடிக்கைப்பார்ப்பது மக்களின இயலாமைச்சோகம
இதில் தேர்தலெல்லாம் மீளமுடியா உரிமைகளின் ஏலம்!
#நவீன_மன்னராட்சி

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...