Saturday, 20 April 2019

குடிமகன்

மைலாப்பூரின் இரயில் நிலையத்துக்கு அருகே இரண்டு டாஸ்மாக் கடைகள், சாலையின் குறுக்கே தள்ளாடி வந்த குடிமகன், ப்ரேக் இட்டு இடிக்காமல் நின்ற ஆட்டோ ஓட்டுனரை “தேவடியாப்பையா” என்கிறார், ஓட்டுனர் அதை உதாசீனம் செய்து “குடிகார நாயே” என்று சொல்லிவிட்டு நகர்கிறார், அடுத்த ஒரு நிமிடத்தில் ஒரு பைக்கில் தள்ளாடிய படியே தவறான பாதையில் வாகனங்களின் நேர் எதிரே மோதுவது போல் இருவர் வருகிறார்கள், சாலைதான் அவர்களுக்கு தெரியவில்லை போதையில் என்ற தப்புக்கணக்கு போட்டுவிடக்கூடாது, யூ டர்ன் செய்வதற்கு பதில், குறுக்கு வழியில் எவன் செத்தால் என்ன என்று சாராயக்கடைக்குச் செல்கிறார்கள், அங்கேயே போக்குவரத்துக் காவல்துறை யாராவது செத்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று பிரதானச்
சாலையில் குறுக்கு மறுக்காய் ஓடும் வாகனங்களை வேடிக்கைப் பார்க்கிறது!


சில தினங்களுக்கு முன்பு ஒரு மாணவன் அப்பனின் குடிப்பழக்கத்தை நிறுத்த நடுத்தெருவில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைச் செய்துகொண்டான், அப்பன் திருந்தி விட்டார் என்று செய்தித்தாள் சொல்கிறது, தமிழ்நாட்டில் குடிகாரர்களைத் திருத்த எல்லாப் பிள்ளைகளும் தற்கொலைதான் செய்துக் கொள்ள வேண்டும் என்றால், முக்கால்வாசி தமிழ்நாடு சுடுகாடாக வேண்டும், சரி இந்தக்குடிகாரன்களால் ஆவது என்ன என்று கொன்றுவிட வேண்டிய அவசியமும் இல்லை, ஏனேனில் அவர்கள் விஷத்தைத்தான் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆயுர்வேத மருத்துவமனை வாசலில் ஒரு முதியவர் காவல்காரராக இருக்கிறார், தன்னுடைய மகன் குடித்துவிட்டு அடிப்பதால், அந்தத் தள்ளாத வயதில் தானும் மனைவியும் தனியே இருப்பதாகவும், தன் மருமகள் இரண்டுப் பிள்ளைகளுடன் அவனுடன் போராட்டமான ஒரு வாழ்க்கையாய் நடத்துவதாகவும் வேதனையுடன் பகிர்ந்துக்கொண்டார்.

குடித்துவிட்டு வருபவனுக்கு மனம் முழுக்க அறுவெறுப்புடன் உடல் தர மறுத்து, கணவனிடம் இருந்து தன் இரண்டுப் பெண் குழந்தைகளுடன் ஓடி ஒளிகிறாள் ஒருத்தி, குடிகார அப்பனுக்கு மகளே தாரமாக தெரிய, வெகுண்டு அவனைக் கொலைச்செய்கிறாள் தாய் ஒருத்தி, குடித்துவிட்டு பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்கிறான் கிழவன் ஒருவன், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பல உயிர்களைப் பறிக்கிறார்கள், சாலையில் தினம் தினம் யாரையோ “தேவடியாப்பையா” என்கிறார்கள் குடிமகன்கள்!
ஊர்விட்டு ஊர் வந்தவர்களும் குடிக்கப்பழகி, விடுதலையான உணர்வில், சாலையில் சேற்றில் விழுந்த பன்றிகளைப் போல ஆடைகள் விலகி, மூத்திரம் பெய்து தானும் அலங்கோலமாக, தலைநகரையும் அலங்கோலமாக்கி விழுந்துக்கிடக்கிறார்கள், சாலையில் செல்லும் பெண்களைக் கண்டு, உறுப்புக்கிளர்ச்சியடைகிறார்கள், அடுத்த வேளை சாராயத்துக்கு கழுத்துச் சங்கிலி அறுக்கிறார்கள்!

எதை அறுத்தாலும், யார் தூக்கிலிட்டுத் தொங்கினாலும், யாருடைய குழந்தையின் யோனி சிதைக்கப்பட்டாலும், எவளுடைய தாலி அறுந்தாலும், எந்தக்குழந்தைக்கு வறுமையால் கல்வி மறுக்கப்பட்டாலும், ஓட்டுக்குக் காசுக்கேட்டு மக்கள் நிற்கிறார்கள், தன் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியபடி, கட்சிக்கொடிகள் பறக்க அமைச்சர்கள் சாலையில் விரைகிறார்கள், அப்போதெல்லாம் வசைபாடும் குடிகாரர்கள் யாரும் அவர்களின் வாகனங்களின் குறுக்கே சென்று அந்த வார்த்தையை சொல்வதில்லை!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...