Saturday, 20 April 2019

சீனப்பயணம்

முதலில் சென்ற ஹோட்டலில், இரவு கொலை பட்டினி, நடு இரவுக்கு மேல் உறங்கி, பிறகு விடிந்ததும் கொஞ்சம் அலுவலக பணி செய்துவிட்டு, பத்துமணிக்கு கிளம்பினால் காலை உணவு இல்லை என்றார்கள், “சரி நான் ரூமுக்கு போறேன், ரூம் சர்வீஸ் இருக்கில்ல?” என்றால் உணவே இல்லை என்றார்கள், “நோ” வைத்தவிர ரிஷப்ஷனில் இருந்த மூன்று பெண்களுக்குமே ஆங்கிலம் தெரியவில்லை, சாப்பிடுவது போல கையை வாய்க்கருகில் கொண்டு சென்று காட்ட, கையை வெளியே காட்டி உடைந்த ஆங்கிலத்தில் வெளியே சென்று சாப்பிடச்சொன்னார்கள், இன்னமும் பொறுமையாய் “ஐ யம் ஸ்டெயிங் இன் யு யர் ஹோட்டல்” என்று சொல்ல, “யா, அவுட்சயிட் அவுட்சயிட்” என்றார்கள், மனதுக்குள் காலையும் பட்டினிதான் என்று உறுதி செய்துக்கொண்டு, தண்ணீராவது குடிக்கலாம் என்று, “குட் யு கீவ் மீ எ வாட்டர் பாட்டில் ப்ளீஸ்?” என்று சொல்ல, “ய அவுட்சயிட் அவுட்சயிட்” என்று திரும்பவும் சொல்ல, கொஞ்சம் பொறுமையிழந்து ஆங்கிலம் தெரிந்த ஒருவரை வரச்சொல்ல முடியுமா என்று கேட்க, வாட்டர் என்பதை புரிந்துக்கொள்ள ஒரு இளைஞன் வந்து புரிந்துக்கொண்டு தண்ணீர் கொடுக்க, தெய்வமே என்று நிம்மதியடைந்து நன்றி சொல்லி நகர்ந்தேன்! 

முந்தைய இரவே கொஞ்சம் ஆங்கிலம் புரிந்த பெண்ணிடம் அலுவலக முகவரியை காட்டி அதை அப்படியே மாண்டரினில் எழுதி வாங்கிக்கொண்டேன், அப்படியே அந்த ஹோட்டலின் முகவரியையும், வெளியே ஒரு காரை நிறுத்தி, ஒன்றும் பேசாமல், விஜய் மல்லையா ஓடிய பிறகு இன்காம்டாக்ஸ் ரெய்டுக்கு வந்த அதிகாரியை போல மொக்கையாய் வாய் திறக்காமல் காகிதத்தில் உள்ள முகவரியை காட்டி கையை சாலையின் முன்னே காட்ட, புரிந்துக்கொண்ட காரோட்டி கதவைத்திறந்து விட, ஒருவழியாய் ஏறி அலுவலகம் சென்றேன்!

வாசலிலேயே வரவேற்று வந்திறங்கியது தெரியாது என்று மன்னிப்புக்கோரியவர்களிடம் ஒரு இரவு முழுக்க நடந்தேறிய சாகசத்தை சொல்லாமல், ஒன்றும் பிரச்சினையில்லை, அருமையான பயணம் என்று பணியைத்தொடர்ந்தேன்! மதியம் உணவு உண்ண அலுவலகம் பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு எல்லோரும் அழைத்துச்செல்ல, உணவு பட்டியலில் உருளைக்கிழங்கு சாதம் என்று பெயரையும் பளிச்சென்ற படத்தையும் பார்க்க, முந்தைய இரவில் இருந்து தண்ணீர் மட்டும் பார்த்த வயிறு ஆனந்தமாய் போடு போடு என்று கூப்பாடு போட, “ப்ளீஸ் ஆர்டர் திஸ் ஃபார் மீ” என்று சொல்ல, “நோ அமுதா தட் ஈஸ் போர்க் (பன்றிக்கறி)” என்றார்கள், “அடப்பாவிகளா உருளைக்கிழங்குன்னு போட்டுட்டு அதுல பன்னியையும் சேர்த்தாட போடுவீங்க?!” என்று நொந்துக்கொண்டு, “ப்ளீஸ் ஆர்டர் எனிதிங் வெஜ்!” என்றேன், சுடச்சுட சட்டி நிறைய வெறும் சாதமும், அதன் மேல் கொஞ்சம் சிக்கன் குழம்பும், பக்கத்தில் கொஞ்சம் இலைதழையும் வந்தது!”

#சீனப்பயணம்3

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...