Saturday, 20 April 2019

சீனப்பயணம்

ஏதோ ஒரு தகவல் பரிமாற்ற தாமதத்தில், சீனாவுக்கு இரவு வந்து சேர்ந்தது, அடுத்த நாள் காலையில்தான் சீன அலுவலகத்துக்கு தெரிந்திருக்கிறது (அதை அப்புறம் போய் கவனிக்கலாம்) இரவு பத்தரை மணிக்கு விமானம் வந்திறங்க, கம்பெனியின் சிம் கார்டை எடுத்து கைபேசியில் போட அது வேலை செய்யவில்லை, முன்னெச்சரிக்கையாய் ரீசார்ஜ் செய்த வோடாபோன் பேசுவதற்கு பதில் ஜிஎஸ்டி ஆக்டிவேஷன் என்று எல்லாவற்றையும் ஏப்பம் விட்டிருந்தது. சீனாவில் வாட்ஸ் ஆப், கூகுள், யூடுயுப் முதலியவை வேலை செய்யாது என்ற தோழியின் தகவலின்படி, டவுன்லோட் செய்திருந்த விபிஎன்னை ஆக்டிவேட் செய்ய, ஹாங்காங்கில் கேள்வியே கேட்காமல் வைஃபை வந்தது போல இங்கு வரவில்லை, கைபேசி முழுக்க மாண்டரின் எழுத்துக்கள் மின்ன, அருகே இருந்த ஒரு காவல்துறை அதிகாரியிடம் எனக்கு வைஃபை வேண்டும் என்று எப்படியோ புரிய வைக்க, அவர் அவருடைய தகவலை கைபேசியில் தந்து இணைய இணைப்பை ஏற்படுத்திக்கொடுக்க ஒரு வழியாய் வீட்டுக்கு தகவல் கொடுத்து நிமிர, விமான நிலையம் வெறிச்சோடி போயிருந்தது!
24 மணி நேரத்திற்கும் மேல் தூக்கமில்லாமல் வந்த அலைச்சலில் நிதானமாய் நடந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியே நடக்க, ஏதோ தன் ஃகேர்ள் பிரண்டுக்காக காத்திருந்து கண்டதும் மகிழ்ச்சியாய் ஓடி வந்தவனை போல ஒருவன் அத்தனை துள்ளலாய் ஓடி அருகில் வந்து ஹாலோ என்க, “டேய் யாருடா நீ!” என்று கொஞ்சம் ஜெர்க் ஆனேன், ஒருவேளை அலுவலகத்தில் இருந்து வந்தவரோ என்று யோசித்தாலும் கையில் பெயரட்டை இல்லை, “வு ஆர் யு?” என கேட்க, “டேக்ஸி?” என்றாரே பார்க்கலாம், அடேய் என மனதுக்குள் நொந்துக்கொண்டு “நோ நோ ப்ளீஸ்” என்று நகர்ந்து வர அங்கே ப்ரீபெய்ட் டாக்ஸி கவுண்டரில் ஆளே இல்லை!
கையில் இருந்த முகவரியை எடுத்து அதில் தப்பித்தவறி அந்த ஊர் மொழியில் முகவரி இருக்கிறாதா என்றால் இல்லை, கையில் பேப்பரை வைத்துக்கொண்டு யோசிப்பதை பார்த்ததும் முதலில் வந்தவரே அருகில் வர, சரி பார்க்கலாம் என்று “இந்த முகவரியில் என்னை கொண்டு விட முடியுமா என்று கேட்க, அட்சர சுத்தமாய் அவருக்கு ஆங்கிலம் புரியவில்லை, ஹா ஹீ ஹே என்ற இந்த ஒலிகளுக்கு எனக்கும் அர்த்தம் புரியவில்லை, இருந்தாலும் என் கையில் இருந்த ட்ராலியை சட்டென்று பிடுங்கிக்கொண்டு ஓட, கடவுளே என்று அந்த ஓட்டுநனரின் பின்னேயே நானும் ஓட, “பயபுள்ள டக்குன்னு டாக்ஸிக்குள்ள பெட்டியை தூக்கி வைக்க” வேறு வழியில்லாமல் நானும் ஏறி உட்கார்ந்துக் கொண்டேன், மறுபடியும் அவர் முகத்துக்கு நேரே பேப்பரை காட்டி, “டு யூ அன்டர்ஸ்டாண்ட்?” என்று சந்தேகமாய் கேட்க, புதுசாய் பேப்பரை மறுபடியும் பார்த்து, மூக்கிலேயே பேச, யோசனையை அமர்ந்திருந்தேன், கையில் கார்ட் இருந்தது, காசு இல்லை, “கார்ட் ஆர் ஃகேஷ்?” என்று கேட்க மீண்டும் ஏதோ ஒலி!
விமான நிலைய கட்டண நுழைவாயிலில் கார் தேங்க, சட்டென்று கார் கதவை திறந்து குதித்து, அங்கிருந்த பெண்ணிடம் முகவரியை காட்டி ஓட்டுநனருக்கு இந்த முகவரியை புரிய வைக்க முடியுமா என்றேன், இரண்டு பேரும் முக்காலே ஏதோ பேசிக்கொள்ள, சாட்சியை உருவாக்கிவிட்ட திருப்தியுடன் இப்போது கொஞ்சம் தைரியமாய் ஏறி உட்கார்ந்தேன். கையில் காசு கிடையாது என்பதை மறுபடி மறுபடி ஓட்டுநனருக்கு புரிய வைக்க, சட்டென்று யாருமற்ற ஒரு பகுதியில் கார் நின்றது, ஏடிஎம் என்று வண்டியை விட்டு அவர் இறங்க, சரி இந்தப் பைகளை எப்படி நம்பி விட்டுப்போவது என்ற யோசனையில் கைப்பையையும், லேப்டாப் பையையும் எடுத்துக்கொண்டு இறங்க, ஒட்டுநனரும் கூடவே இறங்கி உடன் வர (டேய் நீ ஏன்டா கூடவே வர?”) என்று மனதுக்குள் கேட்டுக்கொண்டே ஏடிஎம்மில் நுழைந்து காசு எடுத்து ஒருவழியாய் ஹோட்டல் வர, ஒட்டுநனருக்கு நன்றி சொல்லி, செக் இன் செய்து, சோறு இருக்கிறாதா என்று கேட்டால் பத்து மணிக்கு மேல் சாப்பாடே கிடையாது என்றார்கள், வேண்டும் என்றால் ரூம் சர்விஸில் ஆர்டர் செய்து கொள்ளலாம் என்க, அட்டை முழுக்க மாடும், பன்றியும், டாஸ்மாக் சமாச்சாரமும் நிறைத்திருந்தது படங்களாய், மருந்துக்கும் ஆங்கிலம் இல்லை, ரூம் சர்வீஸுக்கு போன் செய்யலாம் என்றால் அந்தப் பொத்தான்கள் செயலற்று போயிருந்தது!
#சீனப்பயணம்2

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...