Saturday, 20 April 2019

சுடுகாடே மிச்சம்

ஒரு முதல்வரை 75 நாட்கள்
மறைத்து வைத்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

ஓட்டுகளை பெறாமல்
புறவழியில் ஆட்சியை பிடித்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்


கல்விச்சாலைகளை மூடி
வீதி முழுக்க சாராயக்கடைகளை
திறந்த போது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

அந்த மாணவன்
மேம்பாலத்திலிலிருந்து குதித்து
தற்கொலைச் செய்துகொள்ள
கண்டுக்கொள்ளாமல் சிரித்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

விவசாயிகள் போராட்டத்தில் சாக
மீனவர்கள் குண்டுபட்டு சாக
எதற்காகவும் இல்லாமல்
தம் பதவிக்காக டெல்லி விரைந்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

எதையும் செய்யாமல்
கடவுளாய் உருவகப்படுத்தி
விளம்பரம் செய்துகொண்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

நீட்டின் போர்வையில்
மாநிலத்தின் கல்வியுரிமை பறிக்கப்பட்டபோது
குனிந்து கும்பிடு போட்டுக்கொண்டிருந்தபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

நீட்டின் மெத்தனத்தில்
உயிர்கள் பலியானபோது
தனியார் அமைப்பின் மீது பழிதூக்கிப்போட்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

அணையை காக்க
தெர்மாக்கோலில் படகுவிட்டு
அதையும் சில லட்சங்களென
செலவு கணக்கு எழுதியபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

300 மரங்கள் நட
எட்டு லட்சம் செலவென்று
கல்வெட்டு செதுக்கியபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

99 நாள் நடந்தப் போராட்டத்தில்
100 ஆவது நாளுக்கு
144 போட்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

குருவியைக் கூட சுட
உரிமையல்லாத நாட்டில்
மனிதர்களை மயிர்களாக கருதி சுட்டபோது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

உயிருக்கு ஒரு தொகை
உறுப்புக்கு ஒரு தொகை
என்று பேரம் பேசிய போது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

ஜல்லிக்கட்டின் நிறைவில்
கட்டவிழ்த்த வன்முறையின்போது
நீங்கள் விழித்துக்கொண்டிருக்க வேண்டும்

எதற்கும் விழிக்காமல்
எல்லாவற்றையும் நகைச்சுவையாய்
எடுத்துக்கொண்டால்
நாளை விழிக்கும்போது
#சுடுகாடே மிச்சமிருக்கும்!

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...