Saturday, 20 April 2019

அழகின்_விலை_மரணமல்ல

#அழகின்_விலை_மரணமல்ல

ஶ்ரீதேவியின் மரணம் குறித்த கருத்தொன்றில் எப்போதும் அழகாய் இருத்தல் வேண்டும் என்பதும் ஒரு விதமான அழுத்தமே என்று குறிப்பிடப்பட்டிருந்தது, உண்மைதான், திரையில் மின்னும் நட்சத்திரங்களுக்கு இந்த அழுத்தம், குறிப்பாக நடிகைகளுக்கு அதிகமாகவே இருக்கிறது, நடிகர்கள் தங்கள் தலையை விக் வைத்துக்கொண்டு, தள்ளாத வயதிலும் இளம் நடிகைளை கட்டியணைத்துக்கொண்டு ஆடி ஹீரோவாக அரிதாரம் பூசினாலும் ஏற்றுக்கொள்ளும் சமூகத்திற்கு, திருமணமாகிவிட்டாலோ, குழந்தைப்பெற்று சற்றே பூசினாற்போல் உடல்வாகு பெற்றுவிட்டாலோ உடனே நடிகையை அக்காவாக, ஒரு கிழவனுக்கு அம்மாவாக என்று அடுத்த வேடங்களுக்குத் தள்ளிவிடுகிறது, நிறைய குடும்பங்களில் அங்கிள்கள் ஆணாழகர்களாக உலா வருவதற்கு, இரவும் பகலும் வீட்டில், வெளியில் உழைக்கும் ஆன்ட்டிகள் எனப்படும் அழகிகள்தான் என்பதை இந்தச் சமூகம் மறந்துவிடுகிறது!

சமீபத்தில் கூட பிள்ளைப்பெற்றப்பின் தன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகையின் உடல்வாகை இந்த ரசிகக்கூட்டம் என்னும் முட்டாள் கூட்டம் அத்தனை கேலிச்செய்தது, பெண்ணை கேலி செய்யும் அத்தனை ஆண்கூட்டத்துக்கும் அவர்களது அம்மாக்கள் இவர்களைப் பெற்ற பிறகு தன் அழகு, தன் நலம் என்பதை மட்டும் பேணியிருந்தால் இந்தக்கூட்டத்தில் பலது இன்று இல்லாமல் இருந்திருக்கும் என்ற உண்மை மட்டும் தெரிவதில்லை!

பழங்கால பெண் சிற்பங்களில் கூட சைஸ் சீரோவைக் கண்டதில்லை, எல்லாச் சிற்பங்களிலும் பூசினாற் போல உடல்வாகே இருக்கிறது!

உண்மையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் அழகென்பது, கத்தியின் மூலம் உருவத்தை செதுக்கிக்கொள்வதிலோ, பட்டினிப்போட்டு, உடலை உருக்கிக்கொள்வதிலோ இல்லை, பிறருக்காக நம் அழகு இல்லை, நம்மை நாம் அழகாக உணர உடலுக்கு நல்ல உழைப்பைத்தந்தால் உடலின் தசைநார்கள் வலுப்பெறும், உடலினை ஆரோக்கிய வாழ்க்கையின் மூலம் உறுதி செய்யும்போது, உள்ளமும் உறுதிப்பெறும், மற்றப்படி அவரவருக்கு கிடைத்த மூக்கும் முழியும் பரம்பரை வழி வந்தது, அல்லது இந்தச் செல்லரித்துப்போன சமூகத்தின் இயற்கை அழிப்பின் மூலம் வந்தது, ஒரு பகுதி மக்களின் அழகுப்பற்றிய கீழ்மட்ட எண்ணங்களுக்காக, போற்றுதலுக்காக, தம் உருவத்தைச் செதுக்கிக்கொ”ல்”வதைவிட, உழைப்பின் மூலம் ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் சீர்செய்துக்கொள்வதே உண்மையான அழகென்று ஆண்களும் பெண்களும் உணர்தல் வேண்டும்!


February 25, 2018

Image may contain: one or more people and closeup

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...