Monday 18 August 2014

பெண்மை!

பயிற்சிக் களம் 
பாழ்பட்டுக் கிடக்கிறது 
பயிற்சி முடிந்தபின்பு
 
அமுதின் சுவை 
கசந்து கிடக்கிறது 
நாவைக் கடந்தபின்பு
 
வாய்ப்பிளப்பின் ஈரம் 
வறண்டு கிடக்கிறது 
தாகம் தீர்ந்தபின்பு
 
ஏறிக் குதித்த பாலம் 
பிளவுண்டு கிடக்கிறது 
தூரம் கடந்தபின்பு
 
நெகிழ்ந்துக் குழைந்த நிலம் 
இறுகிக் கிடக்கிறது 
ஈரம் உறிஞ்சிய பின்பு
 
அனிச்சையாய் மலர்ந்த 
மலர்கள் பறிக்கப்பட்டு 
கிளைகள் முறிக்கபட்டப் 
பின்னரும் - வேரில் 
இன்னும் ஈரமிருக்கிறது! 

அருளற்றக் கடவுளின்கண்!

யோனிக்குளம் சிதையும்,
பனிக்குடம் உடையும்,
கண்ணீர்க் கடல் தளும்பும்,
இமைக்குடைக் கவிழும்,
மனக்கதவுத் தாழிடும்,
உணர்வுக் குவியல் காயப்படும்,
உயிரையும் தந்துவிடும்,

பிறர் வாழ வேண்டி
நிதம் சாகும்
இப்பெண்ணெனும்,
பொருள் என்பவள்,
பொருள் நிறைந்த
பொருலற்றவள் -
அருளற்றக் கடவுளின்கண்!



 

Monday 4 August 2014

மழை வரும் வேளை!

வீசிச் சென்ற
நெருப்பின் கங்குகளை
சில பன்னீர்த் துளிகளில்
அணைக்க முயல்கிறாய்
நான் வடுக்களைச் சேகரிக்கிறேன்
உனக்கு ஓர் அழகிய கோலமாக்க

கற்களை வீசி 
இடறச் செய்த என் பாதையில் 
சில ரோஜா செடிகளைப் பதியமிடுகிறாய்
நான் முட்களைச் சுமக்கிறேன் 
உனக்கு மலர்களைப் பரிசளிக்க

வெடிகளை வீசி 
தகர்த்திட்ட மனக்கோட்டையில் 
அன்பின் அடித்தளம் எழுப்ப விழைகிறாய்
நான் காற்றில் நச்சைக் களைகிறேன் 
உனக்கு அன்பையே சுகந்தமாக்க

காற்றாய் புயலாய்ச் சுழன்றடிக்கிறாய்
அவசரமாய்த் தழுவி செல்கிறாய்
புயல் ஓய்ந்து - மழையாய்
நீ வரும் வேளையில்,
அன்பே, என் பயணம்
காற்றில் சிதைந்த மலராய்
எப்போதோ தொடங்கிவிட்டிருக்கலாம்!
 

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!