Monday 21 November 2016

ஓட்டைகள்

நாகரீகத்தின் உச்சத்தில்
கிழித்துவிடப்பட்டிருந்த
விலையுர்ந்த
ஜீன்ஸ் பேண்டை
அணிந்து
சிக்னலில்
காத்திருந்த இளைஞனிடம்
யாசகம் கேட்க
தயங்கி
வறுமையின் உச்சத்தில்
கிழிந்த வேட்டியுடன்
இருந்த முதியவர்
விலகிச் சென்றார்
வறுமைக்கும்
பெருமைக்கும்
இடையே
பலநூறு
#ஓட்டைகள்

மனமொத்த அன்பும் தோழமையும்

மனமொத்த அன்பும் தோழமையும்
இணைந்த வாழ்க்கைத்துணை
இல்லறத்தை அழகாக்கும்
அதிகாரமும் நீதியும்
அழகாய் கைக்கோர்க்கும்
நல்லறம்
இந்த மண்ணில்
வாழ்தலை இனிமையாக்கும்
முன்னது பலருக்கு வாய்ப்பதில்லை
பின்னது இன்னமும்
யாருக்கும் வாய்க்கவில்லை!

வரலாற்றுப்_பக்கங்கள்

அணுவுலை வெடித்தால்
காற்று மாசுபட்டால்
தண்ணீர் வறண்டுபோனால்
வளங்கள் சுரண்டப்பட்டால்
நிறுவனங்கள் மூடப்பட்டால்
விவசாயிகள் தற்கொலைச் செய்து கொண்டால்
கல்விச்சாலைகள் மூடப்பட்டால்
சாராயம் பெருகினால்
கூலிக் கொலையாளர்கள் புற்றீசல் போல் புறப்பட்டால்
புதிய தொழில் வாய்ப்புகள் முடக்கப்பட்டால்
என்ன என்ன எது ஆனால்?


எதைத் தடுத்தாலும்
எது வெடித்தாலும்
எது நாசமாய்ப் போனாலும்
சுவிஸ் வங்கிக் காப்பாற்றும்
என்று அரசியலாளர்களும்
நிரந்தர வேலையும் சொத்துக்களும்
காப்பாற்றும்
என்று அதிகாரிகளும்
நடிகர்கள் காப்பாற்றுவார்கள்
என்று ரசிகர்களும்
கடவுள் காப்பாற்றுவார்
என்று மத அபிமானிகளும்
அரசியல் தலைமை காப்பாற்றும்
என்று அடிபொடிகளும்
கவர்ச்சிப் படம் காப்பாற்றும்
என்று பத்திரிக்கைகளும்
ஊழல் அரசியல்வாதிகளும்
புரையோடிய அதிகாரிகளும்
காப்பாற்றுவார்கள்
என்று ஆட்டு மந்தை மக்களும்
எனக்கென்ன என்று கடந்துப்போக

ஒரு பாலைவனப் பிரதேசம்
வருங்காலத் தலைமுறைக்கு
உருவாகிக் கொண்டிருக்கிறது
உபயோகப்படாதப் பணத்தாள்களோடு!

உற்றுப் பாருங்கள்
பணத்தில் எழுதிய வரலாற்றுப் பக்கங்களில்
வறுமையும் பஞ்சமும்
 படர்ந்து கொண்டிருக்கிறது

பிள்ளைகளைச்_சூழ்ந்திருக்கும்_உலகம்

இன்று ஒரு வேலையாகக் கோபாலபுரத்தில் இருக்கும் டி ஏ வி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகள் அமைந்திருக்கும் சாலையைக் கடக்க நேர்ந்தது, இருபக்கமும் வாகனங்களை நிறுத்தி, பெரும் போக்குவரத்து நெரிசல், சென்னையில் பள்ளிகள் அமைந்திருக்கும் எல்லாச் சாலைகளிலும் இதுதான் பிரச்சனை என்றாலும், சிறிய பிள்ளைகள் கூடத் தங்கள் வாகனத்துக்காக அப்படியும் இப்படியும் உடன் பெரியவர்கள் இல்லாமல் ஓடியது அச்சத்தையே தந்தது, அவ்வப்போது காணும் காட்சிகளைக் கண்டும், கேட்கும் நிகழ்வுகளைக் கொண்டும், சில கருத்துக்களைக் குழந்தைகளின் நலனுக்காகப் பகிர்கிறேன்;

1. பள்ளியின் வாகனம் என்றாலும் தனியார் வாகனம் என்றாலும், பெற்றவர் அளவுக்குப் பிள்ளைகளின் மேல் யாருக்கும் அக்கறை இருக்காது! உங்களுக்கு ஒரே பிள்ளை, அவர்களுக்குப் பத்தில் ஒன்று பதினொன்று, அவ்வளவே! அதுதான் விபத்துகள் நிகழும்போது பள்ளிகளின் மற்றும் காவல்துறையின் எண்ணமும்!

2. பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குப் பெற்றோரோ, அல்லது வீட்டில் உள்ள ஒருவரோ அவர்களைப் பள்ளியில் விட உடன் செல்லுதல் அவசியம்!

3. பத்தாவது படிக்கும் மாணவன், ஒரு தனியார் வேனில், விளையாட்டுக்காகப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றதை இந்தச் சனிக்கிழமை காண நேர்ந்தது, உள்ளே உள்ள அவனது மற்ற நண்பர்களுக்கு அது ஒரு விளையாட்டாய் இருந்தது! பெரிய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். வளர்ந்தப் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கவனியுங்கள்! முடிந்தால் அவர்களின் நட்புகளை அவ்வபோது சந்தித்து நட்புடன் பழகி, தேவையற்ற பழக்கங்களைக் களையலாம்!

4. உங்கள் பிள்ளைகளை வீட்டிலோ தெருவிலோ வாகனம் இறங்கிவிடும் நேரத்திற்கும் முன்பு நீங்கள் அங்கே காத்திருங்கள், உங்கள் பிள்ளையைப் பத்திரமாய்க் கையைப் பிடித்து இறக்கி, பாதுகாப்பான இடத்திற்கு வரும்வரை உங்கள் பார்வையை அவர்கள் மீதும் வாகனத்தின் மீதும் வைத்திருங்கள்! பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு வேகம் மட்டுமே இருக்கிறது, விவேகம் இல்லை!

5. தனியார் ஆட்டோவை ஏற்பாடு செய்தாலும், அதில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று நீங்கள் கண்காணிக்க வேண்டும். ஒரு பிள்ளையை ஒருவர் ஏற்றிவிட, காலியாய்ச் சென்ற ஆட்டோ, மற்றொரு தெருவில் நிறையப் பிள்ளைகளைப் புளி மூட்டை போல் ஏற்றி, ஆட்டோவின் சீட்டுக்கு மேல் உள்ள சிறிய இடத்தில் கூடப் பிள்ளைகளை அமரவைத்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பணம் மட்டுமே முக்கியம்!

6. பெண் குழந்தைகள் என்றாலும் ஆண் குழந்தைகள் என்றாலும் குட் டச் (நல்ல தொடுகை), பேட் டச் (கீழ்த்தரமான தொடுகை) பற்றிக் கற்றுக் கொடுங்கள்! ஓர் ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்ற பள்ளி வாகனத்தில், பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் அந்தக் குழந்தையைத் தொடக் கூடாத இடங்களில் தொட்டுத் துன்புறுத்தி இருக்கிறான். பிறகு பெற்றவர்கள் சென்று பள்ளியிடம் முறையிட, அந்த மாணவனின் அரசியல் பின்புலத்தால், பள்ளி நிர்வாகம் மெத்தனமாய் இருக்க, அந்தக் குழந்தையை வேறொரு பள்ளியில் சேர்த்தார்கள். வெளியாட்கள் என்றில்லை, பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் எந்த வயதினராலும் எந்தப் பாலினம் என்றாலும் நிகழ்த்தப்படலாம், கவனம் அவசியம்!

7. தெரிந்தவர் அறிந்தவர், பல காலம் எங்களுக்குத் தெரியும் என்று தனியார் ஆட்டோ ஓட்டுனர்களை, பிற வாகன ஓட்டிகளையும் மட்டும் நம்பி சிறு குழந்தைகளைத் தனியே அனுப்புவது தவறு.

என் மகன் ஒன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, அவனைப் பள்ளியில் விட்டுவிட்டு நான் திரும்ப, அப்போதுதான் வந்து நின்ற வேனில் இருந்து, மகனின் நண்பன் இறங்கும்போது கீழே விழுந்தான், அவன் விழுந்ததைக் கவனிக்காமலோ அல்லது கவனித்தும் அந்த வாகனம் சென்று விட்டது, விழுந்த வேகத்தில் அந்தப் பிள்ளை நடைபாதையில் வாந்தி எடுக்க, அவனுக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவன் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களிடம் எந்த அக்கறையையும் இல்லை! சில வருடங்கள் கழித்துச் சமீபத்தில் பேசியதில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அந்தத் தோழி அவர்கள் வீட்டில் இருந்து தனியே வர அனுமதியில்லை என்றது சற்றே விந்தையாக இருந்தது! யாரோ ஓர் ஓட்டுனரை நம்பி, ஏதோ ஒரு வாகனத்தை நம்பியே அந்தப் பிள்ளை இதுநாள் வரை பயணிக்கிறான்! செல்வம் போனால் சேர்த்துக் கொள்ளலாம், குழந்தைகளுக்கு நேரமில்லையெனில், அவர்களின் பாதுகாப்புக்கு உடன் வர மதம் பெரியவர்கள் பெண்ணுக்கு அனுமதி தரமாட்டார்கள் எனில் பிள்ளைகள் எதற்கு?

எல்லாவற்றையும் தந்தைதான் செய்ய வேண்டும் என்று இல்லை, உங்கள் வீட்டு பெண்களுக்கும் சுதந்திரம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

8. பன்னிரண்டு வயதிற்கும் அந்தச் சிறுமிக்கு, என் பிள்ளைகளுக்காக நான் பள்ளியில் காத்திருந்த போது, அந்தப் பெண்ணின் அருகில் வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்ணின் தோளில் கைவைத்து, பின் கன்னத்தைக் கிள்ளி, "ஏண்டி கழுதை, இங்கே நிக்குறே, சனியனே வா!" என்று அழைத்தான், என்னால் முடிந்தது அன்றைக்கு அவனைக் கண்டித்தது, ஆனால் இதுபோலத் தரக்குறைவாக எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளிடம் பேசுகிறார்கள், தொடுகிறார்கள் என்று உங்கள் பிள்ளைகளிடம் கேட்கிறீர்களா? அவர்கள் மதிப்பெண் என்று மட்டும் கேட்க முடிந்த உங்களுக்கு, பள்ளியில் அவர்கள் படும் அவதியையும், வெளியில் படும் அவதியையும் கேட்டு தெரிந்து, அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவைகளைச் சீர்ப்படுத்துங்கள்! இல்லையெனில் வருங்காலத்தில் துன்பமே மிஞ்சும்!

9. சமீபத்தில் பத்திரிகையில் ஒரு நிகழ்வைப் படித்தேன், அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்ல, அப்பா இரவு நெடு நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்ப, அம்மாவும் நெடுந்தூரம் பயணம் செய்து மாலையில் வரும் போது, மிகுந்த சோர்வில் தன் மக்களிடம் நேரம் செலவிட முடியாமல், வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு உறங்கிவிடுவாராம்.

தன் பெண்ணைப் பள்ளி விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு முதிய உறவினர் ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்று விடுவது தின வழக்கம்! கொஞ்ச நாளாய் மகள் அம்மாவிடம், "அம்மா என்கூடப் பேசு, நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல, "நாளைக்கு நாளைக்கு" என்று தட்டிக் கழித்திருக்கின்றனர்.

சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த முதிய உறவினர் வீட்டுக்குச் செல்ல மறுத்த மகள், தன் அம்மாவிடம் பூனைக்குட்டிகளை வாங்கித் தர சொல்லி அடம் பிடிக்க அம்மாவும் வாங்கித் தந்திருக்கிறார்! பூனைக் குட்டிகள் வந்த சில நாட்களில் மகளிடம் பெரிய மாற்றம், அது அம்மாவுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. இருந்தாலும் மகள் வளர்க்கும் பூனைகளைக் காணும் பொருட்டு அவள் அறைக்குச் செல்ல, அங்கே அந்தப் பூனைக் குட்டிகளைச் சங்கிலியில் பிணைத்தும், ஒன்றின் காதுகளை வெட்டியும், குட்டிகளின் உடல் முழுதும் குண்டு ஊசியால் குத்தியும், அதன் ரோமங்களைத் தீய்த்தும் வைத்திருந்திருக்கிறாள், பக்கத்துக்கு வீட்டில் உள்ள பெண்மணிகளும் அவளிடம் வந்து, "உன் மகள் அந்தப் பூனைகளைக் கொடுமை படுத்துகிறாள், இப்படியே விட்டால் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்!" என்று சொல்ல, அப்போதுதான் அம்மாவுக்கு மகளின் மனநிலைப் புரிந்தது!

ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல, மகள் தன்னை அந்த முதிய உறவினர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும், தன் அம்மா தன்னிடம் காது கொடுத்து, பேச மறுத்ததாகவும், அதனால் அந்த முதிய உறவினரின் நினைவு வரும்போது, இந்தப் பூனைக்குக் குட்டிகளைக் கொடுமைப்படுத்துவது அவளுக்கு அந்த உறவினரையே துன்புறுத்துவது போலத் தோன்றுவதால் அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்லி இருக்கிறாள்!

உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் காதுகளும், மனமும் நேரமும் வேண்டும், இல்லையென்றால் ஏதோ ஒரு உயிர் உங்கள் பிள்ளைகளின் துன்புறுத்தலுக்கு ஆளாகும்! நாயை கல்லால் அடிப்பது, பூனையைத் துன்புறுத்துவது, பட்டாம் பூச்சியைப் பிய்த்து எறிவது என்று பிள்ளைகள் செய்யும் செயல்களை ஊக்குவிக்காதீர்கள், அது அவர்களின் மனச்சிதைவின் ஆரம்ப அறிகுறி! இப்படியே வளரும் பிள்ளைகள் சிறந்த கணவனாகவோ, மனைவியாகவோ ஆதல் அரிது!

10. வெளியில், தெருவில், பக்கத்துக்கு வீட்டில் விளையாடச் செல்லும் பிள்ளைகளிடமும் கவனம் அவசியம்!

11. இன்று மொத்த எலக்ட்ரானிக் பொருட்களையும் பிள்ளைகளிடம் கொடுக்கிறீர்கள், அதில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கிறீர்களா? அதில் அவர்கள் நல்லதையும் தெரிந்து கொள்ளமுடியும், தேவை இல்லாத குப்பைகளையும் காண முடியும், வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

12. வெளி உலகை, பாதுகாப்பு நிறைந்ததாக நாம் மாற்ற முடியாது, முடிந்தவரை நம்மில் இருந்து வந்த உயிரை, நாம் சரியாக வழிநடத்தலாம், பாதுகாப்பை உறுதி செய்யலாம்!

சென்னை போக்குவரத்து

உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையான "தி குளோபல் ரிப்போர்ட் ஆன் அர்பன் ஹெல்த்" தின் படி, சாலை விபத்துகளில் மாண்டுபோவர்களின் பட்டியலில், சியாரா என்ற பிரேசிலின் நகரத்துக்கு அடுத்துச் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது!

இதற்காகச் சென்னைவாசிகளாக இன்றே நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம், ஏனெனில் இந்த விபத்து நாளை நமக்கும் நடக்கலாம், நாம் இல்லாமல் போகலாம்!

அரசாங்கம் இல்லையென்றாலும், அதிகாரிகள் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அறுபது சதவீத விபத்துகள் நம்மாலேயே குறைக்கப்படலாம்! அது என்ன என்ன என்று நமக்கே தெரியும்! 

1. சிக்கனலை மதிப்பது

2. சாலை வரிசைகளை மதிப்பது

3. தலைக்கவசம் அணிவது

4. மித வேகம் 

5. பதினெட்டுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மோட்டார் வாகனங்களை
கொடுக்காமல் இருப்பது. சைக்கிளை தந்தாலும் அவர்களை நெடுஞ்சாலைகளில் கவனமாய் இருக்கச் சொல்வது

6. கனரக வாகனங்களின் முறையான தணிக்கைகள்

7. நடைபாதைகளில் வீடுகளை விஸ்தரிப்பது, கடைகளை விஸ்தரிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்

7. உங்கள் பிள்ளைகள் நண்பர்களுடன் பைக்கில் இருவர் மூவராக ரேஸில் பறப்பது போன்ற சாகசங்களைக் கண்காணித்து அறிவுறுத்துவது என நிறைய இருக்கின்றன நாம் செய்வதற்கு!

பொதுவான விதிகளை விடுத்து, ஒரு பைக்கில், ஓட்டும் ஆணோ பெண்ணோ மட்டும் தலைக்கவசம் அணிந்து, குழந்தைகளுக்கு, அல்லது பின்னால் இருப்பவர்களுக்குத் தலைக்கவசம் இல்லாமல் செல்வது எப்படிப்பட்ட அக்கறை என்று புரிவதில்லை! ஒருவேளை கீழே விழுந்தால், ஓட்டுநர் மட்டும் தப்பித்துக் குடும்பம் சாகலாம் என்ற எண்ணமா?

நாள்தோறும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது சாலைகளில். பைக் ஓட்டிகள் நடைபாதைகள் ஓட்டுகிறார்கள், சாலைத் தடுப்புச் சுவர் குட்டையாய் இருந்தால் அதன் மேல் ஏறி ஓட்டுகிறார்கள், இன்னமும் அவர்கள் வரிசையாய்ச் செல்லும் வாகனங்களின் மேல் பறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

விதிமுறைகளை மீறி தினந்தோறும் லட்சணக்கணக்கில் வாகனங்கள் சாலைகளில் பறக்கிறது, அதிகாரிகள் ஓரமாய் நிற்கிறார்கள், மாத கடைசியில் சில அபராதங்கள் விதிக்கப்படுகின்றன! பொதுவாய் சீர்கெட்டு இருக்கும் சாலைகள் மழை நேரத்தில் முழுதும் காணாமல் போகிறது (ஊரே காணாமல் போனது கடந்த வருடம்)!

இந்தச் சாலைகளின் நிலைகளும், போக்குவரத்தும் சீர் செய்யப்பட மிக முக்கியமான பிரமுகர்களுக்குச் சாலைகளில் இடைஞ்சலோ, விபத்தோ அல்லது, ஏதோ ஒரு பொதுநல வழக்கோ தேவைப்படலாம், அதுவரை, நம்முடைய கவனத்தாலும் பிறருடைய கருணையாலும் தான் நாம் வீடு திரும்ப வேண்டும்!
#சென்னை #போக்குவரத்து

ஆண்மையின்_தவறான_புரிதல்

சமீபத்தில் ஒரு பெண் கணவரின் கடிதம் என்ற பெயரில், சராசரி ஆண்களின் கீழ்மையான மனநிலையை வெளிப்படையாய், சில வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார், ஒரு பெண் இப்படி எழுதலாமா என்றதோடு, அவரின் உள்நோக்கம், வெளிநோக்கம் என்ற விமர்சனங்களையெல்லாம் காண நேர்ந்தது!

உண்மையில் இந்த ஆண்கள் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேசுவார்களா? அப்படியென்றால் எப்படிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அப்படிப் பேசுவார்கள்? எந்த மட்டத்தில் உள்ளவர்கள் அப்படிப் பேசுவார்கள்?, யோசித்துப் பார்த்தால், பெண்களிடம் கேளுங்கள் என்று சொல்வேன்! ஆமாம், தினந்தோறும் வீட்டில் வதைபடும், பேருந்தில் வதைபடும், சாலையில் வதைபடும், பணியிடத்தில் வதைபடும் பெண்ணினத்துக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு, "தே...." என்றும், "தே பையன்" "தே மூ" என்றும் யாரை நோக்கி கூறினாலும், அதில் உள்ள குறிப்பு அந்த ஆணையோ பெண்ணையோ பெற்றவளையே குறிக்கிறது!

எப்போதும் பெண்மையைக் கொண்டு பெண்ணையே தூற்றும் போது, இதைப் பற்றிப் பெண்கள் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?

சாலையில் செல்லும்போது, திடீரென்று, ஏதோ ஒரு போர்னோ (நிர்வாண) படத்தை நம் காலடியில் போடுவார்கள், பெண்கள் ஆடை அணிந்து வாகனத்தில் செல்லும்போது, பயணிக்கும்போது, அவளுக்கே தெரியாமல், அவள் நெகிழ்ந்திருக்கும் ஆடையை அல்லது இவர்களுக்கு உவப்பில்லாத (அப்படிச் சொல்லிக்கொள்வார்களே ஒழிய, அதை ரசிக்கத் தவற மாட்டார்கள்) ஆடையை அணிந்திருந்தால், கலாச்சாரம் என்று அதைப் பொதுவெளியில் போட்டு விமர்சிப்பார்கள், அவ்வப்போது தம் நடுவிரலை காட்டி அசிங்கமாய் யாரோ ஒரு பெண்ணிடம் தம் வக்கிரத்தை வெளியிடுவார்கள்!

ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தால், தம் மீது தவறு இருந்தால், உடனடியாகத் தரக்குறைவான வார்த்தைகளில் பெண்ணையும் அவளைப் பெற்றவளையும் (கவனிக்கப் பெற்றவனை அல்ல) இகழ்வார்கள்! "ஓ + ஆத்தா" என்ற வார்த்தை மிகச் சகஜமாய்ப் பெரும்பாலான ஆண்களின் வாயில் இருந்து வரும், பெண்ணிடம் என்று இல்லை, சக ஆண்களிடமும் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்!
"ஓத்தா" என்பதைப் பிரித்து எழுதினால் அதிலும் "ஆத்தா" என்று பெண்ணை இகழும் பதமே வருகிறது!
இந்த வார்த்தைகளை எழுதுவது நாகரீகம் இல்லை என்றாலும் வேறு எப்படி இதைச் சொல்வது?

பொதுவெளியில் ஒரு ஆண் வயது வித்தியாசம் இல்லாமல் தன்னைச் சார்ந்த அல்லது சாராத யாரோ ஒரு பெண்ணிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசும்போது அந்தப் பெண்ணின் சுயம் பாதிக்கப்படும் போது அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும்? திருப்பி அதே போல் பேச வேண்டுமா? எழுதவதே தவறு என்று சொல்லும்போது, பேசினால் என்ன மாதிரி விமர்சனம் பெண்ணுக்கு வரும்? அப்படியே பேசினாலும் கூட, பெண்ணை இகழும் வார்த்தைகளுக்கு ஆண் பதம் என்ன?
இதுவரை நாம் கேட்டறியவில்லை!

பொதுவெளியில் இப்படிப் பேசும் ஆண்களை, கீழ்மட்ட ஆண்கள்தான் என்று எண்ணிவிட வேண்டாம், "பீப் சாங், சூப் சாங்" எழுதிய நடிகர்கள் எல்லாம் அரசாங்கப் பள்ளியில் படிக்கவில்லை, தனியார் பள்ளிகளில் படித்த மரியாதைதான் அவர்கள் பாடல்களின் அடித்தளம்! அரசாங்கப் பள்ளி, தனியார் பள்ளி, படித்த பெற்றோர் படிக்காத பெற்றோர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் மட்டுமே ஆண்களின் வார்த்தை பிரயோகங்களுக்குப் பெரும் அடிப்படை இல்லை! ஓவ்வொரு வீட்டிலும் அப்பா என்பவர் தன் மனைவியை, மகளை, சகோதரியை, உறவுகளை,நட்பை எப்படி நடத்துகிறார், எப்படிப் பேசுகிறார் என்பதைத்தான் அவரின் ஆண் வாரிசு கற்கிறது, பள்ளியில், கல்லூரியில், அந்த ஆண் வாரிசின் சக ஆண் நட்புகளைப் பொறுத்து அவர்களின் வார்த்தை அகராதி, வன்மத்தின் அகராதி மேலும் உருப்பெறுகிறது, வளர்ப்பும் சூழலும் ஆணை, ஓர் பெண்ணின் மீதான அவன் வார்த்தைப் பிரயோகத்தை வடிவமைக்கிறது!

இதில் மோசமான பகுதி என்னவென்றால், அதை யாரும் கண்டிப்பதில்லை, ஆண் "ஆடையின்றித் திரிந்தால்", "பெண்ணை வன்புணர்ச்சி செய்தால்", "சிறுவயது பெண்ணைத் திருமணம் செய்தால்", "குடித்தால்", "புகைத்தால்", "கொலை செய்தால்", "திருடினால்", "விபத்து ஏற்படுத்தினால்", "பெண்ணைத் தரக்குறைவாகக் கிண்டல் செய்தால்", "பெண்ணின் விடியோவை எடுத்துக் கிழவி என்று கிண்டல் செய்தால்", "அந்த ஆண்ட்டி சூப்பர் பிகர்" என்று வக்கிரமான பதிவு போட்டால், எப்படி எதை ஆண் பெண்ணுக்கெதிராய்ச் செய்தாலும், அவையாவும் வெறும் "செய்தியே" ஆணின் வக்கிரம் விவாதப்பொருளாவதில்லை, ஆணின் மோகம், புகழ் தாகம், விளம்பர மோகம், வளர்ப்பு, கீழ்த்தரமான எண்ணம், அவனின் ஒழுக்கம் எதுவுமே விவாதம் இல்லை, அந்தச் செய்தி மட்டுமே பிரதானம்!

இதையெல்லாம் ஒரு பெண் செய்தால்? பெண் குடித்துவிட்டுக் காரோட்டி விபத்து ஏற்படுத்தினால், விபத்தைத் தாண்டி "அந்தப் பொண்ணு.." "பெண்" தான் செய்தி, பெண் குடிக்கலாமா? பெண் புகைக்கலாமா? பெண் ஆணின் கையைப் பிடித்து இழுக்கலாமா? பெண் வெளிப்படையாய் ஆணை விமர்சித்து, அதே தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து விமர்சிக்கலாமா?, பெண் ஆண்களை "அந்த அங்கிள் மொக்கை பிகர்" என்று சொல்லலாமா?, பெண் அலங்கோலமாய்த் திரியலாமா? இப்படி அரிதாய் நடக்கும் எந்த நிகழ்வென்றாலும், செய்தி என்பது அங்கே "பெண்" மட்டும்தான்!

சில தெருக்களில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அப்படியொரு வார்த்தைகளில் இகழும் போது, தன் மனைவியைத் தானே விலைமகள் என்ற பொருளில் உரத்துக் கூறி கீழ்நிலைக்குச் செல்பவனிடம், அவளின் வாழ்க்கை அவனுக்கு மனைவி என்ற உறவா அல்லது பணம் இல்லாத விலைமகள் என்ற உறவா என்ற சந்தேகம் வருவதுண்டு, மனைவியை இகழும் ஆண், தன் அம்மாவை எப்படி நினைத்துக் கொள்வான், தன் மகளை எப்படிப் பார்ப்பான் என்ற சந்தேகங்களும் அதையொட்டி வருவதுண்டு!

உளவியல் ரீதியாக இது ஆணுக்கு அதிர்ச்சி, பெண்ணின் கல்வியை முழுதாய் மறுக்க முடியவில்லை, பணியிடத்தில் அவளின் வளர்ச்சியைச் சகிக்க முடியவில்லை, எதையும் தடுக்க முடியாதபோது, பெண்ணின் மீதான ஆணின் அதிர்ச்சி, காழ்ப்பு, அவள் செய்தியாகும் போது, அவளையே செய்தியாக்கி வடிகால் ஏற்படுத்திக் கொள்கின்றனர்!

அந்தச் சில ஆண்களுக்கு மட்டுமே இது, "ஆண்களே அடுத்த முறை, மிகக் கீழ்த்தரமாகப் பெண்ணைப் பற்றி எழுதும்போது, அல்லது சாலையில், பொதுவெளியில், வீட்டில் பேசும்போது, ஒரே ஒரு நிமிடம் உங்களைப் பெற்றவளையும், சகோதரியையும், மகளையும், மனைவியையும் நினைத்துக் கொள்ளுங்கள், "தே ..." "ஓ ..." என்று எங்கோ யாரோ ஒருவரின் பெண்ணை நீங்கள் இகழும் போது, நீங்கள் ஒரு சரியான பெற்றோரால் வளர்க்கப்படவில்லை, உங்கள் நட்பு வட்டம் கீழ்தரமானது, உங்கள் கல்வி நிலை அடிமட்டம் என்றுதான் நீங்களே உங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறீர்கள், உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளும் அந்த நிலை மிகப்பரிதாபம்தான்!

நீயும் இந்தியனே!

குண்டும் குழியுமான ரோடுகளில்
பயணிக்கும்போது
சாலைகள் இல்லாத பாதைகளில்
உருளும் போது
சமையல் எரிவாயு உருளைக்கு
அதிகப்பணம் கொடுக்கும்போது
தீபாவளி, பொங்கலென்று
அரசு வருமானம் உள்ளவனுக்கும்
உழைத்த பணத்தை
உவப்பில்லாமல் தரும்போது

அவசர ஊர்தியின் பயணத்தையும் கூடத்
தேங்கவைக்கும் மந்திரிகளின்
அலுவல் செல்லும் போலி அவசரத்தைக்
காணும்போது
யாரோ ஒரு பெண்ணின் உறவுகளை
சாராயக்கடை வாசலில்
வீதியெங்கும் கடக்கும்போது
அரசு அலுவலகங்களில்
பிச்சைக்காரர்களைப் போல்
மக்களை நடத்தும் படித்த முட்டாள்களை
நோக்கும்போது
சாதியென்றும் மதமென்றும் நம் சக மனிதர்கள்
தாக்கப்படும்போது
விரும்பமில்லா மொழியைத்
தலையில் திணிக்கும் போது
எளிதில் நடந்துவிடும் குற்றத்தில்
நீதியை வேண்டினால் மட்டும்
நடையாய் நடக்க வைக்கும்
சட்ட அமைப்பின் சிலந்திக்கூட்டில்
சிக்கும்போது
மழை வெள்ளத்தில்
உயிர்களும் பொருட்களும்
அடித்துச்செல்லப்படும்போது
பார்க்கும் திசையெங்கும்
மழலைகள் பிச்சைக்காரர்களாய்
குழந்தைத் தொழிலாளர்களாய்த்
திரியும் போது
கல்வியும் மருத்துவமும்
பணத்தின் வசம் வாழும்போது
போராடுபவர்கள் தேச விரோதியெனச்
சித்தரிக்கப்படும் போது
மீண்டும் ஒருவனோ ஒருத்தியே வந்து ஒட்டுக்கேட்கும்போது
ஏதோ ஓர் இலவசத்தைப் பெற்றுக்கொண்டு
இத்தனையையும் கடக்கமுடிந்தால்
#நீயும் இந்தியனே!

விருந்தோம்பல்

#அணுக்கதை
வீடு திறந்திருக்கிறது, தொலைக்காட்சியில் சீரியலில் மூழ்கியிருக்கிறாள் அவள், இவள் நுழைகிறாள்!
அவள்: "அடேடே வா வா....என்ன சாப்பிடுறே, காபி ஆர் டீ?" (தொலைக்காட்சியில் கவனம் இருக்கிறது)
இவள்: "நான் என்னைக்கு அதெல்லாம் சாப்பிட்டு இருக்கேன், அப்படியே கேட்டுட்டாலும் இந்த டிவிய விட்டு நீ போட்டுட்டா மாதிரிதான், புள்ளைங்களுக்கே இடைவெளியில் தான் சோறு...ம்ம்!"
அவள்: "ஏய், நீ மைண்ட் வாய்ஸ்சுன்னு சத்தமா பேசிட்டு இருக்கே!"
இவள் : "மைண்ட் வாய்ஸ் இல்லேடி வெண்ணெ, இப்படி வீட்டை திறந்துபோட்டுட்டு ஆன்னு டிவி யா பார்த்துட்டு இருக்கும்போது, விருந்தாளி வந்துட்டாலே உனக்கு அது சர்ஜிக்கல் அட்டாக் தானே? இப்படியே இருந்தா பெருத்துகிட்டே போவே!"
அவள்: "டிவி பார்க்கிறே நேரத்துலே அப்படி விருந்தாளிக வந்தா அஃது எல்லை தாண்டிய பயங்கரவாதம்னு சொல்லுவேன்...ஹி ஹி ஹி! இப்போ நீ வந்தது கூட அப்படிதான்!"
இவள்: ???
#விருந்தோம்பல்

கணக்கின் எண்ணிக்கை

ஒருவரின் மரணம்
நேசிப்பவர்களுக்குத்
துயரம்
மற்றவர்களுக்கு
கழித்தல் கணக்கின்
கழிந்துப் போன
ஒர் எண்ணிக்கை
மட்டுமே!

காமம் மட்டுமே போதுமே!

ஒரு வீட்டில் பணத்தையும் நகையையும் பாதுகாக்கும் அளவுக்கு இருக்கும் அக்கறையையும், பயத்தையும் நாம் பிள்ளைகளைப் பாதுகாப்பதில், வழிநடத்துவதில் காட்டுகிறோமோ என்றால் அது மிகப்பெரும் கேள்விக்குறியே!

பெரிய ஷாப்பிங் மால்களில், அம்மாவும் அப்பாவும் கடைகளில் கவனம் கொண்டிருக்க, பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறேன், சட்டென்று யாரோ ஒருவன் ஒரு குழந்தையை வாய்பொத்தி அழைத்துச் சென்றால் கூட நமக்குத் தெரியப்போவதில்லை!

மின்தூக்கிகளின் அருகில், எஸ்கேலேட்டர்களில் அம்மா அப்பா பின்னே நிற்க, பிள்ளைகள் முன்னே ஓடும், எல்லாவற்றிலும் சென்சார் சரியாக இயங்குகிறதா என்று நமக்கு எவ்வளவு உறுதியாகத் தெரியும்?

சாலையில் குழந்தைகளை எப்புறம் கைப்பிடித்து அழைத்துச் செல்வது என்று தெரியாமல் கூட, சில பெற்றவர்கள் இருப்பது வேதனை!

எப்போதோ ஒரு கதைப் படித்தேன், மிகப்பெரும் செல்வந்தனானத் தந்தையிடம் ஒரு குழந்தை அவன் ஒரு மணிநேரத்தில் என்ன சம்பாதிப்பான் என்று கேட்கிறது, அந்த ஒரு மணிநேரக் காசுக்கு, சில ரூபாய்கள் குறைய அதை அவனிடம் பெற்றுக்கொண்டு, மொத்தமாய்ப் பணத்தை அவனிடம் தந்து, என்னுடன் ஒரு மணி நேரம் பேச முடியுமா அப்பா என்று கேட்கிறது! இன்று நமக்கு எல்லாவற்றிற்கும் நேரம் இருக்கிறது, ஆனால் குழந்தைகளிடமும், நேசிப்பவர்களிடம் நேரம் செலவிட நமக்கு நேரமில்லை, அதிலும் நேரக்கணக்குப் பணக்கணக்கெல்லாம் சொல்லி வேதனைப்படுத்துவது மட்டுமே நாம் செய்யும் சாதனை!

ஆண் பெண் இருவரும் வேலைக்குச் சென்று ஈட்டும் பணமெல்லாம் பிள்ளைகளுக்கென்றால், அந்தப் பிள்ளைகளின் மேல் உள்ள அக்கறை ஏன் நமக்குச் சிதறிப்போகிறது?

"சீரியல் பார்க்கும் நேரத்தில் அம்மா சோறு போட மாட்டாள்" என்று வரும் துணுக்குகளைக் காணும் போது வேதனையே மிஞ்சுகிறது, இப்படியும் அம்மாக்கள் இருப்பார்களா என்ற அதிர்ச்சிதான் எழுகிறது, அதில் என்ன நகைச்சுவை இருந்துவிடப் போகிறது? என் அம்மாவுக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிறது, இப்போதும் நான் சாப்பிடும் போது, அவர் என்ன நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எனக்குத் தண்ணீர் முதற்கொண்டு எடுத்துவைப்பார், நானே எனக்குவேண்டியத்தைச் செய்துகொள்ள முடியும், எப்போதும் என்னைத் தடுத்து, அவர்தான் இப்போதும் அந்த வேலையைச் செய்வது, குறை என்று என்னிடம் சொல்வதற்கு என் அம்மாவுக்கு ஒரு பட்டியல் நீளும், ஆனால் உள்ளூர உறைந்திருக்கும் அன்பை இப்போதும் இதன் வழியே வெளிப்படுத்த தவறுவதில்லை அவர்! அம்மா என்றால் அம்மா தானே? பிள்ளைகளை வயிற்றைக் காயப்போட்டு, சீரியல் பார்க்கும் அம்மாக்கள் நிச்சயம் இருக்க முடியாது, அப்படி இருந்தால் அங்கே அடிப்படையில் ஏதோ தவறு இருக்கின்றது என்றே பொருள்!

விவாகரத்தாகித் தனியே வசிக்கும் ஒரு தோழிக்குப் பள்ளிச் செல்லும் வயதில் இரு குழந்தைகள், வேலைக்குச் செல்லும்போது, ஒருவரை வீட்டில் அமர்த்திவிட்டுப் போவது வழக்கம், அப்படி அமர்த்தப்பட்ட ஒரு பணிப்பெண் ஒருநாள் வீட்டில் இருந்த பொருட்களைத் திருடிக் கொண்டு ஓடிவிட, என் குழந்தைகள் பத்திரமாய் இருந்ததே போதும் எனக்கு என்றாள், பின் தெரிந்த ஒருவரை, பணிக்கு அமர்த்தி, குழந்தைகள் உறங்கும் நேரம் இரவு பணிக்குச் சென்று, காலையில் அரைகுறையாய்த் தூங்கி, குழந்தைகளுக்கு வேண்டியது செய்து, குழந்தைகளுக்கென வாழ்பவள், படித்துப் பணியில் இருக்கும் பெண்ணுக்கு இருக்கும் அன்பும் அக்கறையும் குழந்தைகள் பாதுகாப்பில் இருக்கும் ஜாக்கிரதை உணர்வும், வீட்டில் பணிக்குச் செல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இருக்காதா, நிச்சயம் இருக்கும்! எனினும் பிள்ளைகளுக்கு எவ்விதத்தில் ஆபத்து ஏற்படலாம் என்று பகுத்தறியும் திறமை, சில அம்மாக்களுக்கும் அப்பாக்களுக்கு இல்லாததே நிறைய விபத்துகளுக்குக் காரணமாகிவிடுகிறது!

பால்கனியில் இருந்து குழந்தை விழுவது, சாலையில் தனியே விளையாடித் தொலைந்துப் போவது, அக்கம் பக்கம் விளையாடச் சென்று பாலியல் வன்கொடுமைக்கோ, கடத்தலுக்கோ ஆளாவது, வீட்டில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து இறந்துப் போவது , நாணயங்களை விழுங்கி இறப்பது, வீட்டில் இருக்கும் டிவி தலையில் விழுந்து இறப்பது, காய்ச்சலின் அறிகுறிகளைச் சரிவரக் கவனிக்காமல், நாள்பட்டக் காய்ச்சலில் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்துபோவது, பேருந்து ஓட்டையில், மின்தூக்கியில், நெரிசலில், ஆழ்துளை கிணற்றில்...இப்படி யோசித்துப் பாருங்கள், நிறையச் சம்பவங்கள் பெற்றவர்களின், மற்றவர்களின் அலட்சியமான போக்கால், ஆபத்து நிகழும், பாதுகாப்பில்லை என்று பகுத்தறியும் ஆற்றல் இல்லாததால் தான் பெரும்பாலும் நிகழ்கின்றன!

அதிலும் கணவன் கொடுமை என்று கிணற்றில் குதித்து, பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து, அல்லது தன்னைத் தானே எரித்துக் கொண்டு சாவது, பிள்ளைகளை ஆனதைக்காளாக்கிச் சாகும் பெண்களின் செய்திகளைப் படிக்கும் போது, அவர்கள் மனதளவில் ஒரு பிள்ளைக்குத் தாயாகக்கூடிய தகுதியே இல்லாமல் தான் பிள்ளை பெற்றிருக்கிறார்கள் என்று எப்போதும் தோன்றும்!

பார்க்கும் மாப்பிள்ளையிடம் பணமிருக்கிறதா, வேலையிருக்கிறதா, என்ன பழக்கம் என்று பெண்ணைப் பெற்றவர் பார்ப்பதுண்டு, ஆனால் தன் பெண்ணிடம் தன்னம்பிக்கை இருக்கிறதா, கல்வி இருக்கிறதா, வாழ்க்கையில் போராடி ஜெயிக்கும் துணிவிருக்கிறாதா என்று பார்ப்பதில்லை!
"என்ன ஆனாலும் உன் புருஷன், சகிச்சுக்கோ, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ, குடிச்சா என்ன அடிச்சா என்ன, கல்யாணம் தான் வாழ்க்கையின் அவசியம்", என்று பெண்களை வளர்க்கும் பெற்றோர், கொஞ்சம் அவளுடைய கல்விக்குச் செலவழித்து, அவளுடைய தன்னம்பிக்கையை வளர்த்து, கல்யாணத்திற்கெனச் செலவு செய்யும் பணத்தை அவள் தன் சுய முயற்சியில் சொந்தக் காலில் நிற்கும் தொழிலுக்கோ கல்விக்கோ செலவு செய்யலாம், மனமுதிர்ச்சி கொண்ட பெண் ஒரு சிறந்த மனைவியாகவும் தாயாகவும் திகழ்வாள்!

பெண்ணுக்குப் பணமிருக்கிறதா, சொத்திருக்கிறதா, அழகிருக்கிறதா என்று பார்க்கும் சமூகம், பெண்ணுக்கு நல்லகல்வியும், தெளிந்த அறிவும் துணிவும் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும், (ஆண்களுக்கும் கூட!) அழகும் பணமும் கரைந்துப் போகும், தெளிந்த சிறந்த அறிவும், அன்பும் மட்டுமே வாழ்க்கைக்கு அழகூட்டும்!

இந்த முகப்புத்தகத்திலேயே, யாரோ ஒருவரின் ஏதோ ஒரு பதிவிற்கு (சரியாய் நினைவில் இல்லை) ஒரு பெண், தன்னுடைய ஏழோ எட்டோ வயதுடைய பிள்ளையை ஹாஸ்டலில் தங்கவைத்திருப்பதாகவும், வீட்டில் எனக்குப் போரடிக்கிறது, நான் என்ன செய்யலாம் என்று ஒருவரிடம் பொதுவெளியில் கேட்டிருந்தார், குழந்தை வளர்ப்பு இன்று இத்திசையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது, பிள்ளை உடன் இருந்தால் தொல்லை, தொலைவில் இருந்தால் போரடிக்கிறது!

குழந்தைகளின் உணவு, ஆரோக்கியம், கல்வி என்பதில் பெற்றவர்களுக்கு இருக்கும் அக்கறை அதன் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும், சேர்த்தப் பணம் கூடச் செல்லாததாகிவிடும், இதோ அப்படித்தான் ஆகியிருக்கிறது, பெற்ற பிள்ளைகள் தான் நம் உலகை அழகாக்குகின்றனர், குழந்தைகளின் மீது கவனம் செலுத்த முடியாவிட்டால், அதுவரை நாம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்துவிடலாம், கருத்தில்லாத பெற்றவர்களுக்குக் காமம் மட்டுமே போதுமே வாழ்க்கைக்கு?!

சில்லறை வணிகமும் அட்டைகளின் உலகமும்!



நடைபாதையில் இருக்கும்
கீரைக்கட்டு ஆயாவுடன்
தண்ணீரின் மலர்ச்சி உண்டு
சுப்புவின் காய்கறி கடையில்
கத்தரிக்கும் வெண்டைக்குமிடையேயான
பேரத்தில் இலவசமாய்
கருவேப்பிலையும் கொத்தமல்லியும் உண்டு

ஊரின் விளைச்சல் நிலத்தில்
இருந்து மொத்தக் கொள்முதலாய்
ஒரு கோணிமூட்டையில்
துவரையும் சில நேரங்களில்
வெங்காயமும் கொண்டு வரும்
மணியின் விற்பனைப்பொருட்கள்
அவனின் அக்கா ஆயா அத்தை
அழைப்பில் விற்று தீர்வதுண்டு

பெட்டிக்கடை வாசலில்
சிகரெட்டும் நொறுக்குத்தீனியும்
வாங்கித் தீர்க்கும் இளைஞர்கள்
கடவுளாய் கோபால அண்ணனுக்கு
தெரிவதுண்டு
டீக்கடை பெஞ்சுகளில்
டீயோடு வடையும் பஜ்ஜியும்
சுடச்சுட அரசியலும்
அலசப்படுவதுண்டு

சின்னதாய் அழகு நிலையம்
வைத்திருக்கும் பார்வதி
புருவ திருத்தலின் இருபது
ரூபாய்க்குக் கடன் சொல்லும்
பெண்களையும்
வாடிக்கையாளர்களாய்
ஏற்றுக்கொள்வதுண்டு
கடற்கரையோர ரமணின்
கடையில் வஞ்சிரமும்
கடமாவும்
வாய்கிழியப் பேசிய பேச்சின்
சுவரசியத்தில்
அலுப்பில்லாமல் குழம்பில்
கொதிப்பதுண்டு

சில்லறைத் நீர்த்துப்
போன உலகத்தில்
ஆன்லைனில் சிலவற்றை
ஆர்டர் செய்து
அத்தனை மனிதர்களையும்
இழந்து
முகம் தெரியாப் பெரும்
வணிக முதலாளிகளின் கடைகளில்
பதப்படுத்தப்பட்ட
பாக்கெட்டுகளின்
காலாவதித் தேதிகளை
மட்டுமே பார்த்து
விலையைப் பற்றிய அபிப்பிராயம்
பேச முடியாமல்
கூடையில் அள்ளிப்போட்டு
வரிசையில் நிற்கிறேன்
கடன் அட்டைத் தேய்க்கும்
பெண்ணும் கூட
பில்போடும் எந்திரத்தை
விட்டு பார்வையை அகற்றவில்லை!

Modern day bagpipers!

He who leads a king's life
seldom understand common's thrive
for everyday meal and living

He who plays a dictator's role
seldom listens to black positive
for a better scaling

He who sings a solo rune
seldom plays beautiful verse
for any sorrow soothing

He who owns a cruise
seldom sights poor-men bruise
for a merciful healing

He who holds a golden plate
seldom bothers misfeasance
for the agony caused in starving

And for thee
the world is blue and green
seldom looks down
for the pitch dark reality stinking!

பொல்லாத மனுசனுங்க அண்ணே

பொல்லாத மனுசனுங்க அண்ணே
அத்தோட தினக்கூலி
நூறு ரூபாயில
பேரம் பேசி
பொருள வாங்கி
சிக்கனமா
இருபதும் பத்துமா
சிறுவாடு சேர்த்து
பத்திரமாய் கட்டி வெச்சேன்
அண்ணே
ஐநூறும் ஆயிரமா
மாத்தி சேர்த்து வச்சு
பார்த்து சந்தோசப்பட்ட
காசுல
கால் காசு வாங்கி முடியவோ
வயசுப் புள்ளைக்குச்
சங்கிலி வாங்கிப் போடவோ
முடியல்ல அண்ணே
செல்லாதுன்னு
சொல்லிபுட்ட சீமானால
கால்கடுக்க வரிசையில
நின்னு மாத்தி வந்த
இரண்டாயிரம்
நோட்ட
மொத்தமாய் செலவு செய்யு
சில்லற இல்லன்னு
சொல்றாங்களே அண்ணே
சிறுவாடு சேமிப்பெல்லாம்
கருவாடா ஆச்சுதே அண்ணே
ஒங்க உலக அரசியலு
எனக்குப் புரியலே அண்ணே
கூலி வராத நாளுல
உதவுன சிறுவாடு போச்சுதே அண்ணே
ஒல கொதிக்காமா
வயிறு கொதிக்குது அண்ணே
நாங்கதாண்ணே கருப்பு
எங்க உழப்பெல்லாம்
மனசு போல வெள்ளதானே அண்ணே
கருப்புப் பணம் வெச்சிருக்க சீமான்கள
கண்டுப்புடிச்சிட்டாங்களே அண்ணே
இந்த நிலம எப்ப தீருன்னு
கேட்டுச் சொல்லுங்க அண்ணே

மாறுப்பட்ட உள்ளம்

அன்பற்று போகும்போது
வார்த்தைகள் அவசியமற்றோ
சலித்தோ போகின்றன
மாறுப்பட்ட உள்ளத்திடம்
அன்பை ஈயென இரத்தலை விட
மௌனத்தில் இறத்தல் நல்லது!

Tuesday 8 November 2016

#Spain_1 #ஸ்பெயின்

அழகான நகரம் ஸ்பெயின்!

படுசுத்தமாய் இருக்கிறது சாலைகள் பெரும்பாலான ஐரோப்பிய நகரங்களின் சாலைகளைப் போல்! இங்கே கூவத்தை சுத்தப்படுத்துவோம் என்று அரசியல்வாதிகள் வாக்கு சேகரிக்க முடியாது என்பது ஒரு துயரமான விஷயம், சென்னையில் நான்கடி நடைபாதைகளைக் கூட வியாபாரிகளும் வாகனங்களும் ஆக்கிரமித்துக் கொண்டதால், சாலையில் படுகவனமாய் ஊர்ந்து சென்ற அனுபவத்தில் இருந்து, ஒரு தற்காலிக விடுதலை உணர்வு இந்த ஸ்பெயின் நகரத்தின் ஒரு சாலை அளவுக்கு பரந்திருக்கும் நடைபாதையில் நடக்கும்போது கிடைக்கிறது!

ஒரு கைக்குட்டையை விட சற்றே பெரிய அளவில் தைத்தத் துணியே பல யுவதிகளுக்கு போதுமானதாய் இருக்க, எந்த ஆண்களும் அவர்களை வெறித்து நோக்கவில்லை, தன் இணையைத் தவிர பிற பெண்களை அவர்கள் உரசுவதோ கைப்பேசியில் புகைப்படம் எடுத்து புரட்சி பேசுவதும் இல்லை!
எல்லோருமே குடிக்கிறார்கள், பெரும்பாலானோர் புகைக்கிறார்கள், அழகிய நடைபாதைகளில் புகையில்லாத இடமாக பார்த்து நிற்க வேண்டியிருக்கிறது! இல்லையென்றால் புகைப்பது பிறரா நாமா என்ற சந்தேகம் வந்துவிடுகிறது! ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் குழந்தைகள் சட்டென்று பெரியவர்கள் ஆகிவிடுகிறார்கள், இரவு நடன விடுதிகள் நிரம்பி வழிகிறது! ஒன்றிரண்டு காதல் காட்சிகள் காணக்கிடைக்கிறது!

இரயில் நிலையம் அத்தனை சுத்தமாய் இருக்கிறது, தண்டவாளத்தில் தூக்கி எறிந்த பிளாஸ்டிக் பைகளோ மீந்த உணவுப் பொட்டலங்களோ, பீர் பாட்டில்களோ, மலக்கழிவோ எதுவுமே இல்லை! காற்றில் உதிரும் சருகுகளைக் கூட எடுத்து குப்பைக் கூடைகளில் சேகரிக்கிறார்கள்! அதிகமாய் குடித்துவிட்டால், தம் வாகனத்தை விட்டுவிட்டு, வாடகை வண்டியில் பயணிக்கிறார்கள், குடித்துவிட்டு செய்யும் எந்த தவறுக்கான தண்டனையில் இருந்தும் தப்ப முடியாதாம்!

ஸ்பானிஷ் பேசுபவர்கள் என்றாலும் காட்டலுனியா என்ற பழங்குடிகள் தங்களை ஸ்பேயின் மக்கள் என்று சொல்வதைத் காட்டிலும், காட்டலுனியன் என்றே சொல்லிக் கொள்கிறார்கள், அவர்களே கடுமையான உழைப்பாளிகள் என்றும் அறியப்படுகிறார்கள்!

அப்படியே இரயிலில் பயணிக்கும் போது, கரடுமுரடான பாடலும் அல்லாத பேச்சும் அல்லாத ஒரு பாடலை குழுவாக சில பெண்கள் பாட, அவர்கள் அனைவரும் கறுப்பு உடையிலும், நடுவே ஒரு மணப்பெண் வெள்ளை உடையிலும் இருக்கிறார்! திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, மணப்பெண்ணுக்கான திருமணத்திற்கு முந்தைய சடங்காக அதைச் செய்கிறார்கள்! மணமகனின் புகைப்படம் தாங்கிய, மற்றும் சில வாழ்த்துகள் நிரம்பிய பதாகைகளை ஏந்தியபடி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் செல்கிறார்கள், முதிய பெண்மணி ஒருவர் விசில்
அடித்துக் கொண்டே செல்கிறார், கர்ணகடூரமாய் ஒலிக்கும் அந்த பாடலையும் விசிலையும் தாண்டி அவர்களின் மகிழ்ச்சியை ரசிக்கவே தோன்றுகிறது, சொந்த ஊரில் நடக்கும் மாப்பிள்ளை ஊர்வலத்தைப் போல இருக்கிறது!
இறுக்கமான சூழலில் கடந்த ஆறு நாட்களாய் விடியற்காலையில் இருந்து இரவு வரை நடந்து முடிந்த அலுவல் சம்பந்தமான வேலைகளில் இருந்து இந்த ஞாயிறுதான் கொஞ்சம் சோம்பலாய் ஏழு மணிக்கு விடிந்திருக்கிறது!

நாளை குழந்தைகளையும் தாய் நாட்டையும் பார்க்கும் ஆவலில், இன்று இந்த மிதமான மழையையும், பச்சைப் பசேலென்ற வீதிகளையும் ரசித்தப்படி இந்த ஒரு நாள் மட்டும் ஸ்பெயினில் மிக அழகாக நகர்ந்து கொண்டிருக்கிறது!

நட்பு


எதற்கோ
அழுதழுது வீங்கிய
இமைகளைக் கழுவி
பூச்சிக் கடித்ததென்றும்
உறக்கமின்மையென்றும்
ஒவ்வாமையென்றும்
சொல்லக் காரணங்களுண்டு
ஏனையோரிடம்

விழிவட்ட வளைவிலிடும்
மையை
இமைகளின் மேலோரத்தில்
மெலிதாய் வரைந்து
மிகக் கவனமாய்
செய்யப்பட்ட
ஒப்பனைகளுடனும்
ஓட்ட வைத்த புன்னகையுடனும்
எப்படிச் சென்றாலும்
படித்து விடுகிறாள்
உயிர்த்தோழி
விழியினூடே ஆழ்மனதை
"அழுதியா என்ன?"
அவளின்
ஒற்றைக் கேள்வியில்
உதிர்ந்துவிடுகிறது
ஒப்பனைகள்!!

ஸ்பெயின் 2

ஒருநாள் முழுதும் ஸ்பெயின் நகர வீதியில் நடந்து நடந்து கைபேசியில் எடுத்த புகைப்படங்கள்! அற்புதமான வீதிகளும், சுத்தமான சாலைகளும், அழகிய துறைமுகமும், நிறைய உணவு விடுதிகளும், நிறைய வகை மதுபானங்களும் (அங்கே போய் நான் லெமன் ஜூஸ் தான் குடிச்சேன்னு சொன்னா நம்பனும்!) பலவூர் நாட்டு மக்களும் என மிகக் கொண்டாட்டமாய்ப் போனது அந்தப் பொழுது!

உணவென்று வரும்போது மட்டுமே என் நிலைமை திண்டாட்டமானது, கடல் உணவுகளையாவது சாப்பிடலாம் என்று நினைத்தபோது, பாதி வெந்த உயிரினங்களை அதன் முழு வடிவத்தில் தட்டில் பரப்பிய போது, பல வருடங்களாக இவைகளைச் சாப்பிடும்போது வராத துக்கம் எல்லாம், மொத்தமாய் வந்து தொண்டையில் வந்து அடைத்துக் கொண்டது, இதையெல்லாம் அம்மா கிட்டே கொடுத்தா எவ்வளவு அழகாச் சுத்தம் பண்ணி மசாலா போட்டு வறுத்துத் தருவாங்க என்று நினைத்து வந்த துக்கம் அது!) எல்லாவற்றையும் ஓரமாய் ஒதுக்கி வைத்துவிட்டு, மிஞ்சியிருந்த சாதத்தின் அளவைப் பார்த்தால் ஒரு மூன்று தேக்கரண்டி அளவு இருந்தது! அப்படியே பச்சை மீன் வாசம் வந்ததால் சாப்பிட்டதாய்ப் பேர் பண்ணிவிட்டு, அந்தப் பொழுது உணவை ஒரு ஐஸ் கிரீமில் முடித்தேன்!

குழந்தைகளை வைத்து யாரும் பிச்சையெடுக்கவில்லை, ஆனால் "என் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள், எனக்கு வேலையில்லை, உதவுங்கள் என்று அவர்களின் புகைப்படத்தை வைத்துக் கைக் கூப்பி, அதைத் தரையில் வைத்து, அதன் மீது தலையை வைத்து விழுந்து உதவிக் கேட்கிறார்கள்! மற்ற ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ஸ்பெயின் நகர மக்கள் உதவும் குணம் அதிகம் கொண்டவர்கள் என்று என்னுடன் வந்த ஒரு டச்சு நாட்டவர் சொன்னார்!

புகைப்படங்களைக் கொண்டு பிச்சையெடுப்பவர்களைக் கடந்தால், தன் உருவத்தையே முழுதாய் மாற்றிக் கொண்டு, விதவிதமான கதாபாத்திரங்களாய்த் தன்னை உருமாற்றி, அந்தத் துறைமுக வீதி வழியே நிற்கிறார்கள், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் சுற்றுலாப்பயணிகள் தாங்கள் விரும்பும் சில்லறையை அவர்களின் உண்டியலில் போட்டுப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம், நானும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்!

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு இந்தத் துறைமுக வழியேதான் பயணத்தைத் துவங்கினாராம், அவர் நினைவாகச் சிலை வைத்திருக்கிறார்கள், மிகப்பிரமாண்டமாய் இருக்கிறது அது, கைபேசியில் ஒரு ஷாட்டில் அடைக்க முடியவில்லை!

துறைமுக மேம்பாலத்தில் நடந்தபோது, கீழே ஓடிய, பரந்தக் கடலைப் பார்த்தபோது, நீச்சல் தெரியாதது நினைவுக்கு வந்தது, அந்த மரப்பாலத்தில் அத்தனை மனிதர்களும் இருசக்கர வாகனங்களும் ஏறியபோது, நம் ஊர்ப் பாலங்களின் தரத்தின் நினைவில் அந்தப் பாலத்தை விட மனது பயத்தில் ஒரு மெல்லிய ஊசலாட்டம் போட்டது!

அப்படியே கடந்து பிரமாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் நுழைந்தோம், கொளுத்தும் வெயிலில் என்னுடைய அப்போதையத் தேவை ஒரு ஜோடிக் காலுறைகள், வாங்கி அணிந்தபின்தான் நடக்க முடிந்தது, அதுவரை அந்த வெயிலில் பாதங்கள் தீய்ந்து கொண்டிருந்தது!

உடன் வந்தவர்கள் கடைகளில் நுழைய, நானும் மற்றொருவரும் ஓரமாய் நின்று மற்றவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்க, எதிரே இருந்த நகரும் படிக்கட்டுகளில் இருந்து ஒரு பெண் கதறி கதறி அழுது கொண்டே வர, "அந்தப் பொண்ணு ஏன் இப்படித் தேம்பி தேம்பி அழுவுறா, ஐயோ பாவம்" எனக் கூற அருகே இருந்த அமெரிக்கர், "லவ் பிரேக் அப் ஆகியிருக்கும்" என்றார் (ச்சே...எல்லா ஊருலேயும் இந்த ஆம்புளைப் புள்ளைங்களுக்குப் பொண்ணுங்களே அழ வைக்கறேதே வேலையா போச்சு, மனதுக்குள் திட்டிக் கொண்டேன் :-p

இங்கேயும் பெண்கள் கண்கலங்கிப் பார்த்ததுண்டு, ஆனால் அந்தப் பெண் சுற்றுப்புறம் சூழ்நிலை என்று எதையும் நோக்காமல் அத்தனை சத்தமாய் அழுதுக் கொண்டிருந்தாள், (யாரும் அவளைத் தேறுதல் படுத்துவது போல் காணோம்) நான் ரொம்ப வருத்தப்படுவதை அறிந்த நண்பர், "அதெல்லாம் சரியாயிடும், இன்னொரு பாய் பிரெண்ட் கிடைச்சா சரியாய் போய்டும்" என்றார்! "அந்தப் பொண்ணு அதுக்குதான் அழறா என்று என்ன நிச்சயம், வேறு ஒரு பிரச்சனையா கூட இருக்கலாம்தானே?" என்றேன், "ம்ம் சரிதான்" என்று ஆமோதிக்க, ஒருதலைக் காதலுக்கே அரிவாளைத் தூக்கும் நம்ம ஊரு பையன்களின் வீரத்தைப் பற்றி அந்தப் பெண்ணிடம் சொல்லலாமா என்று ஒரு கணம் தோன்றிய அதைப் பற்றிய கற்பனையில் மனம் செல்ல, சென்றவர்கள் வர, அங்கிருந்து மீண்டும் நடந்தே உணவகத்துக்குச் சென்றோம்!

ஹார்ட் ராக் கஃபே என்ற பிரபலமான உணவகம் மற்றும் மதுபான விடுதிக்குள் நுழைந்தேன், தன்னுடைய பத்துப் பன்னிரண்டு வயது மகனுக்கு ஜூஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு அவன் அப்பா தனக்குப் பியர் வாங்கிக் கொண்டு அமர்ந்தார்!

எல்லா வயதிலும் ஆட்கள் இருந்தாலும், சிறியவர்களுக்கு அங்கே எந்த வித மதுபானத்தையும் அவர்கள் தரவில்லை, அது சட்டம் என்றார்கள்! விதவிதமான பெயர்களில் எத்தனை விதமான பானங்கள் என்று எலுமிச்சை, புதினாவும் கலந்த ஒரு நீரை அருந்திக் கொண்டு மற்றவற்றை வழக்கம் போல் பார்த்துக் கொண்டிருந்தேன்!

உடன் வந்த சக அமெரிக்க அலுவலகத் தோழி, குழந்தைகளுக்குச் சில பரிசுகளை வாங்க வேண்டும் என்று கடையில் நுழைய, அங்கே எல்லாம் இந்திய முகங்கள், அடடா நம்ம ஊரு போல இருக்கிறதே என்று நுழைந்து, உடைந்த இந்தியில் பேசினால் அந்தக் கடையிலிருப்பவர்கள் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் ஆட்கள் என்று தெரிந்தது!

ஒரு பாகிஸ்தானிய ஊழியர் இந்திய முகத்தைப் பார்த்தப் பரவசத்தில் வாங்கும் பொருட்களுக்குத் தள்ளுபடித் தர, அமெரிக்கத் தோழிக்கு மிகுந்த ஆச்சரியம், அந்தச் சில நிமிடங்களில் தன்னுடைய நாடு குடும்பம், குழந்தை என்று சொல்ல ஆரம்பிக்க, கடல் கடந்து வரும் மனிதர்களுக்குத் தம் மண்ணின் நினைவுகளைப் பகிரக் கிடைக்கும் எந்த வினாடியும் அவர்களுக்குப் பரவசத்தைத் தரும் என்று நேரில் மீண்டும் உணர்ந்து கொண்ட தினம் அது! மிக மரியாதையாக "அண்ணா!" என்று விளித்து, என் உடைந்த இந்தியில் அவரிடம் விடைபெற்றுக் கொண்டேன், ஒன்றும் புரியாமல் திருத் திருவென என் அருகில் விழித்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்ற அது போதுமானதாய் இருந்தது!

அழகான நகரத்தில் ஒரு சிறிய ஆபத்தும் இருக்கிறது, ஒரு பெண் நிர்வாணமாய்ப் போனால் கூட அங்கே எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் உங்கள் மணிபர்ஸை, அல்லது கைப்பையை அப்படியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டே கவனிக்காமல் செல்வீர்களேயானால், அது வேறொரு கைக்குப் போகும் அபாயம் இருக்கிறது! இங்கே வழிப்பறித் தவிர்க்க நமக்குக் கவனம் அவசியம்!

விமான நிலையத்தில் கூட உங்கள் பொருட்கள் பாத்திரம் என்று அரைமணிக்கொருதரம் அறிவிப்புச் செய்து கொண்டே இருக்கிறார்கள்!
நான்கு மொழிகளை அரசு மொழிகளாகக் கொண்டிருக்கிறது, இருபத்திரண்டு மொழிகளை அரசு அங்கீகரித்திருக்கிறது என்று அந்த ஊர் மனிதர் ஒருவர் சொன்னார், விமான நிலையத்திலும் நான்கு மொழியில் அறிவிப்புச் செய்கிறார்கள்!

அழகிய நகரத்துக்கு ஒரு திருஷ்டிபோல் திருட்டுக் குற்றங்கள்!
கண்ணில் ஒரு காவல்துறை நண்பரைக் கூடக் காண முடியவில்லை, ஒரு வழியாய் இரண்டு பேர்களைக் கண்டேன், அவசரமாய் அவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டேன், அவர்களை விட அவர்களின் புல்லட் அட்டகாசமாய் இருந்தது, ஒரு காளைமாட்டின் ஆகிருதியுடன் அது இருந்தது, ஆண் பெண் என இருபாலாருக்கும் ஒரே மாதிரி வாகனம் தான்! இருந்தாலும் எங்க ஊருப் போலீசுக்குக் கொடுத்து இருக்கிற சூப்பர் சைக்கிள் மாதிரி ஆகுமா என்று தோன்றியது, ஒருவேளை அவர்கள் காவல்துறையின் சைக்கிளைப் பார்த்தால் என்ன சொல்லுவார்கள்? இங்கே ஒன்றுமே செய்யாதா எல்லா அரசியல்வாதிகளுக்கு இன்னோவாவும், திருடனைப் பிடிக்கவேண்டும் என்று பணிக்கப் படும் கடைநிலைக் காவலர்களுக்குச் சைக்கிளும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எங்கேனும் யாரும் சிலாகிக்கலாம்!

வீதியில் கலைஞர்கள் ஜிம்னாஸ்டிக் செய்கிறார்கள், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அந்தரத்தில் தாவிக் குதிக்கிறார்கள், ஒலிம்பிக்கில் பார்த்ததை வீதியில் பார்க்க முடிகிறது, ஒரு சில நிமிடங்கள் அதைக் காணொளிப் பதிவாக எடுத்தேன்! பிறகு பழமையான ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்துக்குச் சென்றேன், நிமிர்ந்துப் பார்த்துக் கழுத்துதான் வலித்தது, அத்தனை பெரிதாய் இருக்கிறது, துண்டுத் துண்டாய் மட்டுமே புகைப்படம் எடுக்க முடிந்தது! அதன் வாயிலிலும் பிச்சைக் எடுக்கிறார்கள், "கோவிலுக்குச் சிலர் பிச்சையெடுக்க, வெளியேவும் சிலர் பிச்சையெடுக்கிறார்கள்" என்று எங்கோ படித்த வாக்கியம் நினைவில் வந்து போனது!

சில இளைஞர்கள் சேர்ந்து, புதுவிதமான நடனம் ஆடி, காசு கேட்கிறார்கள், அதையும் ஒரு சில நிமிடங்களே காணொளிப் பதிவாக எடுத்து வைத்துக் கொண்டேன்!

இறுதியாக உணவுச் சுற்றுலா என்று ஒருவரிடம் அழைத்துச் செல்ல, நல்ல பசியோடு அதற்கெல்லாம் செல்லக் கூடாது என்று அலுத்துக் கொள்ள வைத்த சிறிய பயணம் அது, ஸ்பெயினைப் பற்றி ஏற்கனவே அறிந்து கொண்ட விவரங்களை ஒருவர் அரைமணிநேரத்துக்கு மேல் ஓரிடத்தில் சொல்லி, ஓர் உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார், அங்கே உணவு வந்ததும் அதைச் சாப்பிடவிடாமல் மீண்டும் அந்த நகரத்தைப் பற்றி அரைமணிநேரத்துக்கு மேல் சொற்பொழிவு ஆற்றிவிட்டு, சாப்பிடச் சொன்ன போது, உணவு ஆறிவிட்டிருந்தது! எங்களோடு ஒரு சீனத் தம்பதியும், ஒரு வயதான அமெரிக்கத் தம்பதியும் எங்கள் எதிரே அமர்ந்திருந்தனர். ருமேனியா, அமேரிக்கா, ஸ்பெயின், ஹாலந்து, சீனா, கனடா, இந்தியா, மலேஷியா என்ற அற்புதமான பலவேறு நாட்டுக் கலவையில் அமைந்தது அந்தச் சந்திப்பு!

என் எதிரே இருந்த முதிய பெண்மணிக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும் என்றும் தோன்றியது, அவர் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தது, கணவர் உதவி செய்து கொண்டிருந்தார், தனக்கு அல்சர் இருப்பதாகவும் சாப்பிடுவதற்கு முன் ஏதோ மாத்திரை சாப்பிடவேண்டும் என்று சொல்லிக் கொண்டே மாத்திரையை விழுங்கிய அந்தப் பெரியம்மா, பசியால் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு, சற்றுக் குளிரில் நடுங்கிக் கொண்டு பரிதாபமாய் (பசியில் மட்டும் வரும் ஒரு பரிதாப லுக் அது) முகத்தை வைத்துக் கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்க, சட்டென்று அவர், "நீ ரொம்ப அழகாயிருக்கே, உன் முகம் ஓவியம் மாதிரியிருக்கு, உனக்கு மூணுக் குழந்தைதானே?" என்றார், (பசி வந்தா பரிதாபமா முகத்தை வெச்சுக்குறே என்ற அம்மாவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தது), அடடா கடல் கடந்து ஒருவர் புகழ்கிறாரே என்று சற்றுப் பரவசம் ஏற்பட்டாலும், மூன்று குழந்தைகள் என்று சொன்னதில் திகில் வந்தது, "இல்லை இல்லை எனக்கு ஆண் ஒன்று பெண் ஒன்று இரண்டு குழந்தைகள், அதுவே போதும்" என்று அவசரமாக மறுத்தேன், "நிச்சயமா உனக்கு மூணாவது குழந்தை வேண்டாமா?" என்றார், இப்போது பசிப் போய்க் கிலிப் பிடித்துக் கொண்டது, ஏதோ அரச மரத்துக் குறி ஜோசியர் மாதிரி அந்தப் பெரியம்மா பேசவும்!

பிறகு, அவர் இந்தியாவைப் பற்றியும், இங்கே அவர் ஒரு சாமியாரைப் பார்க்க வந்திருக்கிறேன் என்றும், இந்தியச் சித்த மருந்துகள் மேல் தனக்கிருக்கும் அபார நம்பிக்கையைப் பற்றியும் விவரித்தார், அந்த முதிய வயதிலும் அவர்கள் இருவரும் கப்பலில் உலகச் சுற்றுலா செல்வதற்காகப் பார்சிலோனா வந்திருப்பதாகச் சொல்ல, ஐம்பது அறுபது வயதிலேயே வயசாகிவிட்டது முடங்கிக்கிட எனும் இந்திய வாழ்க்கை முறைகள் மனதை வருத்தியது!

அவர்களுக்குச் சித்த மருத்துவக் குறிப்புகள் சிலவற்றைத் தந்து, அவர்கள் பயணம் சிறக்க வாழ்த்தி, சோர்வாய் இருப்பதாய்ச் சொல்லி, நானும் அமெரிக்கத் தோழியும் அந்த உணவுச் சுற்றுலாவில் இருந்து கழண்டுக் கொண்டோம்!

அப்படி இப்படி என்று ஒரு காற்றைப் போல அந்த ஒருநாள் அலைந்தேன், நடந்து நடந்து கால்கள் சோர்வுற்றுப் போனது, பலமணி நேரம் பயணம் செய்து, ஸ்பெயின், ஜெர்மனி கடந்து, சென்னை விமானநிலையத்தில் வந்திறங்கி, நிலையத்தின் உள்ளே நடந்து வந்த போது, "நடைபாதையில் பான் பராக் எச்சில் சுவரோரத்தில் வழிந்தும், பெயர்ந்துப் போன நடைபாதைகளும், அட்டைப்பெட்டியைப் போல இம்மிகிரேஷன் கௌண்டர்களில் யாருக்கோ டெண்டர் கொடுத்து வாங்கிய டப்பா காமெராக்களும், சுவற்றில் கண்ணாடிகளில் போட்டிருந்த ஒட்டுக்களும் நம் ஊர் மணத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது!!

ஆழ்ந்து சுவாசித்தேன், மழைப் பெய்து கொண்டிருந்தது! எப்படியானாலும் சென்னை!!!
#ஸ்பெயின் #Spain_2

கொள்கைப் பிடிப்பாளர்கள்

மதம் என்றும்
சாதி என்றும்
துக்க மேலிடல் என்றும்
தீவிர அபிமானம் என்றும்
வகை வகையாய் பெயர் சூட்டி
அடுத்தவரின் உடைமையையும்
அடுத்தவரின் ரத்தத்தையும்
சாதி மத கட்சி பேதமில்லாமல்
வஞ்சனையில்லாமல் வாரியிறைத்து
தங்கள் பாசத்தைக் காட்டுகிறார்கள்(காட்டுவார்கள்)
பகல் கொள்ளையர்கள் என்னும்
கொள்கைப் பிடிப்பாளர்கள்!

நல்லரசு

ஏதாவது வி.ஐ.பி க்கு உடல்நிலை சரியில்லையென்றால் ஒன்று தனியார் மருத்துவமனை பிறகு வெளிநாட்டுச் சிகிச்சை அல்லது வெளிநாட்டு மருத்துவர் இங்கே விஜயம்!

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான திராவிட ஆட்சியில் மக்களுக்கு இலவச பள்ளிக் கல்வி, இலவச மருத்துவமனைகள் இருக்கிறது, ஆனால் அதில் தரம்தான் இல்லை போலும், இருக்கிறதென்றால் சில மாவட்ட கலெக்டர்களைத் தவிர எந்த உயரதிகாரியின் குழந்தையும் அரசுப்பள்ளியில் ஏன் படிப்பதில்லை?

நடிகர்கள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் யாரும் உடல்நிலை சரியில்லையென்றால் அரசு மருத்துவமனையை நாடுவதில்லை! 

இலவசமாய் தருவதில் தரம் எதற்கு என்று அரசியல் தலைவர்கள் நினைத்திருக்கலாம், இலவசமாய் சேவை செய்கிறோம் என்று அரசு பணியில் இருப்பவர்கள் ஏழைகளிடம் அலட்சியம் காட்டலாம், ஆனால் இது எதுவுமே இலவசம் இல்லை, மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்காக இயங்கினாலும், மக்களுக்கு இங்கே வழங்கப்படுவதெல்லாம் அரசின், அரசு ஊழியர்களின் பிச்சை, கருணை என்ற மனநிலையே இருக்கின்றது! அந்த மனநிலையே ஆசிரியர், மருத்துவர்
என்று பல பொறுப்புகளை "அரசுப்பணி" என்று அதன் சலுகைகளுக்காகக் கொண்டாடி, "பணியை" மட்டும்
சுணக்கமாய் செய்கிறது!

பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கிணங்க எந்த அரசு ஊழியர்களும் தம் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதில்லை, அரசு மருத்துவமனையையும் நாடுவதில்லை!

மக்களின் உயிரும் அரசு ஊழியர்களின் உயிரும் ஒன்றுதான் என்ற மனநிலை வரும்போது, ஒரு நல்லரசு இங்கே எல்லோருக்கும்
தரமான கல்வியையும், மருத்துவ சிகிச்சையும்
இலவசம் என்று உறுதி செய்யும்!

வாழ்க்கைப்பாடங்கள்!

தடுக்கி விழும்போதுதான்
நாம் அதுவரை
பிடித்துக்கொண்டிருந்தது
ஆழப் பிணைந்த உறவா
இல்லை அறுந்துவிழும்
சந்தர்ப்பவாத நட்பா
என்று அறியக்கூடும்
விழுதலுக்கும் எழுதலுக்கும்
இடையே நிற்கிறது
நாம் கற்க வேண்டிய
வாழ்க்கைப்பாடங்கள்!

கெமிஸ்ட்ரி வேண்டும்

ஒரு காளையை வளர்ப்பவன் ஜல்லிகட்டிற்காக அதைப் பயன்படுத்த அனுமதி கிடையாது, ஒரு நாயை வளர்ப்பவன், அதை துன்புறுத்துவதற்கு அனுமதி கிடையாது, அதெல்லாம் மிருக வதை, சட்டங்கள் பாயும்,வரவேற்கிறேன்!
ஆனால், ஒரு பெண்ணை மணந்ததால் அவள் என் மனைவி என்று சாலையில், வீட்டில் துன்புறுத்துவதும், குழந்தையைப் பெற்று விட்டதால், அந்த உரிமையில் தன் கண்மூடித்தனமான அபிமானத்தையோ, சில ஆயிரம் பணத்துக்காகவும், அந்தக் குழந்தைகள் கதற கதற பச்சை குத்தவும், அலகு குத்தவும் செய்யும் போது, ஏன் இந்த நாட்டில் சட்டம் ஊமையாய் வேடிக்கைப் பார்க்கிறது??

குழந்தைகள் காணமல் போகின்றன, நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் பொதுநல வழக்கு போடுகிறார், பின் நீதிமன்றம் காவல்துறைக்கு கண்டனம் தெரிவிக்கிறது!

குழந்தைத் தொழிலாளர் தடை சட்டம் இருக்கிறது, பாலியல் கல்வியறிவு இன்னும் பள்ளிகளில் சட்டபூர்வமாக்கப் படவில்லை, இந்த சூழ்நிலையில், சிறுமிகளையும் கதாநாயகி ஆக்கி, ஆபாச பாடல்களுக்கு, அசிங்கமான நடனங்களை அவர்களை ஆடச் செய்கிறார்கள், பாலுறவு குறித்தப் பாடல்களை, காதல் என்ன என்றே அறியாதப் பிள்ளைகளை, குரல் வேட்டை, பாடல் போட்டி, நடனப் போட்டி என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் குழந்தையின் மனதை பெற்றவர்களும் மற்றவர்களும் சீரழிக்கிறார்கள்!
அந்தப் பாடலில் குரலில் தாபம் வேண்டும், ஆடலில் இன்னும் கெமிஸ்ட்ரி வேண்டும் என்று நடுவர்கள் குழந்தைகளைப் பிஞ்சிலேயே பழுக்க வைக்க முனைகிறார்கள்!

ஸ்மார்ட் போன்களைக் கையில் கொடுத்து, உலகத்தையே காட்டி, படிப்பில் ஆர்வமில்லாத, ஓடியாட விரும்பாத தலைமுறையை வளர்க்கிறார்கள்!
சூப் சாங், பீப் சாங் என்று குப்பைகளாய் எழுதி நடிகன் என்றும் இசையமைப்பாளர் என்றும் அறியப்படுபவர்களை கொண்டாடித் தீர்க்கிறார்கள், "அடிடா அவளை, வெட்றா அவளை" என்று பாடல்களுக்கும் குழந்தைகளை ஆடப் பாட மேடையேற்றி, பின்னாளில் தோல்வியைத் தாங்க முடியாத ஒரு தலைமுறையை வளர்க்கிறார்கள்!

"அவளை இன்னைக்கு கொன்னுடனும்", ""அவனுக்கு பாலுல போதை மாத்திரை கலந்து இன்னைக்கு உங்களுக்கு முதலிரவு நடக்கணும்" இப்படியே இலக்கியமான அற்புதமான காட்சிகள் வசனங்கள் நிறைந்த நாடகங்களை குழந்தைகளோடு அமர்ந்துகொண்டு பெற்றவர்களும் பெரியவர்களும் பார்க்கிறார்கள்!

குழந்தைகளைப் பற்றிய கவலையின்றி, அவர்கள் முன்னிலையிலேயே தகப்பன்கள் புகைக்கிறார்கள், குடிக்கிறார்கள், பின் தன் மகனுக்கு ஒழுக்கத்தைப் பற்றி பாடம் எடுக்கிறார்கள்!

பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு சில ஆசிரியர்கள் காமசூத்திரத்தை பாடமாக எடுக்கிறார்கள், படிக்கச் செல்லும் பிள்ளைகள் சில ஆசிரியரின் குறைந்தப்பட்ச கண்டிப்பைக் கூட தாங்க முடியாமல் கத்தி எடுத்து கொலைச் செய்கிறார்கள்!
சாலையில் செல்லும் போது, தன் தலைக்கு கவசம் அணியும் ஆணோ பெண்ணோ, தகப்பனோ தாயோ தன்னுடனே அழைத்துச்செல்லும் பிள்ளைக்கு தலைக்கவசம் அணிவிப்பதில்லை, மெதுவாய் கீழே விழுந்தால்கூட தலையில்தான் பெரும்பாலும் அடிபடும், குடும்பத்தோடு பயணம் செய்த ஒருவன், தன் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தான், பின்னே மனைவி, அவளுடன் சற்றே வளர்ந்த குழந்தை, பைக்கின் பெட்ரோல் டேங்க் மேலே சிறிய குழந்தையொன்று, நுங்கம்பாக்க சாலையில் ஒரு வளைவில் திரும்புகிறான், இரவு நேரம், ஒரு நீண்ட பள்ளத்தை வேகத்தடுப்பு அமைப்பதற்காகத் தோண்டி, அந்த வேலையை மற்றொரு நாள் முடிப்பதற்காக வழக்கம் போலவே பொதுமக்களின் உயிரின் மேல் அலட்சியம் காட்டும் போக்கில் அப்படியே விட்டுச்செல்ல, சரியாக அந்தப்பள்ளத்தில் அவன் வண்டியைத் திருப்ப முன்னேயிருந்த பிஞ்சு கீழே விழுகிறது, தலையில் கல் பட்டு அங்கேயே உயிர் பிரிகிறது, குழந்தைகளின் பாதுகாப்பில் கோட்டைவிட்டது இங்கு எல்லோருமே!

குற்றம் நடந்தபின்னே பெற்றவர்கள் துடிக்கிறார்கள், ஒரு குற்றம் நடந்தபின்னே அதில் உள்ள ஓட்டைகளை சட்டம் ஆராய்கிறது, சம்பந்தப்பட்டவர்களைக் கண்டிக்கிறது! குற்றம் நடந்தது என்ன என்று மீடியாக்கள் சீறிப்பாய்கிறது!

சாராயத்துக்காகவும், காசுக்காகவும், காமத்துக்காகவும், உறுப்புகளுக்காகவும், அரசியலுக்காகவும், கட்சி அபிமானத்துக்காகவும் வதைபடுகிறார்கள் , உயிர்விடுகிறார்கள் பிள்ளைகள்! சுமந்துப்பெற்றாலும், அறிவில்லாத, பொறுப்பில்லாத, சுயநலம் மிகுந்த, ஆற்றலில்லாத, அன்பில்லாத, அக்கறையில்லாத பெற்றவர்களிடமும் உடலாலும் உள்ளத்தாலும் துன்பம் அனுபவிக்கிறார்கள்!

இன்னமும் ஆதிகால சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க ஒவ்வொரு குற்றம் நடக்கவும் , அதிலிருந்தே பாடம் கற்று அதை அடைக்கவும் மேதைகள் காத்திருக்கிறார்கள்!

புதிய மருந்துகளை செலுத்தி சோதிக்க வதவதவென்று பிள்ளைகள் பெறுவது அவசியம், படிப்போ ஆரோக்கியமோ எதிலும் கவலையற்று ஒட்டுப்போட அவர்கள் இருந்தால் போதும், அடியாளாக உருமாற கீழ்மட்ட குழந்தைகள் அவசியமென்று இருக்கும் ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகத்தின் கல்வி மற்றும் மருத்துவத்துடன் பிள்ளைகள் வளர்கிறார்கள்!

இத்தனை மடமைகளையும் தாண்டி, இந்தப்பிள்ளைகளாவது நாளை ஒரு நல்லரசை தருவார்கள் என்று காத்திருப்போம், அதுவரை அவர்களைச் சிதைக்காமல் அந்த அலகு வேல், முருகவேல் காக்கட்டும், ஐந்துமுறை தொழுதெழும் கருணைக்காக அல்லா காக்கட்டும், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த கர்த்தர் காக்கட்டும்! இன்னும் நம் குலசாமிகள் அத்தனைபேரும் நம் அறியாமையிலும் , போதையிலுமிருந்தும் அவர்களைக் காக்கட்டும்!

பதவி

#அணுக்கதை
அரசியல்வாதியின் மகன் கடவுளிடம் கடுமையான தவம் இருந்து வரம் கேட்க,
கடவுள் : மகனே, பதவி, பணம் தவிர எது வேண்டுமானாலும் கேள், ஆனால் ஒரே ஒரு வரம் தான் கேட்க வேண்டும்
அரசியல்வாதியின் மகன்: கடவுளே, அடுத்தவரின் பணத்தில் நான் உலகச் சுற்றுலா போக வேண்டும்!
கடவுள்: ஜெர்க்காகி......."நீ பிரதமராகக் கடவது!" ("நம்மையே ஓட்டுப்போட வெச்சுடுவான் போலேயிருக்கே?", பயந்து உடனே மறைகிறார்)

நிகழ்வுகள்!

மத்திய கைலாஷின் சிக்னலில், ரைட் இண்டிகேட்டர் போட்டு யு டர்ன் எடுக்க, வாகனத்தின் நீளத்திற்கேற்ப, சாலையின் தடுப்புச் சுவரை விட்டுக் கொஞ்சம் தள்ளி திருப்ப, பாம் பாம் என்ற அலறலில், தடுப்புச் சுவற்றுக்கும் வாகனத்துக்குமான, சிறிய இடைவெளியில் கண் இமைக்கும் நேரத்தில் வந்து மோதி சாலையில் விழுந்தார் ஒரு பைக் ஒட்டி, ஒருவேளை சிறிய வாகனமாய் இருந்திருந்தால் தடுப்புச் சுவற்றை ஒட்டி திருப்பியிருப்பேன், நிச்சயம் இதே வேகத்தில் அவர் தடுப்பைச் சுவற்றில் நசுங்கியிருப்பார். கீழே இறங்கினால், மிகக்கனமான ஒரு தலைக்கவசம் அணிந்திருந்தார், சட்டென்று எழுந்துவிட்டார். 
 
அந்தக் குறுகிய இடைவெளியில் யு டர்ன் செய்ய முந்திய அவர், பதட்டத்தில், "நீங்க ஏன் யு டர்ன் செய்யுறீங்க" என்று கேட்க, "இப்போ நீங்க என்ன செஞ்சீங்க?" என்று பதில் கேள்வி கேட்க அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. முன்னே ஒரு சிறிய தடுப்பைக் காவல்துறை அடைத்திருந்தது, அதற்கடுத்த வளைவில்தான் திரும்ப முடியும். அவரும் அப்படியே திரும்ப வந்து, கிடைத்த இடைவெளியில் அத்தனை வேகத்தில் நுழைய, திரும்பி நின்றுக்கொண்டிருந்த வாகனத்தில் மோதியதால் விழுந்த அளவில் எழுந்துக்கொண்டார். எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரி விரைந்து வந்து போக்குவரத்தை ஒழுங்கு செய்ய, "இன்னும் சின்ன இடைவெளியில் லாரி திரும்பும்போது திரும்பிடாதீங்க, பார்த்துப் போங்க" என்று அவரைப் பார்த்துச் சொல்லிவிட்டு விதியை நொந்து கொண்டு திரும்பி சென்றேன்!

சென்னையில் சாலைவிதிகளை மனிதர்கள் புறந்தள்ளி வெகுகாலம் ஆகிவிட்டது, ஒரு ரயில்நிலையத்தில் ஒருவன் ஒரு பெண்ணைப் பட்டப்பகலில் வெட்டிக்கொல்ல, அவனா இவனா என்று தடுமாறும் நீதியில், அலட்சியமான கண்காணிப்பு முறைகளில், அடுத்தடுத்துப் பெண்கள் ஆண்களால் சர்வ சாதரணமாகக் கொலைசெய்யப்பட்டார்கள், துளிர் விட்டுப்போவது என்று பெரியவர்கள் இதைத்தான் சொல்வார்கள், பயம் விட்டுப் போதல், சட்டத்தின் மீது!

இதைப்போலவே சாலைகளிலும், ஒருவழிப்பாதையில் முதலில் ஓரமாய் ஒதுங்கி மெதுவாய் வந்தவர்கள், இப்போதெல்லாம் ஒருவழிப்பாதையிலேயே இருவழிப்பாதையில் வருவதைப் போல மிக வேகமாய் நேர் எதிரே வருகிறார்கள்!
ரியர் வியூ மிரர் என்பதையே எதற்கு என்று பாதிப்பேர் கழட்டி வைத்துவிட்டும், ஒரு சாரார் அதைச் சாலையைக் கீழ் நோக்கிக் கவிழ்த்து வைத்தும் பறக்கின்றனர்!

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்தச் சிக்னலிலும் ஷேர் ஆட்டோக்களும், வேன்களும் சர்வ சுதந்திரமாய் நிற்கும், எந்தக் காவல்துறையைக் கண்டும் அவர்கள் அஞ்சுவதில்லை!
பார்களில் இருந்து உயர்தரக் கார்கள் முழுப் போதையில் சர்ரென்று சாலையில் விரையும், அவர்களுக்கும் பயமில்லை!
அவரவர் தரத்துக்கு அவர்களின் பணம் பேசும், அல்லது பலம் பேசும்!
ஒரு விபத்து, ஓர் உயிர் பலி எல்லாம் சட்டத்திற்குப் பத்தோடு ஒன்று பதினொன்று, பாதிக்கப்படும் குடும்பங்களுக்கே அது வாழ்நாள் மனஉளைச்சல், யாரோ ஒருவரின் இறப்பு ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரத்தையே அசைத்துவிடும்!

இருந்தாலும், இந்தியாவின் சாலைகளில் தினந்தோறும் கழைக்கூத்து நடக்கிறது, வீரர்கள் தலைக்கவசம் இல்லாமல் விரைகிறார்கள், நான்கு முதல் ஏழு பேர் வரை ஒரு பைக்கில் சாகசப் பயணம் செய்கிறார்கள். சிலநொடிகள் விழும் சிகப்பு விளக்குக்கு நிற்க வேண்டி இருக்கும் நேரத்தை வீணடிக்கக் கூட முடியாமல் அவர்கள் எந்திரமாய்ப் பறக்கிறார்கள், பேருந்துகளை ஒருபுறம் கவிழ்த்துவிடும் அளவில் பயணிகள் இழுக்க, நடத்துனர் சாமர்த்தியமாகப் பூவியீர்ப்பு விசைக்கு எதிராகச் செயல்பட்டு விரைகிறார், சாலை பரிசோதனையில் தோற்றுப் போன கார்களில் குடும்பங்களில் ஊர்வலம்!

நடைபாதைகள் என்பது கடைகளை விஸ்தரிப்பதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் என்ற சட்ட மாற்றம் ஏற்பட்டு வெகுநாளாகி விட்டது, யாரையும் கேள்வி கேட்க ஓட்டரசியல் பயம் கொள்கிறது, ஒரு ஆம்புலன்ஸ் இந்த வீதிகளில் வந்தால் உயிர் பிழைக்க வாய்ப்பேயில்லை!
பலகோடியில் பிரதமர் பயணிக்க அதிநவீன விமானம் வாங்கும் நாட்டில், இன்னும் கடைக்கோடியில் செம்மண் சாலைகளும், பெருநகரங்களில் ஒரு தூறலுக்கே பல்லிளிக்கும் பாவப்பட்ட சாலைகளும், ஒரு அடைமழையில் வெள்ளத்தில் இடிந்து விழும் பாலங்களும், அறுந்து தொங்கிக்கொண்டிருக்கும் கண்காணிப்புக் கேமராக்களும் நகரத்தின் நிலையைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது!

ஜனாதிபதி முதல் அமைச்சர் வரை பயணிக்கும் சாலைகள், எப்போது அவர்கள் வருவதால் மட்டுமே, சில இடங்களில் சாலைகள் என்று பெயர் பெற்றிருக்கின்றன.
ஒருவேளை நாளை இந்தியா வல்லரசானால், அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை ஹெலிகாப்டரிலேயே பறக்கலாம் என்றால், சாலைகள் மக்களுக்கு எதற்கு?

அவள் வீடு

படிப்பை மறுத்து
கட்டாயத் திருமணம்
செய்து வைத்த
பிறந்த வீடும்
உடல் வாதையின்
கவலையின்றி
ஆண் பிள்ளைக்காக
முன்னது மூன்றையும்
பெண்களாக ஈன்று
நான்கில் வந்து உதித்த
மகன் கொடுத்த
தற்காலிக விடுதலையில்
மூச்சுவிட்டு
எனக்கு இது பிடிக்கும்
என்று கணவனும்
அவன் உறவுகளும்
வரையறுத்த எல்லையில்
தனக்கென பிடிக்குமென்பதை
மறந்து
வாழ்க்கையின் ஆசைகளை
நினைவுகளின் நிழலில் உலர்த்தி
அவள் வெறுமையாய்
உழன்ற
அந்த புகுந்தவீடும்
தராத ஒரு பேரின்பத்தை
அந்த ஈடுகாட்டு ஆறடி
நிலம்
தந்த உணர்வில்
ஆயா நிம்மதியாய்
உறங்கிக் கொண்டிருக்கிறாள்!
"மாறாத இவ்வுலகத்தில்
பிறக்காதே இனி நீ!"
என்ற வேண்டுதலுடன்
அடுத்த தலைமுறை
பெண் ஒன்று
அச்சிதை அருகே
மௌனமாய் கரைகிறது!

எஞ்சியிருக்கும் சுதந்திரம்

போலியான மருந்துகள்
தரமில்லாத மருத்துவம்
கலப்பட உணவுகள்
அழிந்து வரும் விவசாயம்
பெண் சிசுக் கொலைகள்,
மறுக்கப்படும் முன்னேற்றம்
பெருகும் சாராயம்,
போதையில் உழலும் ஆண் குணம்
பெருகும் விபத்துக்கள்,
கட்டமைப்புகளின் அலட்சியம்
ஒருதலைக் காதல் கொலைகள்,
சீரழியும் சமுதாயம்
ஆபத்தான அணுஉலைகள்,
சோதனை எலியாகத் தமிழகம்
சாதிக்கலவரங்கள்,
அறியாமையின் வெறியாட்டம்
மதக்கலவரங்கள்,
அரசியலின் உள்ளாட்டம்
யோசித்துப் பார்த்தால்,
மிகுந்த எச்சரிக்கையான வார்த்தைகளில்
இதையெழுதும்
ஒடுக்கப்பட்ட ஜனநாயக உரிமையும்
அமைச்சர்கள் உலா சென்றபின்
வீதியில் மிச்சமிருக்கும் சுதந்திரக் காற்றும்
இங்கே எஞ்சியிருக்கிறது
ஓட்டுப்போட்ட மக்களுக்கு!

குறைகாணும் மனம்

மஞ்சளாய்
வெண்மையாய்
ஊதாவாய்
செந்நிறமாய்
வண்ணங்களில்
பூக்கும் மலர்களில்
ஒன்றைச் சூடிக்கொண்டு
அந்த வண்ணத்தில்
குறைகாணும் மனம்
குறைகுடங்களின் குணம்!

காதல்



அந்த மழைநேரத்து மாலையில்
அமிருதவர்ஷினி இசைத்த நீதான்
மயங்கியப் பொழுதில்
சகானாவில் காதல் இயம்பினாய்
கம்பீரம் இழந்த அட்டானவில்
அவ்வப்போது கோபமும் சோகமுமாய்
வரலியும் சிவரஞ்சனியும் நாட்டியமாட
பூபாளத்தின் விடியலை எதிர்நோக்கியது
மனது
ராகங்கள் இப்போதும் மனதில்
இசைக்கிறது
கருணையற்ற உன் அமிருதவர்ஷினியோ
மேகங்களிடம் தோற்று
என் கண்களில் வெல்கிறது
கல்யாணியின் ஆலாபனையில்
ஆனந்தபைரவியின் நினைவுச்சாரலில்
அந்த மழைநேரத்து மாலையில்
சஞ்சரிக்கும் காதலை
நீ மீட்டெடுக்கும் பொழுதில்
அமிருதவர்ஷினியை
நாம் சேர்ந்திசைக்கலாம்!


மக்கள் ஆட்சி

மாணவிகளின் மரணத்திற்கு மனித உரிமை ஆணையம் லாரிகளின் இயக்கத்தின் விதிமுறைகளைப் பற்றி, இது போன்று ஐந்து ஆண்டுகளில் நடந்த சம்பவங்கள் எத்தனை என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு
மறுபுறம் போக்குவரத்து அதிகாரிகள் வேகத்தடை மற்றும் பேருந்துகள் நிற்க ஏற்பாடுகள் செய்தனர் என்று செய்தி சொல்கிறது

கும்பகோண மகாமக நெரிசல், பள்ளிக்குழந்தைகள் தீயில் கருகியது, பேருந்து ஓட்டையில் விழுந்து குழந்தை இறந்தது, மின்தூக்கியில் சிக்கி பள்ளியில் குழந்தை இறந்தது, நீச்சல் குளத்தில் சிறுவன் இறந்தது, சொட்டு மருந்துக்குப் பின் குழந்தைகள் இறப்பது, அரசாங்க மருத்துவமனைகளில் பச்சிளங்குழந்தைகள் இறப்பது, ரயில்வே நிலையத்தில் மற்றும் பிற இடங்களில் சி.சி.டிவி கேமாரக்கள் இயங்காதது, பள்ளியின் மொட்டை மாடியில் இருந்து குழந்தை இறந்தது என்று வரிசையாய் ஒவ்வொரு செய்தியையும் பாருங்கள், உயிர்ப்பலிகளுக்குப் பின்னரே அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் விழுத்தெழுவார்கள், நீர்வாகச் சீர்கேடுகளும் பாதுகாப்பு ஓட்டைகளும் அப்போதுதான் அவர்களுக்கு தெரியவரும்! 

இதுபோன்ற சீர்கேடுகளை, குறைபாடுகளை அவர்கள் அமைச்சர்களின் பாதுகாப்பு விஷயத்தில் விபத்து நடந்தபின் "அடடா இப்போதுதான் தெரிந்தது" என்று இதுபோலவே மெத்தனமாய் இருந்து உயிர்ப்பலிகளுக்காக காத்திருப்பார்களா?

இந்தியாவில்தான் சோதனை எலிகளாக மக்கள், ஒரு மரணம் நிகழ வேண்டும் இங்கே எந்தவொரு மாற்றத்திற்கும்!

அந்த வகையில் இன்னமும் இங்கே சில மரணங்கள் மிச்சமிருக்கிறது, அவற்றில் சிலவற்றை பட்டியலிடுகிறேன்,

இரயிலில் பேருந்தில் அவசர கால சிகிச்சை வசதி குறைபாடுகள் அதனால் ஏற்படவிருக்கும் மரணங்கள்

பள்ளிகளில் பிள்ளைக்களுக்கிடையே நிகழும் வன்முறைகள், பள்ளிகளின் மெத்தனம்

கல்லூரி வளாகத்தில் வகுப்பறையில் பெண்களைக் கொல்லும் கொடூரம், பாதுகாப்பு குறைபாடுகள்

வருடந்தோறும் மதிப்பெண் குறைவால் மாணவர்களின் தற்கொலைகள், மறுகூட்டல் என்னும் பெயரில் நடக்கும் கட்டண கொள்ளை
பல ஊர்களில் இன்னமும் திறந்தவெளியே கழிப்பிடமாக உபயோகிக்கும் கொடுமைகள் அதனால் பெண்களுக்கு ஏற்படும் பாலியில் தொந்தரவுகள்

சிகப்பு விளக்கை மதிக்காமல், தலைக்கவசம், ரியர் வியூ மிரர், சீட் பெல்ட் அலட்சியம், தடுப்புகளைத் தாண்டி வரும் வாகனங்களின் சாகசம், ஒரு இருசக்கர வாகனத்தில் இரண்டுப்பேருக்கு மேல் குடும்பமே பயணிக்கும் ஆபத்தான பயணங்கள்,

அமைச்சர்களின் வருகையில் சாலையே ஸ்தம்பிக்கும் நிலை, ஒரு வழிப்பாதையில் விரையும் வாகனங்கள், கண்டுகொள்ளாத அதிகாரிகள், சிக்கி அல்லப்படும் அவசர ஊர்திகள்

தனிப்பட்ட பகையில் ஏற்படும் கொலைகளுக்கு, சாதி மத சாயம் பூசி கொள்ளையடிக்கும் அமைப்புகள், நிகழும் வன்முறைகள், மரணங்கள்
சாலையோர பேருந்து நிலையத்தில் நிழற்குடை இல்லாமல் வெயிலில் சுருண்டு விழும் மனிதர்கள், மரணங்கள்

சாலையில் ஆபத்தான கார், பைக் பந்தயங்கள், உயிர்ப்பலி ஏற்படுத்தும் தற்குறி தறுதலைகள்

போலி மருந்துகள், கலப்பட உணவுகள், தொடர் சோதனை செய்யாத மெத்தனம்

இப்படியே நீங்களும் பட்டியலிடலாம், முன்கூட்டியே அரசு எந்திரம் பாதுகாப்பு அமைப்புகளை தொடர் சோதனைகளை பலப்படுத்தலாம்
வதந்திகளுக்கு விரைந்து செயலாற்றி கடமை செய்யும் அரசும், அதிகாரிகளும் போல, உண்மையான செய்திகளுக்கும் பாதுகாப்பு குறைபாடுகளில் உள்ள ஓட்டைகளை அடைப்பதற்கும், மற்ற துறை அதிகாரிகளும், அமைச்சர்களும் பணியாற்றினால், இது உண்மையிலேயே மக்கள் ஆட்சிதான்!

கீச்சுக்கள்!

நீர், நிலம், காற்று, பூமி, வனம், வானம் என்று எதில் பிரச்சனை என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் எந்தவொரு விஷயத்திற்கும், நடந்த குற்றங்களுக்கு விடை தேடவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும், ஒரு செய்தியை அறிந்து கொள்ளவும் என ஒவ்வொன்றுக்கும் ஒரு பொது நல வழக்கு தேவைப்படுகிறது!
வருங்காலத்தில் நீதிமன்றமே சட்டமன்றமாகவும், பாராளுமன்றமாகவும் ஆகலாம்! தேர்தலும், ஓட்டுகளும் என்ன சாதித்தன?

---------------

உண்பது, கழிவுகளை அகற்றுவது, குழந்தை பிறப்பின் வழி என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான், காணாத கடவுளின் பெயரால், விதைக்கப்பட்ட வன்மத்தின் பெயரால் பல நூறு ஹிட்லரை உருவாக்கி வைத்திருக்கும் மதம், எந்த மதமாய் இருந்தாலும் அது அழிந்து போகட்டும்! தீவிரவாதிகளை அழிக்காத மதம் மனித இனத்துக்கு எந்த நன்மையும்
செய்யப் போவதில்லை!

------------------------------

அன்பில்லாமல் அளிக்கப்படும் உணவும்
நம்பிக்கையில்லா நட்பும் உறவும்
சுயமரியாதை இழந்து வாழும் வாழ்க்கையும்
வாழும் போதே மரணத்தையும் நரகத்தையும் காட்டுபவை!

------------------

மனமொத்த அன்பும் தோழமையும்
இணைந்த வாழ்க்கைத்துணை
இல்லறத்தை அழகாக்கும்
அதிகாரமும் நீதியும்
அழகாய் கைக்கோர்க்கும்
நல்லறம்
இந்த மண்ணில்
வாழ்தலை இனிமையாக்கும்
முன்னது பலருக்கு வாய்ப்பதில்லை
பின்னது இன்னமும்
யாருக்கும் வாய்க்கவில்லை!

-----------------------------------

சாலையில் எருமையொன்று (உண்மையில் எருமைதான்), அந்தப் புறம் இருந்து இருபக்கமும் பார்த்து பார்த்து வர, இந்தப் புறம் மித வேகத்தில் சென்று கொண்டிருந்த வாகன வரிசையில் இருந்து நானும் கவனித்தேன்!
சரியாய் அது இந்தப் புறம் வருகையில் நானும் எருமையும் நேருக்கு நேர், வண்டியை மெதுவாக நிறுத்த, அதுவும் கொஞ்சம் வேகமாக நடையைப் போட்டது, அத்தனை வேகமாகச் செல்லும் எருமையை இதற்கு முன்பு பார்த்ததில்லை, (போக்குவரத்து விதிகளை மதிக்கும் விலங்குகளில் இனி எருமையையும் சேர்த்துக் கொள்ளலாம்)

சடாரென்று வேகமாய்ப் பைக்கில் வந்த ஒருவர், முன்னே தேங்கி நிற்கும் வாகனத்தை மதியாமல் வேகமாய் முந்தி (ஓவர் டேக்) முன்னே செல்ல, வேகமாய் நடந்து கொண்டிருந்த எருமை மாடு, துள்ளி ஓடியது மறுபுறம்! ஓவர் டேக் செய்து முன்னே வந்தவர், திடீர் அதிர்ச்சியில் நிதானம் தவறி வண்டியில் இருந்து நடுரோட்டில் கீழே விழுந்து எழுந்தார்!
இ. அ. நீ யாதெனில்: சென்னை வாழ் எருமைகள் வேகமாய் ஓடுகின்றன, மற்றதெல்லாம் உங்கள் கற்பனைக்கு!
-------------------------

இனி நம்மிடம் பெற அல்லது ஆக வேண்டிய வேலைகள் எதுவும் இல்லை என்ற நிலையில் சில சந்தர்ப்பவாத நட்புகளும் உறவுகளும் தள்ளிப்போகும், யாரிடம் அடுத்து காரியம் ஆக வேண்டி இருக்கிறதோ அடுத்து அங்கே சென்று அது வழிந்துக்கொண்டும் இளித்துக்கொண்டும் இருக்கும்!
அவரின் குணங்களைப் புரிந்துக் கொண்டே பழகிவிட்டால், பச்சோந்திகளைப் பற்றி கவலையுற வேண்டியதில்லை!

----------------------

பிள்ளைகள் நிறைந்திருக்கும் வீட்டில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அவளின் பாடு திண்டாட்டம்தான்
நட்டாம தீர்ப்புச்சொல்லு என்று சோர்ந்துப் போகும் விழிகளை வலுக்கட்டாயமாக திறந்து, பரபரவென பஞ்சாயத்துக்கூட்டி, சந்து சந்தாய் சென்று அடிவாங்கிய வடிவேலு கணக்காய் ஆக்கியப்பின், மம்மி ஐ லவ் யூ மம்மி என்று பாராட்டு பத்திரம் வாசித்து, அந்நியனாய், அம்பியாய், ரெமோவாய் பெர்பார்மன்ஸ் காட்டும் பிள்ளைகளைப் பார்த்து காய்ச்சல் பயந்து பம்மிக்கொள்கிறது!  

பிள்ளைகளைச் சூழ்ந்திருக்கும் உலகம்


இன்று ஒரு வேலையாகக் கோபாலபுரத்தில் இருக்கும் டி ஏ வி மற்றும் நேஷனல் பப்ளிக் பள்ளிகள் அமைந்திருக்கும் சாலையைக் கடக்க நேர்ந்தது, இருபக்கமும் வாகனங்களை நிறுத்தி, பெரும் போக்குவரத்து நெரிசல், சென்னையில் பள்ளிகள் அமைந்திருக்கும் எல்லாச் சாலைகளிலும் இதுதான் பிரச்சனை என்றாலும், சிறிய பிள்ளைகள் கூடத் தங்கள் வாகனத்துக்காக அப்படியும் இப்படியும் உடன் பெரியவர்கள் இல்லாமல் ஓடியது அச்சத்தையே தந்தது, அவ்வப்போது காணும் காட்சிகளைக் கண்டும், கேட்கும் நிகழ்வுகளைக் கொண்டும், சில கருத்துக்களைக் குழந்தைகளின் நலனுக்காகப் பகிர்கிறேன்;

1. பள்ளியின் வாகனம் என்றாலும் தனியார் வாகனம் என்றாலும், பெற்றவர் அளவுக்குப் பிள்ளைகளின் மேல் யாருக்கும் அக்கறை இருக்காது! உங்களுக்கு ஒரே பிள்ளை, அவர்களுக்குப் பத்தில் ஒன்று பதினொன்று, அவ்வளவே! அதுதான் விபத்துகள் நிகழும்போது பள்ளிகளின் மற்றும் காவல்துறையின் எண்ணமும்!

2. பத்து வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்குப் பெற்றோரோ, அல்லது வீட்டில் உள்ள ஒருவரோ அவர்களைப் பள்ளியில் விட உடன் செல்லுதல் அவசியம்!

3. பத்தாவது படிக்கும் மாணவன், ஒரு தனியார் வேனில், விளையாட்டுக்காகப் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சென்றதை இந்தச் சனிக்கிழமை காண நேர்ந்தது, உள்ளே உள்ள அவனது மற்ற நண்பர்களுக்கு அது ஒரு விளையாட்டாய் இருந்தது! பெரிய பிள்ளைகளுக்கும் பாதுகாப்பைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள். வளர்ந்தப் பிள்ளைகளின் நட்பு வட்டத்தைக் கவனியுங்கள்! முடிந்தால் அவர்களின் நட்புகளை அவ்வபோது சந்தித்து நட்புடன் பழகி, தேவையற்ற பழக்கங்களைக் களையலாம்!

4. உங்கள் பிள்ளைகளை வீட்டிலோ தெருவிலோ வாகனம் இறங்கிவிடும் நேரத்திற்கும் முன்பு நீங்கள் அங்கே காத்திருங்கள், உங்கள் பிள்ளையைப் பத்திரமாய்க் கையைப் பிடித்து இறக்கி, பாதுகாப்பான இடத்திற்கு வரும்வரை உங்கள் பார்வையை அவர்கள் மீதும் வாகனத்தின் மீதும் வைத்திருங்கள்! பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு வேகம் மட்டுமே இருக்கிறது, விவேகம் இல்லை!

5. தனியார் ஆட்டோவை ஏற்பாடு செய்தாலும், அதில் எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் என்று நீங்கள் கண்காணிக்க வேண்டும். ஒரு பிள்ளையை ஒருவர் ஏற்றிவிட, காலியாய்ச் சென்ற ஆட்டோ, மற்றொரு தெருவில் நிறையப் பிள்ளைகளைப் புளி மூட்டை போல் ஏற்றி, ஆட்டோவின் சீட்டுக்கு மேல் உள்ள சிறிய இடத்தில் கூடப் பிள்ளைகளை அமரவைத்து அழைத்துச் செல்கிறார்கள். அவர்களுக்குப் பணம் மட்டுமே முக்கியம்!

6. பெண் குழந்தைகள் என்றாலும் ஆண் குழந்தைகள் என்றாலும் குட் டச் (நல்ல தொடுகை), பேட் டச் (கீழ்த்தரமான தொடுகை) பற்றிக் கற்றுக் கொடுங்கள்! ஓர் ஐந்து வயது சிறுமியை அழைத்துச் சென்ற பள்ளி வாகனத்தில், பத்தாவது படிக்கும் மாணவன் ஒருவன் அந்தக் குழந்தையைத் தொடக் கூடாத இடங்களில் தொட்டுத் துன்புறுத்தி இருக்கிறான். பிறகு பெற்றவர்கள் சென்று பள்ளியிடம் முறையிட, அந்த மாணவனின் அரசியல் பின்புலத்தால், பள்ளி நிர்வாகம் மெத்தனமாய் இருக்க, அந்தக் குழந்தையை வேறொரு பள்ளியில் சேர்த்தார்கள். வெளியாட்கள் என்றில்லை, பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் எந்த வயதினராலும் எந்தப் பாலினம் என்றாலும் நிகழ்த்தப்படலாம், கவனம் அவசியம்!

7. தெரிந்தவர் அறிந்தவர், பல காலம் எங்களுக்குத் தெரியும் என்று தனியார் ஆட்டோ ஓட்டுனர்களை, பிற வாகன ஓட்டிகளையும் மட்டும் நம்பி சிறு குழந்தைகளைத் தனியே அனுப்புவது தவறு.

என் மகன் ஒன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது, அவனைப் பள்ளியில் விட்டுவிட்டு நான் திரும்ப, அப்போதுதான் வந்து நின்ற வேனில் இருந்து, மகனின் நண்பன் இறங்கும்போது கீழே விழுந்தான், அவன் விழுந்ததைக் கவனிக்காமலோ அல்லது கவனித்தும் அந்த வாகனம் சென்று விட்டது, விழுந்த வேகத்தில் அந்தப் பிள்ளை நடைபாதையில் வாந்தி எடுக்க, அவனுக்கு வேண்டிய முதலுதவிகளைச் செய்து அவன் பெற்றோருக்கு போன் செய்ய, அவர்களிடம் எந்த அக்கறையையும் இல்லை!

சில வருடங்கள் கழித்துச் சமீபத்தில் பேசியதில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த அந்தத் தோழி அவர்கள் வீட்டில் இருந்து தனியே வர அனுமதியில்லை என்றது சற்றே விந்தையாக இருந்தது! யாரோ ஓர் ஓட்டுனரை நம்பி, ஏதோ ஒரு வாகனத்தை நம்பியே அந்தப் பிள்ளை இதுநாள் வரை பயணிக்கிறான்! செல்வம் போனால் சேர்த்துக் கொள்ளலாம், குழந்தைகளுக்கு நேரமில்லையெனில், அவர்களின் பாதுகாப்புக்கு உடன் வர மதம் பெரியவர்கள் பெண்ணுக்கு அனுமதி தரமாட்டார்கள் எனில் பிள்ளைகள் எதற்கு?

எல்லாவற்றையும் தந்தைதான் செய்ய வேண்டும் என்று இல்லை, உங்கள் வீட்டு பெண்களுக்கும் சுதந்திரம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!

8. பன்னிரண்டு வயதிற்கும் அந்தச் சிறுமிக்கு, என் பிள்ளைகளுக்காக நான் பள்ளியில் காத்திருந்த போது, அந்தப் பெண்ணின் அருகில் வந்த ஒரு ஆட்டோ டிரைவர், அந்தப் பெண்ணின் தோளில் கைவைத்து, பின் கன்னத்தைக் கிள்ளி, "ஏண்டி கழுதை, இங்கே நிக்குறே, சனியனே வா!" என்று அழைத்தான், என்னால் முடிந்தது அன்றைக்கு அவனைக் கண்டித்தது, ஆனால் இதுபோலத் தரக்குறைவாக எத்தனை பேர் உங்கள் பிள்ளைகளிடம் பேசுகிறார்கள், தொடுகிறார்கள் என்று உங்கள் பிள்ளைகளிடம் கேட்கிறீர்களா? அவர்கள் மதிப்பெண் என்று மட்டும் கேட்க முடிந்த உங்களுக்கு, பள்ளியில் அவர்கள் படும் அவதியையும், வெளியில் படும் அவதியையும் கேட்டு தெரிந்து, அவர்களுடன் நேரம் செலவிட்டு, அவைகளைச் சீர்ப்படுத்துங்கள்! இல்லையெனில் வருங்காலத்தில் துன்பமே மிஞ்சும்!

9. சமீபத்தில் பத்திரிகையில் ஒரு நிகழ்வைப் படித்தேன், அப்பாவும் அம்மாவும் வேலைக்குச் செல்ல, அப்பா இரவு நெடு நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்ப, அம்மாவும் நெடுந்தூரம் பயணம் செய்து மாலையில் வரும் போது, மிகுந்த சோர்வில் தன் மக்களிடம் நேரம் செலவிட முடியாமல், வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு உறங்கிவிடுவாராம்.

தன் பெண்ணைப் பள்ளி விட்டு வந்ததும் பக்கத்து வீட்டு முதிய உறவினர் ஒருவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் சென்று விடுவது தின வழக்கம்! கொஞ்ச நாளாய் மகள் அம்மாவிடம், "அம்மா என்கூடப் பேசு, நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல, "நாளைக்கு நாளைக்கு" என்று தட்டிக் கழித்திருக்கின்றனர்.

சிறிது நாட்களுக்குப் பிறகு அந்த முதிய உறவினர் வீட்டுக்குச் செல்ல மறுத்த மகள், தன் அம்மாவிடம் பூனைக்குட்டிகளை வாங்கித் தர சொல்லி அடம் பிடிக்க அம்மாவும் வாங்கித் தந்திருக்கிறார்! பூனைக் குட்டிகள் வந்த சில நாட்களில் மகளிடம் பெரிய மாற்றம், அது அம்மாவுக்கு நிம்மதியைத் தந்திருக்கிறது. இருந்தாலும் மகள் வளர்க்கும் பூனைகளைக் காணும் பொருட்டு அவள் அறைக்குச் செல்ல, அங்கே அந்தப் பூனைக் குட்டிகளைச் சங்கிலியில் பிணைத்தும், ஒன்றின் காதுகளை வெட்டியும், குட்டிகளின் உடல் முழுதும் குண்டு ஊசியால் குத்தியும், அதன் ரோமங்களைத் தீய்த்தும் வைத்திருந்திருக்கிறாள், பக்கத்துக்கு வீட்டில் உள்ள பெண்மணிகளும் அவளிடம் வந்து, "உன் மகள் அந்தப் பூனைகளைக் கொடுமை படுத்துகிறாள், இப்படியே விட்டால் அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும்!" என்று சொல்ல, அப்போதுதான் அம்மாவுக்கு மகளின் மனநிலைப் புரிந்தது!

ஒரு மனநல மருத்துவரிடம் செல்ல, மகள் தன்னை அந்த முதிய உறவினர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்ததாகவும், தன் அம்மா தன்னிடம் காது கொடுத்து, பேச மறுத்ததாகவும், அதனால் அந்த முதிய உறவினரின் நினைவு வரும்போது, இந்தப் பூனைக்குக் குட்டிகளைக் கொடுமைப்படுத்துவது அவளுக்கு அந்த உறவினரையே துன்புறுத்துவது போலத் தோன்றுவதால் அவளுக்கு மகிழ்ச்சி கிடைப்பதாகவும் சொல்லி இருக்கிறாள்!

உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் காதுகளும், மனமும் நேரமும் வேண்டும், இல்லையென்றால் ஏதோ ஒரு உயிர் உங்கள் பிள்ளைகளின் துன்புறுத்தலுக்கு ஆளாகும்! நாயை கல்லால் அடிப்பது, பூனையைத் துன்புறுத்துவது, பட்டாம் பூச்சியைப் பிய்த்து எறிவது என்று பிள்ளைகள் செய்யும் செயல்களை ஊக்குவிக்காதீர்கள், அது அவர்களின் மனச்சிதைவின் ஆரம்ப அறிகுறி! இப்படியே வளரும் பிள்ளைகள் சிறந்த கணவனாகவோ, மனைவியாகவோ ஆதல் அரிது!

10. வெளியில், தெருவில், பக்கத்துக்கு வீட்டில் விளையாடச் செல்லும் பிள்ளைகளிடமும் கவனம் அவசியம்!

11. இன்று மொத்த எலக்ட்ரானிக் பொருட்களையும் பிள்ளைகளிடம் கொடுக்கிறீர்கள், அதில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கிறீர்களா? அதில் அவர்கள் நல்லதையும் தெரிந்து கொள்ளமுடியும், தேவை இல்லாத குப்பைகளையும் காண முடியும், வழிகாட்ட வேண்டியது பெற்றோரின் கடமை.

12. வெளி உலகை, பாதுகாப்பு நிறைந்ததாக நாம் மாற்ற முடியாது, முடிந்தவரை நம்மில் இருந்து வந்த உயிரை, நாம் சரியாக வழிநடத்தலாம், பாதுகாப்பை உறுதி செய்யலாம்!

சென்னை போக்குவரத்து

உலகச் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையான "தி குளோபல் ரிப்போர்ட் ஆன் அர்பன் ஹெல்த்" தின் படி, சாலை விபத்துகளில் மாண்டுபோவர்களின் பட்டியலில், சியாரா என்ற பிரேசிலின் நகரத்துக்கு அடுத்துச் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது!
இதற்காகச் சென்னைவாசிகளாக இன்றே நாம் பெருமைபட்டுக்கொள்ளலாம், ஏனெனில் இந்த விபத்து நாளை நமக்கும் நடக்கலாம், நாம் இல்லாமல் போகலாம்!

அரசாங்கம் இல்லையென்றாலும், அதிகாரிகள் இல்லையென்றாலும், குறைந்தபட்சம் அறுபது சதவீத விபத்துகள் நம்மாலேயே குறைக்கப்படலாம்! அது என்ன என்ன என்று நமக்கே தெரியும்! 

1. சிக்கனலை மதிப்பது
2. சாலை வரிசைகளை மதிப்பது
3. தலைக்கவசம் அணிவது
4. மித வேகம்
5. பதினெட்டுக்குக் குறைவான குழந்தைகளுக்கு மோட்டார் வாகனங்களை
கொடுக்காமல் இருப்பது. சைக்கிளை தந்தாலும் அவர்களை நெடுஞ்சாலைகளில் கவனமாய் இருக்கச் சொல்வது
6. கனரக வாகனங்களின் முறையான தணிக்கைகள்
7. நடைபாதைகளில் வீடுகளை விஸ்தரிப்பது, கடைகளை விஸ்தரிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்
7. உங்கள் பிள்ளைகள் நண்பர்களுடன் பைக்கில் இருவர் மூவராக ரேஸில் பறப்பது போன்ற சாகசங்களைக் கண்காணித்து அறிவுறுத்துவது என நிறைய இருக்கின்றன நாம் செய்வதற்கு!

பொதுவான விதிகளை விடுத்து, ஒரு பைக்கில், ஓட்டும் ஆணோ பெண்ணோ மட்டும் தலைக்கவசம் அணிந்து, குழந்தைகளுக்கு, அல்லது பின்னால் இருப்பவர்களுக்குத் தலைக்கவசம் இல்லாமல் செல்வது எப்படிப்பட்ட அக்கறை என்று புரிவதில்லை! ஒருவேளை கீழே விழுந்தால், ஓட்டுநர் மட்டும் தப்பித்துக் குடும்பம் சாகலாம் என்ற எண்ணமா?

நாள்தோறும் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே வருகிறது சாலைகளில். பைக் ஓட்டிகள் நடைபாதைகள் ஓட்டுகிறார்கள், சாலைத் தடுப்புச் சுவர் குட்டையாய் இருந்தால் அதன் மேல் ஏறி ஓட்டுகிறார்கள், இன்னமும் அவர்கள் வரிசையாய்ச் செல்லும் வாகனங்களின் மேல் பறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்!

விதிமுறைகளை மீறி தினந்தோறும் லட்சணக்கணக்கில் வாகனங்கள் சாலைகளில் பறக்கிறது, அதிகாரிகள் ஓரமாய் நிற்கிறார்கள், மாத கடைசியில் சில அபராதங்கள் விதிக்கப்படுகின்றன! பொதுவாய் சீர்கெட்டு இருக்கும் சாலைகள் மழை நேரத்தில் முழுதும் காணாமல் போகிறது (ஊரே காணாமல் போனது கடந்த வருடம்)!

இந்தச் சாலைகளின் நிலைகளும், போக்குவரத்தும் சீர் செய்யப்பட மிக முக்கியமான பிரமுகர்களுக்குச் சாலைகளில் இடைஞ்சலோ, விபத்தோ அல்லது, ஏதோ ஒரு பொதுநல வழக்கோ தேவைப்படலாம், அதுவரை, நம்முடைய கவனத்தாலும் பிறருடைய கருணையாலும் தான் நாம் வீடு திரும்ப வேண்டும்!
#சென்னை #போக்குவரத்து

Yazidi_Genocide

கிறிஸ்துவர்களைக் கொன்று விட்டால் அல்லா உயிர்த்தெழுவாரா? பெண்களைச் சிதைத்தால் அல்லா கருணை காட்டுவாரா, குழந்தைகளைக் கேக் செய்யும் அவனில் போட்டு, தலையை வெட்டி, பாலியல் வன்கொடுமை செய்து, சொல்ல முடியாத சித்திரவதைகளைச் செய்து கொன்றிருக்கிறார்கள், இதையெல்லாம் செய்தால் அல்லா கேட்டதைத் தருவாரா? இவர்களுக்கு வேண்டியது பெண்களின் உடல், குழந்தைகளின் ரத்தம், அதற்கு அல்லா துணையா? அப்படித்தான் இஸ்லாம் சொல்கிறது என்றால், அவர் என்ன காட்டுமிராண்டி கடவுளா?
இந்து கடவுளோ, கிறிஸ்துவக் கடவுளோ ஓர் இனத்தை அழிக்க அவர்கள்தான் காரணம் என்றும் சொன்னால் இந்தக் கடவுளர்கள் எதற்கு? வக்கிரம் பிடித்த வடிகாலுக்கு மதத்தையும் கடவுளையும் காரணம் காட்டி திரியும் இந்தத் தீவிரவாதிகளை இன்று வரை எதுவுமே செய்யவில்லையே கடவுள்? இல்லாத அந்த ஒருவருக்காகவா ஆலயங்கள், மசூதிகள், தேவாலயங்கள்?
ஒரே ஒரு ஹிட்லரை தாங்க முடியாமல் தவித்தது யூத இனம், இப்போது பல ஹிட்லரின் பிம்பங்களாய் இந்த மத வெறியர்கள், உண்மையில் அல்லா என்பவர் உண்மையென்றால், கடவுள் உண்மையென்றால் இந்த வெறிபிடித்த மனித மிருகங்கள் செத்து தொலையட்டும், உலகளாவிய இஸ்லாமிய மக்கள் ஒட்டு மொத்தமாய் இந்த தீவிரவாதிகளை தனிமைப்படுத்த வேண்டும்
ஒரு குழந்தையின் அழுகை யாரையும் கரைக்கும்
அந்த அழுகையை ரசிக்கும் தீவிரவாதிகளை
இரக்கமின்றிக் கொல்வதே சரியான நீதியாகும்
#ISIS #Yazidi_Genocide

கீச்சுக்கள்!

ஒரு தொலைக்காட்சியில் குஷ்பு ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து அளித்துக் கொண்டிருந்தார், தினந்தோறும் குடித்து விட்டு அடித்து உதைக்கும் கணவனை வெறுத்து அவளின் மூன்று குழந்தைகளை மாமியாரிடம் விட்டுவிட்டு மனைவி அவள் பிறந்த ஊருக்கு சென்று விட்டதால், குழந்தைகள் தங்கள் அம்மாவை மீட்டுத் தரும்படி கோரிக்கை! நிகழ்ச்சியில் தெரிவது ஒரு குடும்பத்தின் அவல நிலை, பல குடும்பங்களின் நிலை குடியால் எப்படி எப்படியோ இருக்கலாம், குழந்தைகள் தான் வருங்காலம், வருங்காலம் கலங்கி கதறுகிறது, நிகழ்காலம் குடித்துச் சுகிக்கிறது!
குடிமகன்களுக்காக, வருமானத்துக்காக நாடெங்கும் சாராயத்தின் கிளைகள், அதே குடியால், கணவனிடம் குழந்தைகளை மட்டும் தவிக்க விட்டு விட்டு, அம்மா விலகல்!
அம்மாடா!

------------------------

இஸ்லாமிய ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்து தூக்கி விட்டது கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் அமெரிக்கா, பாகிஸ்தானின் இந்திய உளவுவேலைகளுக்குத் துணைபுரிந்தது இந்து மதத்தைப் பின்பற்றும் ஆட்கள்...இப்படி வெளிவரும் செய்திகளைப் படித்தாவது புரிந்துக்கொள்ளுங்கள், தீவிரவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், ஏன் சாமியார்களுக்குமே கூட "மதமும் கடவுளும்" வெறும் கண்துடைப்பு நாடகமே, அவரவர் லாபத்திற்கு, பணத்திற்கு, பதவிக்கு, "மக்களின் உயிர்" வேண்டும், அதற்கு மதச்சாயம் பூசி, மக்களைப் பிளவுபடுத்தி, உணர்ச்சிகளைத் தூண்டி, கொன்று குவிக்கும் வேலைகளைத்தான் செய்கின்றனர் அத்தனை அரசியல்வாதிகளும், மனிதம் இல்லாத தீவிரவாதிகளும்

------------------------------

அதிகபட்ச சகிப்புத் தன்மை உள்ளவரே இந்தியத் திருநாட்டில் வாழ முடியும்!
எல்லாம் சகித்துக் கடப்பதற்குத்தான் டாஸ்மாக் கடைகளும், பொழுதுபோக்குத் திரைப்படங்களும், அதைச் சார்ந்த கிசுகிசுச் செய்திகளும்!

--------------------


விழுந்து விழுந்துக் கடவுளைக் கும்பிடும் நேரம், வாங்கும் ஊதியத்திற்கு நேர்மையாகக் கடமையாற்றலாம்!
குறிப்பு: இது அரசியல் பதிவல்ல!

--------------------------------
அதீத சகிப்புத்தன்மையுடன் இருக்கும் தமிழக மக்களுக்குத்தான் நியாயமாய் அமைதிக்கான நோபல் பரிசை தர வேண்டும்!
----------------------------------
 

மரியாதை

பெரிய நிறுவனங்களில் பணியாளர்களை வேலைக்கு சேர்த்த பின், அவர்களுக்கு வாடிக்கையாளர்களிடம் பழகும் விதம், இன்மொழி, சரியான உடல்மொழி போன்றவைகளுக்கும், பணியாளர்களின் தனித்திறமையை அதிகரித்துக் கொள்ளவதற்குமென தனிப்பயிற்சிகள் உள்ளன! ஏனேனில் வாடிக்கையாளர்கள் இல்லா விட்டால் டாட்டாகளும் அம்பானிகளும் கூட இல்லை!

இவர்களை விட மிகப்பெரும் நிறுவனங்களை இந்திய அரசு மக்களின் வரிப்பணத்தில் நடத்துகிறது, உதாரணமாக வங்கிகள், ரயில்வேதுறை மற்றும் பல நிறுவனங்கள்! ஆனால் மக்களாகிய முதலாளிகளை குறைந்தபட்சம் வாடிக்கையாளராக கருதி கூட அவர்கள் மதிப்பதில்லை, துரதிருஷ்டவசமாக வரிப்பணத்தை ஏய்க்கும் பண முதலைகளுக்கே அவர்களின் மரியாதையும் சேவையும் செல்கிறது, பணமோ அதை சார்ந்த பயமோ காரணமாய் இருக்கலாம்! 

இத்தனை வரி கட்டியும், சிறந்த கல்வி, சிறந்த மருத்துவம், சிறந்த சாலைகள், சிறந்த சேவைகள் என்று எதுவுமே இலவசம் இல்லை இங்கே! சின்ன அளவில் இருந்து பெரிய அளவு வரை அத்தனை ஊழியர்களுக்கும் சாதரண மக்களுக்கான சேவை என்பது வேப்பங்காய்தான்! குறைந்தபட்ச மரியாதைக்கூட வங்கிகளில் நாம் ஆங்கிலத்தில் குரல் உயர்த்தினால் மட்டுமே கிடைக்கும்!

அரசு ஊழியர்கள் சக மனிதர்களின் வரிப் பணத்தில், அவர்களின் சேவை கட்டணத்தில் தான் நாம் வாங்கும் சம்பளம் என்று நினைவில் நிறுத்தாவிட்டாலும், சக மனிதர்களிடம் கொஞ்சம் கருணையோடு நடந்து கொண்டால் அவர்கள் மீதான மரியாதைக்கூடும்!

ஆண்மையின் தவறான புரிதல்

#ஆண்மையின்_தவறான_புரிதல்
 
சமீபத்தில் ஒரு பெண் கணவரின் கடிதம் என்ற பெயரில், சராசரி ஆண்களின் கீழ்மையான மனநிலையை வெளிப்படையாய், சில வார்த்தைகளின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார், ஒரு பெண் இப்படி எழுதலாமா என்றதோடு, அவரின் உள்நோக்கம், வெளிநோக்கம் என்ற விமர்சனங்களையெல்லாம் காண நேர்ந்தது!

உண்மையில் இந்த ஆண்கள் இவ்வளவு கெட்ட வார்த்தைகள் பேசுவார்களா? அப்படியென்றால் எப்படிப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் அப்படிப் பேசுவார்கள்? எந்த மட்டத்தில் உள்ளவர்கள் அப்படிப் பேசுவார்கள்?, யோசித்துப் பார்த்தால், பெண்களிடம் கேளுங்கள் என்று சொல்வேன்! ஆமாம், தினந்தோறும் வீட்டில் வதைபடும், பேருந்தில் வதைபடும், சாலையில் வதைபடும், பணியிடத்தில் வதைபடும் பெண்ணினத்துக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு, "தே...." என்றும், "தே பையன்" "தே மூ" என்றும் யாரை நோக்கி கூறினாலும், அதில் உள்ள குறிப்பு அந்த ஆணையோ பெண்ணையோ பெற்றவளையே குறிக்கிறது!

எப்போதும் பெண்மையைக் கொண்டு பெண்ணையே தூற்றும் போது, இதைப் பற்றிப் பெண்கள் எழுதாமல் வேறு யார் எழுத முடியும்?

சாலையில் செல்லும்போது, திடீரென்று, ஏதோ ஒரு போர்னோ (நிர்வாண) படத்தை நம் காலடியில் போடுவார்கள், பெண்கள் ஆடை அணிந்து வாகனத்தில் செல்லும்போது, பயணிக்கும்போது, அவளுக்கே தெரியாமல், அவள் நெகிழ்ந்திருக்கும் ஆடையை அல்லது இவர்களுக்கு உவப்பில்லாத (அப்படிச் சொல்லிக்கொள்வார்களே ஒழிய, அதை ரசிக்கத் தவற மாட்டார்கள்) ஆடையை அணிந்திருந்தால், கலாச்சாரம் என்று அதைப் பொதுவெளியில் போட்டு விமர்சிப்பார்கள், அவ்வப்போது தம் நடுவிரலை காட்டி அசிங்கமாய் யாரோ ஒரு பெண்ணிடம் தம் வக்கிரத்தை வெளியிடுவார்கள்!

ஒரு பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட நேர்ந்தால், தம் மீது தவறு இருந்தால், உடனடியாகத் தரக்குறைவான வார்த்தைகளில் பெண்ணையும் அவளைப் பெற்றவளையும் (கவனிக்கப் பெற்றவனை அல்ல) இகழ்வார்கள்! "ஓ + ஆத்தா" என்ற வார்த்தை மிகச் சகஜமாய்ப் பெரும்பாலான ஆண்களின் வாயில் இருந்து வரும், பெண்ணிடம் என்று இல்லை, சக ஆண்களிடமும் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள்!

"ஓத்தா" என்பதைப் பிரித்து எழுதினால் அதிலும் "ஆத்தா" என்று பெண்ணை இகழும் பதமே வருகிறது!
இந்த வார்த்தைகளை எழுதுவது நாகரீகம் இல்லை என்றாலும் வேறு எப்படி இதைச் சொல்வது?

பொதுவெளியில் ஒரு ஆண் வயது வித்தியாசம் இல்லாமல் தன்னைச் சார்ந்த அல்லது சாராத யாரோ ஒரு பெண்ணிடம் இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசும்போது அந்தப் பெண்ணின் சுயம் பாதிக்கப்படும் போது அந்தப் பெண் என்ன செய்ய வேண்டும்? திருப்பி அதே போல் பேச வேண்டுமா? எழுதவதே தவறு என்று சொல்லும்போது, பேசினால் என்ன மாதிரி விமர்சனம் பெண்ணுக்கு வரும்? அப்படியே பேசினாலும் கூட, பெண்ணை இகழும் வார்த்தைகளுக்கு ஆண் பதம் என்ன?
 இதுவரை நாம் கேட்டறியவில்லை!

பொதுவெளியில் இப்படிப் பேசும் ஆண்களை, கீழ்மட்ட ஆண்கள்தான் என்று எண்ணிவிட வேண்டாம், "பீப் சாங், சூப் சாங்" எழுதிய நடிகர்கள் எல்லாம் அரசாங்கப் பள்ளியில் படிக்கவில்லை, தனியார் பள்ளிகளில் படித்த மரியாதைதான் அவர்கள் பாடல்களின் அடித்தளம்! அரசாங்கப் பள்ளி, தனியார் பள்ளி, படித்த பெற்றோர் படிக்காத பெற்றோர், ஏழை, பணக்காரன் என்ற பேதங்கள் மட்டுமே ஆண்களின் வார்த்தை பிரயோகங்களுக்குப் பெரும் அடிப்படை இல்லை! ஓவ்வொரு வீட்டிலும் அப்பா என்பவர் தன் மனைவியை, மகளை, சகோதரியை, உறவுகளை,நட்பை எப்படி நடத்துகிறார், எப்படிப் பேசுகிறார் என்பதைத்தான் அவரின் ஆண் வாரிசு கற்கிறது, பள்ளியில், கல்லூரியில், அந்த ஆண் வாரிசின் சக ஆண் நட்புகளைப் பொறுத்து அவர்களின் வார்த்தை அகராதி, வன்மத்தின் அகராதி மேலும் உருப்பெறுகிறது, வளர்ப்பும் சூழலும் ஆணை, ஓர் பெண்ணின் மீதான அவன் வார்த்தைப் பிரயோகத்தை வடிவமைக்கிறது!

இதில் மோசமான பகுதி என்னவென்றால், அதை யாரும் கண்டிப்பதில்லை, ஆண் "ஆடையின்றித் திரிந்தால்", "பெண்ணை வன்புணர்ச்சி செய்தால்", "சிறுவயது பெண்ணைத் திருமணம் செய்தால்", "குடித்தால்", "புகைத்தால்", "கொலை செய்தால்", "திருடினால்", "விபத்து ஏற்படுத்தினால்", "பெண்ணைத் தரக்குறைவாகக் கிண்டல் செய்தால்", "பெண்ணின் விடியோவை எடுத்துக் கிழவி என்று கிண்டல் செய்தால்", "அந்த ஆண்ட்டி சூப்பர் பிகர்" என்று வக்கிரமான பதிவு போட்டால், எப்படி எதை ஆண் பெண்ணுக்கெதிராய்ச் செய்தாலும், அவையாவும் வெறும் "செய்தியே" ஆணின் வக்கிரம் விவாதப்பொருளாவதில்லை, ஆணின் மோகம், புகழ் தாகம், விளம்பர மோகம், வளர்ப்பு, கீழ்த்தரமான எண்ணம், அவனின் ஒழுக்கம் எதுவுமே விவாதம் இல்லை, அந்தச் செய்தி மட்டுமே பிரதானம்!

இதையெல்லாம் ஒரு பெண் செய்தால்? பெண் குடித்துவிட்டுக் காரோட்டி விபத்து ஏற்படுத்தினால், விபத்தைத் தாண்டி "அந்தப் பொண்ணு.." "பெண்" தான் செய்தி, பெண் குடிக்கலாமா? பெண் புகைக்கலாமா? பெண் ஆணின் கையைப் பிடித்து இழுக்கலாமா? பெண் வெளிப்படையாய் ஆணை விமர்சித்து, அதே தரக்குறைவான வார்த்தைகளை உபயோகித்து விமர்சிக்கலாமா?, பெண் ஆண்களை "அந்த அங்கிள் மொக்கை பிகர்" என்று சொல்லலாமா?, பெண் அலங்கோலமாய்த் திரியலாமா? இப்படி அரிதாய் நடக்கும் எந்த நிகழ்வென்றாலும், செய்தி என்பது அங்கே "பெண்" மட்டும்தான்!

சில தெருக்களில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அப்படியொரு வார்த்தைகளில் இகழும் போது, தன் மனைவியைத் தானே விலைமகள் என்ற பொருளில் உரத்துக் கூறி கீழ்நிலைக்குச் செல்பவனிடம், அவளின் வாழ்க்கை அவனுக்கு மனைவி என்ற உறவா அல்லது பணம் இல்லாத விலைமகள் என்ற உறவா என்ற சந்தேகம் வருவதுண்டு, மனைவியை இகழும் ஆண், தன் அம்மாவை எப்படி நினைத்துக் கொள்வான், தன் மகளை எப்படிப் பார்ப்பான் என்ற சந்தேகங்களும் அதையொட்டி வருவதுண்டு!

உளவியல் ரீதியாக இது ஆணுக்கு அதிர்ச்சி, பெண்ணின் கல்வியை முழுதாய் மறுக்க முடியவில்லை, பணியிடத்தில் அவளின் வளர்ச்சியைச் சகிக்க முடியவில்லை, எதையும் தடுக்க முடியாதபோது, பெண்ணின் மீதான ஆணின் அதிர்ச்சி, காழ்ப்பு, அவள் செய்தியாகும் போது, அவளையே செய்தியாக்கி வடிகால் ஏற்படுத்திக் கொள்கின்றனர்!

அந்தச் சில ஆண்களுக்கு மட்டுமே இது, "ஆண்களே அடுத்த முறை, மிகக் கீழ்த்தரமாகப் பெண்ணைப் பற்றி எழுதும்போது, அல்லது சாலையில், பொதுவெளியில், வீட்டில் பேசும்போது, ஒரே ஒரு நிமிடம் உங்களைப் பெற்றவளையும், சகோதரியையும், மகளையும், மனைவியையும் நினைத்துக் கொள்ளுங்கள், "தே ..." "ஓ ..." என்று எங்கோ யாரோ ஒருவரின் பெண்ணை நீங்கள் இகழும் போது, நீங்கள் ஒரு சரியான பெற்றோரால் வளர்க்கப்படவில்லை, உங்கள் நட்பு வட்டம் கீழ்தரமானது, உங்கள் கல்வி நிலை அடிமட்டம் என்றுதான் நீங்களே உங்கள் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறீர்கள், உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளும் அந்த நிலை மிகப்பரிதாபம்தான்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!