Monday 30 November 2015

தேவன்கள் இல்லா நகரம்

 

குடிப்பது அவனா அவளா
என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால்
பரிதாபமோ இல்லையென்றால்
ஓர் அலட்சியமோ
அவள் என்றால்
உங்கள் கற்பனைக்கு
தீனிக் கொடுக்கிறீர்க ள்
எழுதுவது அவனா அவளா
என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால்  
எழுத்தை மெச்சியும்
அவள் என்றால்
அவளை எடைபோட்டும் செல்கிறீர்கள்
புத்திக் கொண்டு பேசுவது
அவனா அவளா என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால் புகழ்ச்சியும்
அவள் என்றால் இகழ்ச்சியும் செய்கிறீர்கள்
சாலையில் விரைவது
அவனா அவளா என்று பார்க்கிறீர்கள்
அவன் என்றால் சாதாரணக் காட்சியாகவும்
அவள் என்றால் 
சிறப்புக் காட்சியாகவும் காண்கிறீர்கள்
எல்லாவற்றிலும் யாரோ
ஓர் அவளைத் தாழ்த்திவிட்டு
உங்கள் அவளை மட்டும்
தேவதை என்கிறீர்கள்!
 
தேவன்கள் இல்லாத நகரத்தில்
தேவதைகள் என்ன செய்வார்கள் பாவம்?

 





Friday 27 November 2015

சமூக வலைதளத்திலும் 'சமூகம்' நாடும் சாதியர்கள்!

சமூக வலைதளத்திலும் 'சமூகம்' நாடும் சாதியர்கள்!
-----------------------------------------------------------------------------------------

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது, சமூக வலைத்தளங்கள் இல்லை, எங்களுக்குத் தெரிந்தது பத்திரிக்கைகளும், தொலைக்காட்சியுமே!

அப்போதும் இப்போதும் நண்பர்களுக்கிடையே சாதியைப் பற்றி மதத்தைப் பற்றி நாங்கள் பேசிக்கொண்டதே இல்லை, இப்போது சமூக வலைத்தளங்கள், ஸ்மார்ட் போன்கள், பல்வேறு செயலிகள் என்று தகவல் தொடர்பு முன்னேறிக்கொண்டே இருக்கிறது! இங்கே நட்புப் பட்டியலில் சேர்ந்தபின் சிலருக்கு ஒருவரின் சாதி என்ன என்று உள்பெட்டியில் கேள்விகள் வருகிறது, சாதிச் சங்கங்களிடம் இருந்து அழைப்புகள் வருகிறது, ஒருவேளை முன்பின் தெரியாத ஒருவரிடம் நட்புப் பாராட்டும்போது குறைந்தபட்சம் சாதியைத் தெரிந்துகொண்டால் பாதுகாப்பு என்று நினைக்கிறார்களா? அல்லது சுயநலப் பலன் என்று கருதுகிறார்களா?

முன் எப்போதும் இல்லாத அளவுக்குச் சாதியின் புழக்கம் பொதுத் தளங்களில் இப்போதெல்லாம் அதிகமாய்த் தெரிகிறது! சரி இந்தச் சாதியைத் தெரிந்து கொண்டு நாம் என்னதான் செய்யப்போகிறோம்? தேர்தலில் நிற்பவன் நம் சாதியென்றால், ஓட்டுப்போட்டு அவனை வெற்றிப்பெறச் செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்,அவனால் அவன் சமூகத்தின் விவசாய , பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்து விட முடிகிறதா? 
அரசியலை விட்டுவிட்டு சற்று சில பொது விஷயங்களைப் பார்ப்போம்.

பெயரின் பின்னேயும் முன்னேயும், சாதியை பலமாய்ப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் , சாதிப் போற்றுபவர்கள் சற்று வெளியே வந்து பார்க்கவும் ;

> வீதியில் பிச்சை எடுப்பவர்கள் உங்கள் சாதியாய் இருக்கக் கூடும்,
> சமுதாயத்தில் அலைகழிக்கப்படும் திருநங்கைகள் சிலர் உங்கள் சாதியாய் இருக்கக் கூடும் ,
> கடத்தப்பட்டுக் கொடுமை செய்யப்பட்டுப் பிச்சை எடுக்க வைக்கபட்டிருக்கும் குழந்தைகள் உங்கள் சாதியாய் இருக்கக் கூடும் ,
> அமிலம் வீசிச் சிதைக்கப்பட்ட பெண்களில் சிலர் உங்கள் சாதியைச் சேர்ந்தவராய் இருக்கக் கூடும் ,
> குரூர அரசியல் சதியில் எரிக்கப்பட்ட தொண்டர்கள் உங்கள் சாதியாய் இருந்திருக்கக் கூடும் ,
> அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் முடங்கிப் போகும் விவசாயிகளும், முதலாளிகளும் கூட உங்கள் சாதியைச் சேர்ந்தவராய் இருக்கக் கூடும் ,
> முதியோர் இல்லங்களிலும் அனாதை இல்லங்களிலும் முடங்கிப் போகும் உயிர்களும் வளர்ந்து கொண்டிருக்கும் தளிர்களும் நிச்சயம் உங்கள் சாதி ரத்தத்தைக் கொண்டிருக்கும்,
சாதி முக்கியம் என்று கருதும் நீங்கள் இவர்களுக்கு அல்லது இந்த நிகழ்வுகளுக்கான மாற்றமெனச் செய்தது என்ன ?

நூற்றுக்கணக்கில் சாதிகள் இருக்கிறது, மதங்கள் இருக்கிறது, இவை பல கோடிக்கணக்கில் இருக்கும் மனிதர்களை ஆட்சி செய்கிறது, சில நூறு தலைவர்கள் பலகோடி மக்களின் அடிமைத்தனத்தைச் சாதியின் பெயரில் சுரண்டி நம்மைப் பிரித்தாளுகிறார்கள்!

பிரித்து வைத்து ஆட்சி செய் என்ற ஆங்கிலேயே கொள்கைக்கும் , பெருகி இருக்கும் சாதிச் சங்கங்களின் அடிப்படையில் மக்கள் தாமாகவே பிரிந்து நிற்பதற்கும் பெரிதாய் வித்தியாசம் ஒன்றுமில்லை!

கருப்பாய் இருப்பவர் எல்லாம் கீழ்சாதி வெளுப்பாய் இருப்பவர் எல்லாம் மேல்சாதி போன்ற மடத்தனங்களும், நம் சாதியைச் சேர்ந்தவன் தப்புச் செய்து இருக்க மாட்டான் என்ற கிறுக்குப் பிடிவாதங்களும் இன்னமும் நம்மில் நிறைந்திருக்கிறது! ஆண்டவன் அடிமைபட்டவன் என்று யாருமில்லை, மனிதர்கள் மிருகங்கள் என்று மட்டும் நீங்கள் வகைப் பிரிக்கலாம்!

யார் சொன்னது என்று நினைவில் இல்லை, ஆனால் விஷயம் மட்டும் நினைவில் இருக்கிறது,
"என்னால் ஒரு காட்டில் இருக்க முடியும், அங்கே எனக்கு எது சிங்கம், எது புலி , எது நரி எது முயல் என்று தெரியும், ஆனால் இந்த மனிதர்களுக்கிடையே அவர்களின் குணங்களில் எது கொடூரச் சிங்கம், சாதுவான முயல், தந்திர நரி என்று அறிவதுதான் சிரமமாய் இருக்கிறது!" என்று சொன்னதாய் ஒரு கூற்றைப் படித்திருக்கிறேன்.

உண்மைதானே? நம் சாதி என் சாதி எது என்று கண்டுவிட முடியும், ஆனால் இந்தச் சாதிக்குள், யார் மனிதன் யார் மிருகம் என்பதை எது தீர்மானிக்கிறது , எப்படிக் கண்டுப்பிடிப்பது?

ஆணும் பெண்ணும் ஒன்றாய்ச் சென்றால் அவர்கள் காதலர்களாய் அல்லது கணவன் மனைவியாய் மட்டுமே தெரியும் நம் கண்களுக்கு ஒரு சாதியைச் சேர்ந்தவனில் யார் சிங்கம் யார் புலி யார் நரி யார் பசு என்று எப்படித் தெரியும் ?

* உங்கள் சாதியைச் சேர்ந்தவனிடமே கோடி ரூபாய் பணம் கொடுத்து உங்களைக் கொல்லச் சொன்னால் உங்களை அவன் கொன்று விட மாட்டானா ?
* உங்கள் சாதிப் பெண்கள் என்று தெரிந்தால் மட்டும் நீங்கள் உங்கள் கண்களைக் கீழே சுழற்றாமல் அவள் முகத்தில் உள்ள கண்களில் மட்டும் நிலை நிறுத்துவீர்களா ?
* நீங்கள் நொடிந்துப் போகும் சமயத்தில் வட்டியில்லாமல் உங்கள் சாதி, கடன் கொடுக்குமா, அல்லது வாங்கிய கடனை ஏமாற்றாமல் திருப்பிக் கொடுப்பீர்களா ?
சொல்லுங்கள் எதில் தனித்திருக்கிறது சாதி?

பெண்ணைக் காதலித்து மோசம் செய்பவன் எல்லாச் சாதியிலும் இருக்கிறான், பணத்துக்காக ஆணைக் காதலிப்பதாய் நடிக்கும் பெண்களும் எல்லாச் சாதியிலும் உண்டு, பணத்துக்காகக் கொலை செய்பவன் எல்லாச் சாதியிலும் உண்டு , உறவுகளில் பொய்மை எல்லாச் சாதியிலும் உண்டு!

குற்றம் அற்ற சாதி என்று எதுவும் இல்லை , ஆண்டவன் அடிமைபட்டவன் என்று எவனும் இல்லை!

இறுதியாக ஒரு கதை, நண்பர்கள் பகிர்ந்தது, இருவேறு நண்பர்கள், ஒருவன் மிகப்பெரும் செல்வந்தன், ஒருவன் ஏழை, அவனுடன் பணிபுரிகிறான். இருவரும் ஒன்றாய் மேற்கொண்ட ஒரு பயணத்தில் ஒரு தீவில் தொலைந்துப் போகிறார்கள், அவர்கள் இருவரும் தனித்தனியாக இறைவனிடம் வேண்டுவது என்று முடிவு செய்கிறார்கள்

செல்வந்தன் இருந்த பக்கம் அவன் வேண்டியபடி அழகான மங்கையும், உணவும் , உடையும் எல்லாம் வருகிறது, ஏழை இருந்த பக்கம் ஒன்றுமே இல்லை, அவன் மீண்டும் மீண்டும் சோர்ந்து போகிறான் , செல்வந்தனோ, நண்பனுக்குக் கடவுளின் கருணைக் கொஞ்சமும் இல்லை , அவன் இப்படியே போகட்டும் என்று செருக்குக் கொள்கிறான், இறுதியில் செல்வந்தனின் பக்கம் ஒரு கப்பல் வருகிறது, அவன் அதில் அந்தப் பெண்ணுடனும் பொருட்களுடனும் பயணத்தைத் தொடங்க முற்படுகிறான், வானத்தில் இருந்து அசரிரீக் கேட்கிறது , உன் நண்பனை உன்னுடன் அழைத்துப்போ என்கிறது குரல் , அதற்குச் செல்வந்தன், அவன் ஏழை , இப்போதும் கூடக் கடவுள் எனக்கு நான் கேட்டதைத்தான் தந்தார், அவனுக்கு இல்லை இப்படிப்பட்ட துரதிரிஷ்டம் கொண்டவனை நான் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்க , அப்போது குரல் சொன்னது "உன் நண்பன் இதுவரை தனக்காக எதுவுமே வேண்டவில்லை , சுகபோகத்திலேயே வாழ்ந்துவிட்ட தன் நண்பன் துயரத்தைத் தாங்க மாட்டான் அதனால் கடவுளே அவன் வேண்டுவதை மட்டும் அவனுக்கு ஏமாற்றாமல் கொடுத்துவிடு " என்று அவன் வேண்டியதால் மட்டுமே நான், சுயநலத்துடன் நீ கேட்டவைகளைக் கொடுத்தேன், இப்போதாவது நண்பனை அழைத்துச் செல் " கேட்ட நண்பன் வெட்கித் தலைகுனிந்தான் என்று முடியும் கதை

நம் ஒவ்வொருவருக்கும், படிப்பு , தகுதி ,செல்வம் , நிறம் , சாதி , மதம் என்று எதையும் பாராமல் நம் நலன் வாழப் பிராத்திக்கும் ஓர் இதயம் கிடைத்துவிட்டால் அதுதான் மேல்சாதி, பரஸ்பர அன்பை , நட்பை, உதவியை எந்தப் பிரதிபலனும் நோக்காது மனிதர்களிடம் பகிரும் அத்தனை பெரும் மேல்சாதியே , சாதியைக் கொண்டு அரசியல் லாபமீட்டி , சாதியைக் காட்டி மனிதம் கொல்லும் அத்தனை பேரும் கீழ் சாதியே !

சாதியில் ஏற்படும் மரணங்களுக்கும் , சாராயத்தில் ஏற்படும் கீழ்மைகளுக்கும் அளவே இல்லை , எந்தப் புள்ளி விவரக் கணக்கும் புண்ணியமில்லை

எல்லாம் கடந்து, இந்தப் பிரபஞ்சத்தில் கொஞ்ச நேரம் தங்கிவிட்டுப் போக வந்திருக்கும் மனிதர்கள்தாம் நாம் , வீசும் காற்றும் பொழியும் மழையும் விளையும் பயிரும் சாதிக்கொன்றென இல்லை , எந்தச் சாதித் தலைவனும், மதத் தலைவனும், அரசியல்வாதியும் சாதிக்கென, மக்களுக்கெனத் தீக்குளித்ததில்லை , போதும் மரணங்கள் வன்முறைகள் கொஞ்சம் மனிதராய் வாழ்ந்து பாருங்கள்!

சாதி என்பது மதம் என்பது தீக்குச்சிகளைப் போல, மனிதர்களின் பக்குவப்படாத எளிதில் தூண்டிவிடக்கூடிய உணர்வுகளே போதும் அவைகள் பற்றிக் கொள்ள, பற்றி எரிந்து ஊரை எரிக்க, உயிர்களை எரிக்க, தீக்குச்சியின் தேவைகள் அழகிய விடியலுக்கில்லை, கதிரொளிப் போதும், மனங்கள் விடியட்டும்!

சாதி, மத, பேதம் கடந்த சமூகத்தை உலகளாவிய அளவில் உருவாக்கும் நோக்கத்தால்தான் சமூக வலைதளங்கள் என்று நினைத்திருந்தேன். அதில் உள்ள சமூகம் என்ற பதம், சாதியைக் குறிப்பதாக மாற்றிவிடுவார்களோ நம் தமிழ் கூறும் நல்லுலகம் என்ற அச்சம் இப்போது என்னைப் பற்றிக்கொண்டிருக்கிறது. உங்களை?

Tuesday 24 November 2015

கடவுள் காரணமில்லை

நாடு, மொழி, இனம், மதம், சாதி என்று
மனிதர்கள் வெட்டிக் கொண்டு சாக
ஒரு போதும் கடவுள் காரணமில்லை,
அவரை யாரும் பார்க்கவும் இல்லை,
கொலை செய்வதற்கு முன்பு நீங்கள்
கொல்லப்படுபவனின் கண்களை
உற்று நோக்கவும் இல்லை
இறந்தவனின் இறைஞ்சிய பார்வையில்
அவனின் கண்ணீர் துளிகளில்
அந்தக் கடைசி நேரக் கண்சிமிட்டலில்
கடவுள் தோன்றினார் - ஆமாம்
நீங்கள் அவரைப் பார்க்கவேயில்லை
இறைவன் மரித்துப்போனார்!

Saturday 21 November 2015

யாரோ சொன்னார்கள்!

இத்தனை கோடி
அத்தனை கோடியில் தூர்வாரி,
பின் பல ஆயிரம் கோடியில்
நிவாரண ரொட்டித் தந்து,

பளிச் பளிச்செனப் புகைப்படங்களுக்குப்
போஸ் கொடுத்து,

ரோடு போட சொந்தகாரனுக்குக்
காண்ட்ராக்ட் தந்து,
பின் மின்சாரத்திற்கு, கேபிள் பதிப்பதற்குக்
குழிகளை வெட்டி,
அதை மூட
மறுபடியும் வழித் தேடி,

ஊர்களை வெள்ளக் காடாக்கி
கல்விக்கூடங்களைச் சீர்திருத்தாமல்
ஒவ்வொன்றாய் மூடி
 போதைக்கு மட்டும் முன்னேற்றப் பாதையில்
இலக்குகள் வைத்து

மக்களின் கேள்விகளுகெல்லாம்
எதிர்கேள்விகள் மட்டும் கேட்டு
தேர்தலில் மலிவுவிலை
இலவசங்களைத் தந்து

எல்லா வன்முறைகளுக்கும்
ஊழல்களுக்கும் முடிவேயில்லாமல்
மீண்டும் மீண்டும் அரசியல் நாடகம்
நடத்துகின்றனர் தலைவர்கள்

யாரோ சொன்னார்கள் சுதந்திர இந்தியாவாகி
அறுபத்தெட்டு வருடங்கள் ஆகிறதென்று!

எது மழைத்தரும்?

ஏரிகளை அழித்தோம்,
குளங்களை ஒழித்தோம்
ஆறுகளின் தடங்களை மாற்றியமைத்தோம்!

காடுகளை அழித்தோம்,
விலங்குகளையும் கூண்டில் அடைத்து
வேடிக்கைப் பார்த்தோம்!


கடலிலும் கூடச் சாக்கடைக் கலந்து
எண்ணெய் கழிவுகள் கொட்டி
அதன் வனப்பைக் குலைத்தோம்!

நீவிர் எந்தக் குலமென்றாலும்
எத்தனை அதிகாரம் கொண்டாலும்
எந்தக் கட்சியென்றாலும் எந்தக் கொள்கையென்றாலும்
எப்பதவியில் இருப்பவரென்றாலும்
உங்களின் எதைக் கொண்டு
இயற்கையை மீட்டெடுப்பீர்?

உங்களின் எச்செல்வம்
நாளை சந்ததிக்கு நிழல் தரும்?
உங்களின் எப்பெருமை
அவர்களுக்கு நீர் தரும்?
உங்களின் எந்தக் கட்சி
அவர்களுக்கு உணவு தரும்?
உங்களின் எந்த அதிகாரம்தான்
நாளை மனிதர்களுக்கு மழைதரும்?

Thursday 12 November 2015

காய்ச்சல்' காலம்: முன்னெச்சரிக்கைக்கு 30 குறிப்புகள்!






குழந்தைகளுக்காக மற்றும் உங்களுக்காக : 

  1.    காய்ச்சல் என்பது வியாதி அல்ல, உடலில் ஏற்பட்ட ஏதோ ஓர் அழற்சிக்குத் தீர்வாக, உடல் ஏற்படுத்திக்கொள்ளும் கட்டமைப்பே காய்ச்சல், உள்ளிருக்கும் வைரஸையோ பாக்டிரீயாவையோ கொன்றொழிக்கும் பொருட்டு ஏற்படுவதுதான் உடற்சூடு! எனினும் அழற்சிக்கான காரணத்தைக் கண்டறிந்து அதற்கு மருந்துக் கொடுக்கும் பொழுதே காய்ச்சல் விடைபெறும்.

  2.     காய்ச்சலால் உடல் வலியும், உடல் சோர்வும் ஏற்படும்.
பாரசிடமால் மாத்திரைகள், உடல் வலி, காய்ச்சல் இரண்டையும் போக்கும் மருந்து.
பெரும்பாலான ஜுரம், சாதாரண வைரஸ் கிருமிகளால் வரும், இந்த வகை வைரஸ் காய்ச்சல் நான்கு ஐந்து நாட்களுக்குள் தானாகவே சரியாகிவிடும், இவற்றுக்கு, பாரசிடமால் மட்டுமே போதுமானது.

  3.     மூன்று நாளுக்கு மேலும் காய்ச்சல் இருந்தால், வெறும் பாரசிடமால் மட்டுமே தீர்வாகக் கொடுத்துக் கொண்டிருப்பது தவறு. மருத்துவரின் அறிவுரைப்படி, பரிசோதனைகள் செய்வது நலம் ! மலேரியா, டைபாய்ட், டெங்கி (டெங்கி , வேறு வகையான காய்ச்சல்கள் என்று எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ள, ரத்த, மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் செய்து எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளுதல் நலம் !

  4.    பாரசிடமால் மருந்தை, ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும் பத்து மில்லி கிராம் என்ற அளவில் (10mg/1kg), 6 மணிக்கொருமுறை என்ற விகிதத்தில், 24 மணிநேரத்தில் 5 முறைக்கும் குறைவான முறை மட்டும் கொடுக்கலாம். உதாரணத்திற்கு, ஐம்பது கிலோ எடைக் கொண்டவர், ஒருமுறை எடுத்துக்கொள்ளும் பாரசிடமால் மருந்தின் அளவு ஐநூறு மில்லி கிராம் (500mg) அளவில் இருக்கலாம் , அறுபத்தைந்து என்றால் அறுநூற்றி ஐம்பது. குழந்தைகளுக்குத் திரவ நிலையில் உள்ள சிரப் (syrup) கொடுக்கலாம், பாட்டிலில் குழந்தைகளின் உடல் எடையைக் கொண்டு அளவுமுறை இருக்கும், அதைத் தெரிந்து கொண்டு கொடுத்தல் நலம்!

  5.    அதிகமான சூட்டில் உடல் தகித்துக் கொண்டிருந்தால், ஈரத்துணியை நெற்றி, நெஞ்சு மற்றும் தொடையில் வைத்து, சூடு தணியும் வரை ஒற்றி எடுக்கலாம், இதை டெபிட் (Tepid) ஸ்பாஞ்சிங் என்று சொல்லுவார்கள் அல்லது ஸ்பாஞ் பாத் என்று சொல்லலாம். உச்சந் தலை, கைகள் , பாதங்களைத் தவிர்த்து விடுதல் நலம். ஒருபோதும் மிகவும் குளிர்ந்த (ஐஸ்) நீரை உபயோகப்படுத் தாதீர்கள் .

  6.    மருத்துவர் குறிக்கும் அளவுக்கு மேல், தொடர்ந்து பாரசிடமால் உபயோகிப்பது கல்லீரலை பாதிக்கும் உடலில் ஏற்படும் பக்கவிளைவுகளைக் குழந்தைகளுக்குச் சொல்லத் தெரியாது, குழந்தைகளின் கோபத்திற்கும், எரிச்சலுக்கும் அழற்சியும், பின்விளைவுகளும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

  7.    குழந்தைகளுக்கு வயிற்று உபாதையால் காய்ச்சல் வருகிறது என்று தெரிந்தால், தொடர்ந்து பேதியோ வாந்தியோ இருந்தால், இரண்டு வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குப் பால், சர்க்கரை, எண்ணெய் நிறைந்த உணவுப்பொருட்கள், கீரைகள், இறைச்சி, மீன் வகைகள் தவிர்த்து, வயிற்றுப்போக்கு நிற்கும்வரை, தயிர் சாதம், கஞ்சி , பழ ஜூஸ் ,மோர் போன்ற திரவ உணவு வகைகள் மட்டுமே கொடுக்க வேண்டும்”

  8.    உப்பு, சர்க்கரை கரைசல் அல்லது “ORS – Oral Rehydration solution” பௌடரைத் தகுந்த இடைவெளியில் அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாகப் புகட்டுவது அவசியம், நீர் இழப்பை இது சரி செய்யும்

  9.    பெரும்பாலான மருத்துவர்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும் போது zinc டானிக்கை சக்தி இழப்பை ஈடுகட்ட ஒருவேளை தரச்சொல்லுவார்கள்

  10.  சளியினால் காய்ச்சல் என்றால், எடுத்தவுடன் ஆண்ட்டிப் பயடிக்ஸை நாடுவது நல்லதல்ல , மருத்துவர் தரும் சாதாரணச் சளி மருந்துப் போதும், அவ்வப்போது வெந்நீர் மற்றும் குளிர்ச்சி அல்லாத பொருட்களைத் தருவது போதும்.

  11.  சுக்கு, மிளகு, சேர்ந்த காஷாயமும், துளசி , ஓமவல்லி அல்லது கற்பூர வள்ளி போன்ற இலைகளைத் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, நீரை வடிகட்டி, கொஞ்சம் ஆறியப் பிறகு சிறிது  தேன் கலந்து, காலையும் மாலையும் என இருவேளைகள் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குக் கொடுக்கலாம்

  12.  குடிக்கும் நீரைத் தூய்மைப்படுத்திக் காய்ச்சிக் கொடுப்பதாலும் , சுகாதாரம் இல்லாத உணவுப்பொருட்களைத் தவிர்ப்பதன் மூலமும் டைபாய்ட் மற்றும் சில வைரஸ் காய்ச்சலை, தவிர்க்கலாம்

  13.  டெங்கி மற்றும் பிற காய்ச்சலுக்கு மருத்துவர் பரிந்துத்துரைத்த மருந்துகளுடன் நிலவேம்புக் கஷாயமும் பப்பாளி இலைச்சாறும் பரிந்துரைக்கும் அளவுகளில் கொடுப்பது நல்லது, குறிப்பாக, மலேரியா ஜுரத்திற்கு வலிமையான மருந்துகள், மலிவு விலையில் கிடைக்கின்றன.
(Dengue - “டெங்கி” தான் சரியான உச்சரிப்பு. இங்கே, எல்லோரும் தவறாக “டெங்கு” என்று உச்சரிக்கிறார்கள்.!)

  14.  சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் தொற்றுக்கும், குடலில் ஏற்படும் அழற்சிக்கும் அதனால் ஏற்படும் காய்ச்சலுக்கும், போதிய அளவு நீர், மோர், பழச்சாறுப் போன்றவைகளை அடிக்கடி உட்கொள்ளும்போது, சிறுநீர்ப் பாதையின் வழியாகவும், மலக்குடலின் வழியாகவும் தொற்றுக்கள் வெளியேறும், மற்ற தொற்றுகளுக்கு மருந்தே நிவாரணி

  15.  குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும், காலை 10 மணி முதல் 3 மணிவரையிலான வேளையில் பத்து நிமிடமேனும் சூரிய ஒளி உடலில் படவேண்டும். இது வைட்டமின் D குறைபாட்டைத் தவிர்க்கும். இந்தச் சத்து உடலில் கால்சியத்தை இருத்திக்கொள்ள உதவுகிறது. வைட்டமின் குறைபாடு ஏற்படும் போது, நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் இருந்து தேவைப்படும் கால்சியத்தை உங்கள் உடல் எடுத்துக் கொள்ளாது, விளைவுகள் உங்கள் எலும்புகளின் பலவீனத்தில் தெரியவரும்.

  16.  குழந்தைகளை ஓடியாடி விளையாட விடுங்கள், எலெக்ட்ரானிக் உபகரணங்களுடனான அவர்களின் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள் , அல்லது, முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆளுக்கொரு சாதனத்துடன் நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தால் , நீங்கள் எப்போதும் மருத்துவரே கதி என்றுதான் இருக்கக் கூடும்

  17.  குழந்தைகளின் உடலில் குறைந்தபட்சம் அரைமணியில் இருந்து ஒரு மணிநேரமாவது சூரிய வெளிச்சம் படுவது அவசியம்,

  18.  வீட்டில் வெளியில் என்று எப்போதும் குளிரூட்டப்பட்ட அறையிலேயே இருந்தால் உடலின் சமன்பாடு பாதிக்கப்படும்! வியர்ப்பது நல்லது!

  19.  சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டபின் கைகளைச் சுத்தமாகக் கழுவச் செய்யுங்கள். வெளியில் சென்று வரும்போதும், மலம் கழித்தபின்னரும் கை கால்களைச் சுத்தமாகக் கழுவும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.

  20.  பழம், பழச்சாறு, போன்றவைகளை உணவுக்கு முன்பு கொடுத்தால் அல்லது உணவிற்கு முன்பு இரண்டு மணிநேரமேனும் கழித்துக் கொடுப்பது, அதன் பூரண சக்தியை உடலுக்குத் தரும். உணவுடன் பழங்களை உண்பதைக் காட்டிலும், இந்த முறையில் எடுத்துக்கொள்ளும் போது, ஜீரணம் எளிதாகி தேவையான சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளும்

  21.  ஆண் குழந்தைகளுக்குச் சளி, காய்ச்சல் சமயம் தவிர்த்து, தொடர்ந்து துளசி தருவதைத் தவிர்த்திட வேண்டும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள் .

  22.  கொசு மருந்துகளையும் கொசுவர்த்திகளையும் தவிர்த்திடல் நலம் , நாள்பட்ட உபயோகம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என்று ஆங்கில மருத்துவம் சொல்கிறது.

  23.  வேப்பிலைப் புகை, பூண்டு, கற்பூரம் , எலுமிச்சைப் புல் சாறு , கொசு வலையடித்தால் , வீட்டினை, சுற்றுப்புறத்தைத் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்ற இயற்கை வழிமுறைகளையும் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றலாம்

  24.  காய்ச்சலில் குழந்தைகள் இருந்தால், மருந்துக் கொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்திக் கொண்டே இருக்காதீர்கள், அந்த நேரத்தில் நீங்கள் அவர்களுடன் உரையாடிக் கொண்டும் அல்லது உங்கள் அருகாமையைக் கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் .

  25.  எல்லாவற்றுக்கும் மேல், சோர்ந்துப் போய் இருக்கும் குழந்தைக்கு நல்ல உணவும் , நீரும் , உங்கள் அருகாமையும் , மருந்துகளைப் பற்றிய உங்கள் தெளிவும் அவசியம் , அதனுடன் சரியாகும் நல்லதே நடக்கும் என்ற உங்கள் நம்பிக்கையும் மிக மிக அவசியம்!

  26.  இறுதியாக நீங்கள் உண்பதைத் தான் உங்கள் குழந்தைகள் உண்பார்கள் , உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் காட்டும் அக்கறையைத்தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் !

  27.  எந்நேரமும் அழுது கொண்டிருப்பதும், சண்டையில் மூழ்குவதும் வம்பு பேசுவதும் மன நலனிற்கு ஆரோக்கியமற்ற நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் உங்கள் மனநலனையும் உடல் நலனையும் மட்டுமல்ல அது குழந்தைகளின் மனநலனையும் பின் உடல் நலனையும் பாதிக்கும்!

  28.  எந்த வேலையையும் புலம்பிக் கொண்டே செய்வதும் , அக்கறையற்று, சோம்பி இருப்பதும் உங்கள் குழந்தைகளின் செயல் திறனையும் பாதிக்கும்

  29.  ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாமல், வாழ்க்கை என்பது பந்தயம் அல்ல, குழந்தைகளும் பந்தயக் கருவிகள் அல்ல, மகிழ்ச்சியுற வாழ்வதற்கே என்று புரிந்துக்கொண்டு குழந்தைகளின் மன நலனிற்கும், ஆரோக்கியமான உணவு, சுத்தமான குடிநீர், நல்ல வெளிச்சம், நல்ல காற்று, ஆடிப்பாடி விளையாடுவது என்று குழந்தைகளின் உடல்நலத்திற்கும் அடித்தளம் அமைத்துக் கொடுங்கள்

  30.  நோய் நாடி நோய் முதல் நாடி என்ற திருக்குறளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நோயின் மூலகூறுக்குச் சிகிச்சை செய்வதே நலம்

இவை எல்லாவற்றுக்கும் மேலாக வரும்முன் காப்பது சாலச் சிறந்தது!  உங்கள் ஆரோக்கியம் உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், உங்கள் குழந்தையே உங்களின் பெரும்செல்வம்!
வாழ்க வளமுடன்!!!



வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!