Friday, 6 November 2015

சிதைக் கற்கள்


அவசரமாய் என்னைக் கடக்கிறீர்கள்,

நான் இழந்தவனாகவோ,
அழித்தவனாகவோ
இறப்பவனாகவோ இருக்கக்கூடும்!

நான் தொலைத்தவளாகவோ
தொலைந்தவளாகவோ
தேடுபவளாகவோ இருக்கக்கூடும்!

நான் பரிதவித்து
மருண்டு விழிக்கும் பிள்ளையாகவோ
பிச்சையெடுக்கும் நலிந்தவனாகவோ
இருக்கக்கூடும்!

நான் மனுதர்மத்தின்
மேலானவனாகவோ
இடையனாகவோ கடையனாகவோ
இருக்கக்கூடும்!

நான் ஆணாகவோ பெண்ணாகவோ
திருநங்கையாகவோ
இருக்கக்கூடும்!

நான் நாயாகவோ
பூனையாகவோ பசுவாகவோ
எருமையாகவோ
இருக்கக்கூடும்!

நான் அதுவாகவோ,
இதுவாகவோ, எதுவாகவோ
இருக்கக்கூடும்!

அறிந்தோ அறியாமலோ
எதையும் கடக்கும் நீங்கள்,
சட்டென்று குனிந்து வீசியெறிவது
கல்லாகவோ கடுஞ் சொல்லாகவோ
இருந்திருக்கக்கூடும்!

அதில் மரணித்த உயிர்களின்
மரண வாக்குமூலத்தில்
இனிவரும் பாதையில்
நானென நிற்கும் சுயங்களை
சிதைக்காமல்
சிறு புன்னகையை மட்டும்
வீசிவிட்டுச் செல்லும்படி
ஒரு செய்தியிருந்தது
உங்களுக்கு இப்போதாவது
தெரிந்திருக்ககூடும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...