Friday 6 November 2015

நட்பின்_தளம்‬!

ஒரு நாளில், நட்பில் இருந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, ஒருவர் 18+ என்று தலைப்பிட்டத் தம் பதிவிற்கு அந்தப் புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார், அதில் பெரும்பாலானோர் விருப்பக் குறியீடு இடுகின்றனர், யாரோ ஒரு கவிஞர் வரிசையாய், பெண்களின் புகைப்படத்தைப் பயன்படுத்தியே தம் கவிதைகளுக்கு விருப்ப குறியீட்டு எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்கிறார், சில வருடங்களுக்கு முன்பு என் நண்பனின் மகளின் புகைப்படம் தாங்கி நட்பழைப்பு வந்தது, அப்படியே ஆராய்ந்துப் பார்த்ததில் நண்பனின் அனுமதியில்லாமல் அவனுடன் பணிபுரிபவனே அந்தப் புகைப்படத்தை உபயோகப்படுத்தியது தெரியவந்தது ......

காரசாரமான சில அரசியல் பதிவுகளுக்கும் கூட, எங்கோ தொலைக்காட்சியில் பேசிய சில பெண்களின் புகைப்படத்தை உபயோகப்படுத்தி அதில் ஆபாசமாய்க் கருத்துக்களைச் சேர்த்து நிலைத்தகவல்களில் பின்னூட்டமிடப் பயன்படுத்துகின்றனர்.

இது போன்ற சம்பவங்களில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் , நட்பின் பட்டியலில் இருக்கும் நண்பர்களே அதைக் கண்டும் காணாமல் கள்ள மௌனம் சாதிப்பதுதான், மௌனத்தைக் கூட மன்னித்து விடலாம், ஆனால் அதற்கு விருப்பக் குறியிட்டும், ஆதரவாய் பின்னூட்டம் இடுபவர்களையும் தான், மன்னிக்க முடிவதில்லை. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்ற ஆபாச வக்கிரங்களின் அடிப்படையைப் பலமாய் மனதில் இருத்தி இருப்பவர்களை நாம் மனமாற்றம் செய்தல் என்பது ஆகாத காரியம்!

நம் நன்மைக் கருதி நீ படிக்காதே , நீ எழுதாதே , நீ கண்டுகொள்ளாதே, அது உன் பிரச்சனை, நீ விலகிக்கொள் என்ற அறிவுரைகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும், சில இடங்களில் நாம் அப்படித்தான் செயல் படவேண்டியிருக்கிறது! அது உண்மையும் கூட!

இருப்பினும் எண்ணத்தில் கீழ்மை உணர்வுகளைக் கொண்டவர்களை நண்பர்களாய் வைத்து ஆகப்போவதென்ன, இன்றைக்கு யாருக்கோ செய்தவன் நாளைக்கு உங்களுக்குச் செய்யமாட்டானா? பக்கத்தில் வீட்டில் எரியும் தீ நம் வீட்டிற்கு பரவ எவ்வளவு நேரம் பிடிக்கும்?

என்னைப் பொருத்தவரையில் பெண்களை இழித்தும் பழித்தும் பேசி , ஆபாசமான கருத்துகளையும் வக்கிரங்களையும் பகிர்ந்து கொண்டே இருப்பவர்களைக் கடக்க நேர்கையில் என் நட்புப் பட்டியலை சுத்தம் செய்து நேர் செய்கிறேன், குறைந்தபட்சம் செய்யமுடிந்தது !

ஒரு விஷயத்தில் இருவேறு கருத்துக் கொண்டவர்களுடன் நட்பில் இருப்பது தவறில்லை , ஆனால் பெண்களின் படங்களைக் குழந்தைகளின் படங்களை , வைத்து இழிவு செய்பவர்களின் நட்பைப் பற்றிப் பரிசீலிக்கலாம்!

எனினும் உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி , எனக்கு வந்தால்தான் ரத்தம் என்பதுதான் இங்கே பெரும்பாலான இணையதள நட்பின் கோட்பாடு ,அதனால் முடிந்தவரை ரத்தத்தை ரத்தம் என்று பார்க்கத் தெரிந்தவர்களை மட்டும் நட்பில் வைத்துக் கொள்ளுதல் நலம், அல்லது உங்கள் நட்போடு மட்டும் பகிர்ந்து கொள்ள வேண்டியதை, அவர்களுடன் மட்டும் என்ற அளவில் பகிர்ந்து கொள்ளுதல் நலம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!