Thursday 27 August 2015

அலையாடும் வாழ்க்கை

 
  நண்பனுடன் சிறிது நேரம் கதைப்பு
 தோழியுடன் நலம் விசாரிப்பு
 அவ்வபோது கண்டவர்களுடன் சிலாகிப்பு
 புன்னகையுடன் யாரோ சிலரிடம் ரசிப்பு
 இப்படியே முழுதாய் அரைநாள் முடிந்திருந்தது

 விரல்கள் ஒவ்வொன்றாய் எண்ணி
 முகம் கொள்ளாப் பூரிப்புடன் பேச எத்தனிக்கையில்
 வேறு ஒரு தொலைதூர அழைப்பு
 எல்லோரையும் அரவணைத்து
 பேசிக் கலந்து நீ முடிக்கும்போது
 என் விரல்களின் நுனிகளில் எஞ்சியிருந்த
 ஈரம் உலரவேயில்லை,
 எனக்கென நீ ஒதுக்கிய ஒருநாள் தொடங்கவுமில்லை,

 ஆயினும் - அந்தக் குறிஞ்சிப்பூ தினம் முடிந்து
 உன் பயணத்துக்கான பேருந்து காத்திருந்தது
 இன்று முழுக்க நீ காணாத என் விழிகளுக்குள்ளும்
 ஒரு கேள்வி தொக்கியிருந்தது,

 அந்தப் பேருந்தின் இந்தப் பயணத்தில்
 எப்போதும் நிரம்பியிருக்கும்
 உன் அலைபேசிக் கோப்பையை மீறி
 என் எந்த நினைவுகளை நீ எடுத்துச் செல்கிறாய்?
 என் நாட்குறிப்பில் வழக்கம்போல்
 உன் மௌனத்தையும் கைபேசியையும்
 நான் வரைந்துவைக்கிறேன்!

கண்ணாமூச்சி‬

நலமென்றே பகர்ந்து நகர்ந்து விடுகிறேன்
பெரும்பாலும் - நலமா யென்று
நீ கேட்கும் பொழுதெல்லாம் - அவை என்
உடல்நலம் குறித்த கேள்வி யென்று
நான் வெறுமையை உணர்ந்துக்கொள்ளும் பொழுதினில்,

வாசிக்கவியலாக் கடிதங்களைக் காற்றில்
எழுதுதல் போல்,
நலமில்லை மனமென்று
சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை,
நான் சொல்லவும் இல்லை,
நீ கேட்கவும் இல்லை,
நலத்துக்கு மாறான வார்த்தைகளை
கேட்டு நீ செய்யப்போவதும் ஏதுமில்லை,
நமக்கென்று
நேரமில்லாத இந்த வாழ்க்கைமுறையில்!

Tuesday 11 August 2015

முகமூடி

 
நீ ஆணாக நான் பெண்ணாக
 நீயும் நானும் வேறு வேறுதான்
 நான் பேசியதும் நீ பேசியதும்
 வெவ்வேறு வகைகள்தான்
 நீ கரம் பற்றியதும் நான் மருகியதும்
 ஒன்றான அன்பில் நெகிழ்ந்துதான்
 என் வாய் மூடாத ஒலியும்
 ரசித்து நின்ற உன் மௌனமும்
 இனிமை சேர்த்தத் தருணங்கள்தான்,
 அவ்வாறாக
 நீயாக இருந்த நானும்
 நானாக இருந்த நீயும்,
 மனத்தால் நெகிழ்ந்து
 காதலில் கலந்து - ஒரு
 மணத்தால் கரம்பற்றி
 நாமானோம்
 நாமான நாள் முதல்
 நீ நீயானாய் நான் தனியானேன்,
 வார்த்தைகள் குறை
 ஆசைகள் தவிர்
 அன்பைப் பதுக்கு
 மற்றும்
 நீயாகவே இருந்து கொள்ளேன்னென,
 அப்போதும் இப்போதும், என்னிடத்தில்
 இல்லாத முகமூடிகளை
 பட்டியலிட்டு அணியச்சொல்லி,
 இப்போதுதான் நீ,
 உன் முகமூடிக் கலைகிறாய்!

 நீயாகிவிட்ட நீ
 நீயாகவே தொடர
 யாரோவாகி நின்ற நானும்
 முகமூடியில் பொருந்தாமல்
 மூச்சுத்திணறித் தோற்கிறேன்
 தோற்ற அவளையே
 இன்னமும் தேடித் தொலைகிறேன்
 

Monday 10 August 2015

தன் கையே தனக்குதவி, ரௌத்திரம் பழகு

மோடி வந்தாருன்னு ஊரெல்லாம் ஒரே களேபரம், வீட்டை விட்டு வண்டிய வெளியே ரோட்டுக்கு எடுக்கவே இருபது நிமிஷம் ஆச்சு, அப்புறம் தெருமுக்கில் வந்து நிக்க இன்னுமொரு இருபது நிமிஷம், லெப்ட் இண்டிகேட்டர் போட்டு வண்டிய மெயின் ரோட்டில் திருப்பும்போது இன்னும் பயங்கர டிராபிக் ஜாம், முன்னாடியும் போக முடியாம பின்னாடியும் போக முடியாம, அப்படியே ஹாண்ட் பிரேக் போட்டு வண்டிய நிறுத்தி, ஆபீசுக்கு போன் பண்ணி பேச ஆரம்பிச்சேன்....

இடது பக்கமா ஒரு போலீஸ் பூத், அப்படியே சில கடைகள், அந்தக் கடைகளுக்கும் என் காருக்கும் நடுவே வேகமா ஒரு அக்டிவா வண்டிப் போய் சரியா காருக்கு முன்னாடி வந்து நின்னுச்சு, டொம்முன்னு ஒரு சத்தம், கண்டிப்பா வண்டிய உரசிட்டுப் போறான், சரி போகட்டும்ன்னு அமைதியா பேசிட்டே முன்னாடி பார்த்தா வண்டி ஓட்டுறவன் ஒருத்தனும் பின்னாடி இருந்த ஒரு ஆளும் திரும்பி என்னைப் பார்த்து கைய நீட்டி என்னமோ திட்டினானுங்க....அடடா சும்மாதானே நின்னுட்டு இருக்கோம், இவன் எதுக்கு நம்ம பார்த்துத் திட்டுறான், அதோட எந்த வண்டியும் நகர்ற மாதிரி தெரியலை, சரி என்னனுதான் கேப்போம்ம்னு இறங்கி,
ஹலோ என்ன ப்ராப்லம்...ன்னு கேட்டேன், அதுக்கு அந்த ஆள் சொன்னது,
காரோட வீல் லெப்ட்டுல திரும்பி நிக்குது பாரு, என் காலை அந்த வீலில் இடிச்சுக்கிட்டேன்.......

ஹலோ, லெப்டுல இண்டிகேட்டர் போட்டு "நிக்குற" வண்டியிலே உள்ள வீலில் நீ மோதினதுக்கு, நீ உட்கார்ந்துகிட்டு இருக்குற வண்டிய ஒட்டுனவனைப் போய்க் கேளு, நிக்குற வண்டியில் இடிச்சதுக்கு நியாயமா நாந்தான் பேசணும், நீ பேசக் கூடாது, போய்கிட்டே இருன்னு சொன்னா ...அதுக்கப்புறம் அந்த ஆளு விஜயகாந்த் ஸ்டைலுல பொம்பளை புள்ளையாச்சேன்னு பாக்குறேன், அடிச்சிடுவேன் பார்த்துக்க ன்னு சொன்னதும், என்னமோ சிவ்வுன்னு மண்டை வரைக்கும் ஏறி,அப்புறம் ஸ்டார்ட் மியூசிக் தான்.........

உண்மையான சென்னை குடிமகளா நல்ல வார்த்தைகள் இன்னைக்குதான் வாயில் வந்தது.....ஆனா பார்த்துக்கங்க மக்களே சுத்தி இருக்குற மக்கள் எல்லாம் அவ்வளவு சுவாரசியமா வேடிக்கைப் பார்த்தாங்க, எவனாச்சும் ரொம்பச் சுவராசியமா இதை fb வரைக்கும் கூட எழுதலாம்.......

பேசினவன் நான் காரை விட்டு இறங்கி வருவேன்னும் நினைக்கல, ஜீன்ஸ் போட்ட பொண்ணு லோக்கலா பேசும்ன்னும் எதிர்பார்க்கல, அவனுக்குச் சரிக்குக் சமமா முஷ்டியை மடக்குவேன்னும் எதிர்பார்க்கல.....(இன்பாக்ட் நானே என்கிட்டே இருந்து இதை எதிர்ப்பார்க்கலை  ) ...போடங்க .......அப்படின்னு ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி பொங்குன விதத்தில் அவனுங்க வண்டிய கிளப்பி ஓடிட்டாங்க ......

ஆனா நான் ரொம்ப எதிர்ப்பார்த்தேன், நிச்சயமா எல்லாரும் வேடிக்கை மட்டும்தான் பார்ப்பாங்கன்னு, முடிஞ்சா இந்நேரம் ஒருத்தன் இன்னைக்கு என்னமா சண்டை போட்டுச்சு ஒரு பொண்ணுன்னு அவன் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு இருப்பான் .......

அவங்க ரெண்டு பேருக்கும் அம்பது வயசுக்கு மேல இருக்கும், பெரியவங்களை மரியாதை இல்லாம பேச வெச்சுட்டாங்க, அவங்க மரியாதை இல்லாம நடந்து ......அவங்க வீட்டில் உள்ள பொண்டாட்டி புள்ளைங்களையாவது அவங்க மதிச்சு நடந்துக்கட்டும்  

இதுவரைக்கும் இப்படிச் சின்னச் சின்ன அசம்பாவிதம் சந்திக்குற போதெல்லாம், என்னை மட்டுமே நம்பித்தான் நான் அதெல்லாம் சமாளிச்சு இருக்கேன் , அரிதா சில சமயங்களில் நண்பர்களின் துணையோடு ...
ஓடுற பஸ்ஸில் ஒருத்தன் ஒரு ஸ்கூல் குழந்தைகிட்டே சில்மிஷம் செஞ்சப்ப அவனைக் கேள்விகேட்டு துரத்தி இருக்கேன் , அப்பவும் சுத்தி இருந்த ஆண்கள் வேடிக்கைத்தான் பார்த்துகிட்டு இருந்தாங்க,

சில வேளைகளில் சில பெண்கள்தான் பெண்களோட உதவிக்கு வராங்க ஆனா பொதுவா சென்னையில் ஆண்கள் வேடிக்கை மட்டும்தான் பாக்குறாங்க, சில வேளைகளில் அங்கே போலி(ச்)சே இருந்தாலும் இதுதான் நிலை!
பொம்பள புள்ளையா இருந்தாலும் ஆம்புளப் புள்ளையா இருந்தாலும் இதைச் சொல்லியே வளருங்க, "தன் கையே தனக்குதவி, ரௌத்திரம் பழகு"

தோற்றப்பிழையே

காற்றும் கடலும்
எப்போதும் போல்தான் இருக்கிறது
மனது துள்ளும் போதும்
துவளும்போதும் அவைகளை
நாம்தான் மாற்றிக் கற்பனை
செய்து கொள்கிறோம்!
பெரும்
தோற்றப்பிழையே
காணும் காட்சிகள்!

கீச்சுக்கள்!

Suppression only leads to revolution
And revolution alone leads to Reformation of the society!
‪#‎tasmac‬
---------------------------------------------------------
After finishing IPS we should protect drunkards and after finishing IAS we should nod the head for corrupted politicians, IRS, IFS, graduates, and post graduates all forced to follow the trail and face the wrath of corruption and violence! Oh my nation!  
----------------------------------------------------------------------

தோல்விகளும், அவமானங்களும், வேதனைகளும் தான் வாழ்க்கையைச் செதுக்குகிறது, நம்மையும் பிறரையும் சரியாய் உணர்ந்துக்கொள்ள துணைக்கு வருவதும் அவைகள்தாம்!
---------------------------------------------------------------------------------------------------
ஏதோ ஓர் உளமார்ந்த அன்பும் அசாத்திய நம்பிக்கையும் ஒருவரை வாழச் செய்கிறது, அவை பொய்த்துப் போகும் நொடிகளில் வாழ்க்கையும் பொய்த்துப் போகிறது!
--------------------------------------------------------------------------------------------------
முன்னாடியெல்லாம் தெருவில் போகும்போது அங்கே அங்கே போலீஸ் தலைத் தெரிஞ்சா, அம்மா அலுவலகம் போறாங்கன்னு ஊருக்கே தெரியும், இப்போ போலீசைப் பார்த்தா, அங்கே ஏதோ டாஸ்மாக் கடை இருக்கான்னு, கண்ணுத் தேடுது....
நோ வைல்ட் இமாஜிநேஷன் ....ஒன்லி, பொதுஅறிவு!
-----------------------------------------------------------------------------------------------------------------

சென்னைப் பல்கலைக்கழக விழாவுக்குப் பிரதமர் சென்னை வருகை
- செய்தி
நல்லா விசாரிச்சுப் பாருங்க, கடற்கரையோரம் உள்ள அழகிய கிராமம்ன்னு மேப்பைப் பார்த்து யாராச்சும் டூர் புக் பண்ணி இருப்பாங்க!
 

கீச்சுக்கள்!

சுயநலவாதிகள் எப்போதும் பொதுநலவாதிகள் ஆவதில்லை ஆனால் எப்படியோ இவர்கள் அரசியல்வாதிகள் ஆகிறார்கள்!
feeling crazy.
----------------------------------------------------------------------------------------------------------
பெரும் கொள்ளைக் காரர்களைக் காவல்துறையால் பிடிக்க முடியாததது போல, ஓட்டுப் போட்டப் பிறகு, தேர்தலில் ஜெயித்த எந்த ஒரு மந்திரியையும் தொகுதியில் பார்க்கவே முடிவதில்லை.....
முதல் வரியை கேள்வியாகவும், அடுத்த வரியை, பதிலாகவும் நீங்கள் படித்தால் அதற்குச் சங்கம் பொறுப்பல்ல
feeling crazy.
---------------------------------------------------------------------------------------------------------
கல்விக் கற்றத் தலைமுறைக்கு, (இளையவர், முதியவர் என்ற வேறுபாடில்லாமல்) தன்மையாய்ப் தமிழில் பேசினால் தணியாத கோபமும், திமிறிக் கொண்டு நிற்கும் ஆணவமும், தடால் என்று பிரிட்டனின் மொழிக் கொண்டு, வேகமாய்ச் சாடும்போது சட்டென்று தணிகிறது, எதிர்பார்த்த அமைதிக் கிடைக்கிறது!
என்ன கொடுமைடா இது? 
---------------------------------------------------------------------------------------------------------------
பயணத்தின் போது எதையும் பார்க்க முடியாதபடி கண்ணை மறைக்கும் விளம்பரப் பலகைகளில் அம்மாவையே பார்த்த கண்களுக்கு, ஒரு மாற்றமாய் இப்போது பசுமை மட்டுமே தெரிகிறது!
பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஒரு பகல் நேர பயணம்!  
--------------------------------------------------------------------------------------------------------------------------
பழமைவாதிகள், பாமரர்கள் சாதியை பெயரிலும், மனதிலும் சுமந்தார்கள்,
புதுமைவாதிகள், படித்தவர்கள், சாதியை இன்னமும் பெயரிலும், நடத்தையிலும் வழி நடத்துகிறார்கள்! 
----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கத்தியை எடுத்துக் குத்துவது போல் வார்த்தையில் சிலரை கொல்வது எளிதாக இருக்கிறது, அதன்பிறகு வழியும் மௌனத்தைப் போல் வழியும் குருதியைத் துடைப்பதும், அந்த மாறாத வடுவை சகிப்பதும்தான் இயலாததாக இருக்கிறது!  
--------------------------------------------------------------------------------------------------------------------
சென்னையில் சில இடங்களில் குடிநீர் வராமல் இருக்க, பல இடங்களில் வந்த குடிநீரையும், கழிவு நீர்க் குழாய் வேலை, கேபிள் பதிக்கும் வேலை, மின்சாரப் பணி என்று அவ்வப்போது தோண்டி, குடிநீரோடு கழிவுநீரைக் கலந்தாயிற்று, தொடரும் புகார்களுக்கும் பதிலேதுமில்லை!
மழைப் பெய்கிறது, சாலையில் ஆறாக ஓடும் நீரும் சாக்கடையோடு கலக்கிறது, பல வீடுகளில் மழைநீர் சேகரிப்புக் குழாய் என்பது சாலையை நோக்கியே நீரைப் பாய்ச்சுகிறது, மழை நீர் சேகரிப்புத் திட்டமும் தூர்ந்து போய்க் கிடக்கிறது.
எந்தப் பணியிலும், ஒப்பந்த தொழிலாளர்களை மட்டுமே காணமுடிகிறது, மேற்பார்வையிட்டு வேலையைச் சரியாய் செய்கிறார்களா என்று பார்க்கும் அதிகாரிகள் உடனில்லை.....
ஆங்கில ஆட்சியில் இந்திய நாட்டு மக்கள் எல்லோரும் குடிக்கக் கஞ்சிக் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்ன போது, கஞ்சி இல்லாவிட்டால் என்ன பிரட் சாப்பிட சொல்லு என்று சொன்ன இங்கிலாந்து ராணியைப் போல, மழை நீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, குடிநீரில் சாக்கடைக் கலந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அதுதான் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிறது, எலைட் பார் இருக்கிறது, அவரவர் வசதிக்கேற்ப சரக்கு வாங்கிக் குடிக்கச் சொல்லு என்று சொல்லுவார்களோ என்று நினைக்கும்போது......ஷப்பா....இப்பவே கண்ணைக் கட்டுது
நாட்டில் அதிகாரிகள் மந்திரிகளுக்கெல்லாம் கூட உடல்நிலை சரியில்லை போல! 
-----------------------------------------------------------------------------------------------------------------------
மாறி மாறி இருக்கும் கட்சிகளே ஆட்சிக்கு வந்து நாட்டைச் சுரண்டுவதற்குத் தேர்தல் என்ற ஒன்றை வைத்துப் பணத்தை வீணாக்குவதற்குப் பதில், சுழற்சி முறையில் இவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிடலாம்!
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், என்ன பேஸ் புக், ட்விட்டர் என்று இவர்கள் செய்யும் அலப்பரைதான் கொஞ்சம் அதிகம் என்று மந்திரிகள் கொஞ்சம் அலுத்துக் கொள்ளலாம்!

இனிமேலாவது தேர்தலில் ஒட்டுக்கேட்டு வருபவரின் கட்சியைப் சாதியைப் பார்க்காமல், தனி மனிதராய், அவர் இதற்கு முன் செய்தது என்ன, இதற்கு முன் ஜெயித்திருந்தால் அவர் தொகுதிக்கு செய்தது என்ன என்று அலசி ஆராய்ந்து ஓட்டுப்போடுங்கள் மக்களே!
------------------------------------------------------------------------------------------
 
 

நல்லவர்களே, நாலும் தெரிந்தவர்களே.......

சில தினங்களுக்கு முன்பு, பெண்களின் மீதான விமர்சனம் குறித்து, கமல் , நயன்தாரா என்று தொடங்கும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.
திவ்யா, பவித்ரா , என்ற வரிசையில் மீண்டும் மீண்டும் தவறை விடுத்துப் பெண்களை மட்டுமே விமர்சிக்கும் போக்கை எத்தனை எழுதினாலும் எதுவும் மாற்றிவிடப் போவதில்லை என்று உணர்கிறேன், ஒரு புத்தகம் வெளியிட்டாலும் கூட இது எதுவும் மாறிவிடப் போவதில்லை. தனி நபர் தாக்குதல் நடத்தும் இந்த ஆண் பிள்ளைகளையும், புறம் பேசிப் பெண்களைக் கீழாய்ப் பேசும் பெண்களையும் உண்மையில் திருத்த வேண்டியது அவர்கள் வீட்டில் உள்ளவர்கள்தாம்.

பெண்கள் சரியாய் உடையுடுத்திப் போனால் என்ன என்று ஒருவரும், ஆண்கள் ஒழுங்காய் உடையணிவதால் தான் பெண்கள் ஆண்களைக் கற்பழிப்பதில்லை என்று ஒருவரும், பெண்களே உங்களுக்குக் காதலும் கத்திரிக்காயும் எதற்கு என்ற ரீதியில் ஒருவரும், பெண்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒவ்வொன்றாய் எடுத்துச் சொல்லி இப்போது செய்தியில் உள்ள பவித்ராவில் தொடங்கி எல்லாப் பெண்கள் வரை பெண்களின் நடத்தையை விமர்சித்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் ...

ஆமாம், குடித்துவிட்டுப் பெண்கள்தான் குடும்பத்தைச் சீரழிக்கிறார்கள், தனியே குடித்துவிட்டுத் தன்னிலை மறந்து உறுப்புத் தெரிய ஆடைகள் களைந்து, சேற்றில் விழுந்த பன்றியைப் போல விழுந்துக் கிடக்கும் ஆடவர்களைஎல்லாம் பெண்கள்தாம் வன்புணர்ச்சி செய்கிறார்கள், வீதியில் தனியே செல்லும் சிறுவர்களை எல்லாம் பெண்களே வன்புணர்ச்சி செய்து கொன்று குவிக்கிறார்கள், தன்னைக் காதலித்து ஏமாற்றியவனைப் பெண்களே நடுவீதியில் நிற்க வைத்து, குத்திக் கொல்கிறார்கள், தனக்குக் கிடைக்காதவன் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாதென்று அமிலம் ஊற்றி ஆண்களின் முகத்தைச் சிதைக்கிறார்கள்.....இன்னும் எத்தனை சொல்வீர்கள்???

பெண்களோ ஆண்களோ தவறு செய்தால், மன்னிப்பதோ தண்டிப்பதோ குடும்பம் சட்டத்தைச் சார்ந்தது, விமர்சிக்கும் உங்களுக்குத் தவறை விமர்சிக்கும் அளவுக்குச் சுதந்திரம் இருக்கலாம், ஆனால் செவி வழி செய்தியாகப் பத்திரிகை வழி செய்தியாகக் கொண்டு உங்கள் மனம் போன போக்கில் தனி நபர் உணர்வுகளையோ நடத்தையையோ அல்லது அதைச் சார்ந்து எல்லாப் பெண்களையோ பொதுப்படையாக விமர்சிக்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை

ஒரு தவறு நிகழ்ந்துவிட்டது என்று தவறை விடுத்துப் பெண்களைக் கேலிப் பொருளாக்கி உணர்வுகளைக் காயப்படுத்தி மகிழும் சிலர், தன் மனைவியின் புகைப்படத்தைப் போட்டு என் இல்லத்தரசி என்று சிலாகித்து எழுதினாலும் பேசினாலும், அதில் வெறும் உறவு மட்டுமே இருக்கிறதே தவிர, அறம் என்று ஒன்றுமே இல்லை, அடுத்தவரின் மகளையோ மனைவியையோ காதலியையோ, சகோதரியையோ, தாயையோ இழிந்துப் பேசிவிட்டு உங்கள் மனைவியைப் புகழ்ந்துப் பேசி, நீங்கள் செய்வது உண்மையில் வெளிவேஷமே, அதே வரிசையில் மகளின் புகைப்படத்தைப் போட்டு என் தேவதை என்று நீங்கள் கொண்டாடினாலும், அந்தத் தேவதைக்குக் கிடைத்திருக்கும் தகப்பன் எப்படிபட்டவன் என்று பின்னாளில் அந்தத் தேவதைக் காதலில் விழும் நாளில் தெரிந்து கொள்ள நேரிடும்.....

உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் தேவதைகளாகக் கொண்டாடிக் கொள்ளுங்கள் அவர்களுக்குச் சேவகம் செய்யும் தூதனாக இருந்து கொள்ளுங்கள், மற்ற பெண்களை நீங்கள் சக உயிராகப் பார்த்தால் மட்டும் போதும், உங்கள் விமர்சன மிருகத்தைக் கொஞ்சம் அடக்கி வையுங்கள்.
(இது போன்ற நிகழ்வுகளில் தெரியும் சிலரின் உண்மை முகங்கள், நட்பின் பட்டியலில் இருந்து அவர்களை நீக்குவதற்கு ஏதுவாகுகிறது) நன்றி!

கமல், நயன்தாரா, த்ரிஷா... இது சினிமா விஷயம் மட்டுமல்ல!

"நயன்தாரா இப்போது யாருடன் பழகுகிறார்?" (மிக நாகரீகமாக மாற்றி எழுதி இருக்கிறேன்).
இந்தத் தலைப்புடன் தொடர்புடைய மிக முக்கியச் செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். அதில் பலரும் தங்கள் ஆராய்ச்சியின் முடிவுகளை எழுதி இருந்தார்கள், "ஆத்துல போறதை யார் குடிச்சா என்ன?" முதலான தத்துவங்கள் வேறு.

நடிகை நயன்தாரா மீது அக்கறை கொண்டு, 'ஐயோ பாவம், யாரையாச்சும் கட்டிக்கிட்டு நல்லா இருந்தா என்ன?' அப்படியெல்லாம் எழுதப்படும் அல்லது பகிரப்படும் பதிவுகள் எதுவும் இல்லை. நயன்தாரா யாருடன் பழகினால் என்ன? இந்த விஷயத்தைக் கலாய்ப்புப் பொருளாக்குவதிலேயே இவர்களிடம் உள்ள ரகசிய ஆதங்கம் அம்பலமாகிறது.

ஒரு நடிகையோ நடிகனோ, அவர்களின் தொழில் நடிப்பு. அவர்களின் நடிப்பை விமர்சனம் செய்யலாம். காசு கொடுத்து திரையரங்கில் படம் பார்ப்பவனுக்கு ஒரு படம் 'நன்றாக இருக்கிறது', 'மொக்கை' என்று விமர்சனம் செய்யும் அளவுக்கு உரிமை இருக்கிறது. மற்றப்படி அந்த நடிகர் - நடிகையரின் சொந்த வாழ்க்கையை விமர்சிக்க ரசிகனுக்கு எந்த உரிமையும் இல்லை என்றே நம்புகிறேன்.

ஒருவர் மீதுள்ள அதீத ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு ஆர்வக்கோளாறினால் விமர்சனம் செய்பவர் என்றே வைத்துக் கொண்டாலும், பெரும்பாலும் நடிகைகளைப் பற்றியே இவர்களின் விமர்சனம் சுற்றித் திரிகிறது.

நயன்தாராவின் காதல் பற்றி விமர்சிப்போரும் கலாய்ப்போரும், சிம்புவைப் பற்றியோ அல்லது பிரபுதேவாவைப் பற்றியோ இவ்வாறாக விமர்சனம் செய்வதில்லை. விமர்சனம் என்றாலும், விளம்பரம் என்றாலும் இவர்களுக்குப் பெண்தான் கருப்பொருள், பெண்தான் கற்பைப் பேணிக்காக்க வேண்டியவள்.
நடிகையரின் அந்தரங்கங்களைப் பற்றிப் பதற்றப்படுவோர், அக்கறைக்கொள்வோர், உண்மையில் அந்த நடிகையின் அந்தக் குறிப்பிட்ட நிலைக்குக் காரணமான எந்த ஓர் ஆணைப் பற்றியும் யோசிப்பதுக்கூட இல்லை என்பதே கசப்பான உண்மை.

அட, கற்பைப் பற்றிக் கவலைப்படுவோர், அந்தப் பெண்ணுக்காக எந்தக் கருத்தையும் அல்லது உதவியையும் தரப் போவது இல்லை. "மச்சி அந்த வீடியோ இருக்கா?" என்ற அளவிலேயே இவர்களில் பெரும்பாலானோரின் அக்கறை நீர்த்துப் போகும்.
சரி நடிகைகளுக்குத்தான் இந்த நிலைமை. சாமானிய பெண்களுக்கு..?
*
நாடு முழுவதுமே பாலியல் தொழிலில் பெண்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் விரும்பி, இந்தத் தொழிலில் வந்திருக்கச் சாத்தியமில்லை. ஏதோ ஒரு நெருக்கடி, ஏதோ ஓர் இயலாமை, அந்த நெருக்கடியின் பின்னே, இயலாமையின் பின்னே, யாரோ ஒரு குடிகாரத் தகப்பனோ, சோம்பேறிக் கணவனோ, ஏமாற்றிய காதலனோ, பேராசைக் கொண்ட ஓர் உறவோ, பாலுக்காகத் தவிக்கும் குழந்தையோ, நிராதரவான ஒரு குடும்பமோ அல்லது நசுக்கப்பட்ட ஏதோ ஒரு கனவோ நிச்சயம் இருக்கலாம்.
எல்லா மாநிலங்களிலுமே பாலியல் தொழிலாளிகள் அணுகக் கூடிய வகையில்தான் இருக்கின்றனர். இருப்பினும், நாட்டில் பாலியல் பலாத்காரங்கள், குழந்தைகளின் மீதான பாலியல் வன்கொடுமை எல்லாம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதற்கு என்ன காரணம்?

ஆடைகள்தான் பெண்கள் கொடுமைக்கு ஆளாகக் காரணம் என்று வாதிக்கும் ஆண்கள் கூட்டத்துக்கு, குழந்தைகள் மீதான் பாலியல் வன்முறைத் தாக்குதலுக்கு காரணம் கூற முடியவில்லை. பிறக்கும்போது குழந்தைகள் அம்மணமாய்த்தான் பிறக்கும் என்ற இயற்கையின் கூற்றை இவர்களால் மாற்ற முடியுமோ?

பெண்களைப் பற்றி ஆராயும் பொதுநலவாதிகளுக்காக நாம் பெண்களைப் பற்றிய சில செய்திகளைப் பார்ப்போம்
*
ஐம்பதைக் கடந்த ஒரு பெண், கணவர் வெளியூர் சென்றிருக்க, மூத்த மகள் கல்லூரிக்குச் சென்றிருந்த வேளையில், தன் பதினான்கு வயது மகனுடன் வீட்டில் படுகொலை செய்யப்பட்டார் என்று ஒரு தினசரி எழுதியது. ஐம்பது வயது பெண் தன் கள்ளக் காதலனால் கொலை செய்யபட்டார் என்று, பக்கத்தில் இருந்து சம்பவங்களைப் பார்த்தார்போல் விவரித்து எழுதியது.
சில பல மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண்ணின் கணவரால் திருட்டுக் குற்றத்துக்காக வேலையை விட்டுத் துரத்தப்பட்ட ஒருவன் பழிவாங்கும் செயலாக, திருட்டோடு சேர்த்து இரண்டு கொலைகளையும் செய்ததாகக் காவல்துறை வழக்கை முடித்து வைத்ததையும் அதே நாளிதழ் சிறிய செய்தியாய் பிரசுரித்து இருந்தது. மருந்துக்கும்கூட தவறான தகவலுக்கு மன்னிப்பு இல்லை.
*
ஓர் இளம் பெண் தன் தாயுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, கஞ்சா கடத்தினார் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு வழக்கு பரபரப்பு ஊட்டியது. பின்னாளில் அந்தப் பெண் கஞ்சா கடத்தவில்லை, அவர் வைத்திருந்த பணம் அவருடையது, அவர் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறி விடுவித்தது, குற்றம் சாட்டப்பட்டு அந்தப் பெண் விடுதலை செய்யப்படுவதற்கு நடுவே பல வருடங்கள் கடந்து போயிற்று.

போதைப் பொருள் கடத்தியது பொய்யான குற்றசாட்டு என்று தீர்ப்பு வந்தாலும், இடைப்பட்ட பல வருடங்களில் பத்திரிகைகள் செய்திகள் அனைத்தும் அந்தப் பெண் யாருடன் படுக்கையைப் பகிர்ந்து அந்தப் பணத்தைப் பெற்றிருப்பார் என்றும், அந்தப் பெண்ணின் நடத்தை, அந்தப் பெண்ணின் குடும்பத்தைக் குடும்பத்தைச் சார்ந்தவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, புகைப்படங்கள் என்று எல்லாவற்றையும் வெளியிட்டு இருந்ததன சில பத்திரிகைகள். விடுதலை செய்யப்பட்ட அன்று மட்டும் மிகச் சிறிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தன.

செய்திகள் என்பதும் இங்கே பெண்ணைச் சுற்றியேதான். கணவனால் பெண் கொலை செய்யபட்டால் முதலில் முன்னிலைப்படுத்தப்படும் தகவல் - பெண்ணுக்கு கள்ளக்காதல், (இந்தக் கள்ளக் காதல் என்ற வார்த்தைப் புழக்கம் இந்தியப் பத்திரிக்கைக்கே உரித்தான ஒரு பெருமை) ஏன் கணவனுக்கு ஏற்பட்ட காதலால் அந்தக் கொலை நிகழ்ந்திருக்கக் கூடாதா? பெண் கணவனைக் கொலை செய்தால், அதுவும் ஏற்பட்ட கள்ளக் காதல்தான். ஒரு குடிகாரக் கணவனைச் சகிக்க முடியாமல் செய்த கொலையாகவும் அது இருக்கலாம். முதலில் அந்தச் செய்தி வந்தால், அதில் வாசகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டும் கடமையை ஆற்ற முடியுமா என்று ஆராய்வதுதான் பத்திரிகைச் சுதந்திரமா?

அழகிகள் கைது என்று படிக்கும்போது, அழகன்கள் என்னவானார்கள்? அந்த அழகிகளால் சீரழிக்கப்பட்ட அத்தனை அப்பாவிகளும் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவார்கள் என்று நான் யோசித்ததுண்டு.

களவு என்றால் பெண், கொலை என்றால் பெண், கற்பு என்றால் பெண், காதல் தோல்வி என்றால் ஏமாற்றியவள், கள்ளக் காதல் என்றால் அதற்கும் காரணம் பெண். பாலியல் தொழிலுக்குக் காரணம் பெண், திரையில் மின்னினாலும் தன் தனிப்பட்ட வாழ்க்கையை நிம்மதியாய் வாழ முடியாதவள் பெண்.

விளம்பரத்தில் சமைப்பதற்கும் பெண், நீங்கள் போடும் வாசனைத் திரவியத்தில் காம மிகுதியில் உங்களைப் பின் தொடர்பவளும் பெண், விளம்பரம் என்றாலும் விமர்சனம் என்றாலும் உங்கள் விதைகளுக்கான தோட்டம் என்றாலும் எல்லாவற்றிருக்கும் காரணம் பெண்.

வாய்க் கூசாமல் பெண்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு உங்கள் சொந்த வாழ்க்கையின் கசடுகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு கஞ்சா பொட்டலமும், பாலியல் தொழிலாளி என்ற பட்டமும் போதுமானதாய் இருக்கிறது ஒரு பெண்ணின் மீது புனைவு வழக்குகளைப் போடுவதற்கு. பொய்க் கூறும் நல்லுலகு, ஓர் உண்மையேனும் கூறி ஒரு பெண்ணை ஒரு குடும்பத்தை வாழ வைக்கட்டும்.

பத்திரிகை தர்மம் என்று ஒன்று உள்ளது. ஜனநாயகத்தின் முக்கியத் தூணில் பத்திரிகை என்பது ஒன்று. கமலின் விருப்பபடி வாழும் அவரின் சொந்த வாழ்க்கையை செய்தியாக்காத, விமர்சிக்காத, விமர்சிக்கக் கூடாத உங்களின் நிலைப்பாடு நயன்தாராக்களையும் திரிஷாக்களையும் வாழ விடட்டும்.
*
இந்தியா என்று ஒரு நாடு உள்ளது. அருமையான வளங்களும், நால்வகைக் காலப் பருவ நிலைகளும் கொண்டது. உலகின் முக்கியச் செல்வந்தர்கள் இந்தியர்கள். எனினும் இந்தியர்கள் ஏழைகள். உலகில் அதிக ஆணாதிக்க மனோபாவத்தோடு இருப்பவர்கள் - அவ்வாறு செயல்படுபவர்கள் இந்திய ஆண்களே ஓர் ஆய்வறிக்கைச் சொல்கிறது.

இந்தியக் கண்மணிகள் ஒரு பக்கம் திரையரங்குகளில் லயித்துக் கிடக்கிறார்கள். படங்களையும் நடிகைகளையும் விமர்சித்துப் புரட்சி செய்கிறார்கள். ஊழல்களுக்கு வாய் பொத்தி போதையில் திளைக்கும் மற்றொரு குழு, பெற்றவளுக்குச் சோறு போட முடியாவிட்டாலும், பதவிக்காக அம்மையென்றும் அப்பனென்றும் ஆராற்றிக் கிடக்கிறது.
ஆண்களும் பெண்களுமாய்த் தெரிந்தும் தெரியாமலும் கதைகள் புனைகிறோம், எல்லாம் பெண்களைப் பற்றியே!

நடிகைகளை நடிப்புக்காக விமர்சனம் செய்யுங்கள், அரசியல் தலைவர்களை ஊழலுக்காக விமர்சனம் செய்யுங்கள், பிள்ளைகளை அவர்களின் வருங்காலத்துக்காக விமர்சனம் செய்யுங்கள், யாரை நீங்கள் விமர்சித்தாலும் உங்களின் விமர்சனம் என்பது ஊக்குவிப்பதற்காக இருக்கட்டும், மற்றவர்களின் நலனுக்காக, நாட்டின் நலனுக்காக இருக்கட்டும், ஆனால் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதற்கு முன்பு உங்கள் மனசாட்சி சொல்வதைக் கொஞ்சம் உற்றுக் கேளுங்கள், "நீங்கள் வழிபடும் கடவுள் அங்கேதான் ஒளிந்து கொண்டு இருக்கிறார்!"

 நன்றி, தி ஹிந்து!

https://www.blogger.com/blogger.g?blogID=275575162532676138#editor/target=post;postID=4166110405223848396

கீச்சுக்கள்!

எந்த உயிரையும் தன் உயிராய் நினைப்பவன் மனித சாதி
சாதியின் கூற்றில் சதிகள் செய்து மனிதனை புசிப்பவன் மிருக சாதி!
---------------------------------------------------------------------------
சாதிகள் அனைத்தும் வீதியில் உலாவுகின்றன
மனிதர்தம் கீழ்மை எண்ணங்களின் சதியால்!
---------------------------------------------------------------------------------------------
நேசிப்பில் உண்மை இல்லையெனில்
‪#‎முத்தங்கள்‬ யாவும் வெறும் சத்தங்கள்தான்!
----------------------------------------------------------------------------------------
நீங்க ஏதோ ஒரு சாலையில் விரையும்போது, அவ்வப்போது உங்க வண்டியின் ரெண்டு பக்கமும் ஓட்டின மாதிரி, ஹெல்மெட் போட்டுக்கிட்டு, அதுக்குள்ள மொபைல் போனை செருகி வெச்சுக்கிட்டு, பரபரன்னு பைக்கிலோ புல்லட்டிலோ ஆட்கள் வண்டியில் வந்துகிட்டே இருந்தா.....
ஆட்சியில் இருந்தாலும் இல்லாட்டாலும் கட்சிக் கொடியை வண்டியில் கட்டிக்கிட்டு, உங்களை முந்திகிட்டு எந்தப் போக்குவரத்து விதியையும் மதிக்காம, சில கார்கள் கடந்து போனா.....
தன் வீட்டுத் தாழ்வாரத்தில் நடந்து போற மாதிரி, ரொம்ப அலட்சியமா போன் பேசிகிட்டே பாதசாரிகள் சாலையைக் கடந்து போனா.........
உங்க முன்னாடி சிவப்பு சிக்னல் இருந்து நீங்க நின்னாலும், பின்னாடியே காது கிழியுற மாதிரி ஹார்ன் சத்தம் கேட்டா.....
வலது பக்கமா, இடது பக்கமான்னு, தெரியாம குழம்பிப் போய் இண்டிகேட்டரை மாத்திப் போட்டு அப்படியும் இப்படியும் போய் உங்களைக் குழப்பி விட்டா ....
வேகமா போய்கிட்டே, பின்னாடியே லாரியே வந்தாலும் கவலைப்படாம, திடீர்னு நடுவீதியில் நின்னு ஒருத்தன் யாரையோ அட்ரஸ் கேட்டா............
தெரிந்துகொள்க, சென்னையின் சாலைகள் இங்கிருந்து தொடங்குகிறது, சென்னை உங்களை வரவேற்கிறது மக்களே!
--------------------------------------------------------------------------------------------------------------------
Your religious belief or disbelief should be like your meal, you can eat your meal without harming others and nobody is going to object it, however when you thrust your belief or disbelief more vehemently on others who are remaining silent is like puking on others plate! That is disgusting!
feeling annoyed.
-------------------------------------------------------------------------------------------------------------------
தன்னைக் கடந்து செல்லும் வாகனத்தை ஓட்டிச் செல்வது ஒரு பெண்ணென்று அறிந்துவிட்டால், உடனே ஆக்ஸிலேட்டரை முடுக்கும் சில ஆண்களின் வீரத்திற்குப் பெயர்தான் அறச்சீற்றம்!  
------------------------------------------------------------------------------------------------------------------------

சில பாடங்களை
வாழ்க்கை நமக்கு எத்தனை முறை கற்றுக்கொடுத்தாலும்,
கற்றுக்கொள்ள தயங்குகிறோம்,
பாடங்களைப் புரிந்துக் கொண்டு கற்றுக்கொள்ளும்போது - நாம்
வாழ்க்கையின் அந்திமப் பொழுதில் நிற்கிறோம்!
------------------------------------------------------------------------------------------------------------------
கருவில் உருவாகும் முதல் நொடியில் தொடங்கும் வாழ்க்கைக்கு, கடைசி நொடி என்று ஏதும் இல்லை, வாழும் நொடிகள் அனைத்தும் வாழ்க்கைக்கும் மரணத்துக்குமான, போராட்ட நொடிகளே!
-----------------------------------------------------------------------------------------------------------------------
அயோக்கியர்களிடம் போராடிக் கொண்டே, மாற்றம் வருமென்று தொடர்ந்து ஓட்டளிக்கும் மக்களும்,
பிச்சையெடுத்து உண்டாலும், தன் உணவை ஏதோ ஒரு விலங்கிற்குப் பகிர்ந்தளிக்கும் வறியவனும்,
போராடி, உழைத்துக் கிடைக்கும் வருவாயை, இல்லாதவர்க்கு ஈகையளிக்கும் ஈர மனங்களும்,
யாரோ எவரையோ காப்பாற்ற எல்லையில் வீரமரணம் அடையும் வீரர்களும்,
அன்பிற்காக/ கடமைக்காக, சுயத்தை இழந்து, பிறருக்காக உழைக்கும் உள்ளங்களுமென, உதவி செய்து கடந்து போகும் மனிதர்கள் யாவும்,
வெட்டி வெட்டி மரங்களை வீழ்த்தி இயற்கையைச் சிதைத்தாலும் ஏதோ ஒரு விதையின் உயிருக்காகத் தொடர்ந்து பெய்யும் மழையைப் போன்று தங்கள் செயல்களைச் செய்து கொண்டே இருக்கிறார்கள் ....
மனங்களையும் வளங்களையும் சுரண்டி மண் மேடாக்காதீர்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------------
One tsunami and an earthquake should come targeting the offices of corrupted politicians, officers and insensitive public servants to make the 'Clean India' mission a reality!
feeling thoughtful.
-----------------------------------------------------------------------------------------------------------------------
Heard....In a dining table outside.......
A lady having her coffee, a guy comes with a coffee cup, and takes a seat opposite to her!
Guy starts the conversation....
Guy: so how r u?
Lady: good, how about u?
Oh yeah, I'm fine, if not for these ladies things would be better!😝😝😝
Oh what did the girls do?😳
Hmm...u girls should remain home, girls are ultimate trouble you see ...😁😁😁
Mm...what about your mom?
Guy retorts Immediately..she is an exception !!
Oh how about your sisters?
Mmmm they are okay 😁😒
How about your wife and your daughter?
Mmmmm...no comment! 😥😁
Scared to comment? 😉
Ok, ladies are ladies....I'll go😳😁😁
Guys are guys, unable to fix problems back home and trying to be a reformer outside, u have no bones even to comment about ur wife, then don't try your nerves outside 😜😜


‪‎நாடோடிக்_காற்று‬

தொந்தரவின்றி
தொலைந்துவிட
தொலைதூரம் சென்றாலும்
தொடர்ந்தே வரும்
மனதின் சுமையில்
அலைகிறது என் எண்ணங்கள்
உன் நினைவுகளில் -
ஒரு
நாடோடிக் காற்றைப் போல்
இந்த வானவீதியின் வழியே!

கீச்சுக்கள்!

அன்பு செலுத்துபவரை கண்டிக்க "வஞ்சப்புகழ்ச்சி அணியின்" துணையில் வார்த்தைகளைக் கோர்க்கத் தேவையில்லை!
உரிமையுடன் வெளிப்படையாய் கண்டிக்கும் ஓரிரண்டு வார்த்தைகளே போதும்,வலிக்கச் செய்யவும், வழி நடத்தவும்!
‪#‎அன்பே_வலிமை‬
-------------------------------------------------------------------------------------------------------
The world listens to you only when you succeed, if you succeed, it's an inspiration for them and if you fail, that's your stigma! Either which way nobody cares! Your aspiration instigates motivation and nothing else! 👍
-------------------------------------------------------------------------------------------------------------- 
கட்டிடம் எழுப்ப முதலில் வைக்கப்படும் கல் அஸ்திவாரமாகிறது, வாழ்க்கையிலோ கடைசியாக பிறக்கும் பிள்ளையே சுமைதாங்கியாகிறது!
சிறு கல்லின் மீதே பெருஞ் சுமை ஏற்றப்படுகிறது! 


--------------------------------------------------------------------------------------------------------------
Problems in life are blessings in disguise, they show us the real ones who cares despite their situations!
------------------------------------------------------------------------------------------------------------
As a daughter I never wished my father neither on his birthday nor on his wedding anniversary, for the simple reason, I had never known those dates. My dad is not with me today even if I intend to wish him on a Father's Day, but I think that I always made him happy and proud for what I stood for until his last days!
He was the only man who entrusted ultimate trust and confidence in me and in my abilities and who had seen my heart and cared for my feelings!
Life is short, share your love this moment as the moment passed will never come again. Respect and homage to all those who cares!
------------------------------------------------------------------------------------------------------------------
Money will get you anything but it will never teach you to be contended and to be happy, those are feelings within you to instigate and up to you to decide!
----------------------------------------------------------------------------------------------------------------
பொறுக்கிகளும் ரௌடிகளும் படிக்காதவர்களாய், வெளித் தோற்றத்தில் அழுக்கானவர்களாய் மட்டுமே திரிய வேண்டும் என்ற விதியில்லை, அவர்கள் படித்தவர்களாய், நாகரீக உடையில் கம்பீரமாய் வளைய வருபவர்களாகவும் இருக்கலாம்! 
------------------------------------------------------------------------------------------------------------------
சீனாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாட்டுக்கறி ஏற்றுமதிக்காக மோடி கையெழுத்திட்டார் - செய்தி
கொல்வது நாமாய் இருந்தாலும், சாப்பிடுவது சீனர்களாய் இருந்தால் அது பசுவதை இல்லை! கொன்னா பாவம், தின்னா போச்சு! 
-------------------------------------------------------------------------------------------------------------
நீதி கிடைக்க வேண்டுமென்றால் நிதி இருக்க வேண்டும்!!!!
--------------------------------------------------------------------------------------------------------------
சிலரை நம்பி சிலதை இழந்து, சில இடங்களில் ஏமாந்தவர் வேதனைப்படுவர், சிலதை ஏமாற்றிப் பெற்றாலும், சில இடங்களில் மனசாட்சி உறுத்தலில் ஏமாற்றியவர் வேதனைப்படுவர்!
ஏமாற்றுபவரும் ஏமாறுபவரும் கொஞ்சமும் வருத்தமே படாமல் கடந்து போகும் ஒரு நிகழ்வு உண்டு இந்திய அரசியலில் எது தெரியுமா?
‪#‎தேர்தல்‬ ‪#‎ஒட்டு‬ ‪#‎வாக்குறுதி‬  
----------------------------------------------------------------------------------------------------------------------

 

சுயம் தொலைத்தபின்பு






இருவருக்கான காதல் என்பது
ஒருவரின் அதீத அன்பினாலும்
இருவருக்கான உறவு என்பது
ஒருவரின் அதீத சகிப்புத்தன்மையாலும்
இருவருக்கான நட்பு என்பது
ஒருவரின் அதீத கருணையாலுமென
யாரோ ஒருவரின் சுயம் தொலைத்தபின்புதான்
அவையனைத்தும் நீடித்து நிற்கிறது / வாழ்கிறது!

உலகச்_சுற்றுசூழல்_தினம்







இன்று #உலகச்_சுற்றுசூழல்_தினம், இன்று மட்டும் சுற்றுப்புறத்தை ஒருமுறை உற்றுப் பார்த்துக் கொள்ளுங்கள்,

1. நேற்று நீங்கள் சுவாசித்த காற்றுக் கொஞ்சம் சுருங்கி இருக்கிறது, நதிகள் கொஞ்சம் வறண்டிருக்கிறது,

2. மரத்தின் நிழல் என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது, பாரம்பரிய உணவுப் பழக்கத்துக்கான சமையல் என்பது சோம்பலின் காரணமாய் முடங்கிக் கிடக்கிறது,

3. துரித உணவு வகைகளுக்கு வயிறு அடிமைப் பட்டுக் கொண்டிருக்கிறது,

4.வெளியே சென்று விளையாடாமல் பிள்ளைகள் தொலைக்காட்சியில், கணினி விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறார்கள்,

5.பேசக்கூட நேரம் கிடைக்காமல், பெரியவர்களும் பெண்களும் தொலைக்காட்சித் தொடர்களில் பிழிய பிழிய அழுது மூழ்கிக் கிடக்கிறார்கள்,

6. 102, 3, 4 டிகிரி கணக்கில் வெயில் ஏறி கொளுத்தித் தீர்க்கும் வேளையில், தண்ணீர் இல்லாமல் பறவைகளும் மிருகங்களும் வாடினாலும், டாஸ்மாக் கடையில் "தண்ணியிலே" குடிமகன்கள் மூழ்கிக் கிடக்கிறார்கள் ,

7. கடைக்குச் சென்று பொருட்களை வாங்குவதற்கு, உணவு உண்பதற்கு, தண்ணீர் குடிப்பதற்கு, குழந்தைகள் விளையாடுவதற்கு என்று எதிலும் பிளாஸ்டிக் நிறைந்து கிடக்கிறது,

8. மணக்க மணக்க மசாலா அரைத்த காலம் போய், ரசாயனக் கலப்பில் விற்கும் மசாலாக்களை வாங்கி உணவில் விஷம் சேர்த்துக் கொண்டிருக்கிறோம்,

9. வெளிநாட்டில் பவ்வியமாய்க் குப்பைகளைக் குப்பைக் கூடைத் தேடி வீசி, இந்தியா வந்ததும் கொஞ்சமும் யோசிக்காமல் குப்பைகளைக் கைக்கெட்டும் இடத்தில் வீசி, எச்சில் துப்பி, வெளிநாட்டின் புகழ் பேசிப் போற்றுக்கிறோம்.......

10. எத்தனை இருக்கிறது சொல்ல .....?

ஒன்று மட்டும் நிச்சயம், நாளை நிற்க நிழல் நில்லாமல், குடிக்க நீர் இல்லாமல், சுவாசிக்கக் காற்று இல்லாமல், உணவு சங்கிலியின் இயக்கம் இல்லாமல், நீங்கள் சேர்த்து வைக்கும் சொத்தையும் சுகத்தையும் வைத்துக் கொண்டு உங்கள் வருங்காலச் சந்ததி ஓர் ஆணியைக் கூடப் பிடுங்க முடியாது
முடிந்தால் இந்தக் காற்றையும், நீரையும் நிலத்தையும் இயற்கையையும் வாழ வைத்துச் செல்லுங்கள், அது நம் தலைமுறையை வாழ வைக்கும்!
 
June 5th 

கீச்சுக்கள்!

மனசு பாரமா இருந்தா சில தீர்ப்புக்களை வாசிச்சா போதும்!
வாய் விட்டு சிரிச்சா...ம்ம்ம்....ஒன்னும் ஆகாது, அடுத்த தேர்தல் வந்தா கூட!

-----------------------------------------------------------------------------------------------------
எந்த நாடாய் இருப்பினும், காதலர்களுக்கிடையே துணையாய் வந்து சிக்கிக்கொள்ளும் தோழர் தோழியரின் பாடு திண்டாட்டம் தான்! 
---------------------------------------------------------------------------------------------------------
ஞானம் என்பது பெரும்பாலும் எல்லாவற்றையும் இழந்தப்பின் பெறுவது!!!
-----------------------------------------------------------------------------------------------------------------
வருவது எல்லாம் தருவது இல்லை
தருவதை எல்லாம் நாம் பெறுவதும் இல்லை
வாழ்க்கையில்!
-----------------------------------------------------------------------------------------------------------------

 
திருடன் கையில் கொடுத்த சாவியைப் போல, நம்பிக்கையின்றி வாழும் நூறு வருடங்களை விட, பூரண அன்பில், முழு நம்பிக்கையுடன் வாழ்ந்து மரணிக்கும் அந்த ஒருநாள் போதும்!

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? அன்பின் நோக்கம் அன்பேயன்றி வேறு உண்டோ?

-------------------------------------------------------------------------------------------------------------- 
பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டுக் குளிர்பானங்களைக் குடிப்பதால் வருமானம் எல்லாம் வெளிநாட்டுக்குப் போகிறது, இளநீர் போன்ற உள்நாட்டுப் பானங்களைக் குடியுங்கள், நம் நாட்டுக்கு வருமானம் வரும் என்றும் மேலும் பல்வேறு பொருட்களைப் பட்டியலிட்டு இதெல்லாம் பிரதமர் மோடி சொல்கிறார் என்று வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்திருக்கிறது,
இதைச் சொல்வது பிரதமர் என்றால், வெளிநாட்டு வணிகர்களை "மேக் இன் இந்தியா" என்று நாடு நாடாய்ச் சுற்றி வா வா என்று அழைப்பது எதற்கு, அவசர நில கையகப்படுத்தும் சட்டம் எதற்கு???
புள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுறதுன்னு இதைத்தான் சொல்லுவாங்க பா ஜ க மார்க்கெட்டிங் ஆபீசர்ஸ்!
feeling crazy.
--------------------------------------------------------------------------------------------------------------------
நம்பிக்கை என்பது உங்கள் கையைப் போன்று, அது உங்களிடம்தான் இருக்கிறது, ஒருபோதும் அதை மற்றவர்களிடம் தேடாதீர்கள்!  
--------------------------------------------------------------------------------------------------------------------

காலையில் 6 மணிக்கே ஆரம்பித்துவிட்டது தி மு க வின் கொள்கை பரப்பு பாடல்கள் மற்றும் ஒட்டு சேகரிப்புக்கானப் பாடல்கள், ஒவ்வொரு கட்சியும் லௌ ட் ஸ்பீக்கரில் செவிப்பாறைகள் கிழியும் அளவுக்கு இரவு நெடு நேரமும் விடியலிலும் இப்படி சித்திரவதை செய்யும் தொண்டர் படை வைத்திருந்தால், உங்களுக்கு அப்புறம் ஒட்டு?
என்னப்பா இப்படி பண்றீங்கலேப்பா ?
feeling sad.
-----------------------------------------------------------------------------------------------------------------
வரமெனப் பெண் குழந்தைகள் பலருக்கு வாய்க்கையில், சிலருக்கு அவர் தம் வாழ்க்கையின் பாவக் கணக்கை நேர் செய்யவே, தேவதையாய் பெண் குழந்தைகளைக் காலம் பரிசளிக்கும்!
அதீதமான அன்பைத் தொடங்கி வைத்து, ‪#‎காலம்‬ சில கணக்குகளைக் கச்சிதமாய் நேர் செய்யும்!
------------------------------------------------------------------------------------------------------------------
 

criticism‬

எதை எழுதுகிறாளோ அதுவாகவே
ஆகிறாள் பெண்
எதை எழுதினாலும் அவனாகவே
இருக்கிறான் ஆண்
உலகத்தின் பார்வையில்!
‪#‎criticism‬

#மகன் #மகள்



உடன்பிறந்தவளோடு சிணுங்கி

சண்டையிட்டாலும் அவளுக்காய்
பரிந்து பேசுவான்,
பிடிவாதம் காட்டிக்
குறும்பு செய்யும் நேரத்திலும் - யாரும்
காணா அன்னையின் கண்ணீரை
கண்டு கொள்ளுவான்,
வார்த்தைகள் இன்றிக் கேள்விகள் இன்றி
அம்மாவின் கண்ணீர்த் துடைத்து
அணைத்துக் கொள்ளுவான்,
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் நேரத்திலும்
அலுவல் முடிந்து அருகே வரும் அம்மா
சாப்பிட்டாளா என்று உறுதி செய்வான்,
அவள் உண்ணும் வரை உறக்கம் தவிர்ப்பான்,
பேசித் திரியும் பட்டாம்பூச்சியாய் மகள்கள்
வாழ்க்கையின் சோலையில் மகரந்தம்
தூவும் தேவதைகள் என்றால்,
அமைதியாய் அரவணைத்துக் கொள்ளும்
மகன்கள் கடவுளர்கள் அன்றோ!

#மகன் #மகள்

கீச்சுக்கள்!

இறக்கும்போது ஊற்றும் பாலைக்காட்டிலும்
இருக்கும்போதே தாகம் தீர்க்கும் நீர் சிறந்தது,
தேவைப்படும்போது தரப்படாத அல்லது பெறப்படாத எதுவும்
போற்றப்படுவது இல்லை !
feeling thoughtful.
எந்த ஒரு முயற்சியும் அடியோடு குலைந்து போகிறது சில மனிதர்களாலும் அவர்தம் வார்த்தைகளாலும்
இருப்பினும் பூவியீர்ப்பின் விசையைத் தாண்டியே சாத்தியப்படும் நிலவிற்கான பயணம்!
The destiny can be moon only when you break the earth's gravitational barriers amidst negative people and words!


--------------------------------------------------------------------------------------
நித்திரையில் மூழ்கும் நேரம்
சித்திரையை வரவேற்க
வந்தது கோடை மழை,
பெரும் கொடையாய் வாசலில்!
மழையெனும் கவிதையுடன்
மலரட்டும் புத்தாண்டு அனைவருக்கும்!
------------------------------------------------------------------------------------------------------------------


தன் நிலத்தில் உழுது ஊருக்கு உணவு தரும் சிறு விவசாய முதலாளியிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி, நாடு நாடாய் சென்று நிலம் இருக்கிறது, வளம் இருக்கிறது, குப்பைக் கொட்ட இந்திய நாடு இருக்கிறது, நிலத்தைப் பிடுங்கி நீரை உறிஞ்சி, மொழியை நசுக்கி, மதத்தை வளர்த்து, தண்ணீருக்காக அடித்துக் கொண்டு, ஏற்கனவே பராரியாய் ஆகிக்கொண்டிருக்கும் மலிவானக் கூலிகள் இருக்கின்றனர் என்று கொஞ்சம் கொஞ்சமாய் நாட்டைக் குத்தகைக்கு விட்டுக் கொண்டிருக்கும் அரசை விட்டு விட்டு,
சாதி மறுத்து, கடவுள் மறுத்து, சம்பிரதாயங்கள் மறுத்து, பெண்களுக்குக் குரல் கொடுத்து என்று முதிய வயதிலும் மூத்திரப் பையைச் சுமந்து கொண்டு சேவை செய்த ஒரு பெரியவரின் படத்தில் மூத்திரம் அடிக்கத்தான் உங்களுக்குத் துப்பு இருக்கிறது..........
சேவை செய்த ஈ.வே.ரா என்ற பெரியாரை விட, சேவை செய்து கொண்டிருக்கும் எண்ணற்ற பெரியவர்களை விட, உங்களுக்குப் பெண்ணையும் பொன்னையும் பறிக்கும் சாமியார்களையும், தொட்டால் தீட்டு என்று ஒதுங்கிச் செல்லும் பெரியவாளையும் தானே பிடிக்கும் அப்ரெண்டீஸ்களா!
feeling annoyed.
----------------------------------------------------------------------------------------------------------
 
ஐயமின்றிக் கொள்ளும் ஓர் அதித நம்பிக்கையே காதல்!
------------------------------------------------------------------------------------------------------------
மறுக்க முடியாத ஆதாரத்துடன் கூடிய உண்மையென்று காலமும் சூழ்நிலையும் எத்தனை முறை உணர்த்தினாலும், சில உண்மைகள் பொய்யாய் இருக்க வேண்டுமென விரும்புகிறது மனம்!
‪#‎உண்மைகள்‬ உவப்பாய் இருப்பதில்லை பல நேரங்களில்!
-----------------------------------------------------------------------------------------------------------
தெரியாதென்பது தொடக்கம்
முயற்சிக்க நினைப்பது ஆக்கம்
தொடங்கி முயல்வது முன்னேற்றம்
தோல்வியிலும் துவளாமல் இருப்பது ஊக்கம்
முடியாது என்று முடங்கிப் போவதே (முடிவு) முற்றும்!
-----------------------------------------------------------------------------------------------------------------
உலகும் சுற்றும் வாலிபன், அதே (கேமரா) கண்கள்! - ‪#‎பிரதமர்‬
ஊர் ஊரா போய் காமெராவை மட்டும் கரெக்டா கண்டுபிடிச்சிடுறார்! 
------------------------------------------------------------------------------------------------------------
பிரதமரின் அடுத்த நேர்காணலை விரைவில் எடுக்கப் போவது பேஷன் டிவி தான்...

‪#‎பிரபலம்‬
-----------------------------------------------------------------------------------------------------------------------

தருவதற்கும், மறுப்பதற்கும் உள்ள மனதின் இடைவெளியே, ஒன்றை செய்வதற்கும் , சோம்பி, சோர்ந்து செய்யாமல் தவிர்ப்பதற்கும் இடையேயும் உள்ளது!
எல்லோருக்கும் இருப்பது 24 மணி நேரம்தான், மனங்கள் மட்டுமே குரங்கின் வகைகள்
----------------------------------------------------------------------------------------------------------------
எளிதாய் கிடைத்துவிடும் எதுவும் மலிவாய்த் தெரிகிறது!
-----------------------------------------------------------------------------------------------------------------
 
 


 

யோகப் பயிற்சி


யோகப் பயிற்சி நாளும் செய்தால் உங்கள் உடல் வலிமை பெரும், நிறைய யோகப் பயிற்சிகள் இருந்தாலும், அதில் ஓர் இரண்டை மட்டும் இங்கே காண்போம், உடலுக்கு மட்டுமல்ல இங்கே குறிப்பிட்டுள்ள பயிற்சிகள் தொடரும்போது உங்கள் வாழ்க்கையும் வளம் பெரும், மேற்கொண்டு படியுங்கள், பின்குறிப்பை கவனமாய்ப் படியுங்கள்
புஜங்காசனா
------------------------
தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து, சற்றே தோள்பட்டையை உயர்த்தி, கரங்களைத் தரையில் அழுத்தி, தலையை நிமிர்த்திப் பாருங்கள்
இந்தப் பயிற்சியில் உங்கள் வயிற்றுப் பகுதி வலிமையாகும், உங்கள் முதுகும் தோள்பட்டையும் வலிமையாகும், நெஞ்சுப்பகுதி விரியும், ரத்த ஓட்டம் சீராகும்
இதை ஆங்கிலத்தில் கோப்ரா போஸ் என்பார்கள், இதைப்பற்றிக் கோப்ரா என்ன நினைக்கிறது என்பது இங்கு முக்கியமில்லை
நீங்கள் அதிகம் சிந்திக்கும்முன் அடுத்த யோக முறையைப் பார்ப்போம்
உட்டனாசனா மற்றும் அர்த்த உட்டனாசனா...
------------------------------------------------------------------------------
நேரே நின்று, வயிற்றை உள்ளிழுத்து (நீங்கள் போட்டோவுக்குப் போஸ் கொடுக்கும்போது சட்டென்று தொப்பைக்கு ஒன் ஸ்டே பேக் என்று செய்வீர்களே....ம்ம் ....அதே அதேதான்) அப்படியே முன்னே குனியுங்கள், முழுதாய் முழங் காலை மடிக்காமல், எவ்வளவு குனிய முடியுமோ அவ்வளவு குனிந்து, முட்டிவரை, கணுக்கால் வரை, அல்லது பாதம் வரை வந்து தரைதொடலாம்.....
இதுவும் உங்கள் முதுகு வயிற்றுப் பகுதியை உறுதிப் படுத்தும், உங்கள் உடலின் வளையும் தன்மையை அதிகரிக்கும்.
உங்களுக்குக் கழுத்து வலி இருந்தால் இந்த இரண்டு பயிற்சிகளைச் செய்யும்போது கவனம் தேவை.....இந்தப் பயிற்சியைக் குழந்தைகள் பெற்றோரிடம் செய்தால் அவர்களுக்கு நிறைய ஆசிகளும் அன்பும் கிடைக்கும், பூரிப்பில் பெற்றோர்களிடம் இருந்து அன்பில் தோய்ந்தக் கவிதைகளும், நிலைத்தகவல்களும் முகபுத்தகத்திற்குக் கிடைக்கும், கணவன்மார்கள் மனைவியிடம் செய்தால், காலமெல்லாம் காதல் வாழ்க என்று உங்கள் மைண்ட் வாய்சில் ஒரு ரீவைண்ட் ராகம் ஓடிக்கொண்டே இருக்கும்.....
பின்குறிப்பு:
---------------------
வளம் என்பது எத்தனை தூரம் குனிந்தால் இன்னோவா கிடைக்கும், ஆசிர்வதிக்கப்பட்ட பதவிக் கிடைக்கும் என்றெல்லாம் நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கம்பெனிப் பொறுப்பேற்காது, இந்த வயதிலும் விடாது யோகப் பயிற்சியைச் செய்கின்ற இவர்களின் ஆர்வம் உங்களுக்கு ஊக்கமாய் அமையவே இந்தப் படங்கள் இணையத்திலிருந்து
feeling crazy.

வாழ்க்கை

பிறப்பும் நம் விருப்பத்திலில்லை
இறப்பையும் நாம் விரும்பவதில்லை
இடைப்பட்ட நாட்களும் கூட
நம் வசத்திலில்லை,
எனினும்
அன்பை விதைத்து,
எதிர்ப்பார்ப்பு துறந்து,
கடக்கும் வாழ்க்கையில்
எப்போதும் ஏமாற்றமில்லை!

Thursday 6 August 2015

காதல் போயின் வாழ்தல்!




நண்பன் ஒருவன், ஒரு பெண் கடையில் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில், அவளின் காதலனால் கொல்லப்பட்ட வீடியோ பதிவை அனுப்பி வைக்க, தெரியாமல் அதைப் பார்த்துத் தொலைத்து, மனம் கசந்துபோனது.

 காதல் என்றில்லாமல், பல திருமண உறவுகளும் கூட இந்த மனநிலையைத்தான் கொண்டிருக்கிறது, தன்னுடன் வாழ வராத கணவனைக் குடும்பத்துடன் எரித்துக் கொன்ற பெண், தன்னுடன் வாழ வராத மனைவியைக் குழந்தையுடன் கொலை செய்த ஆண், காதலிக்கும் மகளைக் கொலை செய்த தந்தை, காதலுக்காகப் பெற்றோரை கொலை செய்த பிள்ளைகள் என்று செய்திகள் வந்த வண்ணம்தான் உள்ளன

 இந்தக் காதல் என்றால் என்ன? ஒருவரை பிடித்திருத்தல் என்பது என்ன? அவர் நலமுடன் வாழ நினைப்பது, அதுதானே காதல், அன்பு எல்லாம்?

 இந்தப் பிள்ளைகள் எல்லாம் ஏன் தோல்வியில் துவண்டு போகிறார்கள்? ஒருவர் ஏமாற்றினால், பிடிக்கவில்லை என்று அறிந்தால் ஏன் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், ஏன் ஓர் உயிரை சிதைக்கும் அளவுக்குத் துணிகிறார்கள்? எனக்குக் கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனநிலை.

இங்கே காதலும் உறவுகளும் மனதுடன் சம்பந்தப்பட்டது, மனதில் ஏற்பட்ட பிரிவை, சரி செய்ய முடியா விட்டால், அதை ஏற்றுக் கொண்டு சரி செய்வதோ பிரிவதோ குடும்பச் சூழ்நிலையைப் பொறுத்து அமைய வேண்டும்,

 இந்திய திருமணப் பந்தங்கள், குழந்தைகள் என்ற ஆணி வேரினால் கட்டப்பட்டிருக்கிறது, கருத்து வேறுபாடு ஏற்படினும், மனமொத்து வாழும் தம்பதிகளை விட, குழந்தைகளின் வருங்காலம் கருதிச் சேர்ந்து வாழ்பவர்களே அதிகம், குழந்தைகள் ஒரு காரணம் என்றால், சமூகம், பணம், செல்வாக்கு,பெற்றோர், உறவினர்கள், மிரட்டல், மரியாதை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல் என்று பல காரணங்களாலும் உறவு நீடிக்கிறது ...எந்த குழந்தைகளுக்காக இந்த உறவு காக்கப்படுகிறதோ, உண்மையில் பல வேளைகளில், இப்படிச் சகித்துக்கொண்டு வேறுபாட்டுடன் வாழும் தம்பதிகளின் குழந்தைகளின் மனநலம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

 தொலைக்காட்சி, திரைப்படம், இணையம் என்று குழந்தைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன, ஆனால் அவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைத்தான் நாம் தீர்மானிக்க வேண்டி இருக்கிறது....

 காதல் ஒரு கெட்டவார்த்தை என்ற ரீதியில் குழந்தைகளுக்குப் போதித்து விட்டு, குடும்பத்துடன் காதல் சார்ந்த திரைப்படங்களுக்கே குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பிப்பது, பெரியவர்களுக்கு மரியாதையைத் தர வேண்டும் என்று போதித்து விட்டு, வீட்டில் இருக்கும் பெரியவர்களைப் பெருசு , கிழவி என்ற ரீதியில் பேசுவது, உறவுகளை மதிக்க வேண்டும் என்று போதித்து விட்டு, வீட்டுத் தொலைக்காட்சியில் எல்லா உறவுகளும் சதி செய்யும் என்ற ரீதியில் மனம் சிதைக்கும் தொலைகாட்சித் தொடர்களைக் குழந்தைகளுடன் பார்ப்பது.............போதனைகளு
ம் நடத்தையும் வேறு வேறு என்றால், குழந்தைகளின் மனநலம் குற்றவாளியின் மனநலம் போல் ஆகும். விதையைப் பொறுத்தே வளர்ச்சி !

 கொலைகளுக்கான தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருக்கலாம், ஆனால் இவற்றிக்கான அடிப்படைக் காரணம், எதையும் தாங்கிக் கொள்ள முடியாத மனது,

 காதல் காதல் காதல், காதல் போயின் சாதல் சாதல் சாதல் என்று புனையப்பட்ட நம் சமூகம். ஒருவர் ஏமாற்றப்பட்டால், ஏமாற்றியவரைக் கொல்லுதல் என்று பொருள் கொண்டதோ?

 விதைக்கும் நிலம் மலடானால், அதில் மாற்று யோசிக்கும் சமூகம், காதல் வளர்த்த மனம் ஏமாற்றபட்டால், மாற்றி மனதைத் தேற்ற ஏன் கற்றுக் கொடுக்கத் தயங்குகிறது? திருமணம் என்றாலும் கூட எதற்காகவோ சகித்துக்கொள்ளும் நிலை இருந்தாலும் , எந்தக் கட்டாயமும் இல்லாத, உள்ளார்ந்த அன்பினால் நம்பிக்கையினால் அமைந்த காதல் தோற்றுப் போகுமென்றால், ஏதோ ஒரு புறம் அந்த அன்புப் பொய்த்துப் போனதென்றுதானே அர்த்தம்? பொய்த்துப் போன ஒன்றை வலுகாட்டயமாகத் திணிப்பதால் அது மீண்டும் காதல் ஆகுமா ? மீண்டும் உறவு மலருமா?

 இருவர் காதலித்தால் தான் அது காதல், அமரக்காவியம் என்றாலும் தோற்றுப்போயின் அமைதியாய் இருக்க வேண்டும், எத்தனையோ இருக்கிறது வாழ்க்கையில், பெற்றவர்கள், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது, குறைந்தபட்ச அன்பும் இல்லாத வறியவர்கள், பெற்றவர்கள் இல்லாத பிள்ளைகள் இருக்கிறார்கள் ...நம்மைச் சுற்றி எத்தனையோ உயிர்கள் இருக்கிறது, , ஏமாற்றத்தைச் சகித்துக்கொண்டு எத்தனையோ மனிதர்கள் வாழ்கிறார்கள், வீடில்லாமல் உணவில்லாமல் சரியான ஆடையில்லாமல் வீதியில் பிச்சைக் கேட்கும் மனிதர்களும் , குப்பையில் இருப்பதை எடுத்து கஷ்ட ஜீவனம் செய்யும் உயிர்களும் கூட வாழத்தான் நினைக்கிறார்கள், யாரையும் கொன்று, தானும் சாக விரும்பவில்லை......

 அது வேறு இது வேறு என்று நினைக்கலாம்
 உண்மைதான், உடலால் வாழ்தல் வேறு உள்ளத்தால் வாழ்தல் வேறு, உண்மையான காதல் என்றும் பிரியாது, காதலுக்குக் காரணமே இருக்கக் கூடாது, இருந்தாலும் ஒத்தக் கருத்தில்லாமல் காதலித்தாலும் ஒருவருக்கு ஒருவர் அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு இருந்துவிட்டால் அதில் பிரிவு வருவதில்லை!

 அட இந்தக் காதலைச் சுற்றி என்னதான் நிகழ்கிறது?
 அதீதமாய்க் காதலிக்கும் யாரோ ஒருவர் தங்களை மாற்றிக்கொள்வதில் தான் பெரும்பாலும் காதல் வாழ்கிறது, இப்படி எதுவுமே இல்லாமல், காரணமாய் வரும் காதல் காரணம் தீர்ந்து போனதும் நீர்த்துப் போகும் அல்லது முறிந்துப் போகும்! காரணம் பணம் என்றால், பணம் இல்லாவிட்டால் காதல் மரித்துப்போகும், காரணம் காமம் என்றால், தீர்ந்ததும் இதுவும் முறிந்துப் போகும், திரைப்படம் போலவே, ஒரு பாடலில் வாழ்க்கை மாறிவிடுவது போல், திருடன் திருந்தி நல்லவன் ஆவது போல், திரையில் மயங்கி, ஒருவரை திருத்திவிடலாம் என்று காதலித்தாலும் அது முறிந்து விடும், இப்படியே பல உண்டு, யாரையும் காதலிக்க எதுவும் காரணமாய் இருக்கக் கூடாது, ஆனால் கண்மூடித்தனமான கற்பனையோ நம்பிக்கையோ காதல் ஆகாது!

 சரி இந்தக் காதல் உடைந்தால் என்ன செய்ய வேண்டும்?
 எப்படி இருந்தாலும் தீர்க்க முடியாத பிரிவு என்று வந்துவிட்டால், அது உடைந்த கண்ணடித்தான் , கண்ணாடியைச் சிதைப்பதோ இல்லை ஓட்ட வைப்பதோ இல்லை வதைப்பதோ வேண்டாத வேலை!

 இழந்ததற்கு நீதி வேண்டும் என்று நினைத்தால் அதற்கான வழிமுறைகளைத் தேட வேண்டும், உடல் தேவைக்காக ஒருவன் ஒருத்தியை ஏமாற்றினால், பணத்திற்காக ஒருத்தி ஒருவனை ஏமாற்றினால் சட்டத்தை நாட வேண்டும் (சமூகமும் பத்திரிக்கைகளும் பெண்ணைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் போக்கை மாற்றிக் கொள்ளும் நிலையும் வர வேண்டும்) அதை விடுத்து ஆசிட் வீச்சும் கொலைகளும் இழந்தக் காதலை நரகக்தில் கூடச் சேர்க்காது!

 ஓர் ஆண் பெண்ணைக் காதலிக்கிறான், அப்பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்கிறான், ஒரு பெண் ஆணைக் காதலிக்கிறாள், அவன் குடும்பத்தையே திருமணம் செய்து கொள்கிறாள்,அவனுக்காகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள், முன்னதில் ஆண் கொடுத்து வைத்தவன், பின்னதில் பெண் நிர்ப்பந்திக்கபட்டவள், பெண்ணுக்காக ஆண் மாறினால் அந்த ஆண் அவளை அதீதமாய்க் காதலிக்கிறான் என்று அறிக, ஆணும் பெண்ணும் பரஸ்பரம் புரிந்துக்கொண்டு அவரவர் சுயத்தை இழக்காமல், காலத்தின் சூழலின் பொருட்டு ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்கிறார்கள் என்றால் அங்கே காதல் கடைசி வரை வாழ்கிறது தெரிந்துக்கொள், என்று காதலைப் பற்றி என் தந்தை எடுத்துக் கூறியது நினைவுக்கு வருகிறது , எப்படி இருந்தாலும் வாழ்வதுதானே காதல்?

 சரியான புரிதலில் சரியான மனப்பக்குவத்தில் இருக்கும் பருவத்தில் வரும் காதலே நீடித்து நிற்கும், அடுத்தவரின் தயவில் வாழ்க்கையை நடத்தும் நிலையில், கல்வியில் கருத்தைப் பதிக்க வேண்டிய வயதில் வரும் காதல் தேவையில்லாதது, அப்படியே வரினும் , சுயமாய் நிற்கும் வரை, காதலாய் அது நீடித்திருக்குமானால் பெற்றவர்கள் சரியான வழிக்காட்டி ஆதரிக்கலாம்.

 காதல் காதல் காதல் போயின் சாதல் சாதல் பிறகு கொல்லுதல், ஆசிட் வீசுதல், வன்கொடுமை செய்தல், இகழ்தல் என்று இருக்கும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது, காதல் என்றால் அன்பு செய்தல் மட்டுமே, இந்த உண்மையான காதலைத் தெரிந்து கொள்ள நீங்கள் திரைப்படத்தை, புத்தகத்தை, அல்லது நாடகத்தை என்று எதையும் காண வேண்டாம், முதியோர் இல்லத்தைச் சென்று பாருங்கள், பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள், வேண்டாத ஒரு பொருளைப்போல் பெற்றவர்களை ஒத்துக்கி வைத்தாலும், “எங்கே இருந்தாலும் எம்புள்ளைங்க நல்லா இருக்கணும்” என்று சொல்லும் அந்தக் காதலில் காதலைக் கற்றுக்கொள்ளாமல் நீங்கள் வேறு எதில் காதலைக் கற்றுக்கொள்வீர்கள்?

 பெற்று வளர்த்து ஆளாக்கியப் பிறகு, இறுதிக் காலத்தில் நீங்கள் ஒதுக்கி வைக்கும்போது அவர்களுக்கு வராத அந்தக் கோபம், யாரோ ஒருவர் பெற்று ஆளாக்கிய பெண்ணிடம், சிறிதுகாலமே பழகி, பிறகு அவள் ஏமாற்றிவிட்டால் என்று கொல்வதற்கும், உங்களை இத்தனை நாள் ஆளாக்கிய பெற்றவர்களின் உணர்வுகளைக் கொஞ்சம் கூடப் புரிந்துக்கொள்ளாமல், சிறிதுக் காலமே பழகி உங்களை ஏமாற்றிய ஒருவருக்காக, உங்களை நீங்களே மாய்த்துக் கொள்வதற்கும் பெயர், காதலா?

 காதல் என்பது தாய்மை உணர்வு கொண்டு இருக்க வேண்டும், தந்தையின் அரவணைப்பு இருக்க வேண்டும், எல்லா உறவுகளின் உணர்வுகளின் சங்கமமாய் இருக்க வேண்டும், காதல் என்பது வாழ்தல், வாழ்தலுக்குக் காதல் அவசியம், காதல் போயினும் வாழ்தல் அவசியம்!! 
 
http://www.pratilipi.com/read?id=4946718139351040

Tuesday 4 August 2015

மாமழை

மழையில் நனைந்து
சன்னலோரம் ஒடுங்கும்
ஒரு பூனையாய்
காற்றில் சிதறிக்கிடக்கும்
குல்மொஹர் மரத்தின் பூக்களாய்
பாதையில் உதிர்ந்து நிறைந்து
மிதிபடும் இலைகளாய்
வெடித்த வெறுப்பில்
துவண்டுப் போய் இருக்கிறது உயிர்
எதையுமே கரைக்கவில்லை
ஆழிக்காற்றுடன் பெய்யும் இம்மழை ,
மாறாய் என்னுடனேயே கரைகிறது
இத்துயரத்தின் அந்திமப்பொழுதில் 
உற்ற ஒரு நண்பனைப்போல்,
இந்த மாமழை!

Monday 3 August 2015

விடிந்ததும் பார்க்கலாம்!

கடைக்கோடித் தமிழனுக்கும் "தண்ணிக்" கொடுக்கும் மாநிலம்
மீசை முளைக்காப்  பிள்ளைகளுக்கும் ஊற்றிக் கொடுக்கும் மாநிலம்

நித்தமும் போதையில், விபத்துக்களை நிகழ்த்துமொரு மாநிலம்
போதையில் குற்றங்ளை நிறைக்குமொரு மாநிலம்

காவலரெல்லாம் ஏவலராகச் சாரயக்கூடம் காத்திடும் மாநிலம்
குற்றங்களின் மூலக்காரணம் கொல்லாத மாநிலம்

தள்ளாடும் தலைமுறையில் வன்முறை வளர்க்கும் மாநிலம்
குடிமக்களின் குடும்பங்களை வறுமைக்குத் தள்ளிடும் மாநிலம்

 ஆளும் ராசாக்களின் தொந்திகள் செழிக்குமொரு மாநிலம்
 பாய்ந்த அருவிகளைக் கட்டிடங்களாக்கிய ஒரு மாநிலம்

 மழைநீரை வீணடிக்குமொரு மாநிலம்
 சொட்டுநீர்ப்  பாசனத்துக்கும் கையேந்தும் மாநிலம்

 காலையின் உழைப்பை மாலையில் உறிஞ்சுமொரு மாநிலம்
 உழைப்பைத் தகர்த்து இலவசங்களை வீசியெறியும் மாநிலம்

 நித்தமும் பள்ளிகள் மூடப்படும் மாநிலம்
 மரத்தடிப் பிள்ளையாரையும் பெயர்த்துவிட்டுச் சாராயச் சாம்ராஜ்யம்
 நிறுவுமொரு மாநிலம்

 இத்தனையும் இல்லை இல்லை
முத்தமிழ் வளர்த்ததேன் மாநிலம்
வந்தாரை வாழவைத்துப் போற்றியதென் மாநிலம்
என்று சொல்லத்தான் ஆசைப்படுகிறேன் மக்கழே
சுருதிக் கொஞ்சம் குறைந்துவிட்டது
விடிந்ததும் பார்க்கலாம் விடிந்துவிட்டதா என்று!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!