Monday 10 August 2015

தன் கையே தனக்குதவி, ரௌத்திரம் பழகு

மோடி வந்தாருன்னு ஊரெல்லாம் ஒரே களேபரம், வீட்டை விட்டு வண்டிய வெளியே ரோட்டுக்கு எடுக்கவே இருபது நிமிஷம் ஆச்சு, அப்புறம் தெருமுக்கில் வந்து நிக்க இன்னுமொரு இருபது நிமிஷம், லெப்ட் இண்டிகேட்டர் போட்டு வண்டிய மெயின் ரோட்டில் திருப்பும்போது இன்னும் பயங்கர டிராபிக் ஜாம், முன்னாடியும் போக முடியாம பின்னாடியும் போக முடியாம, அப்படியே ஹாண்ட் பிரேக் போட்டு வண்டிய நிறுத்தி, ஆபீசுக்கு போன் பண்ணி பேச ஆரம்பிச்சேன்....

இடது பக்கமா ஒரு போலீஸ் பூத், அப்படியே சில கடைகள், அந்தக் கடைகளுக்கும் என் காருக்கும் நடுவே வேகமா ஒரு அக்டிவா வண்டிப் போய் சரியா காருக்கு முன்னாடி வந்து நின்னுச்சு, டொம்முன்னு ஒரு சத்தம், கண்டிப்பா வண்டிய உரசிட்டுப் போறான், சரி போகட்டும்ன்னு அமைதியா பேசிட்டே முன்னாடி பார்த்தா வண்டி ஓட்டுறவன் ஒருத்தனும் பின்னாடி இருந்த ஒரு ஆளும் திரும்பி என்னைப் பார்த்து கைய நீட்டி என்னமோ திட்டினானுங்க....அடடா சும்மாதானே நின்னுட்டு இருக்கோம், இவன் எதுக்கு நம்ம பார்த்துத் திட்டுறான், அதோட எந்த வண்டியும் நகர்ற மாதிரி தெரியலை, சரி என்னனுதான் கேப்போம்ம்னு இறங்கி,
ஹலோ என்ன ப்ராப்லம்...ன்னு கேட்டேன், அதுக்கு அந்த ஆள் சொன்னது,
காரோட வீல் லெப்ட்டுல திரும்பி நிக்குது பாரு, என் காலை அந்த வீலில் இடிச்சுக்கிட்டேன்.......

ஹலோ, லெப்டுல இண்டிகேட்டர் போட்டு "நிக்குற" வண்டியிலே உள்ள வீலில் நீ மோதினதுக்கு, நீ உட்கார்ந்துகிட்டு இருக்குற வண்டிய ஒட்டுனவனைப் போய்க் கேளு, நிக்குற வண்டியில் இடிச்சதுக்கு நியாயமா நாந்தான் பேசணும், நீ பேசக் கூடாது, போய்கிட்டே இருன்னு சொன்னா ...அதுக்கப்புறம் அந்த ஆளு விஜயகாந்த் ஸ்டைலுல பொம்பளை புள்ளையாச்சேன்னு பாக்குறேன், அடிச்சிடுவேன் பார்த்துக்க ன்னு சொன்னதும், என்னமோ சிவ்வுன்னு மண்டை வரைக்கும் ஏறி,அப்புறம் ஸ்டார்ட் மியூசிக் தான்.........

உண்மையான சென்னை குடிமகளா நல்ல வார்த்தைகள் இன்னைக்குதான் வாயில் வந்தது.....ஆனா பார்த்துக்கங்க மக்களே சுத்தி இருக்குற மக்கள் எல்லாம் அவ்வளவு சுவாரசியமா வேடிக்கைப் பார்த்தாங்க, எவனாச்சும் ரொம்பச் சுவராசியமா இதை fb வரைக்கும் கூட எழுதலாம்.......

பேசினவன் நான் காரை விட்டு இறங்கி வருவேன்னும் நினைக்கல, ஜீன்ஸ் போட்ட பொண்ணு லோக்கலா பேசும்ன்னும் எதிர்பார்க்கல, அவனுக்குச் சரிக்குக் சமமா முஷ்டியை மடக்குவேன்னும் எதிர்பார்க்கல.....(இன்பாக்ட் நானே என்கிட்டே இருந்து இதை எதிர்ப்பார்க்கலை  ) ...போடங்க .......அப்படின்னு ஒரு கெட்டவார்த்தையைச் சொல்லி பொங்குன விதத்தில் அவனுங்க வண்டிய கிளப்பி ஓடிட்டாங்க ......

ஆனா நான் ரொம்ப எதிர்ப்பார்த்தேன், நிச்சயமா எல்லாரும் வேடிக்கை மட்டும்தான் பார்ப்பாங்கன்னு, முடிஞ்சா இந்நேரம் ஒருத்தன் இன்னைக்கு என்னமா சண்டை போட்டுச்சு ஒரு பொண்ணுன்னு அவன் ஸ்டேட்டஸ் மெசேஜ் போட்டு இருப்பான் .......

அவங்க ரெண்டு பேருக்கும் அம்பது வயசுக்கு மேல இருக்கும், பெரியவங்களை மரியாதை இல்லாம பேச வெச்சுட்டாங்க, அவங்க மரியாதை இல்லாம நடந்து ......அவங்க வீட்டில் உள்ள பொண்டாட்டி புள்ளைங்களையாவது அவங்க மதிச்சு நடந்துக்கட்டும்  

இதுவரைக்கும் இப்படிச் சின்னச் சின்ன அசம்பாவிதம் சந்திக்குற போதெல்லாம், என்னை மட்டுமே நம்பித்தான் நான் அதெல்லாம் சமாளிச்சு இருக்கேன் , அரிதா சில சமயங்களில் நண்பர்களின் துணையோடு ...
ஓடுற பஸ்ஸில் ஒருத்தன் ஒரு ஸ்கூல் குழந்தைகிட்டே சில்மிஷம் செஞ்சப்ப அவனைக் கேள்விகேட்டு துரத்தி இருக்கேன் , அப்பவும் சுத்தி இருந்த ஆண்கள் வேடிக்கைத்தான் பார்த்துகிட்டு இருந்தாங்க,

சில வேளைகளில் சில பெண்கள்தான் பெண்களோட உதவிக்கு வராங்க ஆனா பொதுவா சென்னையில் ஆண்கள் வேடிக்கை மட்டும்தான் பாக்குறாங்க, சில வேளைகளில் அங்கே போலி(ச்)சே இருந்தாலும் இதுதான் நிலை!
பொம்பள புள்ளையா இருந்தாலும் ஆம்புளப் புள்ளையா இருந்தாலும் இதைச் சொல்லியே வளருங்க, "தன் கையே தனக்குதவி, ரௌத்திரம் பழகு"

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!