Thursday 27 August 2015

அலையாடும் வாழ்க்கை

 
  நண்பனுடன் சிறிது நேரம் கதைப்பு
 தோழியுடன் நலம் விசாரிப்பு
 அவ்வபோது கண்டவர்களுடன் சிலாகிப்பு
 புன்னகையுடன் யாரோ சிலரிடம் ரசிப்பு
 இப்படியே முழுதாய் அரைநாள் முடிந்திருந்தது

 விரல்கள் ஒவ்வொன்றாய் எண்ணி
 முகம் கொள்ளாப் பூரிப்புடன் பேச எத்தனிக்கையில்
 வேறு ஒரு தொலைதூர அழைப்பு
 எல்லோரையும் அரவணைத்து
 பேசிக் கலந்து நீ முடிக்கும்போது
 என் விரல்களின் நுனிகளில் எஞ்சியிருந்த
 ஈரம் உலரவேயில்லை,
 எனக்கென நீ ஒதுக்கிய ஒருநாள் தொடங்கவுமில்லை,

 ஆயினும் - அந்தக் குறிஞ்சிப்பூ தினம் முடிந்து
 உன் பயணத்துக்கான பேருந்து காத்திருந்தது
 இன்று முழுக்க நீ காணாத என் விழிகளுக்குள்ளும்
 ஒரு கேள்வி தொக்கியிருந்தது,

 அந்தப் பேருந்தின் இந்தப் பயணத்தில்
 எப்போதும் நிரம்பியிருக்கும்
 உன் அலைபேசிக் கோப்பையை மீறி
 என் எந்த நினைவுகளை நீ எடுத்துச் செல்கிறாய்?
 என் நாட்குறிப்பில் வழக்கம்போல்
 உன் மௌனத்தையும் கைபேசியையும்
 நான் வரைந்துவைக்கிறேன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!