Thursday 31 October 2013

போரின்றி அமையாது!


வீசும் புயற்காற்றில்
போரிட்டு
கொண்டிருக்கிறது
மரம்

சில கிளைகள்
முறிகின்றன
சில விதைகள்
புதைகின்றன
முன்னமே 

விடியலில் 
சில பனித்துளிகள்
இலைகளை
நனைக்கின்றன
வேரின் தாகத்தை
தணிக்காமல் 

புயல் தோற்றால்
அமைதித் திரும்பும்
மரம் தோற்றால்
கூடுகளும் குஞ்சுகளும்
சிதறிப் போகும்

சில வேர்களின் பிடியில்
நிலைக் கொண்டு
ஆடிக்கொண்டிருக்கிறது
மரம்

 

கசடுகள்!



மறைக்கப்படும்
வன்மத்தை விட
தெறித்து விழும்
கோபம் மேல்!

சுனாமி


பெரும் அழுத்தம் தாங்காமல்
வெடித்துக் கிளம்பி, வாரிச் சுருட்டி
வடிகால் தேடிக் கொண்டது கடல்
சுனாமி!

மூளைச்சலவையும் அன்றாட வாழ்க்கையும்


பல்வேறு தளங்களில் சமூக அக்கறை அற்ற ஒரு பெருங்கூட்டம், சாதி சொல்லி, மதம் சொல்லி, விளையாட்டு திறன் காட்டி, காட்சி மாயை காட்டி அரசியல் தலைவர்கள் ஆகிறார்கள், ஏதோ ஒரு பொதுசேவகன் தப்பித் தவறி அரசியலுக்கு வந்துவிட்டால், இருக்கவே இருக்கிறார்கள் குண்டர்களும் தொண்டர்களும் முற்று புள்ளி வைக்க!

சமூகத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைக்கும் வரை, நீதி என்பது கொஞ்சம் கொஞ்சமாய் இரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும்! இங்கே நமக்கு இருக்கும் வழிகாட்டிகள் எப்படிப் பட்டவர்கள்?

இவர்களை எடுத்துக் கொள்வோம;

 1. நடிகர்கள் நடிக்க வேண்டும், விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் திறமையைக் காட்ட வேண்டும், ஒரு பொருளின் தரத்தைப் படித்து, உணர்ந்து தெரிந்து கொள்ள முடியாத கல்வித்தரத்தில், குறைகளை எதிர்த்து எளிதில் குரல் கொடுக்க முடியாத சமூகத்தில், உருவாக்கிய விஞ்ஞானியோ, உபயோகிக்கும் பாமரனோ கொடுக்க முடியாத உத்தரவாதத்தை எந்தப் பொருளுக்கும் இவர்கள் எப்படிக் கொடுக்கிறார்கள்?

2. பட்டா இல்லாத நிலங்களை வாங்கச் சொல்லுகிறார்கள், கரியமில வாயு நிறைந்த பானத்தைக் குடிக்கச் சொல்லுகிறார்கள், வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொண்டால் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்துப் பின்னே வருவார்கள் என்கிறார்கள்..............

3. கூவி கூவி விற்கும் நிலத்தில், ஏதோ ஒரு விவசாயியின் மறைந்திருக்கும் கண்ணீர் தெரிவதில்லை, நம் நீரை உறிஞ்சி, அதில் சந்ததி கொல்லும் விடம் கலந்து விற்பது தெரியவில்லை, நம் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்து ஆண்கள் பின்னே செல்பவர்களா என்ற சூடு உணர்ச்சிக் கூட இல்லை, பணத்துக்காக ஒரு கூட்டமும், அறியாமையில், ஏதோ ஓர் இயலாமையில் மற்றொரு கூட்டமும் இங்கே மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

4. அடுத்துத் தொண்டர்கள் எனப்படும் குண்டர்கள்;

ஒரு கல்லை எறிந்து கூட்டத்தில் எளிதில் கலகம் உண்டாக்கி கட்சி மோதல் செய்கின்றனர்,

ஓர்  ஊர்வலத்தில் ஒரு சிலையின் மேல் செருப்பை வீசி எறிந்து, மதக் கலவரம் உண்டாக்குகின்றனர்,

தனிப்பட்ட ஒரு விரோதத்தை, ஏதோ ஒரு வன்மத்தை தீர்க்க, ஏதோ ஓர் ஆதாயம் பெற, சாதிக் கலவரமாக மாற்றம் செய்கின்றனர், யாரோ ஒருவரை கொலை செய்கின்றனர், ஏதோ ஒரு காதலை கொலைக்களமாக மாற்றுகின்றனர், ஏதோ ஒரு கூட்டத்தில் அப்பாவிகளைக் கொல்ல வெடி வைக்கின்றனர், அந்தப் பற்றி எறியும் நெருப்பில் அரசியல் செய்கின்றனர், ஆட்சி நெருக்கடி செய்கின்றனர்.....

5. இப்படியான நெருக்கடியில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், இன்னொரு பலி கேட்கும் வன்மத்தை உருவாக்குகிறது, சாதிய அமைப்பு வலுப்பெறுகிறது, வாய்ச்சொல் வீரர்கள் போலி சாமியார்களாகவும், உடல் பலம், அமைப்புப் பலம் கொண்டவர்கள் ரௌடிகளாகவும் உருவாகின்றனர்....

6.ஒவ்வொரு நிகழ்வும் வாக்குச் சாவடியில் விழும் வாக்குகளை மாற்றி அமைக்கிறது!

7. மக்கள் எல்லோரும் தெளிவுப் பெற நல்ல கல்வி அவசியம்! ஆனால் கல்வியின் திசை இங்கே மாற்றி அமைக்கப்படுகிறது, அடித்தட்டு மக்களுக்கு அதுவும் மறுக்கப்படுகிறது, படித்தவன் சுயநலவாதியாகவும், படிக்காதவன் உணர்ச்சியின் குவியலாகவும் மாறிப்போகின்றனர், இரண்டுமே ஒரு சமுதாயத்திற்கு நல்லதில்லை!

8. இப்படிப்பட்ட கல்வித்தரம் அமைந்த சமுதாயத்தில் குற்றங்கள் உணர்ச்சி வேகத்தில் நடக்கின்றன, நீதி, பணம் ஆடும் ஆட்டத்தில் தள்ளாடி தள்ளாடி சில வேளைகளில் வெல்கிறது, பல நேரங்களில் குமுறிக் குமுறி சாகிறது!

9. பயப்படும் மக்களைத் திசை திருப்பி, கேள்வி கேட்க துணியாவண்ணம் ஒரு நெருப்பை அவ்வப்போது கொளுத்திபோட்டால் போதும், உணர்ச்சி வசப்படுபவனைச் சாதி கொண்டு மதம் கொண்டு, இனம் கொண்டு கட்டிபோட்டால் போதும், படித்தவனுக்கு மேலும் வசதி, ஆதாயம், இல்லை ஒரு மிரட்டல் போதும்....

10. திரைகாட்சியின் மாயையில் ஒரு பக்கமும், அச்சம் தரும் சமூக அமைப்பில் மறுபுறமும் இந்தத் தலைமுறைகள் தள்ளாடி கொண்டிருக்கிறது, சாதி மத, கட்சி அமைப்புகளில் பழைய தலைமுறைகள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது, கேள்விக் கேட்கும் திறன் இன்றி வருங்காலத் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.....

11. யாரோ ஒரு சாமியார் கனவில், புதையல் இருக்கும் சேதி தெரிந்தது என்பதற்காக, விண்வெளியில் ஏவுகணை செலுத்தி சாதனை செய்யும் ஓர்  அரசு, பொருட் செலவு செய்து புதையல் தேடுகிறது! நல்ல வாழ்க்கைச் செய்திகளை மட்டும் விட்டு விட்டு, மதங்களைக் கூட மூளைச்சலவைக்குதான் பயன்படுத்துகின்றனர்

12. இலவசம் என்று வருவதெல்லாம் மக்கள் பணமே, யாரும் அவர் பணத்தைத் தந்து எதையும் இலவசமாய்த் தரவில்லை என்ற உணர்வும் இல்லை, மக்கள் பணத்தை மக்களுக்காக என்று செலவு செய்து தரும் பொருட்களும் தரமானதாய் இல்லை!

13. 2G, 3G என்று ஊழல் பட்டியல் படிப்பதோடு சில  பத்திரிக்கைகளின் கடமை முடிந்து விடுகிறது.

14. வேலை வெட்டி இல்லாமல் லுங்கியை மடித்துக் கொண்டு, காதல் செய்பவன், சாராயம் குடித்துக் கொண்டு, பெண்ணை இழிவு படுத்திக் கானாப் பாடல் பாடிக்கொண்டு திரிபவன், ஒற்றை விரலில் பத்துப் பேரை சுழற்றி அடித்துத் துவசம் செய்து கொண்டு இருப்பவன் எல்லாம் பெரும் வீரன் என்றும், பொழுது போக்கு என்ற பெயரில் வன்முறையையும், விடலைபருவக் காதலை புனிதமெனவும் காட்டி பள்ளிக்கூடக் குழந்தைகளை, இளைஞர்களை வழி மாற்றி, திரைப்படமும் தன் சமூகக் கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது.

15. பகுத்தறிவு கொண்ட மனிதன் உண்மையில், சாதிக்காக, தன் முன்னேற்றத்தை சாய்த்துக் கொள்வதில்லை, மதத்துக்காகத் தன் மரணத்தை நிர்ணயிப்பதில்லை, எந்த ஓர்  அரசியல் தலைவனும் ஒரு தொண்டனுக்காகத் தீக்குளித்ததில்லை.....

16. அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் சக மனிதனிடம் அன்பு காட்டியே வருகிறான், சாதி மதங்களைக் கடந்த ஒரு பிணைப்பில் இயைந்து வாழ்கிறான், இருந்தும் ஆய்ந்து அறியும் திறன் இல்லாமல், சக உயிரிடத்தில் அன்பு பாராட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்க்கை என்பது வெறும் பொருட்களில் நிரம்பி விடும் ஒரு கலாச்சரமாக, காட்சி மாயையில் மனம் நிரம்பி விடும் ஒரு சூதாக, வெறும் உணர்ச்சிக் கூப்பாட்டில் தணிந்து விடும் விடுதலையாக நீர்த்துப் போகிறது....

17. இப்போதும், அந்த ஆப்பிள் மரம், அவனுடைய பொம்மைகளுக்காக அதன் கனிகளைத் தந்தது, பின் அவனுடைய வீட்டிற்காக, தன் கிளைகளைத் தந்தது, பின் அவன் சுற்றுலா செல்லும் கனவை நிறைவேற்ற, படகு செய்யத் தன் உடலினை தந்தது, கடைசியில் அவன் சாயத் தன் வேரினால் அவனைத் தாங்கியது என்ற பாடம் தான் பிள்ளைகளுக்குப் பாடத்திட்டத்தில் இருக்கிறது, ஒருநாளும் மரங்கள் இருக்க வேண்டிய அவசியத்தை, அவைகளில் வாழும் உயிர்களைப் பற்றி , அவைகளின் உணர்வுகளைப் பற்றி, எதையும் கேள்விக்  கேட்டுத் தெளிய வேண்டும் என்ற அடிப்படையையும் நம் கல்விமுறை போதிப்பதேயில்லை,....

18. பெரும் பாடத்திட்ட சூழ்ச்சியில் நாம் பணம் செய்யும் எந்திரங்களாக, எல்லாவற்றையும் உணராமல் அசைப் போடும் மாடுகளாக, ஓட்டிற்குப் பின்னே, பிரியாணி ஆகும் ஆடுகளாகவே வாழ்கிறோம்!

காத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5355234.ece



Friday 25 October 2013

வெளிப்பாடு






கோபத்தை, வார்த்தைகளிலும்
வன்முறைகளிலும் வடிக்கிறோம்,
அன்பை மட்டும்
மனதில் பூட்டி வைத்து
மௌனத்தில்
உணர்த்திவிட விழைகிறோம்!

Wednesday 23 October 2013

புதிதாய் ஒரு பூமி


ஒரு காலைப்பொழுதில்,மதிற்சுவற்றில்
காகங்கள் கரைந்திட -

தலை சாய்த்து, பொட்டலை,
மைனாக்கள் வெறித்திட

அணில்கள் பதட்டத்துடன்
இங்கும் அங்கும், தாவிக் குதித்திட

சுள்ளென்று, முகத்தில் அறைந்த
வெயிலில்  தெரிந்தது,
வெட்டப்பட்ட மரத்தின் தழும்பு!

தேவையில் சுழன்றிடும் மனிதகுலத்தில்
அதன் ஆசையில் அடங்கா வாழ்வியலில்,

சக மனிதனின் குரல்வளையை நசுக்கும்
பேய்க்குணம் கொண்ட மனநிலையில்,

உங்களின் தழும்புகளையோ,
கண்டன ஆர்பாட்டங்களையோ,
இல்லை இல்லை, நாங்கள் காண்பதில்லை
உணர்தலுக்கு நெஞ்சில் ஈரமும் இல்லை!

போங்கள் போங்கள்
நீங்களேனும் புதிதாய்
ஒரு பூமி தேடுங்கள்!



 

Monday 21 October 2013

மழை



வெட்கம் போர்த்தி இருக்கும்
பசுமையின் அழகில்  -
மேகக் காதலன் - மோகம்
கொண்டு நிலைத்திடுவான்
காற்றும் வெப்பமும் சுழற்றிட - ஒரு
காதல் கண்ணாமூச்சி நிகழ்த்திடுவான்
# மழை

மரம்


மரக் காதலியை வெட்டி
வீழ்த்தியப்பின் - அவள்
மேகக் காதலனிடம் 
உயிர் பிச்சைக் கேட்கிறது
உலகம்!



மரம்



அவள் மட்டுமே
எல்லாம் கொடுக்கிறாள்,
இலையிலிருந்து
கனிகள் வரை,
வேண்டினால் - நிழலாய்
இறுதி வரை ,
உன் சுயநலத்தில்
கதவிலிருந்து
கட்டில் வரை - பின்
அடுப்பெரிக்க அல்லது
சிதை எரிக்க
ஆகும் கட்டை வரை!

மரம்







சூழ்ந்து விட்ட சூனியத்தை
வெட்டி அகற்ற மட்டும்
முடியவில்லை
மரங்கள் வீழ்த்தப்பட்ட
அந்த நிலத்தில்!

--------------

வீழும் மரங்களின் நிலம் 
அதன் கல்லறை ஆகிறது
கல்லறை சூழ்ந்த நிலம்
பெரும் சுடுகாடாகிறது !

Thursday 10 October 2013

மரமே நீயும் கேளாய்

















காய்ந்த மரமாய் நிற்கும்
மனிதரிடம் கதைத்து -
செவிவழிக் கரைத்திடும்
சுமைதனை விட

கனி ஈன்று
கனிவுடன் நிற்கும்
மரமே மரமே - என்
மனவழிக் கசிந்திடும்
வலியினை உரைப்பேன்
உன்னிடமே, நீயும் கேளாய்

மரமாய் நீ நில்
மருந்தும் வேண்டாம்
உனையே வருத்தி
கிளை முறிக்க வேண்டாம்
பூவோ காயோ
இலையோ கனியோ
எதுவும் வேண்டாம்

உன் இலைகளில் சொட்டும்
ஒரு பனித்துளிப் போதும் - என் 
இமைகளைக் கழுவி  
விழிகளைத் திறந்து
அது வெளிச்சம் காட்டும்

உன் கிளைகள் தாலாட்டும் 
மெல்லிய சாமரம் போதும் - என்
சுவாசத்தில் நுழைந்து, 
திணறும் மூச்சுக்குழலை
அது திறந்திட உதவும்

கல்லாய், மண்ணாய்
மரமாய் நிற்கும்
மனிதர்களிடையே நாளையும்
நான் வாழ்ந்திடல் வேண்டும்,
மரமே மரமே நீயும் கேளாய்!

Wednesday 9 October 2013

அதற்குப் பிறகு ஒன்றுமில்லை!

 
 பணத்தைப் பற்றிப்
பேசிய பிறகு
(திரு)மணத்தைப்
பற்றிப் பேசவில்லை

இனத்தைப் பற்றிக்
கொந்தளித்த பிறகு
ஒரு மனத்தைப்
பற்றிச் சிந்திக்கவில்லை 

அவள்(ன்)தான் என்று
லயித்த பிறகு
இவளை(னை)ப்
பற்றி யோசிக்கவேயில்லை 

கடுமை கொண்டு
கொன்றப் பிறகு
இனிய வார்த்தைகளில்
உயிர்பிக்கவில்லை

சொத்துப் பிரித்துத்
தொலைந்த பிறகு
உறவுத் தேடி
வரவேயில்லை

நெடுவானத்தில் ஒன்று
மறைந்த பிறகு
விடியல் ஒன்று
தோன்றவேயில்லை

மறுதலித்து மருகி
நிற்கும் மனம்,
இதுவே கடைசி
என்று நினைத்திருக்கவில்லை,
ஓர் இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொள்ளும் வரை! 

மழையின் சாரல்

வெப்பம் குறைந்து
குளிர்ச்சியில் நெகிழ்ந்து
இருண்ட மேகங்களை
பரவசத்துடன் பார்த்து
மழை வரும்
என்ற ஆவலில் -
மலர் வான் பார்த்து நிற்க
மழைக்கு மௌனம்
கலைக்க மனதில்லை

 black and white Flower and rain Stock Photo - 14870283
 அழுத்தம் கூடி, அது
பொழியும் வேளை -
ஒரு காற்று வந்து
அதைக் கடத்திச்
செல்லலாம்

திசை மாறி
பொழிந்து - மழை,
அதன் வேகம்
தணியலாம்
பார்த்து நின்ற மலர்
மகரந்தம் தூவி
மண்ணில் மடியலாம்

எங்கோ
ஒரு மூலையில்
விதையாய் முளைத்து
மண்ணைப் பிளந்து
மறுபடி மலர்ந்து,
அம்மழை வேண்டி
மலர் மீண்டும்
வான் நோக்கி 
நிற்கலாம் - காற்று
மனமிரங்கி - இம்முறை
மழையின் சாரல்
தூவலாம்! 

கைப்பாவை மனசு!



கோபம் வருகையில் 
துள்ளியெழும்
வார்த்தைகள்....
பிரிவே ஆயுதமாகும் !

அன்பு எழுகையில்
வார்த்தை வற்றி
பஞ்சமாகும் ....
மௌனமே காதலாகும்!

Tuesday 8 October 2013

நட்பு



 
லாபம் கருதிச் சேர்ந்தால்
வியாபாரம்

பதவிக் கருதி மோதினால் 
அரசியல்

இச்சைக் கருதிக் கலந்தால் 
காமம்

வாழ்க்கைக் கருதி மலர்ந்தால்
காதல்

சாதிக் கருதிக் கூடினால் 
கலவரம்

மதம் கருதித் திரண்டால் 
பதற்றம்

ஏதும் கருதாமல் -
ஆதரவாய் நின்றால்
அதுவே நட்பு !

Monday 7 October 2013

நாம்



நான் என்ற நானில் இருந்து
என்னை மாறச் சொல்கிறாய்
நீ என்றும் நீயாகவே
இருந்து கொண்டு

என்னை மாற்றிக் கொண்டால்
மட்டுமே உனக்குப் பிடிக்கும்
என்றால் - மாறிய நான்
உண்மையில் யார்?

அன்பை கேட்டால்
அலுப்பாய் உணர்கிறாய்  -
அன்பை கேட்டல்
அன்பின் இயல்பு
நீ அலுப்பாய்
உணர்ந்தால், - அதற்கு
நானா பொறுப்பு?

பேசினால் திமிர் என்கிறாய்
பேசாவிட்டால் தினவு என்கிறாய்
மாறும் உன் இயல்பில்
நீ நீயெனத் தெரிவது
எனக்கு நீதானா?

நானும் நீயும்
நாமில்லை -
நானெனும் நானும்
நீயெனும் நீயும்
விலகும்வரை!

பழங்கதை



பூனைகளின்
பசிக்கிருந்த ஆப்பம் - அதை
குரங்கொன்று விட்டது ஏப்பம்

பாட்டி சொன்னக் கதையிது
மாறிக் கொண்டே வருகுது

பூனைகள் என்றும் பூனைகளாய் 
மந்தையில் சிக்கிய மாடுகளாய் 
குரங்குகள் பெருகினத் தலைவர்களாய்
நாடொன்று ஆனது இங்கே ஆப்பமாய்

ஆப்பமும் ஆகும் துண்டுகளாய்,
குரங்குத் தலைவர்களின் கைகளிலே
நாளை வரும் தேர்தலிலே!

பாட்டி சொன்னக் கதையிது
பாங்காய் இன்றும் பொருந்துது!

Thursday 3 October 2013

குற்றப்பத்திரிக்கை

நேசிப்பின் நிழலில்
மிதக்கும்
சிறு தக்கை

கோபத்தின் பிடியில்
கணக்கும்
பெரும் பொதி

ஒவ்வொருவரிடமும்
உண்டு -  ஒரு
குற்றப்பத்திரிக்கை
வாசிக்க
அல்லது
வருத்தப்பட

Tuesday 1 October 2013

கீச்சுக்கள்

GIVING is joyful, when it is received with LOVE!
Charity is wonderful when it is accepted with Generosity/Magnanimity!


-------------------------
ஒரு முழம் கயிறு, ஒரு துளி விஷம், ரயில் தண்டவாளம், ஆறு, குளம், உயரமான பகுதி, சாதி விஷமம், மத வெறித் தாக்குதல், விபத்து, சாராயம், கூலிப்படை.........................

ஓர் உயிர் தன்னை அழித்துக் கொள்ளவும் அல்லது அதனை அழித்து விடவும் எத்தனையோ வழிகள் இருக்கும் போது, ஒருவனை வாழ வைக்கவோ, அல்லது அவன் வாழ்ந்திடவோ ஒரு வழியும் இல்லாமல் போய் விடுமா?!

------------------------------------------------- 

ஹைக்கூ

எழுதி களைக்கும் பேனா
கண்ணீர் சிந்துகிறது
மை!

உழுது களைக்கும் உழவன்
வியர்வை சிந்துகிறான்
குருதி!

Photo: எழுதி களைக்கும் பேனா 
கண்ணீர் சிந்துகிறது 
மை! 

உழுது களைக்கும் உழவன் 
வியர்வை சிந்துகிறான் 
குருதி!

அவ்வளவுதான்

கவலைப்பட்டுக்
கண்ணீர் விட முடியாது
கடமை அழைத்திடும்,

கடமை முடிந்ததும் - பெரும்
காலம் கடந்திடும் - பிறிதோர்
கவலையும் மறைந்திடும்

Photo: அவ்வளவுதான்
---------------------
கவலைப்பட்டுக் 
கண்ணீர் விட முடியாது 
கடமை அழைத்திடும்,  

கடமை முடிந்ததும் - பெரும்  
காலம் கடந்திடும் - பிறிதோர் 
கவலையும் மறைந்திடும்

கீச்சுக்கள்

உங்களை ஏமாற்றும், துன்பம் தரும்,
வதைக்கும் யாரும் உங்களுக்கு ஓர் ஆசான்,
ஆசான்கள் தங்குவதில்லை,
அவர்கள் தரும் அனுபவங்கள் தங்கிவிடும்!
வாழ்க்கை பாதையில் அவர்களையும்
வாழ்த்தியே கடந்து செல்லுங்கள்!

Photo: உங்களை ஏமாற்றும், துன்பம் தரும், 
வதைக்கும் யாரும் உங்களுக்கு ஓர் ஆசான், 
ஆசான்கள் தங்குவதில்லை, 
அவர்கள் தரும் அனுபவங்கள் தங்கிவிடும்! 
வாழ்க்கை பாதையில் அவர்களையும் 
வாழ்த்தியே கடந்து செல்லுங்கள்! 

----------------------------------------------------
துன்பங்களைக் கடக்கையில்
நீங்கள் மௌனம் கொண்டால்
அது விரக்தியின் நிலை!
துன்பங்களைக் கண்டு
நீங்கள் சிரிக்க ஆரம்பித்தால்
அது ஞானத்தின் நிலை!
#சுயநலமாய் இருங்கள், ஞானம் பெற்றால் போதும்!  

Photo: துன்பங்களைக் கடக்கையில் 
நீங்கள் மௌனம் கொண்டால்
அது விரக்தியின் நிலை! 
துன்பங்களைக் கண்டு
நீங்கள் சிரிக்க ஆரம்பித்தால் 
அது ஞானத்தின் நிலை! 
#சுயநலமாய் இருங்கள், ஞானம் பெற்றால் போதும்! :-) 
-------------------------------------------------------------
உணவுப் படைத்தல் பெரும் கருணை, பசிக்கு உணவிடுதலை விடப் பசியறிந்து உணவிடுதல், உள்ளன்போடு உணவிடுதல் என்பது ஒரு சிறந்த வரம்!

வேண்டாததை, பழையதைப் பிச்சையிட்டு, தானம் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையூறு இல்லாமல் உணவுப் படைத்தலும் தான் இன்றைய காலக் கட்டத்தில் ஏற்பட்டு விட்ட ஓர் அறம்!

# அன்பிலா உணவு என்பிலே!



























Photo: உணவுப் படைத்தல் பெரும் கருணை, பசிக்கு உணவிடுதலை விடப் பசியறிந்து உணவிடுதல், உள்ளன்போடு உணவிடுதல் என்பது ஒரு சிறந்த வரம்!  

வேண்டாததை, பழையதைப் பிச்சையிட்டு, தானம் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதும்,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையூறு இல்லாமல் உணவுப் படைத்தலும் தான் இன்றைய காலக் கட்டத்தில் ஏற்பட்டு விட்ட ஓர் அறம்!

# அன்பிலா உணவு என்பிலே!
----------------------------------------------------------------------------------------
காலையில், "இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு" என்று, எழுவதைத் தள்ளிப்போடுவதில் இருந்து அந்த நாளின் தோல்விக் கணக்குத் தொடங்குகிறது....
"அப்புறம்" "இன்னொரு நாள் செய்யலாம்/ பார்க்கலாம்" என்று சோம்பலுக்குத் தொடர்ந்து இடம் கொடுக்கையில், தோல்வி மெதுவே உங்கள் முதுகில் ஏறி, உங்கள் உச்சி மண்டையின் நடுவே ஏறிக் கொடி நாட்டப் பயணப்படுகிறது, அதன் இலக்கை அடையும்போது, எதிரே வரும் அதிர்ஷ்டத்தையும் அது எட்டி உதைக்கிறது!

# "இது பூட்ட கேஸ்....போடா அதிர்ஷ்டமே வேற வழியப் பார்த்துகிட்டு" என்று சொல்வது, எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் காதுகளில் விழாது!  

:-)
------------------------------------------------------------------------------------------------
பெய்யும் மழை எங்குப் பெய்தாலும், மழையாகவே பெய்கிறது அதன் தன்மை மாறாமல்!

மழைப் பெறும் நிலங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கிறது, முன்பு சதுப்புக் காடுகளாக, பின் செம்மண் பூமிகளாக, இப்போது கான்க்ரீட்/தார்ச் சாலைகளாக!
 


சுதந்திரம்

ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடும்போது
இன்னொருவரின் சுதந்திரமும் பறிபோகிறது!
நேசம் மிகுந்திருப்பின் அது சுகம் - இல்லையெனில்
அது ஒரு பெரும் வலி மனதின் மையத்தில்!

Photo: ஒருவரின் சுதந்திரத்தில் தலையிடும்போது 
இன்னொருவரின் சுதந்திரமும் பறிபோகிறது! 
நேசம் மிகுந்திருப்பின் அது சுகம் - இல்லையெனில் 
அது ஒரு பெரும் வலி மனதின் மையத்தில்!

நாடு - கீச்சுக்கள்

மாத்தணும், அடிக்கணும், நொறுக்கணும், நல்லது செய்யணும்.........என்று டீ கடை பெஞ்சுகளில் "பேசி", இப்போது சமுக வலைதளங்களிலும் பேசும் அளவு முன்னேற்றம் கண்ட #நாடு!
-------------------------------
யார் வேண்டுமானாலும் வந்து தமிழர்களை கொல்லலாம், சுரங்கம் தோண்டலாம், கனிமம் திருடலாம், புதைகுழி அமைக்கலாம், அணுக்கழிவை கொட்டலாம்.....நாங்கள் தமிழர்கள், எதிர்க்கும் தமிழர்களை தண்டிப்போம் என்று பாரபட்சமின்றி நடந்து கொள்ளும் பெருமைமிக்க #நாடு!
---------------------------
Generally any Government runs by tax money and other returns on investment, first breakthrough in generating income by selling liquor (most important and basic need and right of citizens) and next in water and the list may follow.....this is called true democracy 'by the people, for the people and of the people'
OMG!

--------------------------------
வீதிக்கு வீதி சோமபானம் விற்று, மக்களுக்கு சாலை விபத்தில் மோட்சம் அளித்தது போக, நடைபாதை முழுக்க தட்டிகள் அமைத்தது போக, இப்போது
அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள முக்கியமான சாலை சந்திப்பில், போக்குவரத்து சிக்னலை மறைத்து கட்டப்பட்டிருக்கிறது அரசின் மிக பெரிய விளம்பரப்பலகை......

# இங்கே வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பு?

# இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு! 

--------------------------------
   

கீச்சுக்கள்

சாதி, மத, இன உணர்வு ஜெயிக்கும் இடத்தில், அன்பு தோற்கிறது, அன்பு தோற்கும் இடத்தில் குழப்பம் விளைகிறது, குழம்பிய குட்டையில், மனித நேயம் மடிகிறது!
-------------------
வாழும் போது ஒருவரிடம் காட்டாத பரிவை, அவர் போனபின் அழுது புரண்டு ஊர் மெச்ச ஒப்பாரி வைக்கிறோம்!
------------------------------
 Photo: ஆசை, அன்பு, காதல் இவற்றை உணர்த்துவதை விட,கோபம், வெறுப்பு மற்றும் பிரிவினையை  உணர்த்துவதற்குத்தான் நமக்கு அதிக வார்த்தைகளும், நேரமும் தேவைப்படுகிறது! 
ஆசை, அன்பு, காதல் இவற்றை உணர்த்துவதை விட,கோபம், வெறுப்பு மற்றும் பிரிவினையை உணர்த்துவதற்குத்தான் நமக்கு அதிக வார்த்தைகளும், நேரமும் தேவைப்படுகிறது!
----------------------------------------------------
 
Photo: ஒரு தவறுக்காக 
குழந்தையை கடிந்து கொண்டு - பின் 
கடிந்து கொண்டதை பெரும் தவறென 
தன்னையே கடிந்து கொள்ளும் 
தாயின் மனம்!
ஒரு தவறுக்காக
குழந்தையை கடிந்து கொண்டு - பின்
கடிந்து கொண்டதை பெரும் தவறென
தன்னையே கடிந்து கொள்ளும்
தாயின் மனம்!

------------------------------------
ஆபத்துக்கு உதவியவனிடமும், அவசர தேவைக்கு உடன் இருந்தவனிடமும், தடைகளைத் தாண்டி அன்பு காட்டியவனிடமும் வராத பாசம் எல்லாம், ஒருவன் தன் இனம், தன் மதம், தன் சாதி என்று தெரிந்தவுடன் ஊற்றாய் பொத்துக் கொண்டு வருகிறது!

# எதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டே புரட்சி பேசுகிறோம்!
— feeling tired.
------------------------------------------------
 
நாம் காயப்படுவதை பற்றி கவலைப்படாதவர்களிடம்,
நம் காயங்களை காட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை,
அது ஆறிவிட போவதும் இல்லை!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
----------------------------------------------------------------------
இருப்பின் வெற்றிடத்தை இழப்பொன்றெ உணர்த்தும்
நிழலின் குளிர்ச்சியை வெம்மையில் உணர்வது போல்!

Photo: இருப்பின் வெற்றிடத்தை இழப்பொன்றெ உணர்த்தும் 
நிழலின் குளிர்ச்சியை வெம்மையில் உணர்வது போல்! 
 ------------------------------------------------------------------------------
நலமாய் இல்லை என்ற பதிலை யாரும் விரும்புவதில்லை, அப்பதிலின் தொடர்ச்சியாய் உங்களுக்கு உதவும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள யாருக்கும் நேரமுமில்லை, மனமுமில்லை!

எப்போதும் நலமாய் இருக்கிறேன் என்ற பதிலையே பகருங்கள், ஒரே ஒரு ஆத்மார்த்தமான உறவோ, நட்போ உண்மையை உணர்ந்து கொள்ளும்!
# நலமாய் வாழுங்கள்!
 
 Photo: நலமாய் இல்லை என்ற பதிலை யாரும் விரும்புவதில்லை, அப்பதிலின் தொடர்ச்சியாய் உங்களுக்கு உதவும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள யாருக்கும் நேரமுமில்லை, மனமுமில்லை!

எப்போதும் நலமாய் இருக்கிறேன் என்ற பதிலையே பகருங்கள், ஒரே ஒரு ஆத்மார்த்தமான உறவோ, நட்போ உண்மையை உணர்ந்து கொள்ளும்! 
# நலமாய் வாழுங்கள்!

--------------------------------------------------------------------------------
இடப் பற்றாக்குறை என்று தூக்கி எறியப்படுபவை (படுபவர்கள்) இரண்டு, முதலில் முதியவர்கள், இரண்டாவது புத்தங்கங்கள்.

# பெற்றதும், கற்றதும், பெரும்பாலும் அந்தந்த தலைமுறையோடு தொலைந்து போகிறது.


-----------------------------------------------------------------------
ஒரு முறை தந்தால் மீண்டும் தர வேண்டுமோ என்ற ஐயமோ, ஒன்று பெற்றால் இன்னொன்று தர வேண்டுமோ என்ற பதட்டமோ இந்த இயற்கைக்கு மட்டும் இல்லவே இல்லை.....
# பொய்க்காமல் பெய்யென பெய்யும் மழை!

  Photo: ஒரு முறை தந்தால் மீண்டும் தர வேண்டுமோ என்ற ஐயமோ, ஒன்று பெற்றால் இன்னொன்று தர வேண்டுமோ என்ற பதட்டமோ இந்த இயற்கைக்கு மட்டும் இல்லவே இல்லை.....
# பொய்க்காமல் பெய்யென பெய்யும் மழை!
-----------------------------------------
களர் நிலத்தில் விழும் நீர், நிலத்திற்கு மாற்றம் தருவதில்லை, செம்மண் பூமியில் பொழியும் மழை, வளமையாக மாற்றம் பெறுகிறது.
# நிலம் பொருத்து வளமை, மனம் கொண்ட ஈரம் பொருத்து வாழ்க்கை.
மழை!

--------------------------------------------------------
பெய்யும் மழை பாலையில் பெய்கையில் அதை பாலைப் பிடித்து வைத்துக் கொள்வதில்லை, அது சோலையாய் ஆவதும் இல்லை.....பாலை உணராத மழை, மேகமாய் மட்டுமே வாழ்ந்தால் என்ன? எங்கோ ஒரு நிலத்திற்கு அது நீரை தந்தால் போதாதா?
# பாலையில் பொழியும் மழைப் போலான்றோ உணராதா அன்பும்!
இடி, மின்னல், மழை!

-------------------------------------------  

அப்பாவிற்கு பின்

அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு...........
அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்!

 ------------------------------------

ஒரு பள்ளித் தோழி, செல்வத்திற்கு குறையில்லை, தன் பெயருக்குப் பின்னே பல பட்டங்களைச் சேர்த்துக் கொள்ளும் கனவு அவளுக்கு இருந்தது. வாழ்க்கையின் மிக நெருக்கடியான ஒரு சிரமத்தசையில், இழுத்துப் பிடித்து என் பள்ளிப்படிப்பு தொடர்ந்து கொண்டிருந்த வேளையில், "நீயெல்லாம், எப்படி மேலே படிக்கப்போறியோ தெரியலை..................", என்று என் வறுமையையையும், "இந்த நிலைமையிலும் அப்படி என்ன பரோபகரா ...................... வேண்டி இருக்கு", என்று என் குணத்தையும் அவள் கிண்டல் செய்ய தவறியதேயில்லை.

எந்த கிண்டலுக்கும் நான் உணர்ச்சி வசப்பட்டதேயில்லை, அப்போதைய தேவை படிப்பு, "செருப்பில்லையே என்று வருத்தப்படுவதை விட, கால் இருக்கிறதே", என்று சந்தோசப்படு என்று என் தந்தை சொன்னதை நினைவுப்படுத்தி கொள்வேன், எப்போதும் வெறுமனே ஒரு சிரிப்பு மட்டுமே என் பதிலாய் இருக்கும்.

பல வருடங்களுக்கு பிறகு, அவளை இன்று, ஓர் இடத்தில் எதிர்பாரா அதிசயமாக சந்திக்க நேர்ந்தது! நெடுநாட்களுக்கு பிறகான ஒரு இனிமையான உரையாடலில், ஒரு இளங்கலை பட்டத்திற்குப் பின், அவள் கல்விக் கனவு சாத்தியமாகவில்லை என்று தெரிந்தது, திருமணதிற்கு பின் ஒரு இயல்பான சோம்பேறித்தனத்தை அதற்கான காரணமாய் பகிர்ந்தாள்! என்னை பற்றிக் கேட்க, இன்று வரை படித்ததை பகிர, தவறாய் ஏதும் தோன்றிவிட கூடாது, என்ற ஒரு சிறு கூச்சத்தில், பகிர்ந்த போது, ஒரு சில நொடிகள் ஒரு கனத்த மௌனம் நிலவியது. சில நிமிடங்களுக்கு பின் சொன்னாள், "யாருக்கு எது நடக்கும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்", ஒன்றும் பதில் சொல்லாமல் இப்போதும் ஒரு புன்னகையை மட்டுமே தர முடிந்தது, அவள் கரங்களை நட்புடன் அழுந்தப் பற்றி!

# ஏனோ தோன்றியது, குறிக்கோள் தெளிவாய் இருந்து, மனதில் உறுதியும், உடலில் சுறுசுறுப்பும் இருந்தால், வெற்றிக்கு வேண்டிய மற்றவை, வேண்டாமல் தானாய் வரும்! பணம் மட்டுமே பாதை காட்டாது! நம்பிக்கை தான் கடவுள்!

---------------------------------------------
 

Quotes

"Attire" has nothing to do with "Attitude"
 --------------------------------------------------------
Half a problem is solved if we speak right thing at the right time and rest of the problem is solved if we keep our mouth shut most of the time!
 ---------------------------------------------------------------
GIVING is joyful, when it is received with LOVE!
Charity is wonderful when it is accepted with Generosity/Magnanimity!
 

----------------------------------------------------------------------------- 

எளிதல்ல

போ என்றால் போவதும் இல்லை
வா என்றால் வருவதும் இல்லை
# அன்பு, மழை, அதிர்ஷ்டம்

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!