Monday 30 March 2015

மர(ம்) மனிதன்!


எனது என்னுடையதென்று 
ஏந்திக் கொண்டிருக்கும்
எதுவும் எனதில்லை
பொருளென்றாலும் உயிரென்றாலும் !

பொருட்கள் கைமாறிப் போகும் 
உயிர்கள் திசை மாறிச் செல்லும்,
அன்பை விதைத்து
அன்பை எதிர்நோக்கும், எம்செயல்
விதையை விதைத்து
விருட்சத்தை எதிர்நோக்கும்
கேலிகூத்தேதாம்

எங்கோ விதைக்கிறேன்
எங்கோ வளரும் யாருக்கோ நிழல்தரும்
முதாதையர் விதைத்ததும் உடனில்லை
முப்பாட்டன் விதைத்ததும் இன்றில்லை
நேற்று நான் விதைத்து முளைத்த
செடியும் மரமும் கூட நீதி சொல்கிறது
கனியும் இல்லை நிழலும் இல்லை
எதிர்பாராததே அன்பென்கிறது!

நான் கனி வேண்டி நிற்கவில்லை
எனினும் விழுந்துக் கிடக்கும் நிழலையும்
மறைத்து விந்தை செய்து,
பாதையை மறித்துப் பரிகாசம் காட்டி, 
என்றோ அன்பில் முளைத்த ஒன்று  
இன்று கருணையற்றுத் தீய்க்கிறது!  

அப்படியே எரிந்து கொண்டிருந்த
சாலையில்,
துவண்டு நின்ற என்னிடம்,
எஞ்சி இருக்கும் கருணையில்
தாழ வந்த கிளையிலிருந்து 
தூது வந்த ஓர் இலை சொன்னது,
"யாம் மரங்கள் இல்லை மனிதர்கள்! "
வெறித்து நோக்குகிறேன் வெறுப்பில்லை
மனிதர்கள் அடர்ந்தக் காட்டில்
நான், நின்று தனித்துத் தணிந்து! 

Saturday 28 March 2015

வணங்குகிறேன்!

"இந்தியாவில் செய்தது" (மேட் இன் இந்தியா) என்று முதலாளிகளை ஊக்குவித்து இந்தியாவைத் தலைநிமிரும் செயல்களை விடுத்து,

எப்போதோ ஆரம்பித்து மலிவான சீனப் பொருட்களால் உள்ளூர் சந்தை அழிந்ததைப் பற்றிக் கவலைக்கொள்ளாமல்,

மேலை நாடுகளின் குப்பைகளையெல்லாம் இறக்குமதி செய்யும் கொள்கலனாக இருப்பதைக் கொஞ்சமும் மாற்றாமல்,

ஏற்கனவே கூலிகளாய் ஆகிவிட்ட விவசாயிகளை, நிரந்தரக் கூலிகளாக்கவும், எஞ்சி மிஞ்சி இருக்கும் நிலங்களையும் கையகப்படுத்தவும் சட்டம் இயற்றி,

செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்பும் காலத்திலும் புராண பாடல்களையே பாடிக்கொண்டு,

ஆடையின்றித் திரியும் வறியவர்கள் நிறைந்த நாட்டில், பத்துலட்ச ரூபாய்க்கு ஆடைஅணிந்து கொண்டு, அதையும் அவசரமாக ஏலம் விட்டு நாடகமாடி,

பன்மொழிப் பேசும் மக்களின் ஓட்டுக்களை வாங்கி அரசு அமைத்துவிட்டு, இந்தி மட்டுமே பிரதானமென்று முழங்கிக்கொண்டு,

 பாலியல் வன்முறைகள் பெருகும் நேரத்தில், பெண்கள் ஒழுங்காய் இருந்தால் எல்லாம் தீர்ந்துவிடும் என்று பழமைக் கருத்துப் பேசும் மந்திரிகளையும் அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு,

சுவிஸ் வங்கியில் பணமுதலைகளின் கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்து பிரித்துக் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, முதல் காரியமாக மக்களுக்குக் கொடுக்கும் மானியத்தை நிறுத்தி, ஏகப்பட்ட குளறுபடிக்குப்பின், இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு மானியத்தை விட்டுக் கொடுங்கள் என்று அறிக்கை விட்டுக் கொண்டு,

அவ்வபோது ராணுவத்தின் படைபலத்தைப் பற்றிப் பெருமைப் பேசி, நாட்டின் ஒரு பகுதியாய் இருக்கும் தமிழ்நாட்டில் மீனவர்கள் ஒரு சிறுத்தீவினால் கொல்லப்படுவதும் கைது செய்வதுமாக இருக்க அதைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல், அத்தீவிற்கே சென்று சர்வாதிகாரியிடம் கைகுலுக்கி விட்டு வரும் பெருந்தன்மைக்கும் எனப் பட்டியலில் அடங்கா சேவையாற்றி,

 ஒரு பாரத ரத்னா வழங்கியமைக்காகவும், முதல் வரியில் சொன்ன "மேட் இன் இந்தியா" என்னும் நிலைமாறி, கம் (வாங்க) மேக் இன் இந்தியா, எங்கள் நிலங்களை எடுத்துக்கொள்ளுங்கள், எங்கள் வளங்களைச் சுரண்டிக் கொள்ளுங்கள், எங்கள் உழைப்பை எடுத்துக்கொள்ளுங்கள், அணுவுலை அமையுங்கள், ஆஸ்பெஸ்டாஸ் கொட்டுங்கள், உங்கள் மருந்துகளுக்கு எங்களைச் சோதனை எலிகளாக்கிக் கொள்ளுங்கள், என்று இந்திய கூலிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க,

"அயராது சுற்றுப்பயணத்தில் இருக்கும் மாண்புமிகு அரசை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் !"

Tuesday 24 March 2015

பெயர் சித்திரம்!

Image result for picture of a girl writing for boyfriend
கடக்கும், மலரும், கேட்கும்
வார்த்தைகளில் தூண்டப்பட்டு
வரிகளைச் சமைக்கிறேன்
வார்த்தைகள் ஓவியமாகிறது
தூரிகையையே  கைக் கொண்டாலும்
உன் பெயரைத் தாண்டி ஒரு
சித்திரத்தைத்  தீட்ட முடிவதில்லை
உன் பெயரே ஒரு கவிதையாக
எப்போதும்! 

Monday 23 March 2015

மருந்தோடு பல்பும் இலவசம் !


மறுபடியும் என் ஐந்து வயது மகள் டாக்டர், அப்பாவிற்குப் பதில் இப்போது அம்மா நோயாளி...

 மகள்: என்ன உங்களுக்கு
 நான்: ஜுரம் டாக்டர்....

 ஹ்ம்ம் சரி இருங்க.. செக் பண்றேன்.....ஸ்டத்தஸ்கோப்பை வைத்து பரிசோதித்து விட்டு....
 உங்களுக்கு வயுத்துல ஒரு பிரச்சனை....

 இல்லை டாக்டர் எனக்கு ஜுரம் தான் ....

 நாந்தான் டாக்டர்...பேசாம சொல்றதை கேளுங்க......உங்களுக்கு வயித்துல ஒரு பிரச்சனை, அங்கே ஒரு பூச்சி இருக்கு...அது அப்படியே  உங்க நெஞ்சுல வந்து...இப்போ உங்க கண்ணுல வந்து இருக்கு...

 அடக்கடவுளே....டாக்டர் எப்படிச் சொல்றீங்க?

 உங்க கண்ணுல ரௌன்டா கருப்பா  இருக்கே...ஹ்ம்ம் அது என்ன?
 கார்னியா வா டாக்டர்?

 ஹ்ம்ம் அதுதான்....அந்த பூச்சியால, உங்க கண்ணுல இருக்குற..கார்னியா ரொம்பப் பெருசா ஆகி இருக்கு...அது இப்போ சின்னதாகனும்.....நான் மருந்து தரேன்...அதுனாலதான் உங்களுக்கு ஜுரம்....

 டாக்டர் அது என்ன பூச்சி டாக்டர்?
 அதுவா...அது பேரு பாம் லைட்....
 (பாம் என்றதும் அவள் அண்ணனும் ஜெர்க் ஆகி விட்டான்...)

 என்னது பாமா? அப்போ அந்தப் பூச்சி என்னை ப்ளாஸ்ட் பண்ணிடுமா...இப்போ என்ன செய்யுறது டாக்டர்?

 ஹலோ....என்ன நீங்க? "கிரிக்கெட்ன்னு" பூச்சி இருக்கு, அதுக்காக அது கிரிக்கெட் ஆடுமா? அது மாதிரிதான் பாம் ப்ளாஸ்ட் அது பூச்சி பேரு அவ்வளவுதான்...ஒழுங்கா கொடுத்த மருந்த சாப்பிடுங்க......ஹ்ம்ம் நெக்ஸ்ட்...... 

பி.கு: மருந்தோடு பல்பும் இலவசம் இந்த டாக்டரிடம்! :-)

Saturday 21 March 2015

விட்டத்து பல்லி!



உடன்பயின்ற நாட்களில்,
நண்பனொருவன் விளையாட்டாய் 
புத்தகத்தைப் பறித்துக் கொண்டு  
ஓடுகையில்,
பிடிக்க எத்தனித்து
கால் தடுக்கித் தடுமாறி
தள்ளாடிய ஓர்நாள்,
சட்டென்று
கரம் பிடித்து நிறுத்தினாய்!
பற்றிய கரத்தினை விடாமல்
சீருடையில் தூசு தட்டி
சில நொடிகள் கண்களை ஊடுருவி
விழி அகற்றி விலகி ஓடினாய்!

பிறந்தநாள் பொழுதொன்றில்
புத்தகத்தில் நான் லயித்திருக்க
அன்று மட்டும் நண்பர்கள் தவிர்த்து
வீட்டினுள் நுழைந்து,
எப்போதும் போல் விட்டத்தை நோக்கினாய்,
அங்கிருந்த பல்லியை
பூனை துரத்திவிட்டதென்ற
என் கேலிப்பேச்சுக்கு மறுப்பில்லாமல்
சிறுபுன்னகையுடன் தலைகுனிந்தாய்,
ஊதா நிறத்தில் சிலபூக்களும்
சிலபரிசுகளுமாய்
பிறந்தநாள் வாழ்த்துசொல்லி
ஒரு நொடிக் கைப்பிடித்து விழிநோக்கி
மீண்டும் விட்டம் வெறித்தாய்,
அதற்குபின் நீ அதிகம் பேசி
நான் கேட்டதேயில்லை
எப்போதும் வாய்மூடி, தொடர்ந்தாய்!

பின்தொடர்ந்த உன் பார்வைகள்
எப்போதும் ஒரு குழப்பப் போர்வையை
எனக்குள் போர்த்திச் சென்றது
பட்டம் பெற்று வருடங்கள்
கடந்து சென்றாலும்,
காணும்போதெல்லாம்,
ஒரு தேடல் பார்வையும்
மௌனமுமாய்க் கடந்து சென்றாய்,
என்னதென்ற என் கேள்விக்கு
இன்னதென்று ஒருபோதும் பதிலில்லை
வெவ்வேறு பரிணாமத்தில் வீசிய
அந்த வெற்றுப் பார்வையைத் தவிர!

ஏதோ ஒரு தெருவில்
நீ என் பெயர் கொண்ட
பெண்ணைத் தொடர்வதாய்
உன் தமக்கைச் சொன்னபோது
மெல்லியதான ஒரு புன்னகை
எனக்குள் பூத்தது
விட்டத்தில் தேடி இப்போது
விட்டதைத் தேடுகிறாய்!

முயற்சிகள் தோல்வியுற்று
பெற்றோரின் விருப்பத்தில்
பெயரறியாப் பெண்ணை நீ மணந்ததாய்
நண்பனிடம் கூறிச் சென்றாய்,
உன் முதல் பெண் மகவை
என் பெயரின் முதல்பாதியை
சொல்லி நீ அழைத்த தருணத்தில்
அச் சாலை வளைவில்,
மீண்டும், என்னைக் கடந்தாய்!
சட்டென்று சூழ்ந்த மௌனமேகத்தில்
உன் விழித்திரைகளில் நீர்
மௌனம் கலைக்கும் நோக்கில்
பாப்பா அழகுடா என்றேன்,
மனசில் இருக்கும் உருவம் அழகுடி
அதனால் என்று சட்டென்று கூறி
உதடு கடித்துப் பார்வை திருப்பினாய்!
வாழ்க்கை விட்டத்திலில்லை
தரையில் இருக்கிறது என்று
கொதித்தெழுந்த என் கோபத்தில்,
அடிபட்டப்  பார்வையுடன்
ஆற்றாமையில் விழிநோக்கினாய்,
உன் விழி வழி வந்த
விட்டத்து  பல்லி
இப்போது என் மூளையில்
சுற்றுகிறது மௌனமாய்!!!



 

Thursday 19 March 2015

வெற்றுப் புன்னகை!


கல் தடுக்கி விழவில்லை
உன் சொல் தடுக்கி விழுந்துவிட்டேன்
புயல் அடித்தும் சாயவில்லை
உன் சுயநலக் கூற்றில் சாய்ந்துவிட்டேன்
இந்த உப்புக் காற்றும் எரிக்கவில்லை
உன் இரக்கமிலா காய்தலில் எரிந்துவிட்டேன்
ஆர்பரிக்கும் கடலின் ஆழம் தெரியவில்லை
உன் அகத்தின்  ஆழம் கண்டுக்கொண்டேன்
ஈயென இரக்கவில்லை
எனினும் அமிலம் ஈயப்பெற்று இறந்துவிட்டேன்
இனியென்ன இருக்கிறது என்னிடம்
அன்பில் ஈவதற்கு ?
என் தேய்ந்துவரும் இதயத்தின் ஓசையையும்
உனக்குப் போதுமென்ற
இந்த வெற்றுப் புன்னகையையும் தவிர !?

மற்றபடி ஒன்றுமேயில்லை!


பணத்தின் தேடல் குறையும்
உன் நீண்ட ஆயுளின்
அந்திமப் பொழுதுகளில்,
நிராகரிப்பின் வலியோடு
நிகழ்ந்து விட்ட
என் இறுதியாத்திரையின்
காணாத காட்சியெல்லாம்
நெருஞ்சி முள்ளாய்
உன் உள்ளத்தை
துளைக்காமல் இருப்பதற்கேனும்
உன் நீண்டிருந்த
விடுமுறை  நாட்களில்
ஏதோ ஒரு வேலையின் நிமித்தம்
நீ இங்கிருந்த ஏதோ
ஒரு பொழுதில்
என் மரணம் நிகழ்ந்திருக்கலாம் 

Saturday 7 March 2015

மகளிர் தினம்

நிற்காத எம் கால்கள்
பூமித் துளைத்து
வேர்விட்டுச் செல்கிறது
முளைத்த சிறகுகளும்
உதிர்ந்து வீழ்கிறது
உறவென்று அன்பென்று
பெண்மையென்று தெய்வமென்று
நிரம்பித் தளும்பும் பொய்மையில்
பெரும் யுகங்கள் சாகிறது!

இன்றொருநாள் மட்டும் 
தேவதையென்று
விளிக்கிறீர் ,
மீண்டும் மீண்டும்!
இன்னுமென்ன வரங்கள்
வேண்டும்,
நிரம்பாத
உம் ஆசைக் கோப்பையை
இட்டு நிரப்ப?
நீவிர் மறந்துபோன
அந்தச் சக  பெண்மையின்
விடுதலையேயன்றி!?

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!