Tuesday 29 September 2015

மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' கனவுத் திட்டத்தை ஆதரிப்பதா... எதிர்ப்பதா?


டிஜிட்டல் இந்தியா... இந்த அறிவிப்பு வந்ததும், ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு நிலைப்பாடுகள். முதலில் டிஜிட்டல் இந்தியா என்ற அறிவிப்பின் சாராம்சத்தைத் தெரிந்து கொள்வோம்...

> பல லட்சம் மக்கள் இந்தியாவில் இணைய இணைப்பில்லாமல், பல்வேறு வாய்ப்புக்களை இழக்கின்றனர். அதனால், ஏறக்குறைய இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு, இந்த ஆண்டின் இறுதிக்குள் இணைய இணைப்பு வழங்கப்படும்.

> உங்களின் அனைத்து அரசாங்க ஆவணங்களையும். நீங்கள் இணைய லாக்கரில் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். பல்வேறு ஆவணங்களை நீங்கள் எளிதில் பத்திரப்படுத்தும் வழியிது. இதற்கு ஆதார் அட்டை தேவை. பாஸ்போர்ட் முதலிய உங்களின் விண்ணப்பத்திற்கு, அரசாங்கம், இணையத்தின் மூலமே உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்துக் கொள்ளும்.

> நாற்பத்தி இரண்டாயிரம் கிராமங்களுக்கு மொபைல் சேவை, 2018க்குள். இதற்கு இருபதாயிரம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. ஏர்டெல், ஐடியா, ரிலையன்ஸ் மற்றும் அரசாங்க மொபைல் சேவை கம்பெனிகள் களத்தில் இறங்கும். 

> அடுத்து ஈ கிராந்தி. அனைத்து அரசாங்கப் பொதுச் சேவைகளையும் இணையத்தின் மூலம் இணைக்கும் திட்டம். தனியார் நிறுவனங்களில் கொடுக்கப்படும் புகார்கள் இணையத்தின் மூலம் கையாளப்பட்டு, பல்வேறு நிலைகளை எட்டி, எப்படித் தீர்க்கப்படுகிறதோ, அதுபோலப் பொதுமக்களின் குறைகளும் இணையத்தின் வழி கையாளாப்படும். டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ் போன்ற நிறுவனங்கள் களத்தில் இறங்கும்.

> பி.பி.ஓ. வேலைவாய்ப்புக்கள், பின் தங்கிய வட கிழக்கு மாநிலங்களில் அதிகரிக்கும். இந்த நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஒரு கோடி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு பெரும் நிறுவனங்களே களத்தில் இறங்கும்.

> மின்னணுச் சாதனங்களின் உற்பத்தி பெருக்கப்பட்டு, இறக்குமதிக்கேற்ப ஏற்றுமதியும் சமன் செய்யப்படும்.

> இறுதியாக இணையத்தின் வழி மக்களின் ஆலோசனைகள் பல்வேறு திட்டங்களுக்குப் பெறப்படும்.



இவ்வாறு பல்வேறு விதமாக டிஜிட்டல் இந்தியா விளம்பரப்படுத்தப்பட்டாலும் அதன் சாராம்சம் இதுதான்:

ஏற்கனவே உள்ள முதலாளிகளுக்குப் புதியதாய் வருமானம் பெருக்கிக் கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கு, இன்னமும் பயிற்சித் தந்து, சிறப்பாய் வேலை புரிய வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படுகிறது. மனுக்கள் மூலம் புகார் கூறிய கிராம மக்கள், இனி இணையத்தின் மூலம் புகார் செய்யலாம். கைபேசி இல்லாத கிராமமே இல்லை என்ற அளவில் சேவை மற்றும் அரசாங்கத்தின் வேலைகள் இணையம் வந்ததும் வேகமாய் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓர் அரசாங்கம், கல்வி, பாதுகாப்பு, சமூக நீதி, தொழில்துறை, மருத்துவம், உணவு உற்பத்தி, அறிவியல் என்று எல்லாத் துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். இணையத்தின் மூலம் வேலைகளை எளிதாக்கி ஊழலைக் களைய முடியும் என்றால் வரவேற்போம்.

அதற்கு முன்பு, உண்மையில் இதுவரை இங்கே நடந்தது என்ன? சிலவற்றை மட்டும் பார்ப்போம்:

தொழில்துறை

மிக வேக அலைக்கற்றை என்று 2ஜி, 3ஜி டெண்டர் கோரப்பட்டு அதில் நடந்த ஊழல்கள் உலகறியும். இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் போய் பா.ஜ.க. வந்தது. அடுத்து எந்தக் கட்சி வந்தாலும் இது அப்படியேதான் இருக்கும்போலும்.

கிராமத்தில் இணையச் சேவைகளை வரவேற்போம். நகரத்தில் உள்ள இணையச் சேவையின் மூலம் அரசாங்க சேவைகளை எளிதில் பெற முடிகிறதா? ஒரு ரேஷன் கார்டு வேண்டுமென்றால் ஒருவர் எந்த அலைக்கழிப்பும் இன்றி உடனே பெற்றுவிட முடியுமா?

சமூக நீதி

மதக்கலவரங்களில் பலியான மக்களுக்குக் கிடைத்த நீதியென்ன? மேற்கத்திய நாடுகளின் சாலைப் புகைப்படங்கள் இணையத்தின் மூலம் குஜராத்தின் புகைப்படங்களாகக் காட்டப்பட்டது. எங்கோ நடந்த முன்னேற்றம் எல்லாம் குஜராத்தில் நடந்தாகக் காட்டப்பட்டது எல்லாம் இணையத்தின் புரட்சிதான்.

தனிப்பட்ட மனிதர்களின் தாக்குதல்கள், எளிதாய் கிடைக்கும் தகவல் பரிமாற்றம், சாதாரணக் குடும்பத்துப் பெண்ணைத் திருடி என்று பட்டம் கட்டுவதும், பாலியல் தொழிலாளி என்று விளம்பரப்படுத்துவதும் இணையம்தான். இதோ இங்கே அரசாங்கத்தின் சட்டங்களை, திட்டங்களை விமர்சனம் செய்வதும் இணையம்தான்... நல்லது!

இந்த இணையம் ஊழல்களை வெளிப்படுத்தியது. ஆனால், ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள், நீதித்துறை இணையத்தால் கண்காணிக்கப்படுகிறதா? சம்பளம் வாங்கும் ஒவ்வொரு குடிமகனும் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வரிகட்ட வேண்டும். வரிப்பிடித்தம் செய்யப்படும். அம்பானி, அதானி, விப்ரோ போன்ற பெருமுதலாளிகளிடம் இருந்தும் அவ்வளவு எளிதாய் வரி வசூலிக்க முடிகிறதா? வருமானவரித் துறை விப்ரோ நிறுவனத்தின் வாசலில் நின்று தண்டோராப் போட்டுதான் வரி வசூலிக்க முடிந்தது. அதானி, விஜய் மல்லையா நிகழ்வுகளை நாடறியும். நாடறிய செய்தது இணையம், அதற்குப் பின் நடந்தது என்ன?

கழிவறை வசதி கூட இல்லாமல் இருக்கிறது கிராமங்கள். நீரில்லாமல் வாடுகிறது நிலங்கள். சாயக்கழிவுகளால், மனிதக் கழிவுகளால், தோல் கழிவுகளால் மூச்சுவிட முடியாமல் திணறுகிறது நீர்நிலைகள். இதையெல்லாம் சரி செய்து, இணையத்தையும் கட்டமைத்தால் நல்லது என்று சொல்லும்போது, 'ஏன் ஏவுகணை வேண்டும், ஏன் ராக்கெட் வேண்டும், சோறு மட்டும் போதுமே' என்று கிண்டல் செய்ககின்றனர், இணையம் மட்டுமே போதுமென்று நினைக்கும் இணைய விஞ்ஞானிகள்!

விவசாயம்

இணையத்தின் முன் உட்கார்ந்து நம் கருத்துக்களைச் சொல்லும் நமக்கு, இணையம் முக்கியம்தான். கேண்டி க்ரஷ் விளையாடி பொழுதுப் போக்கினாலும், பசித்தால் நாம் சோறுதான் சாப்பிட வேண்டும். சுற்றிலும் அலைக்கற்றைகள் நம்மைச் சுழற்றிப் போட்டாலும், நாம் சுவாசத்துக்குத் தேவை மரங்கள் வெளிப்படுத்தும் பிராணவாயுதான். சில அடிப்படைத் தேவைகள் கூட இல்லாத கிராம மக்களுக்கு அதைச் செய்யாமல், சில பெருமுதலாளிகளின் விருப்பதிற்கேற்ப இணைய வசதி மட்டும் செய்து கொடுத்தால் போதுமா?

மின்னணு உற்பத்தித் தேவைதான், விவசாய உற்பத்தித் தேவையில்லையா? ஆதார் அட்டை முதற்கொண்டு அட்டைக்களாலேயே நிரப்பப்பட்ட இந்திய மக்களின் வாழ்வாதாரம் ஊழல் ஒன்றிலேயே நசுக்கப்படும்போது, அதைக் களைதல் முக்கியமில்லையா?

சொந்தமாய்த் தொழில் செய்ய வாய்ப்புக்களைப் பெருக்காமல், நிலம், வளம், நீர், இணையம் என்று முதலாளிகளை மட்டும் மகிழ்வித்து, வேலைவாய்ப்பைப் பெருக்குகிறேன் என்று ஓர் அடிமைச் சந்தையை மட்டும் ஊக்குவிப்பது சரியா?

வரி ஏய்ப்புச் செய்துவிட்டு ஒரு பெரு நிறுவனம் சட்டென்று மூட்டையைக் கட்டும்போது, இங்கே குறைந்தபட்சத் தொழிலாளர்களின் உரிமையைக் கூட நிலைநிறுத்த முடியாமல் இணையத்தில் செய்தி பகிர்வது மட்டும் தீர்வாகுமா? 

கல்வி

இது அத்தனை கேலிகூத்தாய் இருக்கிறது நம் நாட்டில். இருப்பவனுக்கு ஒரு கல்வி, இல்லாதவனுக்கு ஒரு கல்வி. அரசாங்க வேலையென்றால் அமிர்தமாய் இருக்கும் நாட்டில், அரசாங்கப் பள்ளிக் கல்வி என்பது வேப்பங் காயாய்க் கசக்கிறது, இப்போது வட கிழக்கு மாநிலத்தில் மாணவர்களைத் தேர்வு செய்து, வேலை வாய்ப்புத் தருவது சரிதான். முதலில் இந்தத் தேர்வை எப்படிச் செய்வார்கள்? சாதியக் கட்டமைப்புகளை இந்த வேலை வாய்ப்பில் எப்படிக் கையாள்வார்கள்? சாதி அரசியலை, கட்சி அரசியலை எப்படி எதிர்கொள்வார்கள்? எங்கும் எதிலும் இந்திதான் என்று சொல்லும்போது, அரசாங்க இணையச் சேவையில் மொழியின் நிலைப்பாடு என்ன?

சரி நல்ல திட்டம், ஆனால் நடக்குமா? மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடுகள் திட்டங்களை அறிவிப்பதோடு நின்று விடுகிறது. 'ஸ்வச் பாரத்' என்ற திட்டம் என்னவானது? சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்பட்டு மக்களுக்குத் தருவதாய்ச் சொன்ன வாக்குறுதி என்னவானது? திட்டம் என்பது தீட்டுவதற்கு இவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வேண்டும். ஆனால், எப்படிச் செய்கிறார்கள் என்று தெரியாமலே மாபெரும் ஊழல்கள் இந்தத் திட்ட அளவிலேயே நடந்து விடும். பின்பு அடுத்து வரும் ஆட்சியில் இந்தக் குதிரை பேரம் படியாமல், திட்டங்கள் தேங்கி நிற்கும் அல்லது புதுப் பெயர் எடுத்து மீண்டும் வரும்.




நாம் ஒன்று மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை இணையத்தில் இணைத்தாலும், அரசாங்க மருத்துவமனையில் இருக்கும் கடைநிலை ஊழியனுக்கும் பணம் கொடுக்க வேண்டும். அரசாங்க வங்கிகளில் வந்து நிற்கும் முதியவர்களையும், வறியவர்களையும் வங்கி ஊழியர்கள் மரியாதையில்லாமல்தான் அழைப்பார்கள். அரசாங்கப் பேருந்துகளின் ஓட்டைகள் அப்படியேதான் இருக்கும். இளைய தலைமுறை தன் முன்னோடியை ஒற்றி டாஸ்மாக்கில்தான் கிடக்கும். தேர்தலில் மட்டுமே மாநில முதல்வர்களை, அமைச்சர்களைப் பார்க்க முடியும். பிரதமரை பல நாட்டுப் பாஸ் போர்ட்டும், விசாவும் இருந்தால்தான் பார்க்க முடியும். மழை வந்தால்தான் விவசாயம் செய்ய முடியும். மரம் இருந்தால்தான் மழையும் வரும்.

இங்கே டிஜிட்டல் இந்தியா வேண்டாமென்று யாருமே சொல்லவில்லை. அதற்கும் முன்னர் மனிதர்கள் எல்லோருக்கும் உணவு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், உள்ளூரில் தொழில் தொடங்க இந்தியர்களுக்கு எளிதான வழிமுறைகள், விவசாயத்துக்கான நீர் ஆதாரம், காவேரி நீர் மேலாண்மை, பிச்சை எடுக்கும் நிலைக்குப் பெருகி வரும் வறியவர்கள், பணத்தின் அளவிற்கேற்ப என்று அருகி வரும் கல்வித் தரம், பசுமை அழித்து, மழைப் பொய்த்து வறண்டுப் போகும் பூமி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, முதியவர்களின் பாதுகாப்பு, பெருகி வரும் பாலியல் வன்கொடுமைகள், கொலைக் குற்றங்கள், தீவிரவாதம் என்று இருக்கும் நிலைக்கு, மோடியும் மோடியின் முதலாளித்துவ அரசும், இதற்கெல்லாம் தீர்வு இணையம் மட்டும் தான் என்று சொன்னால்,

வாருங்கள், இணையத்தில் பயிர் செய்து, இணையத்தில் பசுமை வளர்த்து, இணையத்தில் வறுமை ஒழித்து, இணையத்தில் ஊழல் ஒழித்து, இணையத்தில் நாட்டைச் சுத்தம் செய்து, வாருங்கள் இந்தியாவை ஒளிரச் செய்வோம்!


http://www.vikatan.com/news/article.php?aid=53056














Friday 25 September 2015

சாராய வளர்ச்சி

ஒரு நாட்டில் சாராயத்தின் மூலம் வருமானம் பெருகிக் கொண்டே போகிறது என்றால்;

 1. மக்களின் குடி கெடுகிறது.

 2. ஆரோக்கியம் தேய்கிறது, மருத்துவர்களின் தேவை அதிகரிக்கிறது.

 3. எளிய மக்களின் பிள்ளைகளின் கல்விக் கனவு கலைகிறது.

 4. குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர்.

 5. கொத்தடிமை முறை வளர்கிறது.

 6. சாலை விபத்துக்கள் அதிகரிக்கின்றன

7. பாலியல் வன்கொடுமைகளுக்கு இதையே காரணப் போர்வையாக்கும் கொடுமை அதிகரிக்கிறது

 8. எளிதாய் மனிதர்கள் மூளைச்சலவைச் செய்யப்படுகின்றனர்

9. சதா  குடித்துச் சீரழியும் உறவை கொண்ட குடும்பத்தில் பிள்ளைகளின் மனநலம் சீர்கெடுகிறது

 10. எளிதில் உணர்ச்சி வசப்படும் மனிதர்களால், குற்றங்கள் பெறுகிறது

 11. எளிய மக்களுக்குக் கல்வி வாய்ப்பு வாழ்வாதாரப் பிரச்சனையில் கருகும்போது எந்த இட ஒதுக்கீடும் அவர்களுக்குப் பயனளிக்கப் போவதில்லை

 12. ஆள்பவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் மனிதர்கள் பலவீனமாகிறார்கள்

 13. பொறுப்புகளைச் சுமக்க முடியாத அளவுக்குப் பெண்களின் சுமை கூடுகிறது

 14. இளைய தலைமுறை திக்குத் தெரியாமல் திண்டாடுகிறது, குடித்து விட்டுச் சாலையில் விழுந்து கிடக்கிறது

 15. குடியினால் சமூகம் மயங்கிக் கிடக்க, ஊழல் செய்வது தலைவர்களுக்கு எளிதாகிறது
 16. அணுவுலை, கெயில், மீத்தேன் என்று எல்லாப் பயங்கரத் திட்டங்களுக்கும் நிலமாய் வாழும் மாநிலம் பலியாகிறது

 17. போராடும் சிலரையும் கேலி செய்யும் ஊடகங்கள், பெண்களின் பின்னே செய்திக்காகத் திரியும் மலிவான பத்திரிக்கை சுதந்திரம், போன்றவையே எஞ்சி நிற்கிறது

18. தற்கொலை செய்து கொள்ளும் சமூகத்தில் தற்கொலைக்குத் தூண்டியவரை தண்டிக்கும் சட்டத்திற்கு, எல்லாவற்றிக்கும் காரணம் குடியென்று சொல்லும் குற்றங்களுக்கு, குடியைத் தனியாய் தண்டிக்கச் சட்டத்தில் விடையேதும் இல்லை.

குடும்பத்தை, பிள்ளைகளை நேசிக்கும் ஒவ்வொருவனும், ஒவ்வொருத்தியும் குடி வேண்டாமென முடிவெடுக்கும் வேளையில் மட்டுமே குடும்பமும் பிழைக்கும் , இலவசங்களில் இருந்து விடுபட்டு தன்மானத்துடன் இந்த நாடும் பிழைக்கும், அதுவரை இந்த நாடும் நாட்டுமக்களும் நலமாய் இருக்கட்டும்

Wednesday 16 September 2015

வரைமுறை!

காம்பைக் கிள்ளி,
செடி கண்ணீர் விடுவதை
நீங்கள்
பூவைக் கிள்ளுகையில்
தெறித்த பன்னீர்த் துளி
என்று கவிதையாகச்
சொல்லலாம்,

 ஏதோ ஒரு வன்மத்தின்
 வடிகாலாக
 ஒரு குழந்தையைத் துன்புறுத்தி
 அழவைத்ததை,
 என் மிதமிஞ்சிய அன்பினால்
 ஏற்பட்ட கோபமது என்று
 பின்னாளில் நீங்கள்
 சமாதானமும் செய்யலாம்

வன்முறைக்கில்லையே
வரைமுறை! 

Tuesday 8 September 2015

தோற்றப்பிழை

காற்றும் கடலும்
எப்போதும் போல்தான் இருக்கிறது
மனது துள்ளும் போதும்
துவளும்போதும் அவைகளை
நாம்தான் மாற்றிக் கற்பனை
செய்து கொள்கிறோம்!
பெரும்
தோற்றப்பிழையே
காணும் காட்சிகள்!

கீச்சுக்கள்!

செயல்படுத்த படாத எந்த நற்சிந்தனையும்
சிறப்புறுவது இல்லை!!!
ஐ மீன் சோம்பலைத்
துரத்தாவிட்டால் எதுவும் கிடைக்காது! :-)
----------------------------------------------------------------------------------------------
ஒட்டுப்போட்ட மக்களுக்கு சாதாரண குடிநீரை சுத்தமாய் வழங்க முடியாத அரசுதான் உயர்தர மதுபானங்களை குடிமக்களுக்கு வழங்க எலைட் பார்களையும் அமைக்கிறது!
feeling sarcastic.


-----------------------------------------------------------------------------------------------------------

சென்னைப் பல்கலைக்கழக விழாவுக்குப் பிரதமர் சென்னை வருகை
- செய்தி
நல்லா விசாரிச்சுப் பாருங்க, கடற்கரையோரம் உள்ள அழகிய கிராமம்ன்னு மேப்பைப் பார்த்து யாராச்சும் டூர் புக் பண்ணி இருப்பாங்க!
-----------------------------------------------------------------------------------------------------------------
முன்னாடியெல்லாம் தெருவில் போகும்போது அங்கே அங்கே போலீஸ் தலைத் தெரிஞ்சா, அம்மா அலுவலகம் போறாங்கன்னு ஊருக்கே தெரியும், இப்போ போலீசைப் பார்த்தா, அங்கே ஏதோ டாஸ்மாக் கடை இருக்கான்னு, கண்ணுத் தேடுது....

நோ வைல்ட் இமாஜிநேஷன் ....ஒன்லி, பொதுஅறிவு!
-----------------------------------------------------------------------------------------------------------
ஏதோ ஓர் உளமார்ந்த அன்பும் அசாத்திய நம்பிக்கையும் ஒருவரை வாழச் செய்கிறது, அவை பொய்த்துப் போகும் நொடிகளில் வாழ்க்கையும் பொய்த்துப் போகிறது!
--------------------------------------------------------------------------------------------------------------------
தோல்விகளும், அவமானங்களும், வேதனைகளும் தான் வாழ்க்கையைச் செதுக்குகிறது, நம்மையும் பிறரையும் சரியாய் உணர்ந்துக்கொள்ள துணைக்கு வருவதும் அவைகள்தாம்!
-------------------------------------------------------------------------------------------------------------------
After finishing IPS we should protect drunkards and after finishing IAS we should nod the head for corrupted politicians, IRS, IFS, graduates, and post graduates all forced to follow the trail and face the wrath of corruption and violence! Oh my nation! 
----------------------------------------------------------------------------------------------------------------------
Suppression only leads to revolution
And revolution alone leads to Reformation of the society!
‪#‎tasmac‬
--------------------------------------------------------------------------------------------------------------------
மாறி மாறி இருக்கும் கட்சிகளே ஆட்சிக்கு வந்து நாட்டைச் சுரண்டுவதற்குத் தேர்தல் என்ற ஒன்றை வைத்துப் பணத்தை வீணாக்குவதற்குப் பதில், சுழற்சி முறையில் இவர்களுக்குக் குத்தகைக்கு விட்டுவிடலாம்!
நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் நல்லவர்கள், என்ன பேஸ் புக், ட்விட்டர் என்று இவர்கள் செய்யும் அலப்பரைதான் கொஞ்சம் அதிகம் என்று மந்திரிகள் கொஞ்சம் அலுத்துக் கொள்ளலாம்!
இனிமேலாவது தேர்தலில் ஒட்டுக்கேட்டு வருபவரின் கட்சியைப் சாதியைப் பார்க்காமல், தனி மனிதராய், அவர் இதற்கு முன் செய்தது என்ன, இதற்கு முன் ஜெயித்திருந்தால் அவர் தொகுதிக்கு செய்தது என்ன என்று அலசி ஆராய்ந்து ஓட்டுப்போடுங்கள் மக்களே!
---------------------------------------------------------------------------------------------------------------

சென்னையில் சில இடங்களில் குடிநீர் வராமல் இருக்க, பல இடங்களில் வந்த குடிநீரையும், கழிவு நீர்க் குழாய் வேலை, கேபிள் பதிக்கும் வேலை, மின்சாரப் பணி என்று அவ்வப்போது தோண்டி, குடிநீரோடு கழிவுநீரைக் கலந்தாயிற்று, தொடரும் புகார்களுக்கும் பதிலேதுமில்லை!
மழைப் பெய்கிறது, சாலையில் ஆறாக ஓடும் நீரும் சாக்கடையோடு கலக்கிறது, பல வீடுகளில் மழைநீர் சேகரிப்புக் குழாய் என்பது சாலையை நோக்கியே நீரைப் பாய்ச்சுகிறது, மழை நீர் சேகரிப்புத் திட்டமும் தூர்ந்து போய்க் கிடக்கிறது.

எந்தப் பணியிலும், ஒப்பந்த தொழிலாளர்களை மட்டுமே காணமுடிகிறது, மேற்பார்வையிட்டு வேலையைச் சரியாய் செய்கிறார்களா என்று பார்க்கும் அதிகாரிகள் உடனில்லை..... 

ஆங்கில ஆட்சியில் இந்திய நாட்டு மக்கள் எல்லோரும் குடிக்கக் கஞ்சிக் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்ன போது, கஞ்சி இல்லாவிட்டால் என்ன பிரட் சாப்பிட சொல்லு என்று சொன்ன இங்கிலாந்து ராணியைப் போல, மழை நீர் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, குடிநீரில் சாக்கடைக் கலந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அதுதான் தெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிறது, எலைட் பார் இருக்கிறது, அவரவர் வசதிக்கேற்ப சரக்கு வாங்கிக் குடிக்கச் சொல்லு என்று சொல்லுவார்களோ என்று நினைக்கும்போது......ஷப்பா....இப்பவே கண்ணைக் கட்டுது
நாட்டில் அதிகாரிகள் மந்திரிகளுக்கெல்லாம் கூட உடல்நிலை சரியில்லை போல!
-------------------------------------------------------------------------------------------------------------

ஒரு கத்தியை எடுத்துக் குத்துவது போல் வார்த்தையில் சிலரை கொல்வது எளிதாக இருக்கிறது, அதன்பிறகு வழியும் மௌனத்தைப் போல் வழியும் குருதியைத் துடைப்பதும், அந்த மாறாத வடுவை சகிப்பதும்தான் இயலாததாக இருக்கிறது
-------------------------------------------------------------------------------------------------------------------
பழமைவாதிகள், பாமரர்கள் சாதியை பெயரிலும், மனதிலும் சுமந்தார்கள்,
புதுமைவாதிகள், படித்தவர்கள், சாதியை இன்னமும் பெயரிலும், நடத்தையிலும் வழி நடத்துகிறார்கள்! 

கண்ணாமூச்சி‬!


நலமென்றே பகர்ந்து நகர்ந்து விடுகிறேன்
பெரும்பாலும் - நலமா யென்று
நீ கேட்கும் பொழுதெல்லாம் - அவை என்
உடல்நலம் குறித்த கேள்வி யென்று
நான் வெறுமையை உணர்ந்துக்கொள்ளும் பொழுதினில்
வாசிக்கவியலாக் கடிதங்களைக் காற்றில்
எழுதுதல் போல்,
நலமில்லை மனமென்று
சொல்லத் துடிக்கும் வார்த்தைகளை,
நான் சொல்லவும் இல்லை,
நீ கேட்கவும் இல்லை,
நலத்துக்கு மாறான வார்த்தைகளை
கேட்டு நீ செய்யப்போவதும் ஏதுமில்லை,
நமக்கென்று
நேரமில்லாத இந்த வாழ்க்கைமுறையில்!

அட்டை

ஆதார் அட்டை, வாக்காள அட்டை
ரேஷன் அட்டை என்று
தன்மேல் ஊரும் அத்தனை
அட்டைகளையும்
சலுகைக்காகச் சுமக்கும்
எந்த ஓர் இந்தியனுக்கும்
தலையில் ஊறுவது என்னவோ
சாதி என்னும் அட்டைதான்!

அட நம்புங்கள்!

ஓசோன் லேயரின் ஓட்டைக்காகவும்
ஆஸ்துமாவின் பிடியில் இருக்கும்
தன் குழந்தைக்காகவும் புகையினை
விட முடியாதெனினும்


ஒரு சிகரெட்டைப் பிடித்து
பக பகவென்று புகையூதி
சகமனிதனின் காலைச்சுடாமல் இருக்க
மிகக்கவனமாய் அதனைத் தன்
காலணியின் அடியில் போட்டு
நெருப்பை அணைத்தான் பூபதி

பணம் வரும் திசை லட்சுமி திசையென்று
ஊழல் மறுக்க மனமற்று
மக்களைக் கொல்லும் கோப்புக்களிலெல்லாம்
அரசியல் செய்யும் ஆண்டியப்பன் கூட்டணி
சளைக்காமல் போட்ட கையெழுத்துக்களில்
கிடுகிடுவென நாடே தள்ளாடினும்

இதயத்தின் ஓரம் எனக்கும் கசியும் ஈரமென்று
எஞ்சிப் பிழைத்த மக்களுக்கென
இலவச இடுகாடொன்றைப் பரிசளித்து
மாண்புமிகு செம்மல் ஆனான் அரசியலப்பன்

ஓய்ந்துக் கிடந்த முதியவளை
பாரமென்று கருதிப் பட்டினிப் போட்டுக் கொன்றவளும்
பெற்றவனின் தளர்ந்துப் போன வயதில்
இனி தாளதென்று
முதியோர் இல்லத்தில் தள்ளிவிட்ட மகனும்
தவறாமல் அமாவசைத் திதியில் ஊர்மெச்ச
படையலிட்டுக் காகத்தை அழைத்து
கண்ணீர் விட்டுத் துக்கம் மேலோங்க
உருகிக் கரைந்தனர்

அவன் அவள் அவர்கள்
அவை இவை எவை யென்றாலும்,
காட்சிகளுக்குப் பஞ்சமிலா பூமியில்
நெல்லுக்குப் பாய்ச்சிய நீர்
புல்லுக்குப் பாய்ந்ததுபோல்
மிதமிஞ்சிய சுயநலத்தில்
ஓர் ஓரமாயாயினும் வாழ்கிறது பொதுநலம்,
அட நம்புங்கள்!

http://www.pratilipi.com/read?id=4904764395487232 

ஆசிரியர் தின வாழ்த்துகள்! Remembrance!

ஆசிரியப் பணி அறப்பணி, அறமென வாழும், வழிநடத்தும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
வீட்டில் இருந்த நேரத்தை விட நான் பள்ளியில் இருந்த நேரமே அதிகம், கல்வி மட்டுமல்லாமல், கலைகளிலும் என்னை வழிநடத்திய எனதருமைத் தலைமை ஆசிரியைத் திருமதி. சுப்புலட்சுமி ,

எட்டாம் வகுப்பில் இருந்து ஒரு தோழியைப் போல் இன்றுவரை தொடரும் திருமதி. தவமணி, தாவரவியல் பாடத்தைச் சிறப்புற நடத்தி, பாடம் தாண்டிச் செடிக் கொடிகளிடத்தில் ஜீவனுண்டு என்று அவைகளிடத்தில் நெருக்கம் ஏற்படுத்தி, என் பிள்ளைகளுக்கும் கல்வியில் உதவிய திரு. ராஜன், 

பூகோளம் புவியியலில் ஆர்வம் ஏற்படுத்திய துணைத்தலைமை ஆசிரியைத் திருமதி ரோசலின், வீட்டில் வெளியில் என்று கரப்பான் பூச்சிகளையும், எலிகளையும் வேட்டையாடி அதன் உடற்கூறுகளைத் தெரிந்து கொள்கிறேன் என்று நான் செய்த அட்டகாசங்களுக்கு விலங்கியலில் எனக்கு ஈர்ப்பு ஏற்படுத்திய திரு இசக்கி,

கணக்குப் பாடத்தை நான் முதன்மை பாடமாக நான் விரும்பித் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமான திரு.சக்திவேல், ஆங்கிலப் பாடங்களைச் செவ்வனே நடத்தி, மனப்பாடம் செய்யாமல் நான் சொந்தமாய் எழுதிய பதில்களுக்கு ஆச்சரிய மதிப்பெண் கொடுத்து ஒன்பதாம் வகுப்பில் இருந்து என் சுயசிந்தனையை ஊக்குவித்த திரு.சுரேஷ்,

இயற்பியலில் என்னைத் தன்னுடைய சிறந்த மாணவியாகக் கொண்டாடியத் திருமதி சுமதி, வேதியலை எல்லோரும் விரும்பும்படி செய்த திரு ஐயப்பன், என் கல்விக்கு உதவிய திருமதி ராணி, நூலகத்தில் இருந்து சிறந்த புத்தகங்களை நான் படிக்க உதவிய லைப்ரரியன் திருமதி கீதா ,

விருப்பப் பாடங்களில் ஒன்றாகக் கணிப்பொறி அறிவியலில் பாடங்களைத் தாண்டி ஒரு கூட்டத்தில் தன்னுடைய ஒவ்வொரு மாணவனும் மாணவியும் தனித்துத் தெரியவேண்டும் என்று எங்களுக்கு நடையில் உடையில் பேசும்போதும் பழகும்போதும் இருக்க வேண்டிய அங்க அசைவுகளைப் பாடி லாங்க்வேஜ் கற்றுத் தந்த திரு சந்தோஷ், (Dear Sir, on this teachers' day, I recollect the memory of your guidance, coaching and the friendliness you have instilled in us, I've written my gratitude to you in this para in Tamizh and translating that here, I remember every single moment of your guidance and the confidence you had in me, Thank you once again for being a wonderful teacher!) (Kallat Santhosh)

இவர்களைத் தாண்டி நினைவில் நிற்கும் ஒவ்வொருவரையும் எழுதி மாளாது, பள்ளித் தாண்டி வரிசையாய் பெற்ற பட்டங்களில் வழிக் காட்டி என்று யாரையும் நான் சந்திக்கா விடினும் , கற்றலில் என் தொடர்ந்த முயற்சிகளுக்கும் வெற்றிக்கும், அடித்தளத்தைச் சிறப்புற அமைத்துக் கொடுத்த என் தந்தையும், பள்ளி ஆசிரியப் பெருமக்களே காரணம்!
என்னைத் தொடர்ந்து எழுதத் தூண்டி, என் குறைநிறைகளைச் சுட்டிக்காட்டி ஆசானாய் வழிக்காட்டும் கவிஞர், எழுத்தாளர்
திரு. ஈரோடு கதிருக்கும்,

தமிழைத் தன் எழுத்தால் சிறப்புறப் பயிற்றுவித்து அவ்வப்போது என் கேள்விகளுக்கான பதிலால் என் கற்றல் பயணத்தைச் செம்மைப் படுத்தும் கவிஞர் திரு மகுடேசுவரனுக்கும்,

எந்தத் தயக்கமும் இன்றி வெளிப்படையாய் விமர்சித்து, பத்திரிக்கைகளிலும் தன் பக்கங்களிலும் பகிர்ந்து என் எழுத்துக்களைச் செம்மைபடுத்திக்கொள்ள உதவும் அனைத்து முகநூல் நட்புக்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!

அழகான மனிதர்களின் பரிசு!

 கேரளாவில் இருந்து அவர்கள் சென்னைக்குக் குடி வந்த வருடம் நான் பிறந்த வருடம், என் ஆயா, கைக்குழந்தையான என்னை அவர்கள் வீட்டுத் திண்ணையில் வைத்து இருப்பார்களாம், ஒற்றை மகனுடன் சென்னை வந்த அவர்களுக்கு நான் செல்ல மகளாகிப் போனேன், அப்பா அம்மா அண்ணா என்று அழைத்து அவர்கள் வீடு மாறிச் சென்றாலும், என் விடுமுறை தினங்களில் அவர்களின் வீடே என் சுற்றுலாத் தலம்!

அன்பே பிரதானம், கல்வியே செல்வம், வாய்மையே வீரம், வாழ்க்கை ஒரு வரம், அறிவே துணையென்று என் குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் படிப்பு முடியும் வரையுமான அந்த வாழ்க்கையை அழகியலாக மாற்றியவர் அண்ணன், அண்ணனின் அச்சன் எனக்கும் அப்பா, அம்மையும் எனக்கு அம்மா, அண்ணனின் வாழ்க்கையின் அத்தனை ஏற்ற இறக்கத்திலும் அண்ணனின் புன்னகையும் அம்முபெண்ணே என்ற பாசவிளிப்பும் இன்று வரை மாறவில்லை, அண்ணன் மட்டுமில்லை அச்சனின் வாழ்க்கையும் ஒரு கவிதை!

ஒருமுறை அச்சன் என்ற அப்பா சென்னையில் இருந்து கேரளத்திற்கு ரயிலில் பயணம் செய்ய ஏறியபோது, அவருடைய மிகவிருப்பமான விலை உயர்ந்தப் புது ஜோடிக் காலணிகளில் ஒன்று பிளாட்பாரத்தில் விழுந்து விட்டது, ரயிலும் வேகமெடுத்துவிட்டது, அப்பா உடனே தன்னுடைய காலில் இருந்த மற்றொரு ஒற்றைக் காலணியையும் பிளாட்பாரத்தில் தூக்கியெறிந்தார், ஏன் என்ற அண்ணனின் கேள்விக்கு அந்த ஒற்றைச் செருப்பைக் கண்டெடுப்பவன் அதில் அடையும் பயன் ஒன்றுமில்லை, அதனுடைய ஜோடியும் கிடைத்தால் அவனுக்கு அது உபயோகப்படும் என்று கூறினார், மேலும் வீசி எறிந்த செருப்புக்கும், தவற விட்ட செருப்புக்கும் இடையே இடைவெளி அதிகம் இருக்கக் கூடாது என்பதே அவரின் அந்த நேரத்துக் கவலையாகவும் இருந்தது.....

எனக்கு எப்போதும் உதவிய அண்ணனுக்கு ஒரு காலக்கட்டத்தில் அன்பால் நான் செய்ய நினைத்துத் தயங்கியபோது எந்தத் தயக்கமும் இல்லாமல் அண்ணன் ஏற்றுக் கொண்டார், கொடுப்பதும் வாங்குவதும் அன்பால் நிகழும்போது அங்கே எந்தத் தயக்கமும் வேண்டியதில்லை அம்மு என்ற போது, வாழ்க்கையில் பெறும்போது மட்டுமல்ல கொடுக்கும்போது நிறைவு வரும் என்று நான் உணர்ந்தத் தருணம் அது

எந்தச் சுபகாரியத்திலும் அல்லது ஏதோ ஒரு சந்திப்பிலும் யாருக்குப் பரிசினைக் கொடுத்தாலும், அவர் ஒன்றைக் கொடுத்தால் நாமும் ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்ற அழுத்தமும், கடமையே என்று கச்சிதமாய் வேறொன்றைக் கொடுத்து நேர் செய்யும் வழக்கமும் மனிதர்களுக்கே உரித்தானது, அது போன்ற மனநிலை இன்று வரை ஏனோ எனக்கு வந்தேதேயில்லை, யாருக்குப் பரிசினைக் கொடுத்தாலும் அது உள்ளார்ந்த அன்பின் பொருட்டெயன்றி, எதையும் எதிர்பார்த்தோ எதையும் சாதிக்கவோ இல்லை என்று மனதில் ஊறிவிட்ட இந்த வளர்ப்பு முறையால் இருந்திருக்கலாம்

தோல்வி, ஏமாற்றம் என்று நான் கடக்க நேரிட்ட பொழுதுகளில், அவ்வளவுதானே அடுத்த வேலையைப் பார்ப்போம் என்று கடப்பதற்கும், சிரிப்பதற்கும் எதையும் கடந்து போ என்று அண்ணன் கற்றுத் தந்த பாடமும் ஒரு காரணம், வீட்டைத் தவிர்த்துப் பயணங்களில் உறக்கம் பிடிக்காத கண்கள் இப்போதும் அண்ணன் வீடடைந்தால், கூடடைந்த பறவை போல் ஒரு கும்பகர்ணிக் கண்கள் ஆகிவிடும்

போதுமென்ற மனம் நிறைவான குணம் கொண்ட அழகிய மனிதர்களின் நினைவுகள் தந்தையர் தினத்தில் மட்டுமல்ல ஆசிரியர் தினத்திலும் அலை அலையாய் மனதில் எழுகிறது!

கேட்பதில் கொடுப்பதில் அன்பில்லையெனில்,
அதை உதவியென்றும், பிச்சையென்றும், கடமையென்றும், வியாபாரம் என்றும் வகைப்படுத்தலாம்!
அன்பு மட்டுமே அடிப்படையெனில், அன்பென்றப் பெயரைத் தவிர அதற்கு வேறு பெயரோ, காரணக் காரியமோ தேவைப்படாது அன்பால் அழகான மனிதர்களுக்கு! :-)

காலம்‬

ஆரவாரமாய் வந்தது
பருவம் தவறி ஒரு மழை
மாமழையாக,
கடைசி நிமிடம் வரை
ஒரு சொட்டு நீரை எதிர்நோக்கி,
அப்போதுதான் செத்துப்போயிருந்தது
மிஞ்சியிருந்த பட்டுப்போன மரம்,
கலியுகத்தின் அந்த கடைசி வனத்தில்!

ஆறறிவின்_வாழ்க்கை‬

மடிவற்றிப் போன பசுவிடம்
அதன் கடைசி சொட்டுப் பாலையும்,
வைக்கோல் பொதிக் கன்றினைக்
கொண்டு,
கறந்து விட முனைந்தான்,
விஞ்ஞான உலகத்தின்
எச்சத்தில்,
எஞ்சியிருந்த ஒரு விவசாயி!


ஈகைத் திறவுக்கோல்!

மருதுவின் உபயத்தால்
புதிதாய் வர்ணம் அடிக்கப்பட்டு
கார்மேகத்தின் உபயத்தால்
மின்சாரக் குழல்கள் பொருத்தப்பட்டு
ஷங்கர்க் குடும்பத்தின் உபயத்தால்
நீண்டிருந்த மண்டபத்தில் மின்விசிறிகளும்
குளிர்சாதன வசதியும் நிறைக்கப்பட்டு
சிலப்பல
செல்வந்தர்களின் உபயத்தால்
பெருமாளுக்கு நகைகள் பூட்டப்பட்டு,
கோவிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது!

காத்திருக்கும் பக்தர்களின் கோரிக்கைகளை
யாருடைய உபயத்தில் முடிப்பதென்று
புரியாமல்,
வியர்த்திருந்த இறைவன்,

தன் கையில் கிடைத்த பிரசாதத்தை
ஞாபகமாய், 
வாசலில் இருந்த வறிய மூதாட்டிக்கு 
ஓடிச் சென்று ஈன்ற ஒரு சிறுவனின்
கையின் ஈகைத் திறவுக்கோலைப் பற்றித்   
தப்பித்து வெளியேறினார்
பெருங் கூட்டத்தினூடே
மிதிபடாமல்!


வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!