Wednesday 23 December 2015

குற்றமும் தண்டனையும்: இனி சுதந்திரமாகத்தான் இருக்கப் போகிறானா அந்தச் சிறுவன்?

நிர்பயா வழக்கில் இளம் குற்றவாளி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாக, தீவிர குற்றங்களில் ஈடுபடும் 16 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களை, வயது வந்தோராகக் கருதி நடவடிக்கை எடுக்க வகை செய்யும் சிறார் நீதிச்சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

'பாப்புலர் சென்டிமென்ட்' என்ற கூறப்படும் மிகப் பிரபலமான ஓர் உணர்ச்சிமிகுதியின் வெளிப்பாடாகவே இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக பொதுவெளியில் கூறப்படுகிறது. 

சிறுவன் விடுதலையும், அவசரமாக நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.
 
1. விடுதலையான இளம் குற்றவாளி உண்மையிலேயே இனி சுதந்திரமாக இருக்கப் போகிறாரா? 

2. சிறுவன் மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு மையத்தில் இருந்தபோது அவரது சீர்திருத்ததுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? 

3. சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கப்படும் சிறுவர்களை குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்தும் முழுப் பொறுப்பு யாரிடம் இருக்கிறது? 

4. ஒரு சிறுவன் பெருங்குற்றம் செய்து அது செய்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகும் வரை அந்தச் சிறுவன் அக்குற்றத்தை செய்யத் தூண்டிய பின்புலனும் காரணிகளும் கவனத்தில் வராதது ஏன்? 

5. இத்தனை விமர்சனங்கள், நெருக்குதல்களுக்குப் பின் விடுதலையாகியுள்ள சிறுவனை இந்தச் சமூகம் எப்படி அணுகும்? 

இது போன்ற இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன. 

நிர்பயாவின் கொடூரக் கொலை போல இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண் என்ற சக உயிரின் மீதே ஆண் என்ற பிம்பம் தாக்குதல் நிகழ்த்துகிறது, நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது. 

இளஞ்சிறார் சட்டப்படி, பத்து முதல் பதினெட்டு வரை உள்ளவர்கள் குழந்தைகள், அவர்களுக்குத் தண்டனைக் காலம் குற்றங்களின் தன்மையை வைத்து மாறினாலும், பெரும்பாலும் எத்தனை ஆண்டுக் காலம் என்றாலும், அந்தத் தண்டனைக் காலம் என்பது அவர்களின் குற்றத்தை உணரச்செய்து, மனநலத்தைச் சீரமைத்து, மறுவாழ்விற்குத் தயார்ப்படுத்துவது போன்றவையே சட்டத்தின் நோக்கம். 

இந்த எல்லாச் சட்ட நோக்கமும் அப்படியே நிறைவேறினால் இங்கே குற்றங்களின் எண்ணிக்கை, பெருமளவு குறைந்து போகும். 

இந்தக் குழந்தைகள் ஏன் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் அல்லது ஈடுப்படுத்தப்படுகிறார்கள்?
 
வீட்டில் நிலவும் சூழல், குழந்தைகளுக்கு ஒரு நீதியும் நமக்கொரு நியாயமும் என்று பெரியவர்கள் நடந்துகொள்ளும் முறைகள், அவர்களின் கண்முன்னே நிகழும் குடும்ப வன்முறைகள், தங்கள் வீட்டுப் பெண்களை ஆண்கள் நடத்தும் விதம், அல்லது வீட்டில் உள்ள பெண்கள் நடந்து கொள்ளும் விதம், முறையான அடிப்படைக் கல்வி கிடைக்காத நிலை, வறுமை, இக்கட்டான சூழ்நிலை என்று வீட்டில் உள்ள ஏதோ ஒன்றில் ஒரு குழந்தை பாதிக்கப்படுகிறது, பாதிக்கப்படும் குழந்தையை அரவணைக்கும் யாரோ ஒருவர் இருந்தால் கூட அந்தக் குழந்தைத் தவறு செய்வதில்லை. 

வீட்டில் கிடைக்காத அன்பையும் ஆதரவையும் குழந்தைகள் வெளியில் தேடும், தன் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்பங்கள் என்று அதன் வெளி வட்டம் பெரிதாகும்போது, அந்த வெளிவட்டத்தில் சமூக விரோதிகளும், குற்றவாளிகளும் இருந்துவிட்டால், அல்லது ஒரு குழந்தையைப் போலவே பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையும் துணை சேர்ந்தால், தவறுகள் இயல்பாகும். 

இருவேறு சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது. 

முதல் சம்பவம்:
ஒன்று ஆதரவற்ற இல்லத்தில் நிகழ்ந்தது, அங்கு ஒரு பதினான்கு வயது மாணவனை, மாலை வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த ஓர் இருபது இருபத்திரண்டு வயது பெண், கையில் ஒரு பிரம்பை வைத்து அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தாள், தடுத்துவிட்டு வந்தபோது, அந்த இல்லத்தின் பொறுப்பில் இருந்தால் மற்றுமொரு ஆசிரியை, அனாதைகளான இந்தச் சிறுவர்களை மிகுந்த கண்டிப்புடன் அடித்து உடைத்து வளர்த்தால்தான் ஒழுங்காய் வளர்வார்கள் என்று சொன்னதைக் கேட்டதும் வேதனைதான் மிஞ்சியது. 

இரண்டாவது சம்பவம்:
இரண்டாவது நிகழ்வு நான் பள்ளியில் படிக்கும்போது என் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஒரு குடும்பத்தைப் பற்றியது, கணவன் மனைவி இருவரும் படிக்கவில்லை, அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள், அவர்களின் மூத்த மகனுக்கு இரண்டாவது மகனுக்கும் இரண்டே வயது வித்தியாசம், ஏழு வயது மூத்த மகனை, எல்லாம் தெரிந்தவனாய் இருக்கவேண்டும், தம்பியும் தங்கையும் குறும்பு செய்யலாம், தவறு செய்யலாம், ஆனால் ஏழு வயது கழுதை அதைச் செய்யலாமா என்று பொழுது தவறாமல் ஒரு பிரம்பை வைத்து அவனை அடிப்பார்கள், யார் சொன்னாலும் அந்தப் பெண் கேட்டதேயில்லை, கூடவே அச்சிறுவனின் தகப்பனும், அடி உதை மட்டுமே வாங்கிய மூத்தமகன், யாருடைய அரவணைப்பும் இன்றி, மனநிலைப் பிறழ்ந்து, அவனுடைய இருபத்திரண்டு வயதில் தொலைந்துபோனான், மனநிலைப் பிறழ்ந்த மகனின் ஏக்கத்தில் இருந்த பெற்றோருக்கு, இளையவன் என்று தூக்கி கொண்டாடிய மகன், தகாத நட்பினால் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி, ஒருநாள் மெரினாவின் கடலலையில் சிக்கி உயிரை விட்டுவிட்டான் என்ற செய்தி அடுத்த இடியாக இறங்கியது. 

ஏறக்குறைய மனச்சிதைவுக்கு ஆளாகிவிட்ட பெற்றோர், ஒரே பெண்ணை வெளியில் எங்கும் அனுப்பாமல், எப்படியோ திருமணம் செய்து கொடுத்து அனுப்பி விட்டனர். 

ஆதரவில்லை என்றாலும், பெற்றோர் இருந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அரவணைப்புக் கிடைத்துவிடுவதில்லை, ஒரே குழந்தை என்று மிதமிஞ்சிய அன்பும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் என்றால் மிதமிஞ்சிய கண்டிப்பும் குழந்தைகளின் ஏதோ ஒரு தவறுக்கு அடித்தளம் அமைக்கிறது, கண்டுகொள்ளப்படாத சிறு தவறுகள் காலப்போக்கில் பெரும் குற்றங்களுக்கு ஏதுவாகிறது. 

மாற்றம் என்பது தண்டனையில் வருமா?
 
குழந்தைகள் ஈடுபடும், அல்லது ஈடுபடுத்தப்படும் குற்றங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு மனநிலைப் பிறழ்வால், சூழ்நிலையால், போதிக்கப்பட்ட எண்ணங்களின் விளைவால், கூடா நட்பினால், சமூகத்தால், பெற்றோர்களின் அலட்சியத்தால் என்று ஏதோ ஒரு காரணத்தினால் நிகழ்ந்துவிடுகிறது.

குற்றவாளிகளை நாம்தான் உருவாக்குகிறோம், நம்முடைய தவறு, ஒரு குழந்தையைக் குற்றவாளியாக்குகிறது, இன்னொரு குழந்தையை அந்தக் குற்றத்திற்கு இரையாக்குகிறது. 

பத்திரிகைகளில், விளம்பரங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், திரைப்படங்களில் பெண்ணென்றால் போகப்பொருள், ஆணுக்குப் பெண் அடிமைபட்டவள், ஒழுக்கமும் கற்பும் பெண்ணுக்கே உரியது, ஆடை என்பது பெண்ணுக்கு அரண், இதில் தவறும் எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட வேண்டியவள் என்று கருத்துக்கள் நேரிடையாகவோ மறைமுகமாகவோ தொனிக்கும் வகையில் தான் சித்தரிக்கப்படுகிறார்கள். இவை நாம் சகித்துக் கொள்கிறோம் அல்லது ரசிக்கிறோம்! 

வீட்டில் வெளியில் என்று எதிலும் நாம் மாற்றத்தைக் கொண்டு வராமல், அதற்கான கட்டமைப்பை உருவாக்காமல் சட்டங்களை மட்டுமே மாற்றி என்ன பயன்? 

தண்டனை என்பது ஒரு பயமுறுத்தும் காரணியாக இருக்கிறது. தண்டனையை அதிகப்படுத்துவது குற்றங்களைக் குறைக்க உதவுமா அல்லது குற்றத்தை மறைக்கத் தூண்டுமா என்பதை நாம் யோசிக்க வேண்டும், தண்டனைக் கொடுத்துச் சிறையில் தள்ளி, வாழ்க்கையை முடித்துவிட்டால் அது பிறருக்கு பாடமாய் இருக்குமா? இருக்கும் தான், இல்லையென்று சொல்ல முடியாது, அது மட்டுமே போதுமா? 

இளஞ்சிறார்களின் தண்டனைக்குரிய குற்றங்களுக்கு வயதைக் குறைத்துக் கொண்டே போவது மட்டுமே தீர்வு ஆகாது. பதினெட்டில் இருந்து பதினாறாக ஆக்கி, பின்பு அதையும் குறைக்கும் காலம் வரலாம்! 

தீர்மானம் தீர்வா?
ஒரு நிர்பயாவை கொன்றவர்களில், இளம் குற்றவாளி ஒருவன் பேசும் பேச்சு பாமரச் சமூகத்தைப் பிரதிபலிக்கிறது, அவனுக்காக வாதாடிய வழக்கறிஞர்களின் பேச்சுப் படித்த சமூகத்தைப் பிரதிபலிக்கிறது... இந்தச் சமூகத்தைத் தண்டிக்காமல் அல்லது திருத்தாமல் இந்தக் குற்றவாளிகளை மட்டுமே தண்டிப்பதால் மாற்றம் நிகழாது! 

மாற்றங்களை நாம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும், எந்தக் குழந்தைக்கும் நல்ல கல்வியும், நல்ல உணவும், அன்பும் ஆதரவும் தேவை, குறைந்தபட்சத் தேவைகளைச் சமூகம் பூர்த்திச் செய்யாதபோது சட்டங்கள் என்பது குற்றவாளிகளைத் தண்டிக்கக் கால சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கும் அல்லது நாம் மாற்றிக்கொண்டே இருப்போம், குற்றங்கள் மட்டும் குறையாது. 

பல்லாயிரக்கான குழந்தைகளை இந்தச் சமூகத்தின் அலட்சியம் அரசியல்வாதிகளின் சுயநலம் குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கிறது, பதைக்க வைக்கும் என்சிஆர்பி புள்ளி விவரத்தின் படி 2014 ஆம் ஆண்டு 36,138 வழக்குகள் இளம் குற்றவாளிகளின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 75 சதவீதம் குற்றங்களைச் செய்தோர் பதினாறில் இருந்து பதினெட்டு வயதுக்கு உட்பட்டோர். இதே காலகட்டத்தில் நாடு முழுவதும் பதிவான ஒட்டுமொத்த குற்ற வழக்குகள் 28,51,563. இவற்றில், சிறார் குற்றங்களின் பங்கு வெறும் 1.27 சதவீதம் மட்டுமே. அதாவது, 2 சவீதத்துக்கும் குறைவு. 

எண்ணிக்கை வழங்கும் உண்மை நிலவரம் இப்படி இருக்க, இளம் குற்றவாளிக்கான வயது வரம்பு 16 ஆக குறைக்க வகை செய்வது என்பது, எதிர்காலத்தில் வழிதவறும் குழந்தைகளின் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும்படி தண்டனைகள் வழிவகுத்திடுமோ அல்லது பல்வேறு சட்டப் பிரிவுகள் போலவே இதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, அப்பாவிச் சிறார்களை சிறைவாசம் அனுபவிக்கச் செய்துவிடுமோ என்ற அச்சங்களை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. 

நம்முடைய இயந்திர வாழ்க்கையின் சுயநல எந்திரங்கள் பழுதடையும்போது நம்முடைய இளைய தலைமுறை மொத்தமும் சிறையில் இருக்க நேரிடலாம்... மாற்றம் அவசியம் மனநிலையிலும் சமூகத்திலும்.
 
மு.அமுதா - தொடர்புக்கு amudhamanna@gmail.com
 
http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/article8021482.ece?homepage=true

உயிர்கள் இலவசம்


தடை செய்த மருந்துகளை
 எளிய உயிர்களிடம்
 தாராளமாய் விற்கலாம்
தொழிற்சாலைகளை மூடி
 கட்ட மறுத்த வரிப் பணத்தோடு
 நாடு திரும்பலாம்

 அணுவுலைகளை அமைத்து
 மனிதர்களை வீதியில் நிறுத்தி
 மாளிகையில் நிம்மதியாய் உறங்கலாம்
 நடுஇரவில் வெள்ளக்காட்டை உருவாக்கி
 பிணங்களை மிதக்க விடலாம்
 அதை உயரே இருந்தும் பார்த்து ரசிக்கலாம்

 வீதியெங்கும் சாராயக்கடைகளை
 திறந்து வைத்து
 குடிமகன்கள் நலம் காக்கலாம்
போராடும் பிள்ளைகளைப்
போட்டுத் நசுக்கலாம்

 போர்க்கொடிப் பிடிப்பவர்களின் பையில் 
 கஞ்சா  நிரப்பலாம்
 போர்ப்பரணிப்  பாடுபவனை
 குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம்

ஓங்கும் குரல்வளைகளின் கழுத்துக்களை
குண்டர்களின் கையில் கொடுத்துவிடலாம்
ஒன்றுக்கூடினால் தடியடிக் கொண்டு
மண்டைகளை உடைக்கலாம்
ஒற்றுமை ஓங்கினால்
சாதி மதக் கலவரங்களில் கொன்று விடலாம்

மன வக்கிரங்களை நியாயப்படுத்தி
இசையில் வடிக்கலாம்
 அதற்கு விருதும் வழங்கலாம்

 ஆழ்துளைக்  கிணறுகளில்
 பூமியின் வளம் உறிஞ்சலாம்
 நீர்வற்றிச் சாகும்போதும்
நிவாரணம் தரலாம்

 நிலங்களை மலடாக்க
நஞ்சை விதைக்கலாம்
 உயிர் கொள்ளும் பானங்களுக்கு
 நீரையும் தாரை வார்க்கலாம்

 புதை மணலில் கூட
 வீடு கட்டப் பட்டா வழங்கலாம்
 பின் புதைந்துப் போன வீட்டுக்கும்
 வரி கேட்டு கழுத்தை நெரிக்கலாம்

 நீண்டுக்கொண்டே போகும் இந்த
 பட்டியலில் நீங்கள் உங்கள்
குரூரத்தை நிரப்பிக் கொள்ளலாம்
இங்கே உயிர்கள் இலவசம்
எங்களிடம் ஆடும்  மரண விளையாட்டை
நீங்கள் விரும்பும்வரைத்
தொடரலாம்

Monday 21 December 2015

வெள்ள மீட்புக் கரங்கள் 'தண்ணீரில்' மூழ்கியோரை காக்குமா?

தினமும் செய்தித்தாளை படிக்கும்போது மதுவால் மடிந்த ஏதோ ஒரு குடும்பத்தின் துயரம் கண் முன் நிற்கிறது. என்னை எந்த வேலையும் செய்யவிடாமல், ஒரு செய்தி என்னைப் பிடித்து உலுக்கியது. திரும்பத் திரும்ப அந்தச் செய்தியோடு சம்பந்தப்பட்டவர்களின் நிலையை நினைத்ததும் நான் உணர்வற்றுப் போனேன். என்னை இப்படி பித்த நிலைக்கு கொண்டுவந்த செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
குடித்துக் குடித்துச் சீரழியும் ஒருவரைக் கணவனாக வாய்க்கப்பெற்ற பெண், தன்னுடைய ஏழு, ஐந்து மற்றும் மூன்று வயது மகள்களைக் காப்பாற்றும் பொருட்டு, அக்கம்பக்கம் வீட்டு வேலைகளைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பற்றி வந்தார். ஆனால், அவரை சந்தேகப்பட்ட கணவர், மதுவில் மயங்கி வாய்ச்சண்டை போட்டார். வாய்ச்சண்டை முற்றிப் போக, கத்தியால் குத்தி கொலை செய்தவர் தன் நிலை உணர்ந்ததும் தலைமறைவாகிவிட்டார். அம்மாவை இழந்த அந்த மூன்று குழந்தைகளும், அம்மாவுக்காக ஏங்கி அனாதைகளாகி கதறி அழுதது பரிதாபத்துக்குரியது.
குடித்துவிட்டு சீரழிபவர், மனைவியையும் கொன்று, பிள்ளைகளையும் அனாதையாக்கும் நிலையை என்னவென்று சொல்வீர்கள்? ஆண் குடிப்பதே பெண்ணால்தான் என்று சொல்வீர்களா?!
வன்கொடுமை என்றாலும், கொலை என்றாலும், தற்கொலை என்றாலும், இவை எல்லாவற்றுக்கும் பின் இரண்டே காரணங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று குடி, மற்றொன்று பெண்.
மேலைநாடுகளில் குடிப்பது தட்ப வெப்ப நிலையை எதிர்கொள்ள அவர்கள் கையாளும் நிலை. அங்கே பொது இடங்களில் குடிப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பதில்லை. அந்த நாடுகளும் அவர்கள் இதுபோன்ற தவறுகளைச் செய்தால் அதற்குக் குடியைக் காரணம் காட்டி அவர்களை விடுவதும் இல்லை. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் கதையாக குற்றம் செய்தவரை விட்டுவிட்டு அவர்கள் மற்றவர்களைச் சாடுவதும் இல்லை.
இங்கே என்ன நடக்கிறது? படித்தவர், படிக்காதவர் என்ற எந்த வித்தியாசமுமின்றி குடித்துவிட்டுச் சாலையில் அலங்கோலமாக விழுந்துகிடப்பவர்களைக் காண முடிகிறது. குடித்துவிட்டு, தான் பேச நினைத்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் குடியின் பின்னே மறைந்து கொண்டு பேசுவதும், தணித்துக் கொள்ள நினைத்த வேட்கையையும் வெறியையும் அதையே காரணமாக்கி, தீர்த்துக் கொள்வதும்தான் நிகழ்கிறது. குடித்துவிட்டு வண்டியை ஓட்டி உயிர்களை கொல்வதும் இவர்கள்தான்.
குடியில் இருப்பவருக்கு ஒன்றுமே தெரியாது என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன். சாலையில் ஒருவர் ஒருநாள் அவருக்குத் தெரிந்த அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பேசிக் கொண்டு இருந்தார். யார் யாரோ அவரை என்ன சொல்லியும் அவர் கேட்கவில்லை. ஒருவர் வந்து ஓங்கி ஓர் அறைகொடுக்க, குடிகாரர் அதற்குப் பிறகு பேசிக் கொண்டு அந்த இடத்தில் நிற்கவில்லை. நிச்சயம் அவர்தான் வாங்கிய அடியை அவர் வீட்டில் உள்ள மனைவிக்கோ, பிள்ளைகளுக்கோ பரிசளித்திருப்பார். அந்தக் குடியிலும் அவருக்கு வீடு எது என்று தெரிகிறது. அவருடைய மனைவி, பிள்ளைகள் என்று யார் மீது வன்முறையைச் செலுத்த வேண்டும் என்ற தெளிவும் இருக்கிறது. இவர்களை எப்படிக் குடியின் ஆதிக்கத்தில் ஒன்றுமே தெரியாமல் தவறு செய்பவர்கள் என்று சொல்ல முடியும்?
மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் பெண்கள் உடையணிந்தால் தவறு என்று பொங்கி, லெக்கின்ஸ் என்ற உடைக்காகப் பெண்களைப் படம்பிடித்து விமர்சிப்பவர்கள், ஏன் டாஸ்மாக் கடை வாசலில் ஆடை விலகி விழுந்து கிடப்பவரைப் படம் பிடித்து ஆடை கலாச்சாரம் பற்றி அல்லது குறைந்தபட்சம் குடியின் விளைவுகளைப் பற்றி பேச முயற்சிப்பதில்லை? நாளை ஒருவேளை நீங்களும் அப்படி விழுந்திருக்கும் நிலை வரக்கூடும் என்ற பயம்தான் காரணமா?
காதல் தோல்வி என்றால் குடி, வேலை கிடைக்கவில்லை என்றால் குடி, விரக்தி என்றால் குடி, சந்தோஷம் என்றால் குடி, குறிப்பிட்ட இலக்கை எட்டினால் குடி, ஊதிய உயர்வு என்றால் குடி, சுற்றுலா என்றால் குடி, சம்பளம் போட்ட முதல் நாள் என்றால் குடி, சனிக்கிழமை இரவு என்றால் குடி, திருமணம் என்றால் குடி, பிறந்த நாள் என்றால் குடி, இப்படியேதான் திரைப்படங்களும் திரை நாயகர்களைக் காட்டுகிறது.
எல்லாவற்றுக்கும் குடியை நாடும் இத்தனை பலவீனமான மனதைக் கொண்ட கதாநாயகர்கள்தான் தன்னை விட வலுவான வில்லனைப் புரட்டி புரட்டி எடுக்கிறார்கள்... திரையில் சேவை செய்கிறார்கள். தங்கள் காதலிகளைப் பற்றிக் காதலைப் பற்றி கசியவிடக்கூடிய பாடல்கள் எழுதுகிறார்கள். குடித்து, புகைத்து அதை எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்தவர்கள்தாம் பின்னாளில் தலைவர்கள் என்று சாதாரண ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்கள். எந்த ரசிகனுக்கும் 'குடிக்காதீர்கள்.. புகைக்காதீர்கள்' என்று முன்னணி நடிகர்கள் தொடர்ந்து குரல் கொடுப்பதாக இதுவரை நான் கேள்விப்படவேயில்லை.
இன்னும் சொல்லப்போனால், சில நடிகர்கள் ''நான் திரையில் மட்டுமே புகை பிடிக்கிறேன். நிஜ வாழ்வில் புகைப்பிடிப்பதில்லை. வேண்டுமானால், நீங்கள் நிஜ வாழ்வில் உள்ள என் கேரக்டரைப் பின்பற்றுங்கள்'' என்று புகைப்பிடிப்பது குறித்து தன்னிலை விளக்கம் அளிக்கிறார்கள்.
'தலைவா தலைவா' என்று விளம்பர பதாகைகளுக்குப் பால் ஊற்றுபவர்கள் வீட்டில் பசியோடிருக்கும் தன் பிள்ளைகளுக்குப் பால் வேண்டுமே என்று நினைக்கிறார்களா?
பெண்களைத் தாறுமாறாய் எழுதும் எவரும் தன் வீட்டில் பெண் உறவுகள் இருக்கிறார்கள், அவர்களையும் சேர்த்தே இழிவு படுத்துக்கிறோம் என்று நினைக்கிறார்களா?
உண்மையை உடைத்துச் சொல்ல வேண்டுமென்றால், ஆண்கள் உலகம் பெண்களைச் சார்ந்தே இயங்குகிறது. ஆனால், அத்தகைய பெண்களை இழிவுபடுத்தியே பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனவக்கிரங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதற்கு குடியென்ற ஒன்றை, துணைக்கு அழைக்கிறார்கள். இறுதியில் தன்னையும் அழித்துக் கொண்டு குடும்பத்தையும் அழிக்கிறார்கள்.
அரசாங்கம் மூடுகிறதோ இல்லையோ குடிமகன்கள் தான் குடிக்கக் கூடாது. தம் பிள்ளைகளை அனாதையாக்கி சமூகத்தில் அவர்களை நிராதரவாய் விடக்கூடாது என்று நினைத்தால் மட்டுமே விடியல் சாத்தியம்.
அதுவரை தினம் தினம் அப்பாவை, அம்மாவை இழந்துத் தவிக்கும் பிள்ளைகள் பெருக்கிக்கொண்டேதான் இருப்பார்கள், அவர்கள் அனைவருக்கும் அம்மாவாய், அப்பாவாய் மாற, அரவணைத்துக்கொள்ள இங்கே அத்தனை தாயுள்ளத்தோடும் கருணையோடும் எந்த அரசியல் தலைமையும், அமைச்சர்களும் இல்லை.
ஆனால், எனக்கு இப்போது ஒரு நம்பிக்கை முளைத்துள்ளது.
மழை - வெள்ளத்தில் நமக்கு நாமே உதவி செய்துகொண்டதைப் போல, இதற்கும் ஒவ்வொரு குடிமகனும் மனதுவைத்து களம் இறங்கினால் மட்டுமே மாற்றம் சாத்தியமாகும்.
மக்களைக் காக்க வெள்ளத்தில் நீண்ட உதவிக்கரங்கள், நம் குடிமக்களைக் காக்க 'தண்ணீரில்' தத்தளிப்போரை மீட்க நீளூமா?

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/article8004498.ece#comments

Monday 14 December 2015

மலர்ப்பலிகள்


ஆந்திராவில் மூன்று வயது குழந்தை மின்தூக்கியில் (லிப்ட்) மாட்டிக் கொண்டு இறந்து விட்டது. இப்போது மிக முக்கியக் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். 
ஏன் மின்தூக்கியை இயக்கும் ஊழியர் இல்லை?
வேறு யாரும் ஏன் உடன் இல்லை, ஏன் கேமரா இல்லை?
மழலையர் பள்ளிகளுக்கு மின்தூக்கி அவசியமா?
இந்தக் கேள்விகளை எழுப்ப ஓர் உயிர் போயிருக்கிறது. 

டெங்கு காய்ச்சலில் சில குழந்தைகள் பலியானப்பின்னரே சில பள்ளிகள் கொசுக்களை ஒழிக்க முயற்சி எடுத்துக்கொண்டது. மிகுந்த பணம் பறிக்கும் பள்ளி அது, இரண்டு குழந்தைகள் டெங்கு காய்ச்சலில் இறந்த பிறகு, ஏன் இப்படி என்ற கேள்விக்குப் பள்ளி நிர்வாகம் பெற்றோர்களைக் கொசு மருந்து வாங்கித்தரச் சொல்லி இருக்கிறது! 

குழந்தைகளைப் பள்ளிக்கு படிக்க அனுப்பும்போது அவர்களுக்கு இவையெல்லாம் நாம் சொல்லி கொடுக்க வேண்டி இருக்கிறது; 

 1. குட் டச் பேட் டச் என மற்றவர்கள் குழந்தையின் உடலில் எந்தப் பாகங்களில் தொடலாம் தொடக்கக் கூடாது என்று,
 2. வெள்ளித் தங்கம் என்று எதுவும் வேண்டாம், அது உனக்கு ஆபத்தாய் முடியலாம் என்று,
 3. பள்ளி விட்டவுடன் வீட்டில் இருந்து அம்மாவோ, அப்பாவோ, உறவினரோ வரும்வரை வேறு யாரும் அழைத்தாலும் போகக்கூடாது என்று,
 4. விளையாடும்போது ஒருவரை ஒருவர் தள்ளிவிடக் கூடாது, அடிபட்டுவிடும் என்று,
 5. நீச்சல் குளத்தில் விளையாடும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை என்று,
 6. ஆசிரியரை எதிர்த்துப் பேச வேண்டாம், அமைதியாய் இரு, பெற்றவர்களிடம் சொல் என்று...

பள்ளிகளே இன்னமும் எத்தனை சொல்ல வேண்டும் எங்கள் பிள்ளைகளுக்கு? 
சொல்லாமல் விட்டதும் இருக்கிறது. பெற்றவர்களின் இயலாமையில் இரண்டு வயதிலேயே உங்களைப் பள்ளிக்குத் துரத்துவோம் அல்லது புறாக்கூண்டு போன்ற கட்டிடங்களில் பள்ளி என்று சேர்ப்போம். அங்கே உங்களுக்குத் தீ விபத்து ஏற்பட்டால், யாரேனும் வெடிகுண்டு வைத்துவிட்டால், புதியதாய் உன் பள்ளியின் மின்தூக்கியில்... பிள்ளைகள் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கும் முடியாது எங்களுக்கும் தெரியாது!

 ஒன்றாம் வகுப்பில் படித்த என் மகன், வீட்டுப் பாடங்களை எழுதுவதில்லை, வகுப்பில் பாடங்களையும் எழுதுவதில்லை, இரண்டையும் எழுத வையுங்கள் என்று ஆசிரியை எனக்குக் கடிதம் அனுப்பினார். என்னவென்று சொல்லுங்கள் வீட்டுப்பாடங்களை எழுத வைக்கிறேன். வகுப்பில் எழுத வேண்டியதை நீங்கள்தான் எழுதவைக்க வேண்டும் என்று பதில் கடிதம் எழுதினேன். வந்து சந்திக்குமாறு அழைப்பு வந்தது. சில பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு நான் என்ன செய்வது ஒரு வகுப்பில் ஐம்பது பிள்ளைகள் என்று சொல்லிய அவரின் நிலைப் பரிதாபமாய் இருந்தது. பள்ளிகளில் இதுபோன்று ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களைத் திணித்தால் குழந்தைகளின் மீது அக்கறையும் கவனமும் எப்படி வரும்? நாமும் பெரிய பள்ளிகள் என்ற மாயையில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்! 
   
பணம் பறிக்கும், விளையாட்டை மறுக்கும், பெற்றவர்களை அடிமைப்போல் நடத்தும், பிள்ளைகளை எந்திரங்களாக நினைத்து அடக்கும் பள்ளிகளைப் பெரிய பள்ளிகள் என்று கொண்டாடுகிறோம். அங்கீகாரமே இல்லாத பள்ளிகளைக் கூட மிகப்பெரும் பின்புலம் கொண்ட முதலாளிகளின் கவர்ச்சி விளம்பரங்களில், பள்ளிக்கூடத்தில் திரைப்பட நடிகை நடிகையரின் பங்கேற்பு எனும் கவர்ச்சியில் பிள்ளைகளைக் கொண்டு போய்த் திணிக்கிறோம். சிறிய பள்ளிகள் என்றாலும் அங்கும் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை!

கல்வி ஏன் இன்னும் தனியார் வசம்? அரசாங்கப் பள்ளிகளில் சாதிப் பாகுபாடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள்  பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. எந்த அரசியல்வாதியின் குழந்தைகளும், அமைச்சர்களின் குழந்தைகளும் அரசாங்கப் பள்ளிகளில் இல்லை. அரசுப் பள்ளிகளில் அரசவையில் இருக்கும் அமைச்சர்களே நம்பிக்கைக் கொண்டு தங்கள் பிள்ளைகளைச் சேர்க்காத போது பெரும்பாலான மக்கள் எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?

 தமிழ்த் தமிழ் என்று முழங்கும் அரசியல்வாதிகளின் குழந்தைகள் ஊட்டி கான்வென்ட்டில் அல்லது அவர்களின் பிரத்தியேகப் பெரும் பள்ளிகளில்!
 அமைச்சர்களும் அதிகாரிகளும் அரசாங்கப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பார்கள். மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் உண்டு, ஆனால் அங்கே சாமானியனின் பாமரனின் குழந்தைகளுக்கு இடமில்லை.

 இரண்டாயிரம் கோடிகளுக்கு மேல் சாமானியர்கள் டாஸ்மாக்கில் கொட்டுகிறார்கள். அந்தப் பாவத்தில் விளைந்த வருமானதிற்கு ஈடாய் நீங்கள் இலவசக் கல்வியை எந்தப் பேதமுமின்றி எல்லோருக்கும் ஈந்தால் என்ன?

நாம் கடந்த சில நிகழ்வுகள்:
இரண்டாயிரத்து நான்காம் ஆண்டுத் தொண்ணூற்று நான்கு இளந்தளிர்கள் உயிரோடு எரிந்துக் கருகினர் கும்பகோணத்தில். பள்ளிகளில் இப்போது தீப்பிடித்தால் அவசரக் கால வழி என்று ஏதும் உள்ளதா? நெருப்பை அணைக்கச் சாதனங்கள் எல்லாப் பள்ளிகளிலும் உள்ளதா, அவை இயங்கும் நிலையில் உள்ளதா? கடைசியாய் அதிகாரிகளே நீங்கள் எப்போது சோதனைச் செய்தீர்கள்?

 அடுத்து மூன்று வருடங்களுக்குப் பின்பு ஒரு குழந்தை, பள்ளி வாகனத்தின் ஓட்டையில் இருந்து விழுந்து இறந்தது? கடைசியாய் நீங்கள் சோதனைச் செய்தது எப்போது? மழையில் அரசாங்கப் பேருந்தில் ஓட்டுனர் குடைப்பிடித்து வண்டி ஓட்டுகிறார், உங்கள் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு நீங்கள் இப்பள்ளிகளை எப்படிக் கேள்விக் கேட்பீர்கள்?

 பள்ளி நீச்சல் குளத்தில் குழந்தை இறந்தது. நீங்கள் கடைசியாய் ஆய்வு செய்தது எப்போது? ஐந்தாயிரத்துக்கு மேல் பிள்ளைகள் இருக்கும் பள்ளியில், ஒரு சேர முப்பது குழந்தைகள் நீச்சல் குளத்தில் இறங்கும் பள்ளியில் எத்தனை நீச்சல் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள்?

 பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு, கத்திகுத்து, சாதிப்பாகுபாடு... வரிசையாய் நீள்கிறது பட்டியல் உங்களைக் கேட்க எங்களை நாங்களே கேட்டுக்கொள்ள!

 இதற்காகப் போராளி ஒருவன் முளைத்தால் அவனை முடக்கப் பல்வேறு ஆயுதங்கள் உண்டு இங்கே! 

 தனியார் முதலாளிகள், ஆசிரியப் பெருந்தகைகள், பெற்றோர்கள் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று யாருடைய ரௌடிகள் என்றும் யாருடைய ஆணவத்தாலும் அலட்சியத்தாலும், எந்த உயிர் போனாலும் உங்களின் எந்த நிவராணமும் அந்த மழலைகளின் உயிர்களைத் திருப்பித் தாராது!

 ஒவ்வொரு ரூபாய் நோட்டுக்காகவும் உங்கள் மனசாட்சியை விற்று நீங்கள் போடும் கையெழுத்தும், வெறும் பள்ளிகளையும் கட்டிடங்களையும் பாலங்களையும் அசைக்கவில்லை பல்லாயிரக்கனக்கான உயிர்களை அசைக்கிறது. அந்த ரூபாய்த் தாள்களை உற்றுப் பாருங்கள் ஏதோ ஓர் உதிர்ந்த மழலையின் கடைசிச் சிரிப்புத் தெரியும்.

போதும்! உங்கள் அலட்சிய ஓட்டைகளைச் சுட்டிக் காட்ட இன்னமும் வேண்டுமா உங்களுக்கு 
ரத்தம் ஒழுகும் மலர்ப்பலிகள்?

http://www.pratilipi.com/read?id=5766040617222144
 

Friday 11 December 2015

மூக்கைப் பிடித்துக்கொண்டு கடந்து போகவும்

ஸ்ரீபெரும்பத்தூரில் பதிவுத்துறை அலுவலகத்திற்குச் சென்ற போது, கழிவறையை உபயோகப்படுத்த எண்ணி, அங்கிருந்த ஊழியர்களைக் கேட்டபோது, அவர்கள் உபயோகத்திற்கென்று வைத்திருந்த கழிவறையைக் கைகாட்டினார்கள்.....அதைப் பார்த்ததும் அந்த ஊழியர்களின் நிலையை எண்ணி மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் வந்தது, இந்த அலுவலகம் என்றில்லை, பெரும்பாலும் சிறு வணிக நிலையங்கள், மக்கள் அன்றாடம் வந்து போகும் அலுவலகங்கள் என்று அத்தனையிலும் கழிவறை என்பது திகிலறைதான்

நம் மக்களுக்குப் பெரும்பாலும் கழிவறை என்பது அதிக முக்கியத்துவமில்லாத ஓர் அறை, தோழிக்கென வாடகைக்கு ஒரு வீடு பார்க்கப் பல நாட்களாய்த் திரிந்தேன், சிறிது முதல் பெரிதானப் பல அடுக்கு மாடி குடியிருப்புக்களில் கூடக் கழிவறை என்பது ஒரு வேண்டாத அறையாகத்தான் புழக்கத்தில் இருந்தது, வீட்டுத் தரகர், புத்தம் புதிய வீடொன்று மைலாப்பூரில் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அழைத்துச் சென்றார், அந்த வீட்டில் கழிவறை எப்படி இருந்தது என்றால், அந்த அறையில் ஓர் ஆள் நுழைவதே மிகசிரமமான விஷயம் என்று தோன்றுமளவிற்கு மிகச்சிறியதாய் ஒரு பொந்து போன்ற ஒரு நுழைவாயில், அதைப் பார்த்ததே போதும் என்று வந்துவிட்டேன்.

குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும்போது, நிச்சயம் கழிவறையைத் தேடிச் செல்லும் சந்தர்ப்பங்கள் வரும் , வந்ததுண்டு, அந்த வகையில் சென்னையில் பிரதான வீதியில் இருக்கும் வணிக அங்காடிகளின் நிலையும் பயங்கரம்தான், நாள் முழுதும் நின்று கொண்டே வேலை செய்யும் பணியாளர்களின் ஒரு குறைந்தப்பட்சத் தேவையில் கூடச் சுகாதாரம் இல்லை
இந்தப் பேய் மழையில், இப்போது ஏன் கழிவறைப் பற்றிய கருத்து என்று யோசிக்கிறீர்களா ? சாதாரண நாட்களிலேயே இந்த நிலைமை என்றால், இந்த மழையில் மக்களின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், முகாம்கள் என்று பல நூறு மக்களை ஓர் இடத்தில் அரசு தங்கவைக்கிறது , அங்கே ஆயிரம் பேருக்கு நீங்கள் உணவு கொடுக்கலாம், நான்கைந்துக் கழிவறைகளை வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வார்கள், குறைந்தபட்சம் சுகாதார வசதியைச் செய்து தராமல் , மக்களுக்கு நீங்கள் மருத்துவ முகாம்களையும், மருந்துகளையும் தந்தென்ன பயன் ?

ஆயிரத்து நூறு கோடிக்கு மேல் நிதி வந்துக்கொண்டிருக்கிறது, இருப்பினும் இதற்கு முன்பே கழிப்பறை வசதி இல்லாத மாநகராட்சிப் பள்ளிகளுக்கும், ஊர்களுக்கும் இந்த நிதியில் இருந்தாவது அந்த வசதியை செய்து கொடுங்கள்!
கழிப்பறை என்பது உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கான அடிப்படை, வீடு முழுக்கச் சாம்பிராணிப் போட்டுச் சூடம் ஏற்றினாலும், கழிப்பறை அசுத்தமாய் இருந்தால், வீட்டில் எந்தக் கடவுளும் அதிர்ஷ்டமும் வாசம் செய்யாது, ஆரோக்கியமே எல்லாவற்றிக்கும் அடிப்படை, கழிப்பறை என்பது உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் அறை, அதன் சுத்தமும் சுகாதாரமும் ஆரோக்கியத்திற்கு அவசியம்

தனியார் , அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், ரயில்கள் என்று எல்லா இடத்திலும் உணவறைப் போன்றே கழிவறையும் அவசியம்!

ஊழலையும், கழிப்பறையையும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நெடுநாள் நாம் கடக்க முடியாது , மோசமான நிலையை அடையும்போது இரண்டுமே நம் உயிருக்கு உலைவைத்து விடும், இயற்கை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!