Friday 11 December 2015

மூக்கைப் பிடித்துக்கொண்டு கடந்து போகவும்

ஸ்ரீபெரும்பத்தூரில் பதிவுத்துறை அலுவலகத்திற்குச் சென்ற போது, கழிவறையை உபயோகப்படுத்த எண்ணி, அங்கிருந்த ஊழியர்களைக் கேட்டபோது, அவர்கள் உபயோகத்திற்கென்று வைத்திருந்த கழிவறையைக் கைகாட்டினார்கள்.....அதைப் பார்த்ததும் அந்த ஊழியர்களின் நிலையை எண்ணி மனிதாபிமான அடிப்படையில் இரக்கம் வந்தது, இந்த அலுவலகம் என்றில்லை, பெரும்பாலும் சிறு வணிக நிலையங்கள், மக்கள் அன்றாடம் வந்து போகும் அலுவலகங்கள் என்று அத்தனையிலும் கழிவறை என்பது திகிலறைதான்

நம் மக்களுக்குப் பெரும்பாலும் கழிவறை என்பது அதிக முக்கியத்துவமில்லாத ஓர் அறை, தோழிக்கென வாடகைக்கு ஒரு வீடு பார்க்கப் பல நாட்களாய்த் திரிந்தேன், சிறிது முதல் பெரிதானப் பல அடுக்கு மாடி குடியிருப்புக்களில் கூடக் கழிவறை என்பது ஒரு வேண்டாத அறையாகத்தான் புழக்கத்தில் இருந்தது, வீட்டுத் தரகர், புத்தம் புதிய வீடொன்று மைலாப்பூரில் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்று அழைத்துச் சென்றார், அந்த வீட்டில் கழிவறை எப்படி இருந்தது என்றால், அந்த அறையில் ஓர் ஆள் நுழைவதே மிகசிரமமான விஷயம் என்று தோன்றுமளவிற்கு மிகச்சிறியதாய் ஒரு பொந்து போன்ற ஒரு நுழைவாயில், அதைப் பார்த்ததே போதும் என்று வந்துவிட்டேன்.

குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும்போது, நிச்சயம் கழிவறையைத் தேடிச் செல்லும் சந்தர்ப்பங்கள் வரும் , வந்ததுண்டு, அந்த வகையில் சென்னையில் பிரதான வீதியில் இருக்கும் வணிக அங்காடிகளின் நிலையும் பயங்கரம்தான், நாள் முழுதும் நின்று கொண்டே வேலை செய்யும் பணியாளர்களின் ஒரு குறைந்தப்பட்சத் தேவையில் கூடச் சுகாதாரம் இல்லை
இந்தப் பேய் மழையில், இப்போது ஏன் கழிவறைப் பற்றிய கருத்து என்று யோசிக்கிறீர்களா ? சாதாரண நாட்களிலேயே இந்த நிலைமை என்றால், இந்த மழையில் மக்களின் நிலையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், முகாம்கள் என்று பல நூறு மக்களை ஓர் இடத்தில் அரசு தங்கவைக்கிறது , அங்கே ஆயிரம் பேருக்கு நீங்கள் உணவு கொடுக்கலாம், நான்கைந்துக் கழிவறைகளை வைத்துக் கொண்டு மக்கள் என்ன செய்வார்கள், குறைந்தபட்சம் சுகாதார வசதியைச் செய்து தராமல் , மக்களுக்கு நீங்கள் மருத்துவ முகாம்களையும், மருந்துகளையும் தந்தென்ன பயன் ?

ஆயிரத்து நூறு கோடிக்கு மேல் நிதி வந்துக்கொண்டிருக்கிறது, இருப்பினும் இதற்கு முன்பே கழிப்பறை வசதி இல்லாத மாநகராட்சிப் பள்ளிகளுக்கும், ஊர்களுக்கும் இந்த நிதியில் இருந்தாவது அந்த வசதியை செய்து கொடுங்கள்!
கழிப்பறை என்பது உண்மையில் நம் ஆரோக்கியத்திற்கான அடிப்படை, வீடு முழுக்கச் சாம்பிராணிப் போட்டுச் சூடம் ஏற்றினாலும், கழிப்பறை அசுத்தமாய் இருந்தால், வீட்டில் எந்தக் கடவுளும் அதிர்ஷ்டமும் வாசம் செய்யாது, ஆரோக்கியமே எல்லாவற்றிக்கும் அடிப்படை, கழிப்பறை என்பது உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் அறை, அதன் சுத்தமும் சுகாதாரமும் ஆரோக்கியத்திற்கு அவசியம்

தனியார் , அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வணிக நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், ரயில்கள் என்று எல்லா இடத்திலும் உணவறைப் போன்றே கழிவறையும் அவசியம்!

ஊழலையும், கழிப்பறையையும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நெடுநாள் நாம் கடக்க முடியாது , மோசமான நிலையை அடையும்போது இரண்டுமே நம் உயிருக்கு உலைவைத்து விடும், இயற்கை உணர்த்திவிட்டுப் போயிருக்கிறது

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!