Tuesday 27 June 2017

கொல்லும் பெண்களையுமே இனி வருங்காலம் காணும்!

ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அடுத்துப் பிறந்த இரட்டைக்குழந்தைகளும் பெண் குரந்தைகளாகிவிட, மேலும் ஆண் குழந்தையில்லாததால், கணவர் தன்னிடம் சரியாக பேசாததால் தான் பெற்ற இரட்டை பெண் குழந்தைகளை பாலூட்டும்போது மூச்சுத்திணறச் செய்து கொலை செய்த தாய் என்ற செய்தியைப் படித்ததும் மூச்சுத்திணறி விட்டது! ஏற்கனவே நாட்டில் பாதி ஆண்கள் போதையில் மூழ்கியிருக்க, அக்குடும்பங்களை பெண்களே காப்பாற்றும் நிலையிலும் இன்னமும் இந்தப்பெண் குழந்தை வெறுப்பு இருப்பது கவலைக்குரியது!

இதில் அந்தப் பெண் எம்.எஸ்சி, பிட் பட்டதாரி, ஆனால் கணவரோ கூலித்தொழிலாளி, பெண் பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் வரதட்சணை செலவு என்பதைவிட, தன்னுடன் கடைசிக்காலத்தில் அந்தப்பெண் இருக்கப்போவதில்லை என்ற நினைப்புமே அந்தப் பெண்குழந்தைகளை பாரமாய் நினைக்க வைக்கிறது, படிக்க வைத்தும்கூட படிக்காத ஒருவருக்கு திருமணம் செய்துவிட்டு, பெண்குழந்தையை வெறுக்கும் குடும்பத்தில் உளவியல் ரீதியாக கணவரை மாற்றவோ, அல்லது அந்நப்பெண்ணை மீட்டெடுக்கவோ அந்தக்கல்வி உதவவில்லை!

பாகிஸ்தானில் எல்லைப்பணியில் தன் மகன் இருக்க, மூன்று மாதக்காலமாய் தன் மருமகளிடம் பாலியல் வன்முறை செய்த தன் கணவனை சுட்டுக்கொன்ற பெண் என்று ஒரு செய்தியின் விரிவினைப் படித்தப்போது, அந்தச் செய்தி தனக்குத்தெரிந்தும் குடும்ப கவுரவத்திற்காக, குடும்ப அமைப்புக்காக தான் எதுவும் செய்யமுடியவில்லை என்று அந்த இளம்பெண்ணின் கணவனும், சுட்டுக்கொல்லப்பட்ட தன் கணவன் எத்தனைச் சொல்லியும் கேட்கவில்லை என்று அந்தப்பெண்ணின் மாமியாரும் வாக்குமூலம் என்றதை படித்தப்போது, எங்கோ எல்லைக்கடந்து வாழும் சகோதரிகளின் அடிமை நிலை வேதனையைத் தந்தது!
உத்திரப்பிரதேசத்தில் பெண்கள் பொது இடத்தில் செல்போனில் பேசக் கூடாது என்ற செய்தியும், ஆண்கள் செய்யும் தவறுக்கெல்லாம் பெண்களே காரணமென்று வரும் செய்திகளும், எப்படியோ கூட்டிக்கழித்துப் பெண்களையே செய்தியாக்கும் மனிதர்கள் இங்கே எல்லாத்துறைகளிலும் நிரம்பியிருக்கிறார்கள் என்பதைத்தானே காட்டுகிறது?

நூறு சதவீதம் இடத்தை ஆண்கள் பெண்களுக்கு சமையலறையில் கொடுத்திருக்கிறார்கள், வீட்டுவேலைகளில் கொடுத்திருக்கிறார்கள், குடிமகன்கள் ஒருபடி மேலே போய் குடும்பத்தையே கட்டிக்காக்கவும், சம்பாதிக்கவும், குழந்தைகளை, குடும்பத்தை காப்பாற்றவும் ஆகிய எல்லாவற்றையுமே பெணகளுக்கென பெரிய மனதோடு ஒதுக்கியிருக்கிறார்கள், மற்றப்படி குறைந்தப்பட்சம் 33 சதவீதம் கூட வேறு எதிலும் பெண்களுக்கு கிடைத்திடவில்லை! கருத்தரிப்பு நிகழவில்லை என்றால் அதற்கும் பெண்ணிடமே குறை, கருத்தரிப்பு வேண்டாம் என்றால் அதற்கும் கூட பெண்களுக்கே பாதுகாப்புமுறைகளும், அறுவைசிகிச்சைகளும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்!

விவரிக்க விவரிக்க ஆயிரம் வரும் பெண்கள் பிரச்சனைகள் என்பது மறுக்கமுடியாத கசப்பான உண்மைதானே? எந்தப் பெண் காணாமல்போனாலும் "காதல்", எந்தத் திருமணமான பெண் ஓடிப்போனாலும் "கள்ளக்காதல்", எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானலும் "தகாத உறவு", "ஆடை", "ஒழுக்கம்", "இத்யாதி", "இத்தியாதி", இதைப்பெண்களே பேசுவதுதான் பெருங்கொடுமை! ஆணின் மறுமணத்திற்கு, குடிக்கு, போதைக்கு, ஒழுக்கத்திற்கு, முட்டாள்தனத்திற்கு, காமத்திற்கு, காதலுக்கு, சாலையில் வெட்டியாய் திரியும் நிலைக்கு, அலங்கோலமாய் விழுந்துக்கிடக்கும் காட்சிக்கு என்று ஒவ்வொன்றிற்கும் சப்பைக்கட்டுக் கட்டும் சமுதாயம், அல்லது அதை ஏற்றுக்கொள்ளும் சமுதாயம் பெண்ணின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும், வாழ்க்கைக்கும் பல்வேறு பெயர்களைச் சூட்டி கேலிப்பேசி பகிர்கிறது, மகிழ்கிறது, அந்தச்சமுதாயம் என்பது பெண்களாலும் நிறைந்திருக்கிறது!
இவன் ஆண், இவள் பெண், இந்தப்பணியைச் செய்தது ஆண் அல்லது பெண் என்று பாலினத்தை அழுத்தி, முதன்மைப்படுத்தி வரும் செய்திகள் தவிர்க்கப்பட வேண்டும், எந்தக் குற்றத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் நடத்தையை விமர்சிப்பதை தவிர்க்கவேண்டும்,உதாரணத்திற்கு கால் டாக்ஸி டிரைவர் பெண்ணிடம் தகராறு செய்தச்செய்தியில், டாக்ஸி டிரைவரின் வறுமையான பின்புலத்தைக்கொண்டு நற்சான்றிதழும், பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையில் இரண்டாவது திருமண உறவை சம்பந்தப்படுத்தி அவருக்கு களங்கம் விளைவித்தார்கள், இதுப்போன்ற வக்கிரங்கள் அனுமதிக்கப்படக்கூடாது!

கல்வி பெண்களுக்கும் ஆண்களுக்கும் அவசியம்தேவை, அதுவும் தரமான கல்வி, எல்லாவற்றிலும் பெண்களை வணிகப்பொருளாக்கும் நிலை மாறவேண்டும், சமையலறைக்கும், நகைக்கடைகளுக்கும், ஆணினத்தின் உள்ளாடைகளுக்கும் பெண்களும், சாகசத்திற்கும், சாதனைகளுக்கும் ஆண்களும் என்ற கீழ்த்தரமான விளம்பர உத்திகளும், பெண்களுக்கு மட்டும் போதனைகளும் கட்டுப்பாடுகளும் என இந்தச்சமுதாயம் இப்படியே போகும் என்றால் குழந்தைகளைக் கொல்லும் மனச்சிதைவுக்கொண்ட பெண்களையும், ஆணுறுப்பைச் சிதைக்கும், அவர்களைக் கொல்லும் பெண்களையுமே இனி வருங்காலம் காணும்!

அப்பா

என் அப்பாவிற்கு நான் ஐந்தாவது பெண், முதல் பெண்ணும் கடைசிப்பெண்ணும் எஞ்சியிருக்க மற்ற இரண்டு ஆண்பிள்ளைகளும், ஒரு பெண்குழந்தையும் இறந்துப்போனார்கள், பள்ளியில் படித்தப்போதும், அதற்குபின்பும் அவர் இறப்பு வரையில் அவரை எதற்காகவும் கையேந்த வைத்ததில்லை, ஆசைப்பட்ட படிப்பிற்காகவும் அவரை அலைய வைத்ததில்லை, அவரை முதியோர் இல்லத்திலோ, நடைபாதையிலோ விட்டுவிடவில்லை, நான் விருப்பட்டப் படிப்பை படிக்க முடியாமல் போனதற்காக, வறுமையான ஒரு வாழ்க்கை நிலையைத் தந்ததற்காக, குடித்துவிட்டு அவரை அடித்ததில்லை, அவரை அவமானப்படுத்தியதில்லை, சுட்டிக்காட்டி குற்றம்குறைக்கூறியதில்லை, அவரின் இறுதிநாட்கள் என்பது பத்துமாதம் படுக்கையில் கழிந்தது, மூத்திரத்தையோ மலத்தையோ புண்களையோ சுத்தம் செய்ய முகஞ்சுளித்தில்லை, இறந்தப்பிறகு உறவினர் சூழ, தகுந்த மரியாதையோடு, என் உழைப்பின் வருமானத்தைக்கொண்டே கடன் வாங்காமல் மிகச்சிறப்பாக அனுப்பிவைத்தேன், என் திருமணமோ, வாழ்க்கையோ எந்தச் சூழ்நிலையிலும் பெற்றவர்களை விட்டுவிடவில்லை, எந்தத் துயரத்திலும் தோல்வியிலும் தற்கொலைச் செய்துக்கொள்ளவில்லை, இது சுயபுராணம் அல்ல, இது பெண்பிள்ளைகளை வெறுக்கும் தகப்பன்களுக்கான கேள்வி மட்டுமே, எந்தவிதத்தில் என்னைப் பெற்றவர் தாழ்ந்துப்போனார்? 

ஒன்றே ஒன்றை மட்டும் அவர் சிறப்பாகச் செய்தார், "என் முடிவுகளை நானே எடுக்கவேண்டும், அதை எதிர்கொள்ள வேண்டும், கல்வியும் அறிவும் அவசியம், அதைவிட துணிச்சலும் நேர்மையும், உடல் மற்றும் மன பலமும் மிக அவசியம்" என்று என்னை வளர்த்த விதத்தில் "தன்னம்பிக்கை" என்ற பெருஞ் செல்வத்தை எனக்காக விட்டுச் சென்றிருக்கிறார், அதுதான் அவருக்கு கடைசிகாலம் வரை பெண்ணென்ற உருவத்தில் மகளாக தாங்கிப்பிடித்தது, நீங்கள் உங்கள் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் எதை சேர்த்து வைக்கிறீர்கள்? சற்றே யோசியுங்கள், உங்கள் மீதான உங்களின் அவநம்பிக்கையே பெண் குழந்தைகளின் மீதான வெறுப்பு என்பது நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை!

சிசிடிவி

கடவுளைப் பூட்டிவைத்து
மனசாட்சியை புதைத்துவைத்த
இருண்ட ஒரு காலக்கட்டத்தில்
#சிசிடிவி கேமிராக்கள்
உயிர்பெற்றன!

அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பாஆஆஆஆஆ

லண்டனில் நடக்கும் தொடர் வன்முறைகள் இப்போது தீ விபத்து, பல உயிரிழப்புகள், கவலைக்கொள்ள வேண்டிய நிகழ்வுகள்தான், அதே வேளையில் சென்னை சில்க்ஸின் தீ விபத்தை, அத்தனை நெருக்கடியான இடத்தில் அத்தனை மாடிக்கட்டிடம் கட்ட அனுமதித்ததை, விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்ற ஆறுதலாலும், நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுத்துப் பார்த்துக்கொண்டது என்ற சப்பைக்கட்டினாலும் வசதியாக மறந்துவிட்டோம்!

ஊழலின் குளறுபடிகள் எப்போதும் தீ விபத்தாக, சாலை விபத்தாக, கட்டிட விபத்தாக, அணுவுலை விபத்தாக, தண்ணீரில் நச்சாக, உணவுகளில் கலப்படமாக, மரபணு மாற்றப்பட்ட விதைகளாக, தவறான மருந்துகளாக, தடைச்செய்யபட்ட மருந்துகளாக, அறுந்துதொங்கும் மின்கம்பிகளாக, குழிகளில் உறங்கும் அவ்வப்போது வெளியே தலைநீட்டும் கேபிள்களாக, திடீரென்று பெருக்கெடுத்து ஓடும் மழைநீராக, திறந்துக்கிடக்கும் சாக்கடைகளாக, சாதிய நாற்றமாக, மதத் துவேஷமாக நாடெங்கும் பரவிக்கிடப்பதை ஏனோ வசதியாக மறந்துவிடுகிறோம்!

அரசு செய்யாததை ஒவ்வொரு முறையும் ஒரு பொதுநல வழக்குத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது, நீதிமன்றமே இதையெல்லாம் ஏன் தாமாக முன்வந்து வழக்காக பதியக்கூடாது, ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்கள் இவைகளைச் செய்ய வேண்டும், கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்றால் நாட்டில் சரிபாதி சிறைச்சாலைகளைத்தான் கட்டவேண்டும், பெரும்பான்மையான அதிகாரிகளை, ஆட்சியாளர்களை பதவியைவிட்டு விலக்கவேண்டும்! ஆனால் இது ஒருபோதும் இங்கே நிகழாது, நடக்கும் ஆட்சியின் மறைந்த முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கு நடந்த வேகத்தில், அவரே மறைந்துவிட்டார், மற்றொருவர் பொதுச்செயலாளராகிவிட்டார்!

ஆட்சி அமைப்பதில் உள்ள வேகமும் ஆர்வமும் எந்த அரசியல்வாதிக்கும் மக்கள் பணியில் இல்லை, இங்கே யார் முதல்வர் ஆனாலும், செயல்படாத முதல்வருக்கும் கூட "சப்பைக்கட்டு" கட்ட இங்கே சாதியப்பாசம் கைக்கொடுக்கிறது, மறைந்த முதல்வர் முதல் இப்போது இருக்கும் முதல்வர் வரை, செயல் வேகம் என்பது "சாராயக்கடைகளை" திறந்து வருமானத்தை அதிகரிப்பதில் இருந்தது/ இருக்கிறதே தவிர மற்ற எதிலும் இல்லை!

இங்கே ஏன் ஊழலற்ற ஆட்சி வரமுடியாது? "மனம் போல் வாழ்வு" என்பார்கள், அதற்கு என்ன வேண்டும்? நேர்மறைச்சிந்தனை, அந்த நேர்மறைச்சிந்தனை என்பது நமக்கு எப்படி இருக்கிறது? "ஊழல் செய்தாலும் மக்களுக்கு நல்லது செய்தால் பரவாயில்லை" என்ற ரீதியில் தான் நம்முடைய "நேர்மறைச்சிந்தனை" உள்ளது, அந்தச் சிந்தனைக்கேற்ப இங்கே அதிகாரிகள், ஊழியர்கள், மந்திரிகள், ஆட்சியாளர்கள் செயல்படுகிறார்கள், இந்த எண்ணம் படித்தவர்கள், பாமரர்கள் என்று எல்லோருக்கும் பொதுவில் உள்ளது, ஊழல் செய்யும் போது, "நம்ம ஆளு" என்ற சாதியப்பாசமும் உடன்தொக்கத்தொகைப்போல மக்கள் மனதில் உடன் வருகிறது!

சாலையில் மாதங்களில் சில நாட்களில் காவலர்கள் மும்முரமாய் வாகனம் ஓட்டுபவர்களை விதிமீறல்களுக்காக பிடிப்பார்கள், சில நாட்களில் மீண்டும் அதே விதிமீறல்கள் நிகழும், விபத்துக்கள் தொடர்கதையாகும், அதேதான் இங்கே அரசியலிலும் நிகழ்கிறது, மிகச்சிலரே சமூகத்துக்கும் நாட்டுக்கும் கவலைக்கொள்கின்றனர், துரதிர்ஷ்டவசமாக அவர்கள் பொதுநல வழக்குப்போட்டு நடையாய் நடக்கிறார்கள், ரவுடிகளால் கொல்லப்படுகிறார்கள், அல்லது ஏதோ பொய்வழக்கின் பிண்ணனியில் தீவிரவாதி என்ற முத்திரையில் சிறையில் இருக்கிறார்கள், அல்லது குற்றவாளியாக மாற்றப்படுகிறார்கள், மாறுகிறார்கள்!

இந்த நாட்டில் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு இடத்திலும் விதிமீறல்கள் நிகழ்ந்துக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு நிமிடமும் மரணங்கள் நிகழ்ந்துக்கொண்டேயிருக்கிறது, ஒவ்வொரு மணிநேரமும் ஏதோ ஒரு பொதுநல வழக்கு பதியப்படுகிறது, இதெல்லாம் ஆள்பவர்களுக்கு தெரியாதா? மாற்ற முடியாதா? மக்களால் தாமே தம்மை ஒழுங்குப்படுத்திக் கொள்ள முடியாதா? விதிகளை தான் மீறினால் ஒரு நியாயமும் மற்றவர் மீறினால் அநியாயம் என்று வெட்டி அறச்சீற்றம் கொள்ளும் மக்களும், சாலையில் விதிகளை மீறிச் செல்லும் வண்டி மந்திரியின், காவல்துறையின் வண்டியாய் இருக்கும்போது மாற்றத்தை அவர்கள் எப்படி ஏற்படுத்துவார்கள்??

மாறாத ஊழல்வாதிகளையே திரும்ப திரும்ப இலவசங்களுக்காகவும், சாதிக்காகவும் தேர்ந்தெடுக்கும் நமக்கு "மரணங்களும் இலவசம்தானே?" அது நமக்கு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், நம்முடைய இயலாமைக்கு ஆதரவாக, அதையும் கூட "வாழ்க்கை சிறிது" என்ற நேர்மறைச்சிந்தனையாகப் பெயர் சூட்டிக்கொள்வோம்!

மாட்டரசியல்

மாட்டரசியல் செய்துகொண்டு,
பிற மதத்தினரை
"இந்து" மதப்போர்வையில்
கொலைசெய்கிறார்கள்,
வர்ணாசிரம விதிமுறைகளில்
உழன்றுகொண்டு
சாதியின் அடிப்படையில்
கொலைசெய்கிறார்கள்,
ஜிகாத் என்று கூவிக்கொண்டு
"இஸ்லாமிய" மதப்போர்வையில்
கொலை செய்கிறார்கள்,
"கர்த்தரின் கிருபையில்"
என்று பிரார்த்திக்கும்
மேலைநாடுகளும்
கச்சா எண்ணெய்க்காக,
சர்வாதிகாரத்திற்காக
கொலை செய்கிறார்கள்
செய்யும்
எந்தக் கொலைகளிலும்
மதமில்லை
மார்க்கமில்லை
மனிதமில்லை
தனிமனித காழ்ப்பும்
பெண்களின் மீதான இச்சையும்
காசுக்கு கத்தியெடுக்கும்
குயுக்தியும் மட்டுமே
நிறைந்திருக்கிறது
அத்தனை
வெறித்தனங்களுக்கும்
மதமென்றும் சாதியென்றும்
பெயரிட்டு
அரசியல் செய்யும்
சிலரை
இந்த மதக்கடவுளர்கள்
கொன்றாலே போதும்
இந்தப் பூமி
மூச்சுவிடும்!

தற்கொலைகள்







No automatic alt text available.

நேற்றிரவு நான்
தற்கொலைச் செய்துகொண்டேன்
அப்படித்தான் எல்லோரும்
சொல்கிறார்கள்

தெளிவாய் படித்து
பரீட்சை எழுதி
எதிர்ப்பார்த்த மதிப்பெண்
கிடைக்காதபோது
அப்பனுக்கு கடன்சுமை
தந்து
மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து
ஆற அமர வந்த
எதிர்ப்பார்த்த மதிப்பெண்ணில்
இந்த கல்வியமைப்பின்
கசப்பான வணிக
நோக்கத்தைக் காண
நேர்ந்தபோது

வாங்கியக் கடனின்
வட்டிக்காக
உழைத்துத்தேய்ந்த
அப்பனின் கூன்முதுகை
நிமிர்த்த முடியாதபோது

குடிகாரத் தமையனிடம்
சிக்கிச் சிதைந்த
அண்ணியின் கண்ணீரை
மவுனமாய் கடந்தபோது

உற்றத்தோழி
காதல் தோல்வியில்
கண் எதிரே
உத்திரத்தில் தொங்கியபோது

பக்கத்துவீட்டு பிஞ்சை
எதிர்வீட்டு மாணிக்கம்
கசக்கி கொன்ற
செய்தியின் போது

காதலித்து மணந்த
அடுத்தவீட்டு இசக்கியை
கர்ப்பக் கோலத்தில்
அவள் பெற்றோர்
வெட்டிச் சாய்த்தப்போது

நன்றாய் படித்த
சண்முகத்தை
டாஸ்மாக் கடையில்
அவன் அப்பன்
வேலைக்குச் சேர்த்தப்போது

குண்டுக்குழி கன்னத்துடன்
கட்டாயப் போதையில்
குழந்தைகளுடன்
பெண்கள் சாலையில்
பிச்சையெடுத்த போது

கடன் வாங்கி
ஓடிப்போன எதிர்வீட்டுக்காரன் மீது
புகார் கொடுக்கச்சென்ற
ஆனந்தியின் அம்மாவை
ஒரு இராத்திரி படுக்க அழைத்த
அந்த காவல்துறை அதிகாரியின்
கண்களைக் கண்டபோது

ஒரு மழைநேரத்துக்
காலையில் அவனுக்காக
காய்ச்சலுடன் கால்கடுக்க
காத்திருந்த வேளையில்
வராது சென்ற அவன்
அலட்சியத்தின்போது

ஆயிரம் நம்பிக்கைத்தந்து
காரணங்கள் சொல்லி
காசுக்காக அவன்
வேறொரு கழுத்தில்
தாலி பூட்டியபோது

மறுக்க மறுக்க
கேளாமல்
ஒரு குடிகாரச் சுப்பனுக்கு
அப்பன் கட்டிவைத்தப்போது

உழைத்து உழைத்து
தேய்ந்து
அடிஉதையில் கர்ப்பம்
கலைந்து குருதியாக
வெளியேறியபோது

முன்னம் காதலித்தவன்
இப்பொழுதும்
வைத்துக்கொள்கிறேன்
என்று அழைத்தப்போது

இப்படி
ஒவ்வொரு முறையும்
நான் செத்துப்போய்
அழுதபோது
ஒவ்வொருமுறையும்
என்னைக் கொன்றவர்கள்
கடந்தப்போது
கரிய விழிகளில்
கண்ணீருடன்
உறைந்துவிட்ட புன்னகையுடன்
என் மனம் நோக்கும்
கருணைக்காக காத்திருந்தேன்
அன்பெல்லாம் துன்பமாக
மாறிய வேளைகளில்
நம்பிக்கையெல்லாம்
தகர்ந்துப்போய்
நொடித்துப்போன வேளைகளில்
தோன்றாத எண்ணமெல்லாம்
நேற்றிரவு தோன்றியது விந்தைதான்

ஆமாம் நான் தற்கொலைச்
செய்துக்கொண்டேன்
அப்படித்தான் எல்லோரும்
சொல்கிறார்கள்

கிடத்தப்பட்டிருக்கும்
என் வெற்றுபிண்டத்தின்
மீது சிலருக்கு கருணைப்பொங்குகிறது
சிலருக்கு ஒழுக்கச்சீல
கற்பனைக்கதைகள்
நெஞ்சில் விண்டுகிறது

உறைந்துக்கிடந்த மனதை
அறியாதவர்கள்
துவண்டுக்கிடந்த மனதை
கொன்றவர்கள்
நம்பிக்கைத்துரோகம்
செய்தவர்கள்
நம்பிக்கைத்தந்தவர்கள்
எல்லோருக்கும் இதோ
இந்தச் சவம் கண்ணை
உறுத்துகிறது
சில மணித்துளிகளில்
சில வருடங்களில்
இந்தக் கதைகளும்
இந்தக் காட்சிகளும்
அவரவர் மனதைவிட்டு
அகன்றுவிடும்

ஏய்த்தவர்
சுரண்டியவர்
சுகப்பட்டவர்
சாகடித்தவர்
எல்லாம் வாழ
என்னைப்போல தற்கொலைச்
செய்துக்கொண்ட
இந்த ஆவிகள் சூழ்
உலகத்தில்
இந்தக் கோழைத்தனத்திற்காக
இப்பொழுது
நானும் வருந்துகிறேன்!

 

மூவர்ணக் கொடியும்

எல்லா துறையிலும்
ஊழல் செய்துகொண்டு
எல்லா வகையிலும் மக்களை
சிறுமைப்படுத்திக்கொண்டு
எல்லா காலத்திலும்
தண்ணீருக்காக
பிச்சையெடுத்துக்கொண்டு
எல்லா செலவினங்களிலும்
வரியென கொள்ளையடித்துக்கொண்டு
எல்லா விவரங்களையும்
தனிமனித சுதந்திரத்தையும்
ஆதார் என்று பிடுங்கிக்கொண்டு
நாள்தோறும் குற்றங்களை
நிகழவிட்டுக்கொண்டு
எதையும் மாற்றாமல்
திரையரங்கில் தேசியகீதம்
மட்டும் ஒலிக்கவிட்டு
நொந்துப்போன
அடிமை மக்களிடம்
தேசப்பற்றை வளர்க்கிறார்களாம்
மூவர்ணக் கொடியும்
வேதனையுடன் படபடத்து
பறக்கிறது!

மரணத்தின்_வெளிச்சம்!

Image may contain: one or more people

பட்டாபிக்கு ஏத்த ஜோடியென்று
அலமு மாமி நெட்டுயிர்த்ததில்
அத்தனை சிலிர்த்தது
ஏன் என்று இன்றுவரை
எனக்கு புரியவில்லை

ஒரே அலுவலகத்தில்
வேலைப்பார்த்தும்
கீதாவிடமோ மாலாவிடமோ
உனக்கு வராத காதல்
என்னிடம் ஏன் வந்தது
அவா வேறு சாதியென்றாய்
நினைவிருக்கிறது
பின்னாளில் அத்தைப் பெண்
பாக்கியத்திற்குச்
சொத்திருந்தாலும்
அதைப் பிரிக்க உடன்பிறந்தார்கள்
உயிருடன் இருந்தது
உனக்கு பிடிக்கவில்லை
அத்தைப் பாக்கியத்துக்கும்
அது புரியாமலில்லை

புக்ககத்தில் காலடியெடுத்து
வைத்த வேளையில்
அத்தையின் கண்களிலும்
அவளின் பெண்ணின் பார்வையிலும்
தப்பித்தலுக்கான ஆசுவாசத்தை
நீ பொறாமையென்றாய்
உன் விரல் தீண்டலில்
உன் பார்வையின் குரூரத்தை
நான் கவனித்தேனில்லை

ஒன்றாய் பணியிடத்தில்
வேறு வேறு பணி செய்தாலும்
உன்னைவிட அதிகமாக
உழைத்தாலும்
அதிகமான ஊதியத்தின்
கால்காசு பெற
உன் கால்கள் பற்ற வைத்தாய்
அடுத்திருக்கும் தங்கைகளுக்கு
அப்பனின் சம்பாத்தியம்
போததென
உன் முதல் தாக்குதலை
சகித்துக்கொண்டேன்
அது தோல்வியில்லை

காலையில் பெட் காபியில்
நீ தொடங்க
நான் அவ்வேளையில்
மதிய சமையலை முடித்திருப்பேன்
உன் பள்ளியெழுச்சிக்குப் பின்
உன் மடிப்புக் கலைந்த
சட்டைக்காக
என்னை சோம்பேறியென்றாய்
நிறைந்த வயிற்றுடன்
நீ முன்னே செல்ல
வயிற்றில் கால்பங்கு உணவுடன்
நான் பின்னே வர
"என் ஆத்துக்காரிக்கு மேக்கப்
செய்யவே நேரம் போதலை!"
என்று சுப்புவிடம் விட் அடித்துக்
கொண்டிருந்தாய்
என் வயிற்றில் எரிந்த நெருப்பை
கழுத்தில் இருந்த மாங்கல்யம்
தாங்கிக் கொண்டது
உள்ளே குவிந்த வெப்பத்தை
நீ அறிந்ததேயில்லை

அடுத்த சீட்டு
பங்கஜம் வற்புறுத்தி
வாங்கச் செய்த சேலையை
"யாரை மயக்க
இதுவெல்லாம்" என்ற நீ
சாதாரண சேலைக்கும்
"நான் என்ன பிச்சைக்காரனா
ஏண்டி வேஷம்?"
என்று துவேஷித்தாய்
சேலையில்லாமல்
நடுத்தெருவில் நின்றால்
உன் ஆண்மை பறிபோகுமா
என்ற குரூரம் ஏன் உதித்தது
நான் யோசிக்கவில்லை

கடும் காய்ச்சலில்
நானிருந்தாலும்
காலையில் காபி தொடங்கி
இரவில் புணர்ச்சி வரை
உன் உலகம் வழக்கம்போல்
இயங்கியது
"ஏன் லீவ் போடுறாய்
டிராமா பண்ணாமே கிளம்புடி"
என்ற உனக்கு
உன்னை தொற்றிய காய்ச்சலிலோ
உலகமே நின்றுவிட்டது
ஆருயிர் உனக்கு அலுவலகம்
செல்ல மனமில்லை
உடன் உனக்கு
பணிவிடை செய்ய
"ஆத்துக்காரிக்கும் தொத்துஜீரம்"
என்று இரட்டை அர்த்தத்தில்
கெக்கேபிக்கவேன இளித்து
எனக்கும் சேர்த்து
நான் நடத்தாத
நாடகத்தை
நீ அரங்கேற்றினாய்
எனக்கு சகிக்கவில்லை

பால்காரனிலிருந்து
கீரைக்காரத் தாயம்மா வரை
போலிகளில் ஒளிந்த
உன் உருவத்தில்
நீ காவியத்தலைவன்
நானுன் அடங்கா
அசட்டுக்குதிரை
அலுவலகம் செல்லும்போதும்
மேலாதிகாரியின் நினைவில் கூட
உன் வன்புணர்ச்சி
காவியக்கூடலாக விரியும்வண்ணம்
உன் வர்ணனைகள்
என்னை முகஞ்சுளிக்க வைக்கின்றன
முணுக்கென மூக்கில் விடைத்த
கோபம் கூட
சட்டென கரைந்துவிட்டது
இன்னமும் நான் கருவுறவில்லை!

காலத்தின் மாறுதலில்
உன் வஞ்சமும் வன்மமும்
உன்னை மரணமாய்
தழுவிய நாளில்
அலமுவுக்கும் அத்தைக்கும்
பொங்கிய கண்ணீரில்
சில துளிகள் கடனாய் தர
அவர்கள் சித்தமாய் இருந்தார்கள்
நானோ சித்தத்தில் இருந்த
சிறுதுளி பித்தத்தையும்
விரட்டிக்கொண்டிருந்தேன்
அழுது கரைய விரும்பவில்லை

காவியத்தலைவனின்
ஆண்மையில் குறையென்று
உறுதிசெய்த நாளில்
உன் நண்பனுடன்
நீ செய்த
காரியத்தில் எனக்கு தெளிவில்லை
எனினும்
கருப்பைக்குள் உன் ஆணாதிக்கம்
உருண்டு திரண்டிருக்கிறது
ஊரறியா ரகசியத்தை
என்னால்
ஏற்றுக்கொள்ளமுடியவில்லை

அழு அழு என்கிறது உலகம்
வயித்துப்பிள்ளைக்காரி வாய்விட்டழு
என்கிறாள் அத்தை
அவள் பெண்ணைக் காப்பாற்றிய
சாமர்த்தியத்தில் அவள் சிறு
துளி எனக்கு ஈந்தாளில்லை
இப்போது அவளின் இந்த ஈரத்தில்
எனக்கு உடன்பாடில்லை

மாப்பிள்ளையின் மரணம்
மைத்துனனின் மரணம்
என்று உறவுகள் உன் மரணத்தில்
கரைந்துக்கொண்டிருக்க
உள்ளுக்குள் எனக்கும் கரைந்து
குருதிக் கொப்பளிக்க
ஓரே நேரத்திலடைந்த
இரு விடுதலையில்
உலகம் சூட்டப்போகும்
பட்டப்பெயர்கள் பற்றிய கவலையின்றி
நான் வெடித்துச்சிரிக்கிறேன்
மன்னவா மறந்தும் நீ வந்துவிடாதே!!!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!