Thursday 19 September 2013

யாதுமாகி


யாரோ யாரையோ
தினம் கடந்து
போகிறார்கள்
சிலரும் பலருமாக

சிலர் முகம் பார்க்க
மறுக்கிறார்கள்  
பலர் குரல் கேட்கத்
தவிர்க்கிறார்கள் 

சிலர் பார்த்து விடத்
துடிக்கிறார்கள்
பலர் பழகிய பின்
மறைகிறார்கள் 

சிலர் நம்பிக்கையை
விதைக்கிறார்கள் 
பலர் நயவஞ்சகம்
புரிகிறார்கள்  

சிலர் அறிந்தபின்
பிரிகிறார்கள் 
பலர் அறியாமலேயே
தொடர்கிறார்கள்

சிலர் கேட்டதும்
ஒளிகிறார்கள்
பலர் கேட்காமலே
அருள்கிறார்கள்

சிலர் மருந்தைத் 
தருகிறார்கள்
பலர் மருந்தாய்
அமைகிறார்கள்

சிலர் புறமுதுகில்
சாய்க்கிறார்கள்
பலர் பொன்னாய்
காக்கிறார்கள்

சிலர் கண்ணீரில்
நனைக்கிறார்கள்
பலர் செந்நீரையும்
துடைக்கிறார்கள்

சிலர் மலராய்ப்
பூக்கிறார்கள் 
பலர் புயலாய்ச்
சாய்க்கிறார்கள்

பலரும் சிலரும் -
பார்த்துப் பழகிய
சில பல வேளைகளில்
அன்பைக் கடத்தி
அனுபவம் சுமத்தி
எதிர்பாரா ஏதோ
ஒரு தருணத்தில்,
பலர் யாரோவாகிப்
போகிறார்கள்
சிலர் யாதுமாகி
நிற்கிறார்கள்!

Wednesday 18 September 2013

இப்படிக்கு........அன்பு!


வீசும் காற்றில் காற்றாய்
உன் உயிரின் சுவாசமாய்
நான் கலந்தால் என்ன ?

உதிர்ந்து விழும்
பறவையின் இறகாய்
உன் துயர்
நான் உதிர்த்தால் என்ன ?
பகலில் வெளிச்சமாய்
இரவில் குளிர்ச்சியாய்
உன் விழிகளில்
நான் உறைந்தால் என்ன ?

கொட்டும் மழையாய்
பாய்ந்தோடும் அருவியாய்
உன் தாகம்
நான் தீர்த்தால் என்ன ?

சுழன்றோடும் ஆறாய்
புரட்டிப்போடும் புயலாய்
உன் கண்ணீர்
நான் அழித்தால் என்ன ?

மின்னும் விண்மீன்களாய்,
தேய்பிறைக் காணாத நிலவாய்
உன் பரிசாய்
நான் வந்தால் என்ன ?

காய்ந்துக் கிடக்கும் பாலையில்,
கானல்நீரின் வேனலில்
சுனையாய் என் குருதி
உன் உயிர் காக்க
வழிந்தால் என்ன ?

சாய்ந்துக் கிடக்கும் இம்மரத்தில்
சலசலக்கும் இலைக்கூட்டத்தில்
பிரிந்து விழும் இலையாய்
உன் மடியில்
நான் வீழ்ந்தால் என்ன ?

இருளைக் கிழித்து
விளைக்கை ஏற்றிப் பின்
வானில் இருந்து
மறையும் விடிவெள்ளியாய்
நான் மறைந்தால் என்ன ?

காற்றில் வரும் சுவாசத்தில்
மழையில் வரும் குளிரினில்
விண்மீன்களின் கண் சிமிட்டலில்
தேவதைகள் தரும் வரங்களில்
என் அருவம் நீ கண்டால் என்ன ?

இயற்கையில் இயைந்து
இதயத்தில் நெகிழ்ந்து
இறைத்திட்ட அன்பை
விரிந்த இவ்வண்டத்தின்
ஒவ்வொரு துளியிலும்
நீ உணர்ந்தால் என்ன ?

இல்லாதுப் போனாலும்
இல்லாமல் இல்லை
காணாதுப் போனாலும்
காணாமல் இல்லை
அன்பில் கரைந்து
துயரம் மறந்து
என்றும் நிறைவாய்
நீ வாழ்ந்தால் என்ன ?


Tuesday 17 September 2013

பேரழகி!


நாள்தோறும் வெயிலில் உழைத்து
கல்லுடைத்து மண்சுமந்து - மகனை
சுமக்கிறாள் அவள்!

குடித்து விட்டு சீரழியும் குடும்ப
தலைவனையும் பொறுத்து - வம்பு
பேசித் திரியும் வல்லூறுகளைத் தவிர்த்து
மகனுக்காக உணர்வு கொல்கிறாள்

இளமையில் கொடிய வறுமை
மகனை அண்டாமல் - காம்பு
வற்றிய மார்பில் இருந்து தன் உதிரம்
தருகிறாள் - மகனுக்காக உண்டிச் சுருக்கி
உயிரை  வளர்க்கிறாள்

வெயிலிலும் மழையிலும் வாடிய மங்கை
பால் போல் வண்ணமில்லை - அவளின் 
வற்றிச் சுருங்கிய தேகத்தில்
பஞ்சு போல் மென்மையுமில்லை -
உணர்வு அழித்து உண்டி சுருக்கியவள்
உங்கள் பார்வைக்கு அழகியும் இல்லை

எனினும்
பெண்மை போற்றும் ஒரு நல்லவன்
நாளை - உங்கள் முன் வருவான்
வண்ணத்தில் ஏதுமில்லை,
வடிவத்தில் மோகமில்லை
புறத்தில் நாட்டமில்லை,
அகம் கொண்ட அன்பே பெரிது,
பெண்ணே தெய்வம் என்பான்
தாய்மை நிறைந்தவளே பேரழகி
என்றொரு  உண்மைக் கூறுவான்!

Thursday 12 September 2013

உள்ளச்சார்பு

கடந்துச் செல்ல எத்தனிக்கிறான்
கடக்க முடியாத பாதைகளையும்

கிடைத்தது ஏதுமில்லை
வலிகளும் வேதனைகளுமன்றி

கொள்ளைக் கொண்டது ஏதுமில்லை
கொடுத்துச் சென்றதன்றி

எடுத்துக்கொண்டது ஏதுமில்லை
தவரவிட்டதன்றி

கண்ணீரைத் தந்ததில்லை
புன்னகையைப் பெருக்கியதன்றி

செல்வத்தைப் போற்றியதில்லை
சில துன்பம் நீக்கியதன்றி

எவரையும் வீழ்த்தியதில்லை
தோள் சாய நின்றதன்றி

இழந்தது அதிகமென
பெற்றது சிறுமையென
நிர்சிந்தையில்
ஓர்கணம் நிலைதடுமாற......

யாருமற்ற முதியவளின்
சுருங்கிய கரங்கள்
தலை தொட்டு
நேசத்துடன் வாழ்த்திட
ஆண்டவனின் குழந்தையொன்று
அப்பா என்று கன்னம் வருடிட.....

கடந்து செல்ல எத்தனிக்கிறான்
கடக்க முடியாத பாதைகளையும்
அத்துணைப் பாறைகளையும்
தகர்த்துக்கொண்டே

ஒளியில்லா ஓர் வாழ்வும்
பிறர்க்கு ஒரு விளக்காகும்!

That moment!




Wings are to fly
Tattered it may be
Eyes are to see
Woeful it could be
Life is to live
Uncertain it might be
In the momentary world!

Tuesday 10 September 2013

நான் நீர்!

எதில் எதில் விழுகிறேனோ
அது அதுவெனவே ஆகுவேன்

அண்டம் விரிய பரந்து இருப்பேன்
மலைத்தொடர்ச்சியில் முகடாய் விரிவேன்

நீங்கள் கல்லை எறிந்தால் சிதறுவேன்
கையை குவித்தால் தளும்புவேன்

பாதைத் திறந்தால் பயணம் செய்வேன்
பச்சை வளர்த்தால் வளம் தருவேன்

தளர்ந்த பொழுதில் உங்கள் தாகம் தீர்ப்பேன்
விடுதலை தந்தால் நீண்டு வளர்வேன்
குடுவையில் அடைத்தால் சுருங்கிப்போவேன்
உங்களின் மனம்போலே காண்பீர் என் வடிவம்
நான் நீர்!

இடி மின்னல்

மழையில் சிதறி ஓடும்
மாந்தரின் மேல்
குறும்பாய் வெளிச்சம்
இறைத்து
அவசரமாய் வானம்
எடுக்கும் புகைப்படம்,
இடி மின்னல்! 


ஏதுமற்றவன்

வெறித்து வெறித்து
நோக்குகிறேன்
வெறுமையும் என்னை
வெறித்தப்படி

யாதொன்றும் எனக்கு
புரியவில்லை
புரியாதவைகளுக்கும் என்னை
புரியவில்லை

பிச்சைப் பாத்திரம்
ஏந்தவில்லை
கேட்காமல் விழும்
பிச்சைகளுக்கும்
குறைவில்லை

என்முன் சிதறிக் கிடக்கும்
சில்லறைகள்
சிதைந்து கிடக்கும்
மனங்கள்தானோ

கொடுத்து இழந்தவன்
சிரிக்கிறேன்,
சிரிப்பலைகள் சிதறி விழ,
இறுதியாய் வாழ்கிறேன்

பிறழ்ந்த மனநிலையான் என
வாழப் பிறழ்ந்த மனிதர்கள்
கல்லெறிந்துச் செல்கிறார்கள்
அவர்கள் வாழ்க்கை முழுதும்
கற்களைச் சுமந்து கொண்டு!
 

Thursday 5 September 2013

வெற்றி


ஏதோ ஒன்று போகிறது
நழுவிய வரமாக 
ஏதோ ஒன்று சேர்கிறது
கூடி வரும் வாய்ப்பாக

இழந்ததில் கொண்டது அனுபவம்
பெற்றதில் கண்டது அதிர்ஷ்டம்

கண்டதும் காண்பதும் தோல்வியில்லை
வெற்றியின் மாறுபட்ட வடிவங்களே
விழித்தெழட்டும் சோர்ந்திருக்கும் மனங்களே!

Tuesday 3 September 2013

எல்லாம் கடந்து

 நடுச்சாமத்தில்
கால் உடைந்த
தெருநாயின் முனகலில் 

பகல் நேரத்தில் 
எந்திரத்தில் தோல் உரிபடும்
கோழியின் அலறலில்

அந்தி மாலையில்
அடிமாட்டின் உயிர் வதை
ஈனக்குரலில்

இன்றைய நாளில்  
நீரின்றி வாடும் பயிர்களின்
வற்றிய கருகலில்

நேற்றைய பொழுதில்
கொத்துக்கொத்தாய் மடிந்த
மனிதர்களின் கூக்குரலில்

எப்போதும் காண்கையில்
கண்களில் குருதி தெறிக்கும்
வன்முறை காட்சிகளில்

அவ்வப்போது மனதில்
வலிநிறைத்து வாய் உதிர்க்கும்
உச் உச் என்ற வார்த்தையில்
ஒரு பரிதாப முனகலில்

எல்லாம்
கடந்து போகும்
எளிய மனிதர்கள் நாம்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!