Tuesday 3 September 2013

எல்லாம் கடந்து

 நடுச்சாமத்தில்
கால் உடைந்த
தெருநாயின் முனகலில் 

பகல் நேரத்தில் 
எந்திரத்தில் தோல் உரிபடும்
கோழியின் அலறலில்

அந்தி மாலையில்
அடிமாட்டின் உயிர் வதை
ஈனக்குரலில்

இன்றைய நாளில்  
நீரின்றி வாடும் பயிர்களின்
வற்றிய கருகலில்

நேற்றைய பொழுதில்
கொத்துக்கொத்தாய் மடிந்த
மனிதர்களின் கூக்குரலில்

எப்போதும் காண்கையில்
கண்களில் குருதி தெறிக்கும்
வன்முறை காட்சிகளில்

அவ்வப்போது மனதில்
வலிநிறைத்து வாய் உதிர்க்கும்
உச் உச் என்ற வார்த்தையில்
ஒரு பரிதாப முனகலில்

எல்லாம்
கடந்து போகும்
எளிய மனிதர்கள் நாம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!