Saturday 20 April 2019

தோற்பதில்லை-தேய்வதில்லை


எதிர்மறை வார்த்தைகளில்
துவண்டு
தொடர்ந்த நம்பிக்கையில்
தோற்று
நீர்த்த எதிர்ப்பார்ப்புகளில்
வெறுமையுற்று
“யாரும் இல்லை நான்
யார் நான்?”
என்ற குழப்பத்தில்
சூன்யத்தை
வெறித்து
வெறுமையாய்
புன்னகைக்கும் காலத்தில்
“என்ன ஆச்சு?
நான் இல்லையா உனக்கு?”
என்றொரு குரல்
வருகிறது
அப்பனுக்கு பிறகு
அண்ணனின் குரலாக
தோழமையின் குரலாக
காதலின் குரலாக
பெற்றவரின் குரலாக
எங்கேயும்
ஒலிக்கலாம்
யாருக்கும்,
யாருமற்றவருக்கோ
அது கடவுளின் குரலாக
மனசாட்சியின் குரலாக
ஒலிக்கும்
அன்பு தோற்பதில்லை
அன்பின் குரல்களும்
தேய்வதில்லை!


Image may contain: 2 people, people smiling, closeup and outdoor

Naxal - தீவிரவாதி

தடதடவென்று
குண்டும் குழியுமான
ரோட்டில்
சுங்கச் சாவடி
கட்டணம் கட்டி
பயணித்து
காற்றில் பறந்து
முகத்தில் விழும்
குப்பைகளை மாசுகளை
ஒதுக்கி
நாடு சுத்தமாகிட
சுவச் பாரத் வரிகட்டி
சுவாசித்து
அடாது செய்யும்
அரசியல்வாதிகளின்
நிறத்தை சட்டென்று
மறந்து
இரண்டாயிரம்
ரூபாய்க்கு
நாடு நலம்பெறும்
என்று
நம்பிக்கையோடு
ஓட்டுப்போடுகிறவன்
போடாமல்
வீட்டிலேயே
உட்கார்ந்து இருப்பவன்
எல்லாம்
#UrbanNaxals
#RuralNaxals

சீருடையில் ஒளிந்துக்கொள்கிறார்கள்

அரசியலில், தனிப்பட்ட வாழ்க்கையில், பொதுவெளியில், அலுவலகத்தில், கல்லூரியில் என்று எத்தனை இடங்களை எடுத்துக்கொண்டாலும், பெண் தவறிழைத்தாலும், அல்லது பெரும் போட்டியாய் தோன்றினாலும், அல்லது ஆணின் இச்சைக்கு அடிபணிய மறுத்தாலும் அல்லது வேறு சாதியையோ, மதத்தையோ சேர்ந்தவளாய் இருந்தாலும் அல்லது அவர்களின் கண்ணுக்கு அழகாய் இருந்தாலும், இல்லாவிட்டாலும், குழந்தையாய் இருந்தாலும், சில (பல?!) ஆண்களுக்கு அது உள்ளூர இருக்கும் சாக்கடையை கிளறி விடுகிறது, அப்படிப்பட்ட சாக்கடையில் இருந்து விழும் வார்த்தைகள் பெண்ணை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தவே செய்யும், பொதுவெளியில் போராடும் பெண்ணின் மார்பகத்தில் கையை வைத்தவன் புகைப்படத்தை வெளியிடாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைப் போட்டு, அவள் மார்பகம் பற்றியும், நடத்தைப் பற்றியும், மதத்தை பற்றியும் இகழ்ந்து புறம் பேசும் பல ஆண்களின் குரூரம் அறுவெறுப்பைத் தருகிறது!

இப்படிப்பட்ட ஆண்களின் மனநிலையெல்லாம் சமூகமும் சட்டமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் வரை மாறாது, பாலியல் ரீதியாக பத்து வயதுக்கு கீழே உள்ள ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் துன்புறுத்தியவன் கூட “பழகிவிட்டது மாற்றிக்கொள்ள முடியவில்லை” என்றான், ஏன் இந்த நிலை என்னும் கேள்விக்கு பதில்கள் பலவாக இருக்கலாம், ஆனால் அடிப்படைக் காரணம் ஒன்றே ஒன்றுதான், அது நேர்மையற்ற நோய்மையுற்ற நம் சமூகமும் சட்டமும் மட்டுமே!

தொலைக்காட்சி, திரைப்படங்கள் என்று எதுவும் கதைக்குக்கூட பெண்களை உயர்த்திப்பிடிப்பதில்லை, எத்தனை உரித்துக்காட்ட முடியுமோ அத்தனைக் காட்டி, எத்தனை பலவீனமானவளாக காட்ட முடியுமோ அத்தனை பலவீனமாக்கி தோற்றுப் போகிறவளாக, அழுகிறவளாக, தற்கொலை செய்துக்கொள்கிறவளாகவே காட்டுகிறார்கள், குழந்தைகளின் வயதுக்கு மீறிய பாடல்களை பாட வைத்தும், அதற்கு ஆட வைத்தும் நிகழ்ச்சிகள், ஆண்களின் உள்ளாடைகளுக்கும் கூட பெண்களே விளம்பர தூதுவர்கள், இப்படியே வளர்ந்து இன்று பொதுவெளியில் போராடும் பெண்ணின் மேல் கைவைக்குமளவிற்கு சட்டமே துணைபோயிருக்கிறது!

கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே போயிருக்கிறது, பெண்களுக்கு பாதுகாப்பற்ற தேசமாக இந்தியா முதலிடத்திற்கு வந்திருக்கிறது, ஆண்குழந்தைகளின் வளர்ப்பில் மாறுதல் கொண்டுவர, ஏற்கனவே பிறழ்ந்து கடுமையான குற்றவாளிகளாய் மாறிவிட்டவர்களை தண்டிக்க இந்த அரசாங்கம் ஏன் தயங்குகிறது?

ஒரு கலெக்டரின் கைபேசி தொலைந்துப் போனால் ஒரு பொழுதில் கண்டுபிடிக்கும் காவல்துறை, ஒரு தேசிய கட்சித் பெண் தலைவரை பகடி செய்தால் உடனே கைது செய்யும் காவல்துறை, தங்கள் சம்பளத்தைக் கூட்டிக்கொள்ள உடனே தீர்மானம் இயற்றும் சட்டமன்றம், அரசியல்வாதிகளுக்கு எளிதாகும் சாலைப்பயணம், என எதுவுமே இங்கே எளிதாய் கிடைப்பது ஆள்பவர்களுக்கு மட்டுமே, மக்களுக்கு அல்ல!

காணாமல் போன அடிப்படை நேர்மையும், பலியிடுவதற்காகவே நேர்ந்துவிட்ட ஆடுகளை போல மந்தையாகிவிட்ட மக்கள் கூட்டமும், இன்னமும் பெரும்பாலான பதவிகளில் நிறைந்திருக்கும் ஆண் சமுகமூம் இருக்கும் வரை மனநிலையில் வக்கிரம் மிகுந்த இதுபோன்ற கீழ்த்தரமான செயல்களை செய்யும் ஆண்களுக்கு அவர்கள் கருணை காட்டவே செய்வார்கள், ஏனேனில் அவர்களுக்குள்ளும் பெண் மீதான போதையும் வக்கிரமும் ஒளிந்துக்கொண்டும் தயங்கிக்கொண்டும் இருக்கிறது, அவ்வப்போது அவரவர் சீருடையில் ஒளிந்துக்கொள்கிறார்கள், காலம் இவர்களுக்கு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்!

நேர்மையான பகை


Image may contain: one or more people, sky, text and outdoor

இறுதி சந்திப்பு


No photo description available.

காட்சிப்பிழைகள்


போர்க்களத்தில்
நிற்கிறாள்
எதிர்மறையாளார்கள்
உக்கிரமாய்
போர் புரிகிறார்கள்
பெரும் வார்த்தை வன்முறை
ஆயுதங்களோடு!

ஆயுதமற்று
நிற்பவள் கையேந்துகிறாள்
தூர ஒளிந்திருப்பவர்கள்
அவசரமாய் ஆயுதம்
மறைக்கிறார்கள்
நேர்மறையென
போதிக்கிறார்கள்

நேர்மறையின் எண்ணம்
கொண்டுதானே
போர்க்களம் ஏகினேனென்று
உதவி வேண்டி
கையேந்துகிறாள் மீண்டும்
அவசர வேலையிருக்கிறது
பிறகு வருகிறோமென்று
சிந்தனையாளர்கள்
விலகி ஓடுகிறார்கள்
எண்ணம் கொண்டும்
கைகள் கொண்டும்
போராடி களைத்தவளின்
மனதையும் உடலையும்
அத்துமீறி கொய்கிறார்கள்
கொழுக்கொம்பென
அவள் பற்றியதும் பாம்பாகி
கொத்திவிட்டு
வழுக்கியோடுகிறது அவசரமாய்

நீலம் பூத்த உடலோடும்
தேடும் கண்களோடும்
நிலம் சாய்கிறாள்
ஏதோ ஒரு மாலை
அவள் உடலில் விழுகிறது
வீரமென்று
நேர்மையாளர்கள்
கைதட்டி ஆர்பரிக்கிறார்கள்
தியாகமென்று
சிந்தனையாளர்கள்
கவிதையெழுதுகிறார்கள்
பாம்பாய் மாறிய
உறவுகளெல்லாம்
அன்பென்று
முதலைகண்ணீர்
வடிக்கிறார்கள்

காட்சிப்பிழைகளென
மனிதர்களை
தாங்க முடியா காற்றொன்று
ச்சீ ச்சீ யென்று
அந்த மாலையை
புரட்டி வீசி
வேகமாய் புழுதிவாரி
குழியொன்றெடுத்து அவளை
இட்டு நிரப்பி
பூமியோடு சேர்த்துக்கொண்டு
கண்ணீர் பெருக்க,
வாழ்க்கையின் உன்னத
அன்பையெல்லாம்
பெரும் மழையாக பெய்த
மேகங்களின் ஈரத்தில்
புதைந்த பூமியிலிருந்து
அவள் மலர்ந்திருந்தாள்
பூவாக!

#காட்சிப்பிழைகள்


Image may contain: one or more people

பதில்கள்

பெரும்பாலும்
நேரம் சூழலைத்தாண்டி
யாரோ ஒருவருக்கு
பேச ஒன்றுமில்லையென்றோ
கேட்பதற்கு விருப்பமில்லையென்றோ
உணர்ந்து விலகும் நிலையே
நலமா என்னும் கேள்விக்கு
நலமென்று சுருங்கச்சொல்லி
காற்புள்ளிட்டு முகம் பார்ப்பதும்
முற்றுப்புள்ளியிட்டு நகர்ந்து போவதுமான
பதில்கள்!

ஏகாந்தம் சூழும்

துயருற்ற பொழுதில்
ஏற்படும் துன்பமெல்லாம்
துயர் மிகும் பொழுதுகளில்
ஏகாந்தமாய் மாறிபோகிறது
ஏகாந்தம் சூழும் மனதில்
எதிர்பார்ப்புகள் அற்றுபோகிறது
எதிர்ப்பார்ப்புகள் இல்லாத
சூழலில்
துன்பங்களும் பெயரற்று
தள்ளிப்போகிறது
இச்சிறிய
வாழ்க்கைதனில்!

வாயாடிக்_குருவி

அடியே
நேற்று
அலுவலகப் பணி
இரவு வரை நீண்டது
உறங்க விடு
என்றால் கேட்பதில்லை
தொலைகாட்சியில்
ஏதோ ஒரு அறிவியல் நிகழ்ச்சி
கொஞ்சம் சத்தம்குறை
என்றால் கண்டுகொள்வதில்லை
இரு இரு வருகிறேன்
தானியமெடுத்துக்கொண்டு
என்றால் நிதானிப்பதில்லை
விடிந்தும் விடியாத
பொழுதில்
கிசுகிசுக்கத் தொடங்கி
மாலைவரை
சுற்றிச் சுற்றி
கீச்சிடுகிறாள்
அந்த
#வாயாடிக்_குருவி!



Image may contain: bird

ஊடல்

ஏதோ வாசிக்க
உன் பெயரதில்
எங்கோ வேடிக்கை பார்க்க
யாரோ யாரையோ
உன் பெயரில்
எதைச் செய்தாலும்
உன் பெயரின் சாயல்
உன்னுடனான
இந்தப் பிணக்கில்
எந்தக் கணத்தில்
உன்னை மறப்பது
என்றெண்ணி கிடக்கிறேன்
காட்சி பிழைகள்
மறைந்தாலும்
மனதில் உன்னோவியம்
உன்னைப் போல
எங்கோ
முறுக்கிக் கொண்டு
திரிகிறது
காதலில்!

#ஊடல்




https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/38942475_2419767841371989_3462539128648761344_n.jpg?_nc_cat=111&_nc_ht=scontent-maa2-1.xx&oh=51be74876acbbf85330808d649cc1ae1&oe=5D70266B

பாவக்குழிகளாகும்_சாலைகள்

#பாவக்குழிகளாகும்_சாலைகள்
~<<<<<<
ஒரு வாரத்தில் குறைந்தது இரண்டு விபத்துகளையாவது காணவும் கடக்கவும் நேரிடுகிறது!

இப்போதெல்லாம் சென்னையில் பெரும்பாலான இளைஞர்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காது என்பதில் மிகுந்த நம்பிக்கையும், போக்குவரத்து விதிகளின் மீது மிகுந்த அலட்சியமும் பெருகி வருகிறது! ஒரு சின்ன உதாரணம், சோழிங்கநல்லூரில் முகமது சதக் கல்லூரியின் சாலையில் பேருந்து போகும் ஒரு பக்கத்தின் பாதியை கடைகளும், வாகனங்களும் ஆக்கிரமிப்பு செய்திருக்கின்றன, அந்தச் சாலையின் எதிர்புறத்தில்தான் போக்குவரத்து காவலர்கள் நிற்கிறார்கள், காவல் நிலையமும் இருக்கிறது. படிக்கும் மாணவர்கள், எல்காட் சிட்டியில் உள்ள அலுவலகங்களில் இருந்து இரு சக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள், பெண்கள் கொஞ்சம் முன்னே சென்று ஒரு யு டர்ன் செய்ய சோம்பல் பட்டு நேர் எதிரே வருவதும், தினமும் விதிகளை மீறி போக்குவரத்து இடைஞ்சலை ஏற்படுத்துவதும் விபத்தில் சிக்கி சிதறியதும் சர்வ சாதாரணமாய் நிகழ்கிறது!

ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில், நந்தம்பாக்கம் செல்லும் சாலையில் என்று பெரும்பாலும் இந்த எல்லா நெடுஞ்சாலைகளிலும், குடியிருப்புத்தெருக்களிலும் சாலை விதிகளை மதிப்பது குறைந்துகொண்டே வருகிறது! போக்குவரத்து துறை தெரிந்தே வேடிக்கை பார்ப்பதுதான் கொடுமையின் உச்சம்!
தலைக்கவசம் இல்லையென்றால் அபராதம்,லைசன்ஸ் இல்லாமல் வாகனம்
ஓட்டக்கூடாது, 18 க்கு கீழ் இருப்பவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற விதிகள் எல்லாம் கண்துடைப்பே!

நிற்கும் ஒன்றிரண்டு காவலர்கள் எத்தனை வாகனங்களை நிறுத்தமுடியும், வெறும் தீர்ப்புகளை எழுதிவிட்டு நீதிபதிகளும், சட்டத்தை இயற்றிவிட்டு ஆட்சியாளர்களும், வாகனங்களை வாங்கிக்கொடுத்துவிட்டு பெற்றோர்களும் வேடிக்கை பார்க்கின்றனர், அதை செயல்படுத்த தேவையான கட்டமைப்பை சாலைகளில் அரசு உருவாக்கவேண்டும், அதுவும் வெறும் கேலிக்கூத்தாக இருக்கக்கூடாது, உதாரணத்திற்கு எல்லா சாலைகளிலும் இடதுபுறம் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று கோடு வரைந்து அவர்களுக்கு வழிவிடுங்கள் என்று வரைந்து எழுதி வைத்திருக்கிறார்கள், முதலில் சாலையில் எல்லா லேன்களிலும் செல்லும் இருசக்கர வாகனங்கள் வழிவிட்டால்தான் பிற வாகனங்களே செல்ல முடிகிறது என்ற நிலையை எப்போது மாற்றப்போகிறார்கள்? இரண்டாவது நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் லைனில் பாதியை குறுக்கி இருசக்கர வாகனம் செல்லும் வழி என்று வரைந்துவைத்திருக்கிறார்கள், சிசிடிவி கேமரா என்பது மருந்துக்கும் இல்லை, சுங்கச்சாலைகள் என்பது குண்டும் குழியுமான சாலைகளே, இதெல்லாம் போக்குவரத்து துறையின் கட்டமைப்பின் கேலிக்கூத்துகளே அல்லாமல் வேறு என்ன?
“எப்படியும் செத்துத்தொலை!” என்று விதிமீறல்களை அரசும், சம்பந்தபட்ட துறைகளும் விட்டுவிடலாம், எனினும் சாலையில் இதுபோல நிகழும் விபத்துகள் தற்கொலைகள் மட்டுமல்ல, கொலைகளும் கூட, உங்களால் முடிந்தால் இதை உங்கள் வாகனம் ஓட்டும் பிள்ளைகளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் சொல்லுங்கள்;

1. தலைக்கவசம் உங்கள் தலையை மட்டுமல்ல, குடும்பத்தின் நிலையையும் காப்பாற்றும்

2. சரியான லேன்களில் பயணிப்பது போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகனம் ஓட்டும்போது பதட்டத்தை குறைக்கும்!

3. சரியான நேர திட்டமிடல் மூலம் அவசரத்தையும் வேகத்தையும் தவிர்த்து உரிய இடத்திற்கு செல்லலாம், இல்லையென்றால் உலகத்தை விட்டே செல்ல நேரிடும்

4. ஒரு வழிப்பாதையென்றால், போக்குவரத்துத்துறை மாற்றாத வரை “எல்லா நேரங்களிலும்” அது ஒருவழிப்பாதைதான், நம்முடைய அவசரத்திற்கும் அலட்சியத்திற்கும் விபத்துகளை ஏற்படுத்தி பிறருக்கு பிரச்சனைகளையும் மரணத்தையும் தருவதை தவிர்க்கலாம்

5. சாலையில் தாறுமாறாய் சென்று நீங்கள் இறந்தால், அது இந்த அரசுக்கு வெறும் விபத்து, நீங்கள் வெறும் சடலம், அதுவே பிறரைக்கொன்று விட்டால், அது “அனாவசிய செலவுகளுக்கு வழிவகுக்கும், உங்கள் உறக்கத்தை நிரந்தரமாக பறிக்கும் ஒரு துயரம்” என்பதை நினைவில் நிறுத்துதல் நலம்

6. உங்களுக்காக கல்விக் கனவுகளுடன் காத்திருக்கும் பிள்ளையைப் போல, தன் மருத்துவத்திற்கு காத்திருக்கும் பெற்றோர்களை போல, அம்மாவுக்காக காத்திருக்கும் குழந்தைகளை போல, எத்தனையோ உறவுகளும், அதைச்சார்ந்த கனவுகளும் சாலையில் செல்லும் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்டு, மனதில் நிறுத்தினால் நன்மை!

7. சாலையில் நடக்கும்போது, கடக்கும்போது, வீட்டு தாழ்வரத்தில் மொபைல் போனை நோண்டிக்கொண்டு நடப்பதுபோல நடப்பதை தவிர்க்கலாம், வாகனத்தின் பின்னே அமர்ந்திருந்தால் வழிப்பறித் திருடர்கள் மொபைலை பறிக்கும் அளவிற்கு மொபைலில் மூழ்காதிருப்பதும், சாலையை கடக்க சீப்ரா கிராஸிங்கையோ, நடைமேடைகளையோ உபயோகிப்பது நலம்.

8. விதிகளை மதிப்பது, நமது விதியையும், மற்றவர் விதியையும் நிர்ணயிக்கிறது

9. பதினெட்டு வயதுக்கு முன் பிள்ளைகளுக்கு வாகனம் வாங்கித்தந்து சாலையில் தெறிக்கவிடுவது பெருமை அல்ல, சிறுமை!

10. சாலையில் தாறுமாறாக செல்வதே விரக்தியில்தான் என்றால், உறுப்பு தானம் செய்வதற்கு கையெழுத்திட்டு பின் வீட்டிலேயே செத்துவிடுங்கள். சாலையை கடக்க உயரமான தடுப்புகளில் ஏறி குதிப்பவர்களும் கூட இதையே பின்பற்றலாம்!

 11. “நில்” என்னும் நிறுத்தகோட்டை மதித்து நிற்பதால் உங்கள் தரம் தாழ்ந்துவிடாது!
12. ஒரு மாபெரும் ஜனநாயகத்தில் குறைந்த பட்சம் சாலைவிதிகளை கூட பின்பற்றாத மக்கள் இருக்கும் போது அவர்களுக்கு மோசமான ஆட்சியாளர்களே வாய்ப்பார்கள்!

இறுதியாக அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் ஒன்று, ஆப்கானில் வன்முறையை வளர்ந்துவிட்ட அமெரிக்காவுக்கு பின்னாளில் அதுவே தண்டனையாக மாறியது, ரவுடிகளை வளர்ந்துவிட்ட பிறகு, பெரும்பாலும் அந்த ரவுடிகளாலேயே சில காவல்துறை அதிகாரிகளின் உயிர்களும், அரசியல்வாதிகளின் உயிர்களும் பறிக்கப்பட்டது, இப்போதும் அதுவே தொடர்கதையாக தொடர்கிறது, அதுபோல “மக்கள்தான்” சாகிறார்கள், நாம் எப்போதும் “சைரன்” கொண்ட வாகனத்தில், காவல்துறை
புடைசூழ போக்குவரத்தை நிறுத்தவிட்டு போகலாம் என்று நினைத்துக்கொண்டே சாலை கட்டமைப்புகளை அலட்சியப்படுத்தினால், வருங்காலத்தில் உங்கள் சந்ததியினரும் இதே சாலையில் சாதாரண “குடிமகனாக” எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் செல்ல நேரிடும், அப்போது சாலையில் பாவங்கள் எல்லாம் குழிகளாக, ஓட்டுப்போடும் மனிதர்கள் எல்லாம் எமத்தூதுவர்களாக நிலைமை மாறி இருக்கும்!

Ensure


Image may contain: text

உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்


Image may contain: text

மழையென்னும் இசை

ஏதோ
தீரா வேகத்துடன்
பெய்கிறது
மழை
பேரிரைச்சலாக
பேரிரைச்சல்
கொண்ட
மனமெங்கும்
மௌனத்தின்
ராகம்
மீட்டுகிறது
மழையென்னும்
இசையில்!

அர்த்தமுள்ள ஆயுள்



அற்ப ஆயுள் அல்ல
அர்த்தமுள்ள ஆயுள்
வண்ணத்துப்பூச்சிக்கு!

அவளின் மரணம்

நேற்றைக்கு
முன்தினம்
பிணங்கிச்
சென்றிருந்தான்
மனதால்
சுணங்கி
இருந்தவளுக்கு
மருத்துவம்
பிடிக்கவில்லை
நேற்றைக்குமில்லை
இன்றைக்குமில்லை
என்றானபின்
எப்படியிருக்கிறாய்
என்று அழைக்க
ஏதோ ஒரு
தோழமையுடன்
கதைத்துக்கொண்டிருந்தவன்
நேரமில்லையென்று
அலட்சியப்படுத்த
உடல் உபாதையால்
துடித்துக்கொண்டிருந்தவள்
இனி
என்னால்
உன் நேரம் வீணாகாதென்று
அழைப்பை துண்டித்து
நிரந்தர துயிலொன்றை
வேண்டிச் சரிய
கண நேரத்தில்
தாங்கிக்கொண்டது
பூமி தாயாக!

#மரணம்



No photo description available.

அன்பின் பிரசவம்

ழை கூட
வந்துவிட்டது
நீ வரவில்லை!
விட்டு விட்டு
நீ தரும்
அன்பை போல
விட்டு விட்டு
பெய்கிறது
மழை!

சுமக்க முடியாத
கருமேகத்தின்
பிரசவமே
மழை
உன் அன்பின்
பிரசவம்
எப்போது?

ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கிறது பாடமுறைகள்

நாங்கள் படித்தது தனியார் பள்ளி, பள்ளியில் வேதியியல் வகுப்பு நடக்கும்போது யார் கேள்விகளை கேட்டாலும், ஒரு ஆசிரியை “சாக்பீஸை” வீசி எறிந்து, “முந்திரிகொட்டை பாடம் நடத்தி முடிச்சதும் கேள்வியை கேள்” என்பார், ஆனால் அதற்குபிறகும் எங்களுக்கு கேள்விகள் கேட்க நேரமே இருக்காது, அவர் எழுதியதை ஒருமுறை படித்துவிட்டு, பாடத்தை முடித்துவிடுவார், அதே போல புவியியல் ஆசிரியை புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, “fillers” எனப்படும் ஆங்கில வார்த்தைகளை நடுநடுவே மானே தேனே என்று போட்டுக்கொள்வதை போல போட்டு படித்துவிட்டு பாடம் நடத்தி முடித்துவிடுவார்! அதன்பிறகு எங்கள் வேதியியலில் ஒரு சிறந்த ஆசிரியர் வந்தார் என்பது வேறு கதை!

பள்ளியில் இப்படி என்றால் சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு பாடத்தில் குறைவான மார்க் போட்டு பெயில் என்றார்கள், அதெப்படி என்று மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க 70 க்கும் அதிகமாக மார்க் வந்தது, அதிலும் எனக்கு நம்பிக்கையில்லையென்றாலும், ஒரு பேப்பர் மறுகூட்டலுக்கு பல வருடங்களுக்கும் முன்பு 750 ரூபாய்க்கும் அதிகமாக கட்ட வேண்டியிருந்தது, என்னுடன் படித்த பெற்றோரை இழந்த தோழி, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அண்ணன் காசு தரமாட்டான் என்று படிப்பை விட்டுவிட்டு சென்று விட்டாள்!

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, மார்க் திருத்தி வரும்போது, நியாயமாய் பல்கலைக்கழகங்கள் வாங்கிய பணத்தை திருப்பித்தந்து மன்னிப்புக்கடிதம் அல்லவா கொடுக்கவேண்டும்? பொதுவாய் பல கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் பாடங்களையே எடுக்காமல் பரீட்சை வைப்பதும், “இன்டர்னலில்” கைவைப்பேன் என்று மாணவர்களை மிரட்டி வைப்பதும் சகஜமான ஒன்று, ஆராய்ச்சி படைப்புகளுக்கும் யாரையோ கவனிக்க வேண்டும் என்று நிர்மலா போன்ற பேராசிரியர்கள் தேவையற்ற வேலைகள் பார்ப்பதும் உண்டு, பணம், வசதி என்ற வெறியின் அடுத்த பரிணாம வளர்ச்சிதான் இன்று செய்தியில் மின்னும் அண்ணா பல்கலைகழகத்தின் மார்க் மோசடி ஊழல்!

தனியார் பள்ளி என்றாலும், அரசு பள்ளி என்றாலும் ஆசிரியர்கள் சொல்லிக்கொடுப்பதை மட்டும் வைத்து புரிந்துகொள்வது எல்லா பாடங்களிலும், எல்லா வேளைகளிலும் எளிதல்ல, பெற்றவரும் மெனக்கெட வேண்டும், டியூசன் அனுப்பவேண்டும், பண வசதியில்லையென்றால், பெற்றவர்களுக்கு கல்வியறிவு இல்லையென்றால் அந்தப்பிள்ளைகள் சுயமுயற்சியில், புத்தியில் படித்துக்கொள்ள வேண்டும், இல்லையென்றால் பெரும் சிரமமே, இப்படிப்பட்ட கல்வி ஏற்றத்தாழ்வும், மாணவ மாணவிகளுக்கு கடுமையான மனஅழுத்தத்தை தரும் பாட முறைகளையும், ஆசிரியர்களையும், பாரபட்ச நடைமுறைகளையும் வைத்துக்கொண்டு, தனியார் கொழிக்க நீட் என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தி ஏழை மாணவர்களின் மருத்துவ கனவுக்கு சாவு மணி அடித்திருக்கிறோம்!

எனக்கு தெரிந்த இரு பெண்களில் ஒருவர் அரசாங்க கல்லூரியிலும், மற்றொருவரை தனியார் கல்லூரியிலும் “நர்சிங்” படிக்கிறார்கள், அரசாங்கக் கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு கட்டிய கட்டணத்துக்கு பில் கேட்கக்கூட பயம், கைபேசியை எடுத்து பொறுப்பாளாரிடம் பேச, இது அரசாங்கக்கல்லூரி எதுவும் சரியாக நடப்பதில்லை முன்னே பின்னேதான் இருக்கும் என்றார், இன்னமும் அந்த உரையாடலை என்னால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை, சில அடிப்படை கேள்விகளை கூட கேட்க பழங்குடி இனத்தில் இருந்த வந்த அந்தப்பிள்ளைக்கு அவ்வளவு பயம், “நீ இலவசமாய் கற்கவில்லை, கட்டணம் கட்டித்தான் படிக்கிறாய், பயப்படாதே!” என்று அவ்வப்போது தாங்க முடியாத கோபத்தில் திட்டிவிட்டு வருத்தப்படுவது உண்டு!

மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகளை கொண்டிருக்கிறது நம் பாடமுறைகள், பாடத்திட்டங்கள், கற்பிக்கும் திறமையும் லாவகமும் எல்லா ஆசிரியர்களுக்கும் ஒன்றுபோலவே இருப்பதில்லை, அதைவிட ஆசிரியர்கள் மற்றுமொரு பெற்றோர்கள் என்று நாங்கள் படிக்கும்போது போல் உணர்ந்தது இப்போது மாறியிருக்கிறது, வீட்டின் அருகே அரசுப்பள்ளி இருக்கிறது, “ஏய் சனியனே” என்று ஆசிரியர் விளிப்பது ஜன்னல் வழியே காதில் விழுந்திருக்கிறது, “படிப்பே வரதில்லைங்க” என்று தனியார் பள்ளியில் பிள்ளையின் முன்பே பெற்றவரிடம் சொன்ன ஆசிரியரை கடந்திருக்கிறேன், “படிப்பு” மிகப்பெரும் சுமையாக மாறிக்கொண்டிருக்கின்றது, இங்கே ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளகளை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கே பயிற்சி தேவைப்படுகிறது!

ஒரே கல்வி, அரசாங்க கல்வி, தரமான கல்வி, அதுவும் இலவசக் கல்வி எல்லோருக்கும் என்று நடைமுறை படுத்தப்படும்போது இங்கே இடஒதுக்கீடு தேவைப்படாது, தற்கொலைகள் நிகழாது, அதற்கு விவசாயம் தெரிந்தவன் விவசாய மந்திரியாக, கல்வியாளர் கல்வி அமைச்சராகவும், அந்தந்த துறையில் மேம்பட்டவர்களை மந்திரிகளாக நம் மக்கள் தேர்தெடுக்க வேண்டும், இது ஏதோ ஒரு யுகத்தில் நிகழும் என்று நம்புவோமாக!

தனிமை

கல்தடுக்கி
விழும்போது
வலிக்கிறது என்று
கல்லிடம்
சொல்ல முடியாததுபோல
காயப்படுத்துவது
நீ எனும்போது
சொல்லாமல்
காயம் மறைத்து
சிரிக்கின்றேன்
கல்லின் இயல்பு
கண்ணீரால்
ஒருவேளை
மாறிவிடுமெனில்
மௌனத்தில் நீயும்
வலி உணர்வாயோ?!

#தனிமை


Image may contain: plant and nature

ஆண்ஈகோ

நேற்றிரவு சிக்னலில் நின்றிருக்க என் இடதுபுறம் சரியாய் முகம் நோக்குவது போல் ஒரு கார் வந்து நின்றது, நான் வலதுபுறம் திரும்ப அந்தக் காரும் அப்படியே, இருவரும் இரண்டு லேன்களில் பயணிக்க கொஞ்சம் வேகமாய் செல்ல, அங்கே ஆண் ஈகோ பிய்த்துக்கொண்டது, அதுவும் அந்தக் காரில் “எல் போர்ட்”, “ஏன்டா இப்படி?” என்று நினைத்துக்கொண்டு என் லேனில் சென்று கொண்டிருக்க, சர்ரென்று வேகத்தை உயர்த்துவதும், இடதுபுறம் இருந்து வலதுபுறம் வருவதும், நான் இடதுபுறம் செல்ல, வலதிருந்து இடதிற்கு வருவதுமாக வேடிக்கைக் காட்டுவதுமாக வந்தது அந்த வண்டி, தன் வண்டியில் எல் போர்ட் போட்டு ஓட்டினாலும், பிற வாகனத்தில் பெண்ணை பார்த்துவிட்டால் வேகம் எடுத்துப் போகும்
அந்த ஆண் ஈகோவை அலட்சியப்படுத்தி கடந்துவிடலாம், (பெண்ணின் உடைகளை பார்த்தே கிளர்ச்சியடையும் ஒரு வகை ஆண் ஜந்துவின் வகையறா இது என்று கடந்துவிடுவேன்) என்று என் வழியில் செல்ல, குறுக்கும் நெடுக்குமாக வேடிக்கை காட்டியதில், பியட்டை புயலாக மாற்ற வேண்டிய அவசியம் வந்தது (சிங்கத்தை தட்டி எழுப்பிடுச்சு பயபுள்ள) அது அந்த ஹோண்டா ப்ரையோவை சாலையில் வெண்ணையாக வழுக்கிக்கொண்டு கட் செய்து மின்னலாக விரைய, கொஞ்சம் முன்னே அந்தக் காரை மறித்து, கார் கண்ணாடியை இறக்கி, “தம்பி (அங்கே தாத்தாவே இருந்தாலும் தம்பிதான் 😉) ரோட்டை பார்த்து ஓட்டு, மத்த வண்டியில உள்ள பொண்ணை பார்த்து ஓட்டாதே, ஒழுங்கா வீடு போய் சேர மாட்டே) என்று சொல்ல நினைத்து, “ச்சீ ஒழுங்கா போ” என்று தலையில் அடித்துக்கொண்டு நகர்ந்தேன், பின்னே அந்தக் கார் வரவில்லை, தன் மனதை ஆற்றுப்படுத்திக்கொண்டு அடுத்தத் தெருவில் ரேஸ் விடுவானாக்கும் என்று நினைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்!

இந்த ஆண் ஈகோவை பற்றி பலமுறை யோசித்ததுண்டு, பள்ளியில் படிக்கும் போது, என் நண்பர்களுக்கு சக மாணவிகளை விட அதிக மார்க் வாங்க வேண்டும் என்ற ஈகோ வந்ததில்லை, வீட்டிலும் வெளியிலும் பெண் உழைக்க குடித்துவிட்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கிறோமோ என்று ஆண் ஈகோ நினைப்பதில்லை, திருமணம் செய்துகொள்ளும் போது, பெண்ணின் சொத்தை கணக்கிட்டு தன்னை விற்க வரதட்சணை கேட்கிறோமோ என்று ஆண் ஈகோவோ வெட்கமோ தலைதூக்குவதில்லை!

ஆண் ஈகோ, உண்மையாய் நேசிக்கும் பெண்ணை கைவிடும்போது அவள் தியாகியாய் விலக வேண்டும் என்று நினைப்பதும், அதுவே அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் தியாகியாய் மாற ஆண் என்ற தன்மை இடம் கொடுக்காமல் இருப்பதுமேயான நிலையை மட்டுமே உறுதிப்படுத்துகிறது! பெண் “நோ” என்று சொல்லிவிட்டால், பெண் சாலையில் முந்திச்சென்றால் மட்டுமே ஆண் ஈகோ சிலிர்த்தெழுகிறது!

உண்மையில் ஆண் வளர்ப்பு பரிதாபத்துக்குரியது, தோல்வியை ஜீரணிக்க முடிவதில்லை, மனக்கட்டுப்பாடு இல்லாமல் சிகரெட்டிலும், சாராயத்திலும் எளிதில் சிக்கிக்கொள்கிறது, பெண் ஆணை நேசிப்பதுபோல் ஆனால் பெண்ணை நேசிக்க முடிவதில்லை, பெரும்பாலும் ஆணின் நேசம் காமத்திற்குள் அடங்கிவிடுகிறது, பெண்ணின் மனம் தொட்டு, பெண்ணை சக மனுஷியாக பாவித்து, அவள் உணர்வுகளை மதித்து, நேசித்துக்கொண்டாடி, திறமைகளை மதித்து, மரியாதையுடன் நடத்த நடந்துக்கொள்ள சில ஆண்களால் மட்டுமே முடிகிறது, பெண் என்றால் அழகுப்பதுமை, பெண் என்றால் வீட்டு வேலைச்செய்ய பிறந்தவள், பெண் என்றால் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியவள், பெண் என்றால் ஆடைகளில் அடக்கமாக இருக்கவேண்டியவள், பெண் என்றால் ஆணுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியவள் என்று இத்தனை பாடங்களை எடுக்கும் பெண்சமூகம், வளர்க்கும் தம் ஆண் மகன்களை நல்ல மனிதர்களாக, மனநலம் மிக்கவர்களாக வளர்க்கவேண்டியது காலத்தின் கட்டாயம், இல்லையென்றால் குழந்தைகள், மிருகங்கள் என்று புசிக்கும் ஆண்கள், வருங்காலத்தில் மனநலம் கெட்டு சகோதரியை, தாயைக்கூட தாரமாக்கிக்கொள்வார்கள்!

பெண் குழந்தையை கொண்டாடுவது போல், பெண் குழந்தைகளை வேலைகள் செய்ய பழக்குவது போல், பெண்ணை பொறுமையாய் இருக்கச்சொல்வது போல் ஆண் குழந்தைகளையும் நேசம் கொட்டி, ஒழுக்கம் போதித்து, தானே ஒரு எடுத்துகாட்டாக இருந்து வளர்க்க வேண்டும் பெற்றோர், அன்பும் அரவணைப்பும் ஆணுக்கும் வேண்டும் இந்த வெட்டி ஈகோ அற்றுப்போக!

அன்பின் வடிவங்கள்


அலட்சியத்தில்
அன்பு
மெல்லச் சாகும்!
*****
இருப்பதை
கொட்டித் தீர்த்துவிடும்
மழையின் வேகத்தை
போல
சிலரின் அன்பு
காய்ந்து கிடக்கும்
கரட்டில்
போனால் போகட்டுமென்று
விழும் நீர்த்திவலைகளை
போல
சிலரின் அன்பு
*****
அம்மாவின்
அன்பை உணராதவன்
மிருகமாகிறான்
அல்லது
கிடைக்காததை
பிறருக்கு கொடுக்கும்
தாயுமானவாகிறான்
*******
பெண்மை
அழகு நிறைந்தது
தாய்மை
எப்போதும்
அன்பு நிறைந்தது
*******
அன்பும்
நேசமும்
யாருக்கு
மறுக்கப்படுகிறதோ
அவர்களிடமிருந்தே
உலகிற்கு மீண்டும்
கிடைக்கிறது
பெரும்பாலும்!
*******
தேவையிருக்கும் போதும்
நேரமிருக்கும் போதும்
வருவதல்ல அன்பு
அன்பின் தேவைக்கு
நேரம் காரணமும்
பொருட்டல்ல!
*******
அன்பென்பது
எப்போதும்
அன்பாய் இருப்பது
*******
செல்வந்தர்கள்
தேடும் அன்பு
வறியவர்களிடத்திலே
நிறைந்திருக்கிறது
வாழ்வின் அழகிய
முரணாக!
*******
நிறைந்த செல்வம்
கிடைத்தபின்
தானம்
செய்வேனென்பதும்
எல்லாம் கிடைத்தபின்
நேரம் கிடைக்கும்போது
அன்பு செய்வேனென்பதும்
வெற்று அரசு
அறிக்கைகள் போல
நிறைவேற்றப்படுவதில்லை!
*******
அன்பு
நிறைந்தவர்களுக்கு
மரணம்
முடிவல்ல!
*******
அன்பாய் இரு
அன்பை
எதிர்ப்பார்க்காதே
என்பதுதான்
நவீன அன்பின்
வடிவம்!
*******
அன்பொரு
அட்சயப்பாத்திரம்
*******
எல்லா மொழிகளிலும்
தாய்மையும்
அன்பும்
குணம் மாறுவதில்லை
******
எழுதி எழுதி ரசிக்கப்படும்
அன்பு
பகிரப்படாமல்
உறங்குகிறது
கைபேசிகளில்!

#அன்பு
 
August 1 2018


Image may contain: flower

மனம்

இன்று உறங்கி நாளை எழ முடியாமல் போனாலும், நேசித்தலில் குறை வைக்கவில்லை, யாருக்கும் கெடுதல் செய்யவில்லை என்ற எண்ணம் போதும், நிம்மதியாய் விடை பெற, வாழ்தல் அறம்தான், தெளிந்த மனமும் சட்டென்று வாய்க்கும் மரணமும் கூட வரம்தான்!
--------------------------------

அன்பு வேண்டியோ, விரும்பியோ வருவதில்லை,
அதையும் எதையும் எதிர்ப்பார்க்காமல், தன்னை தானே நேசித்துக்கொண்டால் இந்த வாழ்க்கையில் துயரேதும் இல்லை!
--------------------------------
மனம் நிறைந்திருந்தாலும், வெறுத்துப்போனாலும் வார்த்தைகள் அற்றுப்போகும், முன்னதில் நெகிழ்ச்சி, பின்னதில் வெறுமை!

மரமென்பது_மரமில்லை

“யாரிடம் பேசுகிறாய்?”
என்றாள்
“அதோ அந்த அரசமரத்திடம்!”
என்றேன்
“அது பேசுமா?”
என்றாள்
“ஆமாம் நீயும்
கொஞ்சம் கேட்டுப்பாரேன்
உயரம் தொட்டக்கதையை
சொல்கிறது
கிளைப்பரப்பிய கதையைச்
சொல்கிறது
தான் கண்ட
முறிந்துபோன
ஒரு காதலையும்
இங்கு பசியால் மறித்து
புதைந்துப்போன
ஒரு நாயைப்பற்றியும்
சொல்கிறது”
என்றேன்
“ம்ம் நீ என்ன
சொல்கிறாய் அதனிடம்?”
என்றாள்
“ஏதோ சொல்கிறேன்
இழந்ததை,
பெற்றதை சொல்கிறேன்
யாரும் கேளாமல் விட்ட
துயரனைத்தும் சொல்கிறேன்
வெற்றியையும்
தோல்வியையும் சொல்கிறேன்
மானுடம் தோற்றதை சொல்கிறேன்
இவையனைத்தும் யாரிடமும்
சொல்லாதே என்றும்
சொல்கிறேன்”
என்றேன்
“ம்ம் உனக்கும் அதற்குமான
மொழியென்ன
எப்படி புரிந்துக்கொள்வீர்கள்?”
என்றாள்
“நீயும் நானும்
பேசிக்கொள்ள
மொழியுண்டு
எனினும் நம்மிடம்
வார்த்தைகளில்லை
பிறந்தநாள் வாழ்த்துக்கூற
நேரமில்லை
இறந்ததற்கு வருவதற்கோ
நலமா என்று கரம்பிடித்து
விழிப்பார்த்து பேசுதற்கோ
கைபேசி எடுத்து
சில நிமிடம்
கதைப்பதற்கோ நம்மிடம்
நேரமேயில்லை
என்னிடம் உனக்கு
அவசியம் ஏதோ வேண்டுமென்ற
பொழுதில்
நீ வந்துநிற்பாய் இப்போதுபோல
இந்த மரத்திடம்
நான் பேச
என்னிடம் அதுபேச
இருவருக்கும்
காத்திருக்கும் அவசியமில்லை
எதையும் புரிந்து
தீர்க்க வேண்டிய
லாப நஷ்ட கணக்குகள்
ஏதுமில்லை
இருவருக்கும் அன்புண்டு
நிறைந்த அன்பில்
நேரமும் காரணமும்
இடையில் வருவதேயில்லை
இதோ காற்றாக கலந்திருந்து
நலம் விசாரிக்கிறது
நேசம் பரவியிருக்கிறது
இந்த வெளியெங்கும்
வா வந்தமர்
மௌனமாய் கதைப்படிக்கலாம்!”
என்றேன்
விழிகளில் பரிகாசத்துடன்
“நேரமில்லையென்று”
பறந்துவிட்டாள்
சில்லறையை சிதறடித்தது
போல் அப்போதும்
சிலிர்த்து தழுவியது மரம்
நானிருக்கிறேனென்று!

#மரமென்பது_மரமில்லை!


Image may contain: one or more people, outdoor and nature

கல்லறை_மலர்கள்

வரிசையற்று
பூக்கள் இறைந்திருந்தது
ஒவ்வொன்றும் கலைந்த
கனவுகளை பகிர்ந்துக்கொண்டது!
மஞ்சள் நிறம்
இப்படி தொலைந்தென்றது
கொன்றை
சிவப்பு குருதியில்
நனைந்தென்றது
ரோஜா
இப்படித்தான் எல்லாம்
இழந்து வெளிறிப்போனென்றது
அல்லி
மகிழ்ச்சியை
நான் விட்டுத்தரவேயில்லையென்றது
அப்போதும் மணம் பரப்பிய
சம்பங்கி
எல்லா வண்ணங்களும்
கூடி கதைப்பேசியதும்
ஈரமண்ணில் வீற்றிருந்த
அவளை நோக்கி
நீ என்ன நிறமென்றது
தலைகீழாய் தொங்கிக்கொண்டிருந்த
ஊதாநிற சங்குப்பூ
உங்களின் கலவைதான்
எனினும் நிறமற்றவள் என்றாள்
மயான அமைதியில்
உறைந்த மலர்கள்
எங்கே உன் வார்த்தைகளென்றன
பேசாத வார்த்தைகளெல்லாம்
என் கல்லறையின்
கற்களாக அடுக்கி வைத்து
கேளாத வார்த்தைகளையெல்லாம்
கணநேர கண்ணீராக
உகுத்து கடக்கிறார்கள்
மனிதர்களென்றாள்
நிறமற்றவளே வா
நாம் விடுபடுவோமென
மலர்களில் இருந்து
கலைந்தன ஆவிகள்
அந்த கல்லறையைவிட்டு!

#கல்லறை_மலர்கள்



Image may contain: flower, plant, tree, sky, outdoor and nature

A Factor


Image may contain: text

அன்பு எழுதப்படுகிறது

அன்பு
எழுதப்படுகிறது
படிக்கப்படுகிறது
போதிக்கப்படுகிறது
மறுக்கப்படுகிறது
தயக்கமில்லாமல்
வரும் கோபம் போல
ஒருநாளும்
அது
அளிக்கப்படுவதோ
பகிரப்படுவதோ
இல்லை!

காணாத வலி



விரக்தியிலோ
உற்சாகத்திலோ
அவன்
குளத்தில் வீசிய கல்
நீர் திவலைகளை தெறித்து
மூழ்கியது
குளத்தின் காயத்தையோ
கல்லின் இடம்பெயர்த்தலையோ
யாரும் கண்டுக்கொள்ளவில்லை
காணாத எந்த வலியையும்
நாம் உணர்வதும் இல்லை!

Image may contain: water and outdoor

தீண்டாதே


வீசும் காற்றே
மேகத்தைத் தீண்டாதே
வானம் உலர்ந்து போயிருக்கிறது

பொழியும் மழையே
பூமியைத் தீண்டாதே
நிலம் தகர்ந்துக் கொண்டிருக்கிறது!

பூக்கும் பூவே
மகரந்தத்தை உதிர்க்காதே
காற்றில் மாசுப்பட்டிருக்கிறது

மனதின் காதலே
அன்பை பொழியாதே
மனிதம் சுயநலத்துடன் வாழ்கிறது!


No photo description available.

அன்பு செய்வோம்


Image may contain: text

அன்பு



குழந்தையின்பால்
தாய்க்குள்ள
பிரியத்தைபோல

பாலைவனத்தில்
தாகத்தில் தவித்தவனுக்கு
கிடைத்த
நீரைப்போல

வானம் பார்த்த
பூமிக்கு
பருவத்தே பொழிந்த
மழைபோல

மழைமேகத்துக்கும்
காற்றுக்குமுள்ள
நேசத்தைப்போல

நெய்தல்
நிலத்துக்கும்
மீனுக்குமுள்ள
பந்தத்தைப்போல

குறிஞ்சிக்கும்
மலைகளுக்குமுள்ள
பசுமையை
போல

உனக்கும்
எனக்குமிருக்கிறது
அன்பு!


Image may contain: one or more people

பெண்ணியம் தாக்கும் வசவுகள்

எண்ணிலடங்கா வசவுச்சொற்களை, அதிலும் அவையனைத்தும் பெண்ணின் உறுப்புச்சார்ந்தே இருந்ததை எழுத்துவடிவில் இந்த முகப்புத்தகத்திலும், பேச்சு வடிவில் குடிசைகள் நிறைந்தப்பகுதியிலும், பயணிக்கும் வேளைகளில் நன்றாக படித்தவர்கள் பேசவும் தெரிந்துக்கொண்டிருக்கிறேன்!

கட்சி வேறுபாடு இல்லாமல், எந்த நடிகனின் ரசிகன் என்ற வேறுபாடில்லாமல், சாதி, மதம் வேறுபாடில்லாமலும், எந்தப்பிரச்சனை என்றாலும் ஒருவரை இகழ மற்றவர் அவரின் குடும்ப பெண்களையே சாடுகிறார், பொதுவெளியில் அது பெண்ணாய் இருந்துவிட்டால் இன்னமும் மோசம், பிரச்சனை எதுவாய் இருந்தாலும் பேச்சு பெண்ணுறுப்பில் வந்து நிற்கிறது, பெண்ணுடல் மீதான அவர்களின் காமத்தின் வக்கிரத்திலேயே அத்தனை வசவுச்சொற்களும் கட்டமைக்கப்படுகின்றன, கோவில்களில் பெண் தெய்வத்தை வழிபட்டு, வீட்டில், வெளியில், பெண்ணுருவில் அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள், ஆசிரியை, தொழிலாளி, முதலாளி என்று திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள் நிரம்பியிருக்க, பெண் உறுப்பின் வழியே உதிரம் சிந்த பிறப்பெடுத்து, பெண்ணின் மூலையில் பாலருந்தி உயிர் வளர்த்து சட்டென்று பொதுவெளியில் அத்தனை பெண்பால் ஒட்டிய உறுப்பு வார்த்தைகளை வசவுச்சொல்லாக மாற்றிய இந்த ஆண்சமூகம்தான் எத்தனை நன்றிகெட்டது என்றே தோன்றுகிறது அதுபோன்ற வார்த்தைகளை கேட்க நேரும்போதோ அல்லது படிக்க நேரும்போதோ!

சக ஆணுடனான ஒரு சண்டையில் கூட பெண்ணுறுப்பு வார்த்தைகளின் பின்னே வாள் வீசும் கோழைகளை ஆண் என்றே சொல்லுவது வேடிக்கைதான், ஆணுறுப்பு ஒன்று இல்லாவிட்டால் இத்தகையோர் ஆணே இல்லை, வெறும் ஆணவத்தின் வழி வந்த எச்சம் மட்டுமே! சக பெண்ணுடனான போரிலும் கூட அவள் எத்தனைபேருடன் கூடியவள் என்று தரம் தாழ்த்திப்பேசுபவர்களின் பெற்றவளை எண்ணி கண்ணீர் வடிக்க வேண்டும், கிட்டதட்ட 80 சதவீதம் ஆண்களின் நடவடிக்கை வீரம் எல்லாம் பெண்ணைச் சுற்றியே வருகிறது, பிறகு அவர்கள் தங்களை தங்கள் உறுப்பு வழி மட்டுமே ஆணென்று நிரூபித்துக்கொள்கிறார்கள், ஒருபோதும் தம் கண்ணியத்தின் வழி அல்ல!

சாலையில் சிக்னல்களை மதிக்காமல், உயிர்களை மதிக்காமல் சீறிப்பாய்கிறார்கள், பொதுவெளியில் ஒரு பெண்ணுக்கு ஆபத்தென்றால் நவத்தூவரங்களையும் பொத்திக்கொண்டு செல்போன் காமிராவை திறந்து வைத்துக்கொள்கிறார்கள், சட்டத்தின் வழி, மனசாட்சியின் வழி, நீதியின் வழி சீறிப்பாயாத இவர்கள் ஆண்மையெல்லாம், கட்சிச்சண்டைக்கும், சொத்துச்சண்டைக்கும், வேறு எதற்கும் வார்த்தைப் பிரயோகித்தில் பெண்ணுறுப்பின் வழி அடைக்கலமாகிறது!

இவர்களை நம்பி இந்தியா இருக்கிறது என்று சொல்வதால் தான் இந்தியா பெண் பாதுகாப்பில் கோட்டைவிட்ட நாடுகளில் முதலிடத்திலும், உலகிலேயே மோசமான ஆண்களின் பட்டியலில் இந்திய ஆண்களை முதலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது!

பொதுவாய் ஆண்கள் இதுபோன்ற வார்த்தைகளை பிரயோகிக்க, சில காரணங்கள் உண்டு, அது;

1. வளர்ப்புமுறை, வீட்டில் பொதுவெளியில் இவர்கள் வீட்டின் ஆண்கள் பெண்களை இழிவுப்படுத்தியே வந்திருப்பார்கள், அதன் தாக்கம்
2. கல்வியறிவின்மை, அல்லது மெத்தபடித்தும் வெற்று ஏட்டுக் கல்வியை கற்றது, உலக அறிவு இல்லாதது, பெண்களைப்பற்றி தாம் கேட்ட அறிந்த கதைகளை வைத்து ஒரு குறுகிய வட்டத்துக்குள் திணித்துக்கொண்டு, பெண்ணை புறம் சொல்வது

3. திறமையின்மை; ஒரு பொதுவெளியில் ஒருவனோ ஒருத்தியோ தெளிந்த அறிவுடன் ஆதாரத்துடன் வாதிடுகையில், போதிய ஆதரமோ, அறிவோ, பதில் சொல்லும் சாமர்த்தியமோ இல்லாதபோது தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாமல், சட்டென்று வசவு சொற்களை பிரயோகித்து, செய்தியை மடைமாற்றிவிடுவது! இந்த வகை நாட்டில் மிக அதிகம்

4. பாலியல் அறிவின்மை; பாலியல் தெளிவில்லாதவர்கள், தன்னுடைய துணையுடன் திருப்தியில்லாத வாழ்க்கை வாழ்பவர்கள் அல்லது தகுந்த துணையற்று வாழ்பவர்கள், எப்போதும் போர்னோ செய்திகளை படித்தும் பார்த்தும் வாழ்க்கையில் எப்போதும் எல்லோரும் 24 மணிநேரமும் செக்ஸில் மூழ்கிக்கிடக்க தமக்கு மட்டும் எதுவும் கிட்டவில்லை என்ற ஒரு மாயையில் போதையில் உழல்பவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள், குழந்தைகளிடம் கூட வக்கிரம் தணித்துக்கொள்ள முயல்பவர்கள் இவர்கள்தான்

5. பெண்ணுடல்/ உணர்வு பற்றிய தெளிவின்மை; திரையில் பிம்பங்களை பார்த்துவிட்டு பெண்ணுடலை வெறும் காமத்தின் வடிகாலாக மட்டுமே பார்ப்பவர்கள், பெண் என்றால் சமைப்பதற்கும், படுப்பதற்கும் என்ற ஆணாதிக்க சிந்தனையில் ஊறியவர்கள், இதுவும் முதல் கருத்தில் சொன்னது போல வளர்ப்பு வழி சூழல் வழி வருவது!

6. தோல்வியாளார்கள்/எதிர்மறை சிந்தனையாளர்கள்; திரையில் பெண் நோ சொல்லிவிட்டால் அது ஆண்மைக்கு விடப்பட்ட சவால் என்று தவறான சிந்தனையில் உழல்பவர்கள், எப்போதும் ஒருவித பதட்டத்துடன் காணப்படுவார்கள், எப்போதும் தன் துணையை பற்றிய சந்தேகம் இவர்களுக்கு இருத்துக்கொண்டே இருக்கும், தம் எல்லா தோல்விகளுக்கும்
காரணம் ஏதோ ஒரு பெண் என்றே பழி சுமத்துவார்கள், வெற்றியடைந்தால் தம் திறமை என்றும் தோல்வியடைந்தால் அதற்கு தம் தாய், மனைவி, காதலி, சகோதரி, ஆசிரியை, என்று யாரேனும் எளிதில் இவர்களுக்கு இலக்காவர்கள்!

7. அடிமைகள்; இது கடைசி பிரிவு, வீட்டில் எலியாக, பெற்றவளின் முந்தானையை கொஞ்ச காலம் பற்றியிருந்துவிட்டு, பின் அம்மாவை விட்டு பிரிந்து, பெரும்பாலும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு, மனைவியின் முந்தானைக்குள் மூழ்கி, காமத்துக்காக அடிமையாய் மாறிப்போன வர்க்கம், பொதுவெளியில் வந்து தம் வக்கிரத்தை, ஆண் என்ற ஆதிக்கத்தை பிறரின் மீது சிங்கமென நீருபிக்க தேவையற்று கர்ஜித்துக்கொண்டிருக்கும், வீட்டில் சோறு கிடைக்காத நாளிலும் கூட வெளியில் சாக்கடை வார்த்தைகளைக்கொட்டி வீட்டில் தொலைந்துபோன ஆண்மையை வெளியே மீட்டெடுக்க முயற்சிக்கும்!

இவைகளில் எல்லாவற்றையுமோ அல்லது ஒரு சில வகைகளையோ நாம் அன்றாடம் கடந்திருக்கலாம், நாம் செய்ய வேண்டியது இரண்டுதான், ஒன்று பதிலே சொல்லாமல் இந்த மனநோயாளிகளை புறம்தள்ளுவது, இரண்டு நம் வீட்டில், நட்பில், உறவில் இதுபோன்ற மனநோயாளிகள் உருவாகலாம் தடுத்து நிறுத்துவது, ஆண் குழந்தைகளுக்கும் அன்பும் அரவணைப்பும் வழிகாட்டுதலும் தேவை! இல்லையென்றால் மிக மிக மோசமான ஆண்களாக இந்திய ஆண்களும், முற்றிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற ஒரு நிரந்தர தேசமாகவும் இந்தியா மாறிவிடும்!

சாபம்

சுட்டெரிக்கும்
சாலைகளில்
தெறிக்கிறது
செத்த
மரங்களின்
#சாபம்

தற்கொலைப்படை

ஃஸ்விகி
ஃஸோமட்டோ
தாறுமாறாய்
விரைந்து
உயிரைக்கொடுத்து
உணவு விநியோகிக்க
சாலையில்
புதிதாய் சேர்ந்திருக்கும்
#தற்கொலைப்படை!

சைரன்

போன வாரம்
தேர்தலில்
உங்களிலொருவன்
என்று
காலில் விழுந்த
வேட்பாளர்
இன்று மந்திரியாய்
மக்களை பார்க்காமல்
சாலையில்
விரைகிறார்
#சைரன் ஒலிகளோடு
காவல் துணையோடு!

வெளிச்சக்கீற்று


ஏகாந்தமாய்
இருள் மேகங்கள்
சூழ்ந்த வானை
பார்த்துக்கொண்டிருக்கிறது
ஒற்றைக்காகம்
போலிகள் சூழா
இந்தத் தனிமையும்
வரம்தானோ?
போதியாய் மாறியது
அந்தக் காகம்
எனக்கிந்த வேளையில்!
அதோ
மெல்லியதாயொரு
வெளிச்சக்கீற்று
வானில்!


Image may contain: one or more people and bird

குழந்தைகளுக்காக - 18

சுருக்கமாக;

1. குழந்தைகளிடம் (பள்ளி - கல்லூரி எந்த வயது என்றாலும்) தினமும் பேசுங்கள், உங்களுக்கு அன்றைய தினம் எப்படிக் கழிந்தது, என்ன நடந்தது என்பதை சுருக்கமாக பகிர்ந்து அவர்களை அதிகம் பேச வையுங்கள்!

2. குற்றமோ குறையோ தெரிந்தால், மதிப்பெண் குறைவாக வாங்கினால், சக குழந்தைகளிடம் சண்டையிட்டால், “நாயே பேயே, சனியனே, பக்கத்துவீட்டுப் பையனை பாரு, இது அப்பனை போலவே எதுக்கும் உதவாது என்றோ, அம்மாவை போலவே சோம்பேறி” என்றோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஓப்பிட்டோ திட்டவோ, மட்டம் தட்டவோ செய்யாதீர்கள்!

3. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமையுண்டு, அதை மேம்படுத்த உதவுங்கள், உங்கள் குழந்தை என்றாலும் அது இன்னுமொரு உயிரே தவிர, மருத்துவராகவோ, கலெக்டராகவோ உங்களுடைய தனிப்பட்ட நிறைவேறாத ஆசைகளையோ அல்லது குப்பைகளையோ சுமக்கும் எந்திரங்கள் அல்ல அவர்கள்

4. குழந்தை பேசினாலும் யார் பேசினாலும் கைபேசியை தள்ளி வைத்துவிட்டு கண்கள் பார்த்து பேசுங்கள், பேசுபவருக்கு மரியாதை தாருங்கள், பிள்ளைகளுக்கும் கற்றுத்தாருங்கள்!

5. ஆட்டோ ஓட்டுநர், வேன் ஓட்டுநனர், பணியாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் யாராய் இருந்தாலும், “அந்த மாமா ரொம்ப நல்லவரு” என்று குழந்தைகள் எதிரே யாருக்கும் நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ சான்றிதழ் தராதீர்கள், ஒருவேளை ஏதோ ஒரு கேடுகெட்டவன் தவறாய் நடக்க, தான் சொன்னால் பெற்றவர் நம்ப மாட்டார்கள் என்றே குழந்தை நம்பும், கெட்டவர்கள் என்று எல்லோரையும் பறைசாற்றும் போது, எல்லோரையும் கண்டு தேவையில்லாமல் மிரளும்! நல்லவர்களோ கெட்டவர்களோ, பெற்றவர்
இல்லாமல், பெண் உறவு இல்லாமல் யாரிடமும் தனித்திருப்பது தவறு என்றும், தலையைத் தவிர, கைகளைத் தவிர எங்கும் யாரும் தொடக்கூடாது என்று சொல்லி வையுங்கள்!

6. எந்த வாகனத்திலும் யாரையும் நம்பி பிள்ளைகளை தனியே அனுப்பாதீர்கள், சில விடலைப்பையன்கள் சிறு குழந்தைகளை பைக்கின் முன்னே உட்கார வைத்து விர்ரென்று சாலையில் பறப்பதும் நிகழ்கிறது, சில ஆட்டோ ஓட்டுநனர்கள் பெண் குழந்தைகளிடம் சில்மிஷம் செய்வதும் நிகழ்கிறது!

7. உங்கள் மதமோ, சாதியோ, பெண்களை வீட்டில் பூட்டி வைக்குமென்றால், உங்களை திருத்துவதை காலம் செய்யட்டும்; ஆனால் உங்கள் பிள்ளைகளை தகப்பனாய், சகோதரனாய் நீங்கள் அழைத்துச்செல்லுங்கள், அதையும் ஒரு “டிரைவர் மாமாவிடம் விடாதீர்கள்!”

8. ஒவ்வொரு குழந்தைக்கும் “இரும்புச்சத்து” அவசியம், பல்வேறு சரிவிகித உணவுகள அவசியம், தினம் தினம் விதவிதமாய் “சீரியல்கள்” பார்த்து கண்ணீர் விடுவதற்கு பதில் விதவிதமாய் சமைத்துக்கொடுங்கள்! சமைக்கத் தெரியவில்லை என்றால் கையில் வைத்திருக்கும் கைபேசியில் உலகமே வரும், சமையல் குறிப்பு வராதா?

9. சாலையில் செல்லும்போது, பிள்ளைகளை உங்களது இடதுபக்கமோ அல்லது வாகனம் வராத பக்கமோ கைப்பிடித்து அழைத்துச்செல்லுங்கள். வாகனத்தில் சென்றால் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள்!

10. பொருட்காட்சி, கடற்கரை, கடைவீதி, திருமண விழாக்கள் என்று எங்கே சென்றாலும் (18 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் தவிர்த்து) பிள்ளைகளை கும்பலோடு விளையாடட்டும் என்று விட்டுவிட்டு நீங்கள் ஊர்கதைகளில், வேடிக்கைகளில் திளைக்காதீர்கள்! பொது இடங்களில் கழிவறைக்கும் தனியே அனுப்பாதீர்கள்!

1 1. பள்ளிவிட்டு வரும்போது சரியான நேரத்தில் வருகிறார்களா என்று பாருங்கள், உங்களுடைய கேள்விகளும், கண்காணிப்பும் பிள்ளைகளுக்கு பாதுகாப்பையும் அரவணைப்பையும் தர வேண்டுமே தவிர, தேவையில்லாத பயத்தையும் உங்கள் மீதான சலிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்தக்கூடாது!

12. “ஆண்தான் உயர்ந்தவனென்றும் பெண்பிள்ளை என்றால் அடங்கிப்போக வேண்டும்” என்றும் இருபாலரிடமும் சொல்லி வளர்ப்பதை நிறுத்தி, “மனிதத்தன்மை பற்றியும், அன்பு, அறன், ஒழுக்கம், சமையல், சுத்தம், வீரம், நேர்மை, விவேகம்” இவையெல்லாம் இருவருக்கும் பொது என்றும் சொல்லிலும் செயலிலும் நிலைப்படுத்துங்கள்!

13. பிள்ளைகள் முன்பு பொய் சொல்லி, பிள்ளைகள் முன்பு சண்டையிட்டு, பிள்ளைகள் முன் மரியாதையில்லாத வார்த்தைகளை பேசி, பிள்ளைகளை ஒழுக்கமாக வளர்ப்பதாக கற்பனை செய்துக்கொள்ளாதீர்கள், நாம் தருவதையே உலகம் நமக்கு திருப்பித்தரும், நாம் செய்வதையே பிள்ளைகளும் கற்கிறார்கள், “பூ மலர பூவின் விதையை விதைக்க வேண்டும்”

14. “மன்னிப்பும், நன்றியும்” நல்ல வார்த்தைகளே, “தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தை மன்னிப்பு” என்று அதை தன்மானத்திற்கு விடப்பட்ட சவாலாக உருவகப்படுத்தாமல், தவறு செய்வது மனித இயல்பு, அதை திருத்திக்கொள்வதும், மன்னிப்பும், நன்றியும் மனதிலிருந்து வரும் வார்த்தைகளாக இருக்க வேண்டும் என்று சொல்லி வளருங்கள்!

15. லூசுத்தனமான / சைக்கோத்தனமான ஹீரோக்களின் படங்களை பிள்ளைகளுடன் பார்ப்பதை தவிருங்கள், அவர்களையும் பார்க்க அனுமதிக்காதீர்கள்! பேய் படங்களை, ஆக்‌ஷன் படங்களை, அறிவியல் படங்களை பார்க்கும் போது, அது வெறும் படம், பாடமல்ல என்று எடுத்துச்சொல்லுங்கள்! ஆர்வமும் அதற்குரிய விஷய ஞானமும் இருந்தால், அதன் பின்னே உள்ள அறிவியலை, உளவியலை விளக்குங்கள்!

16. வளர்ந்த பிள்ளைகளிடம் “நோ” என்பது கெட்ட வார்த்தையல்ல, “நோ” விற்கு மாற்றாக ஒரு “எஸ்” வேறு இடத்திலோ வேறு வாய்ப்பாகவோ, அது கல்வி என்றாலும் காதல் என்றாலும் இருக்கும் என்று தெளிவுப்படுத்துங்கள்!

17. இவ்வளவும் படித்து, பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சுமையென்று கருதினால் இணையுடன் காமத்தை வெறும் வடிகாலாக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு நிறுத்திவிடுங்கள், உயிரை கொண்டு வந்து வதைக்காதீர்கள்!

18. எத்தனை செய்தும், பிள்ளைகளுக்கு வன்கொடுமை நிகழ்ந்துவிட்டால், அதை “விபத்தென்று” கருதி, “விபத்தென்று” அவர்களுக்கு தெளிவுப்படுத்தி, இன்னமும் “தன்னம்பிக்கையுடன்” வாழ்க்கையை எதிர்நோக்க ஒரு நல்ல தோழமையாய் வழிகாட்டுங்கள்!
#குழந்தைகளுக்காக

அன்பாக பேசக் கூடவா மாட்டீர்கள்?!

“குட் டச் பேட் டச்” சொல்லிக்கொடுப்பதில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு, பாதுகாப்பு பற்றிய பல்வேறு செய்திகளை எத்தனை எழுதினாலும் கூறினாலும் எட்டுபவர் காதுகளுக்கு மட்டுமே எட்டுகிறது, மற்றவர்களுக்கு எதற்குமே நேரம் இருப்பதில்லை என்பதைத்தான் நடக்கும் குற்றங்கள் தெளிவுபடுத்துகிறது!

மீர்சாகிப்பேட்டையில் இரண்டு தெருக்கள் நடந்தால் உடன் யாருமின்றி சிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும், அம்மாக்கள் பிள்ளைகளை வாகனம் நேரேதிரே வரும் திசையில் நடக்க வைத்து மறுபுறம் அலட்சியமாய் கைபேசியில் பேசிக்கொண்டு வருவார்கள், குழந்தைகளின் கண்களையோ தலையையோ பற்றிக் கவலைப்படாமல் பிள்ளைகளை வாகனங்களின் முன் நிற்க வைத்து அல்லது புளிமூட்டை போல் ஒரு சிறிய ஸ்கூட்டியின் முன் பகுதியில் அமர வைத்து அழைத்துச்செல்வார்கள், இதுபோன்று பல பகுதிகளில் காணலாம்! 

காவல்துறை குற்றம் நடந்தால் கைது செய்யும், நீதித்துறை சாட்சியையும் சந்தர்ப்பத்தையும் “அழுத்தத்தையும்” வைத்து நீதி தரும், அந்த நீதியும் பெரும்பாலும் தையல் எந்திரம் கொடுப்பதில் முடிந்துவிடும், பணம் பாதாளம் வரை பாய்ந்தால் அல்லது சில மனங்கள் நினைத்தால் குற்றாவாளிகளுக்கு குண்டுகள் பரிசாய் கிடைக்கும், இதிலெல்லாம் இழந்தவர்களுக்கு எந்த நியாயமும் கிடைத்துவிடுவதில்லை, இனியொரு குற்றம் நிகழாவண்ணம் இருக்கும் சட்டங்கள் தடுத்து நிறுத்துவதில்லை, அல்லது தரும் தண்டனைகள் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை!
சமூகத்திலும் ஆண் பிள்ளைகளின் வளர்ப்பில் இன்னமும் பெரியதாய் மாற்றம் வரவில்லை, பெண்களை பார்த்து பேசும்போது இன்னமும் கண்களை சந்தித்துப்பேச சில விடலைகளுக்கு கூட பழக்கம் வரவில்லை!

சிஸ்டம் சரியில்லை என்று நாட்டையே குறைச்சொல்லும் நடிகர்கள், தன் பெண் வயது பிள்ளைகளைக்கூட காதலியாக்கி மரத்தைச்சுற்றி ஓடுவதும், பொறுக்கி, திருடன், பிச்சைக்காரன், கொலைகாரன், கொள்ளைக்காரன் என்று எப்படி இருந்தாலும், “பார்த்தால் பிடிக்காது, பார்க்க பார்க்க பிடிக்கும்” என்று “ஆண்கள்” எப்படி இருந்தாலும் கதாநாயகர்கள் என்றும், வெள்ளைத்தோலும், உரித்துக்காட்டும் தேகமும், புத்தியில்லாத லூசுப்பெண்களும்தான் கதாநாயகிகள் என்றும் இன்னமும் சீரழித்துக்கொண்டிருக்கும் இந்தச் சினிமாவிலும் மாற்றமில்லை!

தினம் தோறும் பிள்ளைகளை பெற்றோர் “ஒன்பது முறை” கட்டியணைத்து அரவணைப்பு தரவேண்டும் என்கிறது மனோதத்துவம், அட அணைக்க வேண்டாம், உங்கள் குழந்தைகளிடம் அன்பாக பேசக் கூடவா மாட்டீர்கள்?!

சீனப்பயணம்-8

இரண்டுவார பயணம் முடிந்து, கிளம்பும்
நாள் வந்தது! விடியற்காலையில் எழுந்து, செக் அவுட் செய்து விமானநிலையம் சென்று சீனாவில் இருந்து சென்னைக்கு பயணப்பெட்டிகளை செக் இன் செய்து, ஹாங்காங் வரைக்குமான பயணசீட்டு பெற்ற வரை எல்லாம் சரியாக நடந்தது, டாலியன் விமான நிலையத்தின் மாபெரும் குறை கழிவறைகள், மோசமான கழிவறைகள் சென்னையின் உள்நாட்டு விமான கழிவறைகளுக்கு சவால்விட்டு நின்றது!
ஹாங்காங்குடன் ஒப்பிட்டு பார்த்தால் டாலியனில் உள்ளது சிறிய விமான நிலையம், விமானத்தின் பெயர் மாறுதலில் கொஞ்சம் குழம்பி, பின் ஒருவழியாய் அதற்குரிய சரியான வரிசையில் நிற்க ஒரு ஆஸ்திரேலியர் அறிமுகமானார், நான்கு மாத காலமாக சீனர்களுக்கு ஆங்கிலம் கற்றுதந்துவிட்டு, ஒரு மாத விடுமுறையில் செல்வதாகவும், சீனர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் பகிர்ந்துக்கொண்டார்!

இந்தியாவின் ஒரு பலம் ஆங்கிலம், அதைச்சீனர்கள் எட்டிப்பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை, மொழியிலும், விஞ்ஞானத்திலும், வேளாண் தொழில் நுட்பத்திலும், இயற்கையை பாதுகாக்க அவர்கள் எடுக்கும் அக்கறையிலும், தனிமனித சுதந்திரத்திலும் அவர்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க, ராமயண காலத்தில் பறந்தது விமானம் என்று ஆரம்பித்து, எட்டுவழிச்சாலை என்று இருக்கும் மரங்களை அழித்து, மீத்தேன், நியூட்ரினோ என்று ஒரு மாநிலத்தையே குறிவைத்து, பேச்சுவழக்கில் இல்லாத ஒரு சமஸ்க்ருதத்தை தூக்கிப்பிடித்து, இந்தியை திணித்து, மாநிலங்கள் முழுக்க கூன் பாண்டிகளை உருவாக்கி, வன்முறைகளை அடக்காமல், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, உலகம் சுற்றும் பிரதமரையே காலத்துக்கும் வைத்துக்கொண்டிருந்தால் அருணாசலத்தில் நுழைந்த சீனா, வியாபாரிகளின் பேராசையில் இறக்குமதி பொருட்களாக இந்தியா முழுதும் பரவியிருக்கும் சீனா, பிற மாநில எல்லைகளிலும் அத்துமீறும் என்று இரண்டு தேசங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை!

சீனாவில் இருந்து ஹாங்காங் வந்திறங்கியாகிவிட்டது, அதே முந்தைய ரன் லோலா ரன் அனுபவம் நிழலாடியது. அங்கிருந்து சுமார் ஐந்து மணிநேரம் காத்திருப்பு, நேரே பயணசீட்டு வாங்கச்சென்றால் இந்த முறை புதிதாய் ஒரு குண்டு போட்டார்கள், “சாரி யுவர் டிக்கெட் இஸ் நாட் கன்பார்ம்ஃட்!” (அதாகபட்டது மக்களே எனக்கு டிக்கெட் இல்லையாம் 😳)
அது எந்த மாதிரி உணர்ச்சி 🙄என்றே எனக்கு தெரியாத நிலையில் அந்தப்பெண்ணை சில விநாடிகள் உற்றுப்பார்த்து, பின் தெளிந்து, “சாரி, பட் ஹௌ? மை ஃபேக்கெஜ் செக் கின் இஸ் டன் டில் சென்னை!” என்னுடைய பயணப்பைகள் சென்னை வரைக்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு எனக்கு மட்டும் எப்படி டிக்கெட் இல்லாமல் போகும் என்று வாதிட, இந்தியா செல்லும் விமானங்கள் அனைத்தும் ஓவர் புக் செய்யப்பட்டு விட்டதாகவும், என்னுடைய கம்பெனியின் ஏஜென்ட் முதலில் டிக்கெட் பதிவுசெய்து பின் அது ரத்துசெய்யப்பட்டு கடைசியாக பயண தேதிக்கு முந்தைய இரவுதான் புக் செய்ததாகவும் அதனால் டிக்கெட் உறுதி செய்யப்படவிடவில்லை என்றும் விளக்கம் சொன்னார்கள், பின் 8:20 விமானம் 10:20 தான் புறப்படும் என்றார்கள், 9:20 வரை நான் காத்திருக்க வேண்டும் என்றார்கள்!

“சரி உன் டிக்கெட் வேண்டாம், என்னுடைய பைகளை கொடுத்துவிடுங்கள்”, என்றால் அதற்கு நான் இமிக்ரேஷன் செக் செய்ய வேண்டும் என்றார்கள், வெளியே போக எனக்கு ஹாங்காங் பாஸ்போர்ட் வேண்டும், உள்ளே செல்ல போர்டிங் பாஸ் வேண்டும், இதற்குள் அலுவலகம் எனக்கு கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்துவிட்டது, “சரிம்மா என் பெட்டியை சென்னைக்கு அனுப்பிடு, நான் கல்கத்தா போறேன்”, என்றால், அதுவும் முடியாது என்றார்கள், ஒன்று ஹாங்காங் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் இல்லை நான் காத்திருக்க வேண்டும் என்றார்கள், ஒன்றுக்கு மூன்று பேர் இதையே சொல்ல இதற்கிடையே அலுவலக பிரச்சனைகள், வேலைகள் வரிசைக்கட்டி போன் கால்களாக வர, உள்ளே போகவும் முடியாமல் வெளியே போகவும் முடியாமல் அங்கேயே உட்கார்ந்துக்கொண்டு வேலைகளை தொடர்ந்தேன், கேத்தே பசிபிக்பின் மூன்று பெண்களில் ஒரு பெண் மட்டும் “டிக்கெட் இன்று இல்லை என்றால் நாளை, நாளை இல்லை என்றால் அடுத்தநாள், வெயிட் செய்வதுதான் ஒரே வழி” என்று ரொம்பவும் எதிர்மறையாக பேச, மனதுக்குள் நேர்மறையாக, “ரொம்ப பேசுற நீதான், நான் இருக்குற இடம் தேடி டிக்கெட் கொண்டு வர போறே!” என்று மனதுக்குள் ஒரு காட்சியை ஓடவிட்டுகொண்டு ஹாங்காங்குக்கு விசா போடச்சொல்லி அலுவலகத்துக்கு பேசி கொண்டிருக்க, அந்தச் ஹாங்காங் பெண், ஆமாம் அதே பெண்தான், என்னைத்தேடி வந்து நான் அமர்ந்திருந்த இடத்திலேயே வந்து என் பாஸ்போர்ட்டை பெற்று குறித்துவிட்டு, என் கையில் போர்டிங் பாஸ் தர அப்போது மணி 9:45, பத்தரைக்கு போர்டிங் என்று சொல்ல, நன்றி கூறி ஓட்டம் தொடங்கியது!

அவசரமாய் செக்யூரிட்டி செக் முடித்து, ஓட்டமாய் ஓடி கேட் நம்பர் 47 வர, “கேட் நம்பர் மாறிவிட்டது, 11.10 போர்டிங்” என்றார்கள், 47 இல் இருந்து 70 க்கு ஒட்டமாய் ஓடி செல்ல, மணி 11.05, “போர்டிங் 11:30 க்கு” என்று அறிவிப்புப்பலகை சொன்னது, காலையில் கிளம்பிய போது சாப்பிட்ட பழங்களும், சீன விமானத்தில் காலையில் உண்ட ஒரு ரொட்டித்துண்டும் எப்போதோ ஜீரணமாயிருக்க, ஏழு மணி நேரத்திற்கு மேல் போர்டிங் பாஸூக்கு போராடி களைத்ததில் பசி பிடுங்கியது, சாப்பிட மீண்டும் அவ்வளவு தூரம் போகலாமா வேண்டாமா என்று யோசிக்க மணி 11:20, சரிவேண்டாம் என்று முடிவெடுத்து காத்திருக்க, விமானம் மேலும் தாமதம் 12:00 க்கு புறப்படும் என்றார்கள், அதற்குள் பக்கத்தில் இருந்த எல்லோரும் “ரன் லோலா ரன்” பாணியில் 4 கேட்டுகள் இப்படியே மாற்றி மாற்றி வந்திருப்பதாக புகார் பட்டியலை வாசிக்க, பசியில் கண் முன்னே நட்சத்திரங்கள் தெரிந்தது, அதற்குள் அருகிலிருந்த ஒரு சென்னையைச் சேர்ந்த அம்மா, “ரொம்ப பசியா இருக்கற போல இதைச் சாப்பிடு” என்று நட்ஸ் சாக்லேட் பாரை கொடுக்க, எங்கே சென்றாலும் தாயன்பு கிடைத்துவிடுகிறது என்று கடவுளுக்கும் அந்த அம்மைக்கும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டேன்! ஒரு வழியாய் விமானம் கிளம்பி, சென்னை விமான நிலையம் வந்துச் சேர்ந்த போது மணி 3:20, வழக்கம் போல “சுவச் பாரத்” உடைந்த டைல்ஸூகளுடன், அந்த இரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீண்ட ஒரு நீண்ட வரிசையில், அட்டைப்பெட்டிகள் போன்ற இமிக்ரேஷன் கேமராக்களுடன் வரவேற்றது!

#சீனப்பயணம்8

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!