Saturday 20 April 2019

சீனப்பயணம்-8

இரண்டுவார பயணம் முடிந்து, கிளம்பும்
நாள் வந்தது! விடியற்காலையில் எழுந்து, செக் அவுட் செய்து விமானநிலையம் சென்று சீனாவில் இருந்து சென்னைக்கு பயணப்பெட்டிகளை செக் இன் செய்து, ஹாங்காங் வரைக்குமான பயணசீட்டு பெற்ற வரை எல்லாம் சரியாக நடந்தது, டாலியன் விமான நிலையத்தின் மாபெரும் குறை கழிவறைகள், மோசமான கழிவறைகள் சென்னையின் உள்நாட்டு விமான கழிவறைகளுக்கு சவால்விட்டு நின்றது!
ஹாங்காங்குடன் ஒப்பிட்டு பார்த்தால் டாலியனில் உள்ளது சிறிய விமான நிலையம், விமானத்தின் பெயர் மாறுதலில் கொஞ்சம் குழம்பி, பின் ஒருவழியாய் அதற்குரிய சரியான வரிசையில் நிற்க ஒரு ஆஸ்திரேலியர் அறிமுகமானார், நான்கு மாத காலமாக சீனர்களுக்கு ஆங்கிலம் கற்றுதந்துவிட்டு, ஒரு மாத விடுமுறையில் செல்வதாகவும், சீனர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கு மிகுந்த ஆர்வம் காட்டுவதாகவும் பகிர்ந்துக்கொண்டார்!

இந்தியாவின் ஒரு பலம் ஆங்கிலம், அதைச்சீனர்கள் எட்டிப்பிடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை, மொழியிலும், விஞ்ஞானத்திலும், வேளாண் தொழில் நுட்பத்திலும், இயற்கையை பாதுகாக்க அவர்கள் எடுக்கும் அக்கறையிலும், தனிமனித சுதந்திரத்திலும் அவர்கள் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க, ராமயண காலத்தில் பறந்தது விமானம் என்று ஆரம்பித்து, எட்டுவழிச்சாலை என்று இருக்கும் மரங்களை அழித்து, மீத்தேன், நியூட்ரினோ என்று ஒரு மாநிலத்தையே குறிவைத்து, பேச்சுவழக்கில் இல்லாத ஒரு சமஸ்க்ருதத்தை தூக்கிப்பிடித்து, இந்தியை திணித்து, மாநிலங்கள் முழுக்க கூன் பாண்டிகளை உருவாக்கி, வன்முறைகளை அடக்காமல், பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி, உலகம் சுற்றும் பிரதமரையே காலத்துக்கும் வைத்துக்கொண்டிருந்தால் அருணாசலத்தில் நுழைந்த சீனா, வியாபாரிகளின் பேராசையில் இறக்குமதி பொருட்களாக இந்தியா முழுதும் பரவியிருக்கும் சீனா, பிற மாநில எல்லைகளிலும் அத்துமீறும் என்று இரண்டு தேசங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை!

சீனாவில் இருந்து ஹாங்காங் வந்திறங்கியாகிவிட்டது, அதே முந்தைய ரன் லோலா ரன் அனுபவம் நிழலாடியது. அங்கிருந்து சுமார் ஐந்து மணிநேரம் காத்திருப்பு, நேரே பயணசீட்டு வாங்கச்சென்றால் இந்த முறை புதிதாய் ஒரு குண்டு போட்டார்கள், “சாரி யுவர் டிக்கெட் இஸ் நாட் கன்பார்ம்ஃட்!” (அதாகபட்டது மக்களே எனக்கு டிக்கெட் இல்லையாம் 😳)
அது எந்த மாதிரி உணர்ச்சி 🙄என்றே எனக்கு தெரியாத நிலையில் அந்தப்பெண்ணை சில விநாடிகள் உற்றுப்பார்த்து, பின் தெளிந்து, “சாரி, பட் ஹௌ? மை ஃபேக்கெஜ் செக் கின் இஸ் டன் டில் சென்னை!” என்னுடைய பயணப்பைகள் சென்னை வரைக்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்ட பிறகு எனக்கு மட்டும் எப்படி டிக்கெட் இல்லாமல் போகும் என்று வாதிட, இந்தியா செல்லும் விமானங்கள் அனைத்தும் ஓவர் புக் செய்யப்பட்டு விட்டதாகவும், என்னுடைய கம்பெனியின் ஏஜென்ட் முதலில் டிக்கெட் பதிவுசெய்து பின் அது ரத்துசெய்யப்பட்டு கடைசியாக பயண தேதிக்கு முந்தைய இரவுதான் புக் செய்ததாகவும் அதனால் டிக்கெட் உறுதி செய்யப்படவிடவில்லை என்றும் விளக்கம் சொன்னார்கள், பின் 8:20 விமானம் 10:20 தான் புறப்படும் என்றார்கள், 9:20 வரை நான் காத்திருக்க வேண்டும் என்றார்கள்!

“சரி உன் டிக்கெட் வேண்டாம், என்னுடைய பைகளை கொடுத்துவிடுங்கள்”, என்றால் அதற்கு நான் இமிக்ரேஷன் செக் செய்ய வேண்டும் என்றார்கள், வெளியே போக எனக்கு ஹாங்காங் பாஸ்போர்ட் வேண்டும், உள்ளே செல்ல போர்டிங் பாஸ் வேண்டும், இதற்குள் அலுவலகம் எனக்கு கல்கத்தா செல்ல டிக்கெட் எடுத்துவிட்டது, “சரிம்மா என் பெட்டியை சென்னைக்கு அனுப்பிடு, நான் கல்கத்தா போறேன்”, என்றால், அதுவும் முடியாது என்றார்கள், ஒன்று ஹாங்காங் பாஸ்போர்ட் எடுக்க வேண்டும் இல்லை நான் காத்திருக்க வேண்டும் என்றார்கள், ஒன்றுக்கு மூன்று பேர் இதையே சொல்ல இதற்கிடையே அலுவலக பிரச்சனைகள், வேலைகள் வரிசைக்கட்டி போன் கால்களாக வர, உள்ளே போகவும் முடியாமல் வெளியே போகவும் முடியாமல் அங்கேயே உட்கார்ந்துக்கொண்டு வேலைகளை தொடர்ந்தேன், கேத்தே பசிபிக்பின் மூன்று பெண்களில் ஒரு பெண் மட்டும் “டிக்கெட் இன்று இல்லை என்றால் நாளை, நாளை இல்லை என்றால் அடுத்தநாள், வெயிட் செய்வதுதான் ஒரே வழி” என்று ரொம்பவும் எதிர்மறையாக பேச, மனதுக்குள் நேர்மறையாக, “ரொம்ப பேசுற நீதான், நான் இருக்குற இடம் தேடி டிக்கெட் கொண்டு வர போறே!” என்று மனதுக்குள் ஒரு காட்சியை ஓடவிட்டுகொண்டு ஹாங்காங்குக்கு விசா போடச்சொல்லி அலுவலகத்துக்கு பேசி கொண்டிருக்க, அந்தச் ஹாங்காங் பெண், ஆமாம் அதே பெண்தான், என்னைத்தேடி வந்து நான் அமர்ந்திருந்த இடத்திலேயே வந்து என் பாஸ்போர்ட்டை பெற்று குறித்துவிட்டு, என் கையில் போர்டிங் பாஸ் தர அப்போது மணி 9:45, பத்தரைக்கு போர்டிங் என்று சொல்ல, நன்றி கூறி ஓட்டம் தொடங்கியது!

அவசரமாய் செக்யூரிட்டி செக் முடித்து, ஓட்டமாய் ஓடி கேட் நம்பர் 47 வர, “கேட் நம்பர் மாறிவிட்டது, 11.10 போர்டிங்” என்றார்கள், 47 இல் இருந்து 70 க்கு ஒட்டமாய் ஓடி செல்ல, மணி 11.05, “போர்டிங் 11:30 க்கு” என்று அறிவிப்புப்பலகை சொன்னது, காலையில் கிளம்பிய போது சாப்பிட்ட பழங்களும், சீன விமானத்தில் காலையில் உண்ட ஒரு ரொட்டித்துண்டும் எப்போதோ ஜீரணமாயிருக்க, ஏழு மணி நேரத்திற்கு மேல் போர்டிங் பாஸூக்கு போராடி களைத்ததில் பசி பிடுங்கியது, சாப்பிட மீண்டும் அவ்வளவு தூரம் போகலாமா வேண்டாமா என்று யோசிக்க மணி 11:20, சரிவேண்டாம் என்று முடிவெடுத்து காத்திருக்க, விமானம் மேலும் தாமதம் 12:00 க்கு புறப்படும் என்றார்கள், அதற்குள் பக்கத்தில் இருந்த எல்லோரும் “ரன் லோலா ரன்” பாணியில் 4 கேட்டுகள் இப்படியே மாற்றி மாற்றி வந்திருப்பதாக புகார் பட்டியலை வாசிக்க, பசியில் கண் முன்னே நட்சத்திரங்கள் தெரிந்தது, அதற்குள் அருகிலிருந்த ஒரு சென்னையைச் சேர்ந்த அம்மா, “ரொம்ப பசியா இருக்கற போல இதைச் சாப்பிடு” என்று நட்ஸ் சாக்லேட் பாரை கொடுக்க, எங்கே சென்றாலும் தாயன்பு கிடைத்துவிடுகிறது என்று கடவுளுக்கும் அந்த அம்மைக்கும் நன்றி சொல்லி வாங்கிக்கொண்டேன்! ஒரு வழியாய் விமானம் கிளம்பி, சென்னை விமான நிலையம் வந்துச் சேர்ந்த போது மணி 3:20, வழக்கம் போல “சுவச் பாரத்” உடைந்த டைல்ஸூகளுடன், அந்த இரவில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் நீண்ட ஒரு நீண்ட வரிசையில், அட்டைப்பெட்டிகள் போன்ற இமிக்ரேஷன் கேமராக்களுடன் வரவேற்றது!

#சீனப்பயணம்8

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!