Saturday 20 April 2019

கல்லறை_மலர்கள்

வரிசையற்று
பூக்கள் இறைந்திருந்தது
ஒவ்வொன்றும் கலைந்த
கனவுகளை பகிர்ந்துக்கொண்டது!
மஞ்சள் நிறம்
இப்படி தொலைந்தென்றது
கொன்றை
சிவப்பு குருதியில்
நனைந்தென்றது
ரோஜா
இப்படித்தான் எல்லாம்
இழந்து வெளிறிப்போனென்றது
அல்லி
மகிழ்ச்சியை
நான் விட்டுத்தரவேயில்லையென்றது
அப்போதும் மணம் பரப்பிய
சம்பங்கி
எல்லா வண்ணங்களும்
கூடி கதைப்பேசியதும்
ஈரமண்ணில் வீற்றிருந்த
அவளை நோக்கி
நீ என்ன நிறமென்றது
தலைகீழாய் தொங்கிக்கொண்டிருந்த
ஊதாநிற சங்குப்பூ
உங்களின் கலவைதான்
எனினும் நிறமற்றவள் என்றாள்
மயான அமைதியில்
உறைந்த மலர்கள்
எங்கே உன் வார்த்தைகளென்றன
பேசாத வார்த்தைகளெல்லாம்
என் கல்லறையின்
கற்களாக அடுக்கி வைத்து
கேளாத வார்த்தைகளையெல்லாம்
கணநேர கண்ணீராக
உகுத்து கடக்கிறார்கள்
மனிதர்களென்றாள்
நிறமற்றவளே வா
நாம் விடுபடுவோமென
மலர்களில் இருந்து
கலைந்தன ஆவிகள்
அந்த கல்லறையைவிட்டு!

#கல்லறை_மலர்கள்



Image may contain: flower, plant, tree, sky, outdoor and nature

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!