Saturday, 20 April 2019

அன்பாக பேசக் கூடவா மாட்டீர்கள்?!

“குட் டச் பேட் டச்” சொல்லிக்கொடுப்பதில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு, பாதுகாப்பு பற்றிய பல்வேறு செய்திகளை எத்தனை எழுதினாலும் கூறினாலும் எட்டுபவர் காதுகளுக்கு மட்டுமே எட்டுகிறது, மற்றவர்களுக்கு எதற்குமே நேரம் இருப்பதில்லை என்பதைத்தான் நடக்கும் குற்றங்கள் தெளிவுபடுத்துகிறது!

மீர்சாகிப்பேட்டையில் இரண்டு தெருக்கள் நடந்தால் உடன் யாருமின்றி சிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கும், அம்மாக்கள் பிள்ளைகளை வாகனம் நேரேதிரே வரும் திசையில் நடக்க வைத்து மறுபுறம் அலட்சியமாய் கைபேசியில் பேசிக்கொண்டு வருவார்கள், குழந்தைகளின் கண்களையோ தலையையோ பற்றிக் கவலைப்படாமல் பிள்ளைகளை வாகனங்களின் முன் நிற்க வைத்து அல்லது புளிமூட்டை போல் ஒரு சிறிய ஸ்கூட்டியின் முன் பகுதியில் அமர வைத்து அழைத்துச்செல்வார்கள், இதுபோன்று பல பகுதிகளில் காணலாம்! 

காவல்துறை குற்றம் நடந்தால் கைது செய்யும், நீதித்துறை சாட்சியையும் சந்தர்ப்பத்தையும் “அழுத்தத்தையும்” வைத்து நீதி தரும், அந்த நீதியும் பெரும்பாலும் தையல் எந்திரம் கொடுப்பதில் முடிந்துவிடும், பணம் பாதாளம் வரை பாய்ந்தால் அல்லது சில மனங்கள் நினைத்தால் குற்றாவாளிகளுக்கு குண்டுகள் பரிசாய் கிடைக்கும், இதிலெல்லாம் இழந்தவர்களுக்கு எந்த நியாயமும் கிடைத்துவிடுவதில்லை, இனியொரு குற்றம் நிகழாவண்ணம் இருக்கும் சட்டங்கள் தடுத்து நிறுத்துவதில்லை, அல்லது தரும் தண்டனைகள் அச்சத்தை ஏற்படுத்துவதில்லை!
சமூகத்திலும் ஆண் பிள்ளைகளின் வளர்ப்பில் இன்னமும் பெரியதாய் மாற்றம் வரவில்லை, பெண்களை பார்த்து பேசும்போது இன்னமும் கண்களை சந்தித்துப்பேச சில விடலைகளுக்கு கூட பழக்கம் வரவில்லை!

சிஸ்டம் சரியில்லை என்று நாட்டையே குறைச்சொல்லும் நடிகர்கள், தன் பெண் வயது பிள்ளைகளைக்கூட காதலியாக்கி மரத்தைச்சுற்றி ஓடுவதும், பொறுக்கி, திருடன், பிச்சைக்காரன், கொலைகாரன், கொள்ளைக்காரன் என்று எப்படி இருந்தாலும், “பார்த்தால் பிடிக்காது, பார்க்க பார்க்க பிடிக்கும்” என்று “ஆண்கள்” எப்படி இருந்தாலும் கதாநாயகர்கள் என்றும், வெள்ளைத்தோலும், உரித்துக்காட்டும் தேகமும், புத்தியில்லாத லூசுப்பெண்களும்தான் கதாநாயகிகள் என்றும் இன்னமும் சீரழித்துக்கொண்டிருக்கும் இந்தச் சினிமாவிலும் மாற்றமில்லை!

தினம் தோறும் பிள்ளைகளை பெற்றோர் “ஒன்பது முறை” கட்டியணைத்து அரவணைப்பு தரவேண்டும் என்கிறது மனோதத்துவம், அட அணைக்க வேண்டாம், உங்கள் குழந்தைகளிடம் அன்பாக பேசக் கூடவா மாட்டீர்கள்?!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...