Saturday 20 April 2019

சீனப்பயணம்

வழக்கம் போல பணிகள், வழக்கமில்லாத உணவுகள், அருமையான மனிதர்கள், அழகான ஒரு மென்பொருள் அலுவலங்கள் நிறைந்த நகரமாக இருக்கிறது டாலியன், “டாலியன் பெஸ்ட் சிட்டி” என்ற பெயர் பலகைகளை பல இடங்களில் பார்க்க முடிகிறது.
“எத்தனை மணிக்கு யார் வந்து நகரை சுத்தப்படுத்துவது?” என்று கேட்கிறேன், விடிகாலையில் வந்து அரசு குப்பை வாகனங்கள் சுத்தம் செய்யும் என்றார்கள், கண்முன்னே ஒரு இடத்தில் குப்பையை அள்ளி வீதியெங்கும் உதிர்த்துச்செல்லும் சென்னை மாநாகராட்சியின் வாகனங்கள் கண்முன்னே வந்தது, மக்களும் குப்பைகளை குப்பைத்தொட்டிகளை தேடிப்போடுகின்றனர், விதிவிலக்குகளையும் காண முடிகிறது!
அலுவலகம் விட்டு திரும்பி வந்தப்பிறகு தங்கியிருந்த ஹோட்டலில் ஒரு மாடியில் சீன உணவகம் இருக்கிறது என்று தெரிய வர, இன்றைக்காவது ஒரு ஃப்ரைட் ரைஸ் - அரிசி சாதம் சாப்பிடுவோம் என்று சென்றேன்.
நல்லவேளை அங்கிருந்த பெண் கையில் டேப்லெட் வைத்துக்கொண்டு உணவு வகைகளைக்காட்ட எல்லாவற்றிலும் பன்றியும் மாடும் இருந்தது, (இவர்களுக்கு அதிகமான ஏற்றுமதி செய்வது இந்தியா என்பது உபரித்தகவல், அங்கே சாப்பிட்டால் கொலை, இங்கே ஏற்றுமதி செய்தால் வியாபாரம்), ஒரு குழந்தையிடம் பேசுவது போல, “இது எல்லாம் இல்லாமல் ஒரு முட்டை ப்ரைட் ரைஸ் வேண்டும், மற்றும் அதிலிருந்த ஒரு நண்டுக்கறியும் வேண்டும்” என்று ஒவ்வொரு வார்த்தைகளாய் பிரித்துச் சொல்ல, சிறிது நேரத்தில் அங்கிருந்த ஒரு வாடிக்கையாளாராய் நான் இருக்க (எனக்கு அப்பவே சந்தேகம் வந்திருக்க வேண்டாம்?!) சிறிது நேரத்தில் உணவு வந்தது, “ப்ரைட் ரைஸ் இங்க இருக்கு, நண்டு எங்கேயிருக்கு?” என்று கேட்க, அதுவும் அதில்தான் இருக்கு என்று வாழைப்பழ பகடியை நினைவுறுத்த, சரி எப்படியும் வயித்துல ஒன்னாதானே போகப்போகுது என்று சாப்பிட, ரொம்ப நாள் கழித்து நாவிற்கு சுவை தெரிந்தது, கொஞ்ச நேரத்தில் வாயில் ஏதோ தட்டுப்பட, கையில் எடுத்துப்பார்த்தால் ஒரு கண்ணாடித்துண்டு, “சீ திஸ்” என்று கூப்பிட்டுக் காட்ட, அந்தப் பெண் மன்னிப்புக்கேட்க, சரி ஏதோ ஒன்று வந்திருக்கலாம், உணவை ஏன் வீணடிக்க வேண்டும் என்று சாப்பிட, உணவு முழுக்க கண்ணாடிச் சில்கள் எப்படியோ அரைப்பட்டிருந்தது, அப்படியே வைத்துவிட்டு எழ, அந்தப்பெண் பல தடவை மன்னிப்புக்கேட்டு ஓடிப்போய் பழங்களை கொண்டு வந்து சாப்பிடுமாறு சொல்லி, மீண்டும் புதிதாய் உணவு செய்து தருகிறேன் என்று சொல்ல, கொஞ்சம் சாப்பிட்ட கண்ணாடி உணவே போதும், மொழியே புரியாதவர்களிடம் என்ன சொல்லி என்ன செய்ய என்று நினைத்துக்கொண்டு, “எனக்கு வருத்தம் இல்லை, பசி இல்லை, வேண்டாம்!” என்று மறுத்துவிட்டு அறைக்கு வந்துவிட, அரைமணிநேரத்தில் வாயிலில் மணியோசை கேட்டது, கதவைத்திறந்தால் அந்தப்பெண் புதிதாய் செய்ய அதே போன்ற உணவுடனும், பழத்தட்டுடனும் நிற்க, பசியே இல்லாமல் அந்த உணவை வாங்கி வீணடிக்க மனம் வராமல் பல முறை தன்மையாய் எடுத்துக்கூறி மறுக்க, புரிந்தும் புரியாமலும் அந்தப்பெண் மன்றாடி மன்றாடி கண்கள் கலங்கிவிட, அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் உணவை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தேன்!
சில பணிகளை முடித்துவிட்டு கண் எதிரே இருந்த உணவை சாப்பிட்டே தீர வேண்டிய கட்டாயத்தில் சாப்பிடத் தொடங்க, இரண்டு வாய் உண்ட பின், தட்டில் ஏதோ வித்தியாசமாய் இருக்க, உற்று உற்றுப் பார்த்ததில் அது ஒரு பூச்சி, அப்படியே உணவை ஓரமாய் வைத்துவிட்டு விதியை நினைத்துச்சிரித்து உறங்கச்சென்றேன்!
இத்தனை நடந்தும் நான் வர வேண்டும் என்று அந்தப்பெண் கேட்டுக்கொண்டதால் அதே இடத்திற்குச் சென்று, பிரித்து உடைத்து ஆங்கிலத்தில், “இங்கே பாரு அதே ரைஸ்தான், ஆனா மாடு, பன்றி அப்புறம் பூச்சியில்லாமல்!” என்று சொல்லிவிட்டு காத்திருக்கிறேன், தி(கி)ல்லுடன்! 🙄🤭
#சீனப்பயணம்5

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!