Saturday 20 April 2019

சீனப்பயணம்-7

முந்தைய நாள் கடைவீதியில் சுற்றியபோது வெயில் வாட்டியது, மாலைப்பொழுதான நேரத்தில், “வாங்க நாம டீ மில்க் குடிக்கலாம்” என்றார்கள், அது சூப்பராக இருக்கும் என்று பரபரவென நான்காவது தளத்தில் இருந்து கீழ்தளத்திற்கு வந்தார்கள், பின்பு யாரிடமோ விசாரிக்க, “அந்தக் கடை இன்னைக்கு விடுமுறை!” என்றதும் அவர்களுக்கு சப்பென்று ஆகிவிட்டது, “அது என்ன டீ மில்க்”என்றால், கேட்டதும் எனக்கும் சப்பென்றாகிவிட்டது, நம்மூரு டீயைத்தான் அவர்கள் டீ மில்க் என்கிறார்கள்!
அந்த நகரில் எந்த உணவகத்தில் தண்ணீர் கேட்டாலும், சுடுநீரே தருகிறார்கள், அதில் பெரும்பாலும் ஒரு எலுமிச்சை துண்டு மிதக்கிறது! சாதாரண குளிர்நீர் கிடையாது, வேண்டுமென்றால் காசுக்கொடுத்து தண்ணீர் பாட்டில்தான் வாங்கவேண்டும்! எப்போதும் டீயை பால் கலக்காமல் குடிப்பவர்களுக்கு இந்த பால் கலந்த தேநீரை அறிமுகப்படுத்தியது நம்மூர் சேட்டனாய்தான் இருக்கும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன்! 

உப்பு உரைப்பில்லாத உணவையும், பழங்களையும், காய்கறிகளையும் உண்டு, டோபஸ்கோவின் மிளகாய் சாஸ், சிறிது மிளகு என்று எது பக்கத்தில் வந்தாலும் “ஓ ஸ்பைஸி” என்று இரண்டுபேரும் மாறி மாறிச் சொல்ல, “சென்னைக்கு வாங்க, எறா தொக்கு, மீன்குழம்பு, நண்டு வறுவலும் தந்து உங்களுக்கு காரம்ன்னா என்னன்னு காட்டுறேன்” என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.

ஒருவழியாய் எல்லாம் முடிந்து திரும்ப, தினம் தினம் பரபரப்பான அலுவலக பணிகள் முடிந்து கடைசி நாளும் வந்தது, க்ளையண்டை வேறு ஒரு ஹோட்டலில் இருந்து அழைத்து வர ஒரு ஹௌடி காரில் கிளம்ப, கார் எதுவாய் இருந்தாலும் ஓட்டுநனரின் நடத்தையில் மாற்றம் இல்லை என்பதை தெரிந்துக்கொண்ட நாள் அது, மற்ற காரின் ஓட்டுநர்கள் (ஒரே ஒரு பெண் ஓட்டுநனரைத் தவிர) ரேஷ் ட்ரைவிங்கிலும் ப்ளிச்சென்று அவ்வப்போது கார் கண்ணாடியைத்திறந்து சுத்தமாய் இருந்தச் சாலையில் எச்சில் துப்பிக்கொண்டு முகஞ்சுளிக்க வைக்க, இந்த ஹௌடியின் ஓட்டுநர் சாலையைக் கடந்த ஒரு பெண்மணியை மிக நெருக்கத்தில் சென்று பயமுறுத்தி நிறுத்திக்கிளம்பினார், கொஞ்சம் முன்னே சென்றதும் இரு போக்குவரத்துக் காவலர்களில் ஒருவர் ஓட்டுனரை தன் சுட்டுவிரல் நீட்டி எச்சரிக்க, ஓட்டுநனர் அதை மதித்ததாய் தெரியவில்லை!

ஒன்று மட்டும் தெரிந்தது, மிகக்கடுமையான சட்டவிதிகள் உள்ள சீனா அதைக்கொஞ்சம் தளர்த்திவிட்டால் அது இந்தியா போல் மாறிவிடும், அதுவே அதன் மக்கள் தொகையில் தொண்ணூறு சதவீதம் தொகையை பண்பட்டவர்களாக மாற்றிவிட்டால், சட்டத்திட்டங்கள் இல்லாமலே மிகச்சிறந்த மக்கள் சக்தியைக்கொண்ட ஜப்பானிய தேசம் போல மாறிவிடும்!
#சீனப்பயணம்7

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!