Monday 5 October 2015

விளம்பரம்

மரங்களை வெட்டி
 சாலைகளை விரிவுப்படுத்தி
 தட்டிகளும் பலகைகளும்
 அமைத்து -
 தட்டிகளுக்குள் ஆள்பவர்
 உருவம் வரைந்து
 அவைகளையும் பாதைகளையும்
 பச்சை நிறத்தில் முக்கியெடுத்து
 பசுமைத்தமிழகம்
 மலர்ந்துவிட்டதாய் விளம்பரம்
 செய்தனர்

 உழைக்கும் வர்க்கத்தின்
 ஒவ்வொரு துளி வேர்வையையும்
 சாராயத்தில் சுரண்டியெடுத்து
 அவன் குடும்பத்திற்கு
 மலிவான இலவசங்களை அளித்து
 பூனைகள் குடிப்புகுந்த அடுப்புக்களுக்கு
 மாற்றாய் மலிவு விலை உணவு தந்து
 வள்ளல் ஆகியதாய் விளம்பரம் செய்தனர்

 கல்விக் கூடங்கள் மூடி
 குழந்தைத் தொழிலாளர்கள் உருவாக்கி,  
 மனிதவளம் பெருக்கியதாய்
 கனிம வளங்களைச் சுரண்டி
 நீரின்றி விவசாயம் சாக
 இலவச இணையத் தொடர்பை
 நல்கி
 வேளாண் வளம் சிறந்ததாய்
 ஆளுக்கொரு தொலைகாட்சியில்
 அரசு புகழ் பாடி
 விளம்பரம் செய்தனர்

 ஓட்டுக்காக மக்கள்முன்பு வந்து
 பிறகு நாட்டை விட்டே பறந்துபோன
 ஒரு கிளி -
 கோடிகளைச் சிதறவிட்டுச் செலவு செய்து
 தெருக்கோடியில் இருக்கும்
 மக்களுக்கு
 ஒவ்வொரு முறையும் கொண்டு வருவது
 வெளிநாட்டு முதலீடென
 சளைக்காமல் விளம்பரம் செய்தனர்

 கங்கையாற்றைச் சாக்கடையாக்கி
 வெளிநாட்டு விஷபானங்களுக்கு
 சிவப்புக் கம்பள வரவேற்பளித்து
 பிளாஸ்டிக் வாணிபத்தைப் பெருக்கி
 கையில் ஒரு துடைப்பத்தோடு
 இந்தியாவைச் சுத்தப்படுத்த
 கோரிக்கை வைத்து
 அழகாய் விளம்பரம் செய்தனர்

 ஊழல்வாதிகளின் மத்தியில்
 திண்டாடிக் கொண்டிருக்கும்
 மக்களின் மனவளத்திற்கும்
 உடல்நலத்திற்கும் சிறந்ததென்று
 உள்நாட்டு யோகக்கலைக்கு
 சீனத்துப் பாய்களில் படுத்துக்கொண்டு
 ஒருநாள் விளம்பரம் செய்தனர்

 மந்தைகளாக மாறிக் கொண்டிருக்கும்
 குடிமகன்களில்
 நீதிக்காகப் போராடுபவனை
 வன்முறையாளனென்றும்
 அடக்கு முறையை எதிர்ப்பவளை
 நடத்தை
 பிறழ்ந்தவ ளென்றும்
 தனித்துப் போராடுபவர்களை
 விளம்பரப் விரும்பிகளென்றும்
 நாட்டில் நடப்பது நல்லாட்சி யென்றும்
 நாள்தோறும் விளம்பரம் செய்தனர்

 முற்றிலுமாய் நனைந்திடல்
 வேண்டும்
 வெள்ளமாய் மழைப் பொழிகிறது
 எனும் விளம்பரத்திற்காக 
 காத்திருக்கும் நான், 
 ஒரு
 இந்தியாவின் மகள்!



நன்றி அகல்!
http://www.pratilipi.com/read?id=5928333632077824

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!