Wednesday 12 April 2017

கல்வி கற்க வேண்டிய வயதில் கலவி எதற்கு?

பண்ருட்டியில் திருமணமான 9 நாளில், கணவனுக்கு மண்டையில் முடியில்லை என்று கட்டாயத்திருமணத்தில் வெறுப்புற்று, "பதினெழு" வயது மனைவி இருபத்தெட்டு வயது கணவனைக் கொலை செய்திருக்கிறார்! ஆணுக்கும் பெண்ணுக்கும் நெருங்கிய உறவில் திருமணம் செய்யக்கூடாது, இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் அதிகப்பட்சம் ஆறு வயதுக்கு மேலே இருக்கக்கூடாது என்று மருத்துவத்துறை எத்தனை எச்சரித்தாலும் இது போன்ற திருமணங்கள் நகரத்திலும் கிராமத்திலும் இன்னமும் தொடரத்தான் செய்கின்றன!

பாலியல் உறவுக்கு "இளமையான" பெண் தேடும் ஆண்கள், அதிக வயது வித்தியாசத்தில் மிக விரைவில் அவர்கள் முப்படைந்து விட, பின் தன் இளமையான மனைவியின் மீது சந்தேகம் அடைந்து, இல்லற இயலாமையால் கொலைசெய்யும் செய்திகளுக்கும் குறைவில்லை!

இன்றைய சூழலில் பல்வேறு காரணங்களால் பதினொரு வயதிலேயே குழந்தைகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள், வயதுக்கு வந்ததையே தகுதியாக வைத்துக்கொண்டு அவசரக் கோலத்தில் நடக்கும் திருமணங்கள் ஏராளம்! நாங்கள் முன்பு குடியிருந்த பகுதிக்குப் பின்பக்கத் தெருவில் குடிசைப்பகுதியில் பதினான்கு வயதிலேயே கையில் குழந்தையுடன் திரிந்தச் சிறுமிகளைக் கண்டிருக்கிறேன், அப்படி இளவயதில் ஓடிப்போய்த் திருமணம் செய்த ஒரு சகோதரி, குடிகாரக் கணவனிடம் போராடிக்கொண்டே குழந்தைகளையும் வளர்க்க எங்கள் வீட்டுப்பணிக்காக வந்தப்போது, படிக்கும்

வயதில் திருமணம் ஏன் என்ற கேள்விக்குக் கூறியது இது, "என்னக்கா பண்றது, அப்பன்காரங் குடிச்சிட்டு உருண்டுக்கிடப்பான், அம்மாக்காரிக் கூலி வேலைக்கோ கொளுத்து வேலைக்கோ போய்டும், சத்துணவுக்காக ஸ்கூலுக்குப் போனாலும், எல்லா டீச்சர்களும் எங்கப் படிப்பு மேல அக்கறை எடுத்துப்பாங்கன்னு சொல்ல முடியாது, இங்கேயும் அங்கேயும் ஆடல்பட்டுட்டு இருக்கறப்போ, இந்தப் பில்லக்காப் பசங்க நம்மகிட்ட அக்கறையா பேசுவானுங்க, யாருமே அக்கறை எடுத்துக்காதப்போ, அவனுங்கப் பேசுறது தேனு மாதிரி இருக்கும், சடார்ன்னு ஒருநாள் ஓடிடுவோம், உடம்பு அரிப்புத் தீந்தப்பிறகு சிலபேர் விட்டுட்டு ஓடிடுவானுங்க, சில பேர் கட்டிக்கிட்டாலும், அவனுங்கக் குடிச்சிட்டு, கும்மியடிக்க நம்ம தாலிய அறுப்பானுங்க, அந்தமாதிரி ஏதும் ஆகிடாம என் பொண்ணுங்கள எப்படியாச்சும் கரைசேர்த்துடணும்" என்றார், அந்தப்பெண்ணின் குழந்தைகளை நான் படித்த பள்ளியிலேயே சேர்த்துவிட்டேன், நன்றாகப் படிக்கிறார்கள்

எல்லா அம்மாக்களும் இப்படியே இருந்துவிடுவதில்லை, இளவயதிலேயே திருமணம் செய்துக்கொண்டு தெரிந்தப் பெண்ணொருவர் தன் வயதுக்கு வந்த பன்னிரண்டு வயது மகளுக்கு மிக விரைவில் திருமணம் முடித்துவிட வேண்டும் என்றார், பல சமயங்களில் அவர் தன்னுடைய இளவயது திருமணத்தால் தன் கனவுகள் கலைந்ததென்று வருத்தப்பட்டிருக்கிறார், வருத்தப்படும் தாய்மார்கள் அதே வருத்தத்தைத் தன் பெண்களுக்கும் திணிப்பதுதான் இந்தியச் சமுதாயத்தின் விந்தை!

வயது வித்தியாசம் அதிகம் என்றால், மிக இள வயதிலேயே திருமணம் செய்துவிடும் வித்தையும் நடக்கிறது, இஸ்லாமிய மதத்தில் கண்டது என்றாலும், எல்லா இனத்திலும் இப்போதும் நடக்கும் நிகழ்வுதான் இது. எனக்குத் தெரிந்த இஸ்லாமியக் குடும்பம் அது, மனைவிக்கு வயது பதினெட்டு, கணவனுக்கு வயது பத்தொன்பது, பள்ளியைப் பூர்த்திச் செய்யாத மனைவியைப் படிக்க வைக்க வேண்டும் என்று கணவன் விரும்ப, "நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்" என்று என்னிடம் வந்தார்கள், படிக்க வலியுறுத்தியபோது அந்தப்பெண், "கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சு, இன்னும் குழந்தை இல்லைன்னு எல்லாரும் கேக்குறாங்க(!)" என்று வருத்தப்பட்டார், இல்லற பந்தத்தில் ஈடுபட்டப் பிறகு, படிக்க வேண்டும் என்று துளியும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது அந்தப்பெண்ணுக்கு, பின் ஒரே வருடத்தில் அந்தக் குழந்தைக்கு ஒரு குழந்தைப் பிறக்க, அந்தக் குழந்தையின் மாமியாருக்கும் ஒரு குழந்தைப் பிறந்தது,
"அம்மா அப்பாவுக்குக் குழந்தையை வளர்ப்பது கஷ்டம், தன் தங்கையைத் தன் பிள்ளையைப் போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனைவிக்கு அறிவுறுத்தி அவர்கள் கூட்டுக்குடும்பமாக ஆனார்கள்!

இளவயதிலோ முதிய வயதிலோ பிள்ளைப் பெறுவது கேலிக்குரியது அல்ல, எனினும் எந்த வயதாய் இருந்தாலும், ஒரு குழந்தையைக் கண்ணும் கருத்துமாய் வளர்க்கக் கூடிய உடல் பலமோ, மனபலமோ இல்லாவிட்டால் குழந்தை எதற்கு?
இந்தக் கேள்வி எதனால் எழுகிறது என்ற வினாவுக்கு, அந்தக் குடிசைப்பகுதிப் பெண் சொன்ன பதிலை மீண்டும் படித்துப் பாருங்கள்!

இளவயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு, மனமுதிர்ச்சி இல்லாமல், போதிய விழிப்புணர்வு இல்லாமல் குழந்தைகளை இம்சைபடுத்தும் பெற்றோர்களை நாம் இப்போதும் காணலாம், முதிய வயதில் பிள்ளைப் பெற்றுக்கொண்டு உடல் தளர்ந்து, படிப்புக்காக, மருத்துவத்திற்காக என ஆடல் படும் பெற்றோர்களையும் காணலாம்!

சிறந்த கல்வியும், பகுத்தறியும் அறிவும், மனத்துணிவும் இல்லாத ஆணுக்கும் பெண்ணுக்கும், ஓட்டுப்போட வயது பதினெட்டு என்றும், திருமணத்திற்கு வயது இருபத்தொன்று என்றும் பரிந்துரைக்கும் வயதும் கூட இந்தக் காலகட்டத்தில் சரிதான் என்று சொல்லிவிட முடியாத போது, அதிக வயது வித்தியாசத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் முடிச்சுப்போடுவது, சில தீரா முடிச்சுக்களைத்தான் வாழ்க்கையில் ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும்!

கொலைசெய்த மைனர் பெண், "தன்னைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்துவைத்தார்கள்", என்று சொன்னதை, யாரும் கண்டுகொண்டது போலவே தெரியவில்லை, மைனர் என்றாலும், ஒருவனுக்கு மணமுடித்துவிட்டால் அவள் காலம் முழுக்க அவனின் வதைகளைத் தாங்கியே தீரவேண்டும் என்பது இந்தியச் சமூகத்தின் எழுதப்படாத விதி, "புருஷன் மண்டையில் முடியில்லைன்னு, அவன் திட்டினானு எவளாவது கொலை செய்வாளா?" என்றுதான் இந்தச் செய்தியைப் படித்ததும் எதிர்வரும் விமர்சனம், பதினேழு வயது பெண்ணுக்குப் பிடிக்காத ஒன்றை நிர்பந்திக்கும் போது, சில சமயங்களில் அது கொலையிலும் கூட முடியலாம் என்பதைத்தான் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்!

கல்வி கற்க வேண்டிய வயதில் கலவி எதற்கு? பெண்ணுக்குத் தாயே எதிரியாவது மாற்றப்பட வேண்டுமானால், இந்தத் தலைமுறைக்காவது "சிறந்த" கல்வி அவசியம், அதுவும் "இலவசமாக்கப்படவேண்டும்!"

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!