Wednesday 12 April 2017

வியாபாரிகள் ஆட்சியில்

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்த 2017 வரை மெட்ரோ இரயில் பணியால் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன, ஒருமுறைக்கு பலமுறை தவறுகள் நிகழ்ந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று எதையும் செய்தாற் போலில்லை!
2015 -இன் மத்திய அரசின் புள்ளிவிவரக் கணக்குப்படி, வருடந்தோறும் சாலை விபத்துகள் அதிகம் நிகழும் இடத்தில் முண்ணனியில் இருப்பது தமிழகம்தான், 69059 விபத்துகள், 14 சதவீதம் விபத்துக்கள் தமிழ்நாட்டில் மட்டும்!

தலைக்கவசம், சீட் பெல்ட், சாலை விதிகள் என்று எதையுமே மக்களும் மதிப்பதில்லை, அரசும் வலியுறுத்துவதில்லை, கடுமையாய் அமல்படுத்துவதில்லை!
இன்றைய காலகட்டத்தில் தலைக்கவசம் இல்லாமல் சாலையில் செல்வோரின் உயிர்கள் எல்லாம் யாரோ சிலரின் "ப்ரேக்கின்" கருணையால் தான் தப்பிப்பிழைத்திருக்கிறது!

தேர்தல் நடந்தால், தலைக்கு எத்தனை ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்கவேண்டும், எதைச்செய்து ஓட்டு வாங்கவேண்டும், யார் எந்தத் தொகுதியில் நிற்க வேண்டும், எந்தச் சாதி, எத்தனைப்பேர் என்று இந்தக் கட்சிகள் சேகரிக்கும் புள்ளிவிவரங்களில் காட்டும் முனைப்பை ஆட்சிக்கு வந்தப்பிறகு மக்கள் பணியில் காட்டுவதேயில்லை, வந்தப்பிறகும் கூட எந்தத்துறையில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்றே கணக்கிடுகிறது, காசுக்கொடுத்து ஓட்டு வாங்கும் ஒருவன் "வியாபாரி"என்று இந்த மக்கள் உணர்வதேயில்லை, வியாபாரியிகள் எதையும் "சும்மா" என்று செய்துவிடுவதில்லை!

இந்த வியாபாரிகள் ஆட்சியில் "ஆய்ந்தறிதல்" என்பதெல்லாம் "பண வரவுக்கேயன்றி" "மக்கள் நலனுக்காக அல்ல!"
நாட்டில் ஒரு சாரார் அணு வேண்டாம், மீத்தேன் வேண்டாம் என்று அலறுவதற்கும் இதுவே காரணம்! மோசமான அரசியல்வாதிகளை மக்கள் உணர்ந்து தெளிய இன்னும் நூற்றாண்டுகளாகும், தெளியாமல் இருக்கவே போதை, எனினும் இயற்கைத் தெளிந்துவிட்டதன் அடையாளமே வறட்சி!
இதைத்தான் வள்ளுவர்;

"துளிஇன்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே; வேந்தன்
அளிஇன்மை வாழும் உயிர்க்கு."

(மழைத்துளி இல்லையேல் உலகம் எத்தகைய துன்பம் அடையுமோ, அத்தகைய துன்பத்தை மக்கள் அருள் இல்லாத ஆட்சியினால் அடைவார்கள் என்கிறார்! )

நம்மை பொருத்தவரை மழையும் இல்லை, அருளும் இல்லை, நாள்தோறும் விபத்துக்களும் போராட்டங்களுமே!

"முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்"

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!