Wednesday 12 April 2017

கீச்சுக்கள்

பணமதிப்பிழப்பு விவகாரத்தில் சிறுவாடுகளைச் சுரண்டிய அரசு, இப்போது ஆர் கே நகரில் கோடிகளில் கொட்டப்படும் புது ரூபாய் தாள்களுக்கு எந்தக் கணக்கு வைத்திருக்கிறது? சேர்த்தப் பணத்தை வங்கியில் இருந்து எடுக்க அளவும், அதற்கு வரிகளும் விதிகளும் விதித்த வங்கிகளில் எந்த வங்கியில் இருந்து இவர்களுக்கு மட்டும் இத்தனை கோடி நோட்டுக்கள்? நாசிக்கில் இருந்து நேராகவே வந்துவிட்டதோ? இதைப் பற்றியெல்லாம் கைநீட்டிப் பிச்சை வாங்கும் மக்களுக்கும் கவலையில்லை, ஊழல் பணத்தைக் கொட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கவலையில்லை, வரிகளைக் கொட்டிக்கொடுத்துவிட்டு இன்னமும் நல்லது நடக்கும் என்று நம்பி இதே ஓட்டை தேசத்தில் விழிபிதுங்கி நிற்கும் மக்களுக்குத்தான் அத்தனை கவலையும்!
#RKNagar #Election2017 #Tamilnadu

இந்தியாவில் இருக்கும் தண்ணீரை எடுத்து சுத்திகரித்து இந்தியர்களுக்கே விற்கும் அமெரிக்க நிறுவனங்கள், மக்களுக்கு சுத்தமான நீரைக்கூட கொடுக்க முடியாத கையாலாகாத அரசு, குடிக்கும் தண்ணீரை எடுத்துப்போகாமல் தண்ணீர் பாட்டில் வாங்கி பிளாஸ்டிக் கழிவுகளை சேர்க்கும் மக்கள், தண்ணீரை காசாக்கும் திருடர்கள், தண்ணீரில் முதலீடு செய்திருக்கும் பண முதலைகள், காடழித்துக் கொண்டிருக்கும் சாமியார்கள், எல்லாவற்றிலும் பயனடையும் அரசியல்வாதிகள், எங்கே போகிறது இந்த தேசம்? ஒரு மாபெரும் தண்ணீர் யுத்தத்திற்கு உலகம் தயாராகிறது!
மரம் வெட்டுவது, கருவேலங்களை அகற்றாமல் பாதுகாப்பது, உயிர்களைக் கொல்லுவது, தண்ணீர் விற்பது, பிளாஸ்ட்டிக் கழிவுகளைச் சேர்ப்பது, தண்ணீரை வீணாக்குவது, தனியாருக்கு தாரை வார்ப்பது, குடிக்க நீரில்லாவிட்டாலும் கோக்குக்கும் பெப்ஸிக்கும் ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்படுவது, சாராயத்துக்கு ஆதரவாக அரசு அரணமைப்பது இதெல்லாம் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்ல, வருங்கால சந்ததியினரின் பிரச்சனை! முன்னோர்கள் ஏற்படுத்திய நீர்நிலைகளை அழித்துக்கொண்டிருக்கும் இந்த தேசத்தை முயன்று நின்று தடுக்காவிடில் மற்றுமொரு சோமாலியாவாக இந்தியா மாறும், அம்பானிகளும் அதானிகளும் அப்போது நிச்சயம் "பியோ" என்று தண்ணீரை இலவசமாக தர மாட்டார்கள்!

****

ஒரு பாரளுமன்ற உறுப்பினரை, குறைந்தபட்சம் ஒரு வார்டு கவுன்சிலரை, தரக்குறைவான சேவை அளித்ததற்காக, அல்லது தொடர்ந்து செய்யும் ஊழலுக்காக, பொது மக்களில் யாரவது ஒருவர் அடித்திருந்தால், பாஜகவின் இந்தப் பாராளுமன்றம் அமைதியாய் இருந்திருக்குமா? இந்நேரம் அவர் தேசத்துரோகியாக, அல்லது கஞ்சா வைத்திருந்த குண்டனாக உருவகம் செய்யப்பட்டு....முடித்துவைக்கப்பட்டிருப்பார்! ஆனால் சேனா எம்பி????!
இதுதான் மத்திய அரசின் மக்களாட்சி, சேனா எம்பி யாரையும் செருப்பால் அடிக்கலாம், இங்கே மக்கள் இலவசம்!
***

தவற விட்ட அழைப்பின் பட்டியல் பார்த்து, ஓர் எண்ணை அழைத்தேன், "நீங்கள் தொடர்பு கொண்ட (!) வாடிக்கையாளர் "இப்பொலுது" "வேற காலில்" இருக்கிறார், நீங்கள் பிறகு கால் செய்யவும்!" அதைத்தொடர்ந்து ஆங்கிலம் பிறகு இந்தி, அதெல்லாம் தெள்ளத்தெளிவாக!
முதன்முதலாகத் தொலைத்தொடர்பில் இப்படி ஒலிக்கும் தமிழ்க்குரலை கேட்க நேர்ந்தது, ஒருவழியாய் எண்ணுக்குரியவரைக் அழைத்து அந்தத் தேமதுரத் தமிழோசையைத் தந்த, தொலைத்தொடர்பு அலுவலகம் எது என்று விசாரிக்க, "ரிலையன்ஸ்" என்றார்!
ரிலையன்ஸ், பொருட்களை மட்டுமல்ல மொழியையும் "மலிவாகவே" வழங்குகிறது! :-p
#Reliancetelecom #Reliancetelecomrecordedvoice #Tamizh

****

தலிபான்களுக்கும், காவி தீவிரவாதிகளுக்கும் ஆடையும் மதமும் மட்டுமே வித்தியாசம்!

***

மரணமும் விடுதலைதான் நமக்கு நேரும்போது!

****

"நீங்கள் தாக்கல் செய்த கணக்கின்படி நீங்கள் அதிகப்படியான வரி கட்டவேண்டியதில்லை, ஆனால் வேறொரு தாக்கலின்படி நீங்கள் "உடனடியாக" அதிகப்படியான வரியை செலுத்தவேண்டும்", எட்டு மாதத்திற்கு முன்பும், இரண்டு மாதங்களுக்கு முன்பும் வருமான வரித்துறைக்கு விளக்கம் சொல்லி எழுதிய கடிதங்களுக்கும், இமெயில்களுக்கும், நேரில் சென்று கொடுத்த ஆதாரங்களுக்கும் எந்த உபயோகமுமில்லாமல், அதே பழைய பல்லவியை எட்டு மாதங்கள் கழித்து, ஒரு கடிதத்தில் முடித்துக்கொள்கிறார் ஒர் அதிகாரி, அவர் எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டு, நமக்கு "உடனடியாக" என்று அவகாசம் தருகிறார்கள்!
இவருக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கு (இன்கம்டேக்ஸ் கமிஷனர்) இமெயில் அனுப்பி, ஒரு வாரமாகிறது, இதுவரை பதிலில்லை, வேதாளத்தைப் பிடிக்க விடாது முயற்சித்த விக்கிரமாதித்தன் போல, தவறான வரியைத் திருத்துமாறு மீண்டும் நேரில் சென்று உயரதிகாரிகளைப் பார்க்க வேண்டும்!
இந்தத்துறை என்றில்லை எந்தத்துறையிலும் அரசு ஊழியர்களுடன் இப்படித்தான் மல்லுகட்ட வேண்டியிருக்கிறது! டிஜிட்டல் இந்தியாவில் இந்த மனிதர்களுக்குப் பதில் எந்திரங்களைப் பணியில் அமர்த்திவிடலாம், அந்த எந்திரங்கள் வேலையும் செய்யும், செய்யாத வேலைக்கு ஊதிய உயர்வும் போனஸும் கேட்டுப் போராடாமலும் இருக்கும்! இந்த மெத்தனமான ஊழியர்களை மாற்றாமல் சூப்பர்சோனிக் கம்யூட்டரைக் கொண்டு வந்து நிறுவினால் கூட இந்தியா டிஜிட்டல் இந்தியா ஆகவே ஆகாது!
முதலில் டிஜிட்டல் இந்தியாவில் அரசாங்க அதிகாரிகளுக்கு மக்கள் அனுப்பும் இமெயில்களை படிக்கவும் முறையாக பதில் சொல்லவும் கற்றுத்தரட்டும் இந்த அரசு!
#Incometax #DigitalIndia

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!