Thursday, 19 September 2013

யாதுமாகி


யாரோ யாரையோ
தினம் கடந்து
போகிறார்கள்
சிலரும் பலருமாக

சிலர் முகம் பார்க்க
மறுக்கிறார்கள்  
பலர் குரல் கேட்கத்
தவிர்க்கிறார்கள் 

சிலர் பார்த்து விடத்
துடிக்கிறார்கள்
பலர் பழகிய பின்
மறைகிறார்கள் 

சிலர் நம்பிக்கையை
விதைக்கிறார்கள் 
பலர் நயவஞ்சகம்
புரிகிறார்கள்  

சிலர் அறிந்தபின்
பிரிகிறார்கள் 
பலர் அறியாமலேயே
தொடர்கிறார்கள்

சிலர் கேட்டதும்
ஒளிகிறார்கள்
பலர் கேட்காமலே
அருள்கிறார்கள்

சிலர் மருந்தைத் 
தருகிறார்கள்
பலர் மருந்தாய்
அமைகிறார்கள்

சிலர் புறமுதுகில்
சாய்க்கிறார்கள்
பலர் பொன்னாய்
காக்கிறார்கள்

சிலர் கண்ணீரில்
நனைக்கிறார்கள்
பலர் செந்நீரையும்
துடைக்கிறார்கள்

சிலர் மலராய்ப்
பூக்கிறார்கள் 
பலர் புயலாய்ச்
சாய்க்கிறார்கள்

பலரும் சிலரும் -
பார்த்துப் பழகிய
சில பல வேளைகளில்
அன்பைக் கடத்தி
அனுபவம் சுமத்தி
எதிர்பாரா ஏதோ
ஒரு தருணத்தில்,
பலர் யாரோவாகிப்
போகிறார்கள்
சிலர் யாதுமாகி
நிற்கிறார்கள்!

1 comment:

  1. உண்மைகள்...

    முடித்ததும் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...