Friday 30 May 2014

அப்பா சொன்னது!

அப்பாவின் மூலமே புத்தகங்கள் அறிமுகம், எந்த மேடைப் பேச்சிற்கு முன்பும், அப்பாவிடமே ஒரு பட்டிமன்றம் நிகழும், பெண் என்று வம்பிழுத்து, என்னைத் தூண்டி வெற்றிப் பெறச் செய்தவர் என் தந்தையே, என்னுடைய ஒவ்வொரு பரிட்சையிலும் விழித்திருந்தவர் அப்பா, பல்வேறு காலகட்டங்களில் ஒரு ரௌடியைப் போல வளர்த்து விட்டிருக்கிறீர்கள் பெண்ணை என்று வந்த அத்தனை புகார்களையும் என்னைக் குறையே சொல்லாமல் சமாளித்தவர் அப்பா. அத்தனை நண்பர்களையும் தோழிகளையும், விலங்குகளையும், பறவைகளையும், உறவினர்களையும் அரவணைத்தது அந்த இதயம், வறுமையிலும் செம்மைக் காத்தவர் அம்மா! இன்று முழுக்க நான் கடந்த நல்லவர்களைப் பற்றிய எண்ண ஓட்டம்....நல்லவர்களின் கைபிடித்து நடந்து இருக்கிறேன் தெரிந்தோ தெரியாமலோ......இன்று ஒரு தோழனாய் என் அப்பாவிடம் இருந்து கேட்ட வரிகளில் சில

1.தைரியம் மனித லட்சணம், அது புருஷ லட்சணம் என்று சொல்வதை விட!

2.தன் கையே தனக்குதவி!

3.முன்னேற்றத்தின் முதல் எதிரி, சோம்பல்! 

---------------------------------------------------------------------------------------------------------------------
காதலைப் பற்றி, நான் காதலிக்கும் முன்பு;
------------------------------------------------------------------
எதையும் மாற்றி விட முடியும் என்று எண்ணாதே, மான் தன் இணையாய்ப் புலியைத் தேடினால், அது மானின் தவறே அன்றி, புலியின் தவறு அல்ல! புலிகள் மானுக்காகத் தன் வரிகளை எப்போதும் மாற்றிக் கொள்ளாது, அது தன் பசிக்குப் புசிக்க மட்டுமே வரும்!

மனதின் நிறத்தைக் கண்டு வரும் காதலே நிலைக்கும்!  

-------------------------------------------------------------------------------------------------------------------
சாதியைப் பற்றி;
------------------------
பகிர்பவன் மேல் சாதி, பதுக்குபவன் கீழ் சாதி! அவ்வளவே சாதி ராசாத்தி! 

----------------------------------------------------------------------------------------------------------------
தர்மத்தைப் பற்றி/ உதவியைப் பற்றி / அன்பைப் பற்றி;
------------------------------------------------------------------------------
1.கன்னம் இடுவது மட்டும் திருட்டல்ல
இருக்கும்போது இல்லை என்று சொல்பவனும் திருடன்தான்!

2. பொருள் இருப்பவன் அல்ல, மனம் இருப்பவனே கொடுப்பான்!

3. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பதைக் கொடுத்து விட்டுச் சென்று கொண்டே இரு, எதிர்பார்த்து நின்றால் தேங்கி விடுவாய், ஏமாந்துப் போவாய்! 

-----------------------------------------------------------------------------------------------------------------------
   

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!