Wednesday 1 April 2015

கடைசி நேர மனிதர்கள்!

angel,forest,beauty,girl
என் வலப்புறம்,
யாரோ ஒருத்தியின் கணவன்,
மனைவியின் விரல்களுக்கு முத்தமிடுகிறான்,
என் இடப்புறம்
யாரோ ஒருவனின் மனைவி
கணவனின் தலைமுடி கோதுகிறாள்,
என் இடப்புறத்தின் கடைகோடியில்
யாரோ ஒரு காதலன்
நீலம்பாரித்த காதலியின்  இதழ் வருடுகிறான்,
என் எதிரே நான் முகம் பார்த்திடாத
அந்தக் குழந்தைக்குப் பொம்மைகள் தருகிறார்கள்,
என் முதுகுக்குப் பின்னால்
ஏதோ ஒரு முதியவளுக்குப் பால் ஊற்றுகிறார்கள்!!!
 
ஆமாம் உங்கள் யூகம் சரிதான்,
நான் இடுகாட்டில் இருக்கிறேன்
என்னிடம் ரகசியங்கள் ஏதுமில்லை,
இன்னும் சற்றுநேரத்தில் பிரியப்போகும்
இந்த உயிரின் உடலை கிடத்திவிட்டுப் போக வந்தேன்
நான் யட்சிணி, மரணங்களைக் கடந்து இன்று
மரணிக்க வந்தேன்,
நீங்கள் நம்ப மறுத்து நகைக்கிறீர்கள்,
நல்லது,
சுற்றி எழும் இந்த ஆன்மாக்களின் 
சிரிப்பொலியாவது  உங்களுக்குக் கேட்கிறதா?

வாழும்போது தராத எதையும்
இறுதியாய் ஒருமுறை என்பதால் மட்டுமே
நீங்கள் தருவதாய்ச் சொல்கிறார்கள்,
உங்கள் முத்தங்களையும் பரிசுகளையும்
மாலைகளையும் கண்ணீர்த்துளிகளையும் தர 
இது கடைசிநாள் என்பதால் மட்டுமே
தருவதற்குச் சிரமேற்கொண்டு
வந்திருப்பதாய் நினைக்கிறார்கள்,
உங்களுக்குத் தர,
அவர்களிடம் இப்போது ஏதுமில்லாததால்
உங்கள் முத்தங்களையும் பரிசுகளையும்
மாலைகளையும் கண்ணீர்த்துளிகளையும்
நாளை வரும் ஏதோ ஒரு மரணத்திற்கு
உங்களுக்கு உதவுமென்று
எடுத்துசெல்ல வேண்டுகிறார்கள்,
அவர்களின் பரிசாய்
சில நல்வார்த்தைகளைப் பிறருக்கேனும்
தரச் சொல்கிறார்கள் !!!
இதையும் கூட
நீங்கள் நம்பவில்லையென்றால்,
இங்கே நின்றுக்கொண்டு, கடைசி நேரத்தில்
காதல் செய்பவர்களையும் கண்ணீர் விடுபவர்களையும்
கொஞ்சம் அரவணைத்து அழைத்துச் சொல்லுங்கள் 
எப்போதோ இறந்துவிட்டு - இப்போது
வந்திருக்கும் வெறும் உடல்கள்தாமே அவைகள்?!
 


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!