Tuesday 21 February 2017

அவரவர் குழந்தைகள்

மைலாப்பூரில் ஒரு பாத்திரக்கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு, வெளியில் வந்தால், ஒரு ஹோண்டா ஆக்டிவா மீது இரண்டு வயது கூட நிரம்பாத ஒரு பாலகன் ஏறி உட்கார முயற்சித்துக் கொண்டிருந்தான், வாகனத்தின் அந்தப்பக்கம் பேருந்துகள் சென்று கொண்டிருந்தது! "யார் பையன்" என்று எல்லோரிடமும் கேட்க, கடையின் முதலாளி வெளியில் வந்து, "கடைக்கு வந்த யாரோட குழந்தையாச்சும் இருக்கலாம், இருங்க கேக்குறேன்" என்று செல்ல, அந்தக்குழந்தைத் திமிறிக்கொண்டு அப்படியும் இப்படியும் ஒட, ஒருவழியாய் ஒருவர் சாவகாசமாய் வந்து, "இவனை நான் அங்கே தானே இருக்கச் சொன்னேன், இங்கே தெருவுக்கு எப்படி வந்தான்?" என்று என்னிடம் கேட்டுக்கொண்டே பதிலை எதிர்பார்க்காமல் குழந்தையைத் தூக்கிச்செல்ல, "ஹலோ சின்னக்குழந்தையை ஒரு இடத்துல உட்கார்ன்னு சொன்னா உட்கார்ந்துக்குமா? பஸ் போற ரோட்டில் இப்படி விடலாமா, பார்த்துக்கங்க" என்று சொல்ல, அந்த மனிதனுக்கு அத்தனை நேரம் சாலையின் குறுக்கே ஓடிவிடாமல் குழந்தையைப் பிடித்துவைத்து, தந்தையைத் தேடி ஒப்படைத்த நன்றியுணர்ச்சி இல்லையென்றாலும் கூடப் பரவாயில்லை, இனிமேலும் ஜாக்கிரதையாய் இருப்பார்கள் என்ற நம்பிக்கையைக் கூடத் தரவில்லை!

நம்மை மீறி, குழந்தைக் கடத்தலோ விபத்தோ நடக்கும்போது ஒன்றும் செய்ய இயலாது, ஆனால் அலட்சியத்தால் நடக்கும் விபரீதங்கள் வாழ்நாள் துயரத்தைத் தரும்!

கடைகளில் பொருட்களை வாங்கும்போது, கடற்கரையில் காற்றுவாங்கும்போது எதைத் தொலைத்தாலும் நீங்கள் வாங்கிவிடலாம், குழந்தைகள் அப்படியல்ல, அவர்களின் கையைப் பிடித்துக்கொள்வதில் அப்படியென்ன அசௌகரியம் வந்துவிடப் போகிறது? பிள்ளைகளைப் பக்கத்துவீட்டிற்கு, எதிர்த்த வீட்டிற்கு, வெளியில் தெருவில் என்று விளையாட விட்டுவிட்டு நம் வேலைகளிலோ, சீரியல்களிலோ மூழ்கிவிட்டு, பிறகு "ஐயோ அம்மா!" என்று ஆர்ப்பாட்டம் செய்வதில் என்ன பயன்?

கடைத்தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு, குழந்தையை வண்டியின் மீதே உட்காரப் பணித்துவிட்டு, கடைக்குச் செல்லும் மனிதர்களைக் கண்டிருக்கிறேன், ரெண்டு நிமிஷம்தான் என்று கூறும் சப்பைக்கட்டுகள்தான் வாழ்நாள் சோகத்தைத் தருகின்றன! குழந்தைகளைக் கவனிக்க முடியாவிட்டால், குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருந்துவிடலாம்!
அவரவர் குழந்தைகள், அவரவரின் அக்கறை! வேறு என்ன சொல்ல!?

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!