Friday, 30 November 2012

இறுதியில் தொடங்கும் முதல்!


 ஒருமுறை.........................
அம்மாவின் மடியில் தலை சாய்த்திருக்கலாம்
அப்பாவின் தோழமையில் கரைந்திருக்கலாம்
தங்கையின் பாசத்தில் வாழ்ந்திருக்கலாம்
மனைவியின் நேசத்தில் மகிழ்ந்திருக்கலாம்
கணவனின் நெருக்கத்தில் கலந்திருக்கலாம்
குழந்தையின் அரவணைப்பில் மலர்ந்திருக்கலாம்
தோழமையின் நிழலில் நின்றிருக்கலாம்
காதலின் கனவை விதைத்திருக்கலாம்
கனிவாய் அவன் / அவள் கரம் பற்றியிருக்கலாம்

தன்னுயிர் போகும்முன்னே
பிற உயிர் போனபின்னே
ஒருமுறை ஒருமுறை - என
பலமுறை  நினைத்து - மனம்
ஒன்று மாய்ந்து போகிறது

சாகும் வரை வாழாத வாழ்க்கையை
சாகையில், பிணமாய் போகையில்
வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது
வாழ வைக்கத் தவிக்கிறது
உணராத அன்பையெல்லாம் உணர்ந்து
கண்ணீர் இங்கே வடிக்கிறது

அன்பில்லாமல் கடந்த வாழ்க்கையை,
மரத்து போய் மறித்து போன உயிரை,
தாராத அன்பு கொண்டு, தந்து விட முடியுமா?
வாராத அழுகை கூட்டி, வரச் செய்ய இயலுமா?

பூக்கள் காயும்முன் கண்ணீர் காய்ந்து விடும்
நாட்கள் போகும் முன் ஞாபகம் போய் விடும்

வாழும்போது வாழ்க்கையை வாழ்ந்து விட்டே சாகட்டும்..
நல்ல நினைவுகளால் உயிர் ஒன்று கூடு விட்டு போகட்டும்! 

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...