Monday 21 March 2016

குழந்தை வளர்ப்பு, மாபெரும் பொறுப்பு!

இன்று மைலாப்பூர் சாய்பாபா கோவிலை விட்டு வெளியே வரும்போது ஒரு குடும்பம் தன் ஒன்றரை வயது பெண் குழந்தையைக் கோவிலிலேயே மறந்து (!) விட்டு விட்டு சென்று விட்டனர்.
யாரோ ஒரு தம்பதி தனியே இருந்த அந்தக் குழந்தையை தன் மகள்தான் அழைத்துக் காட்டியதாகவும், "இது உங்கள் குழந்தையா" என்று என்னிடமும் வேறு சிலரிடமும் கேட்டுக் கொண்டிருந்தனர். குழந்தையின் கையில் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன், குழந்தையின் கழுத்து, கைகள், காதுகளில் தங்க நகைகள்(!).

சிறிது நேரம் நாங்கள் ஒவ்வொருவராய் கேட்டுக் கொண்டிருக்க, கொஞ்ச நேரத்தில் அந்தக் குழந்தையின் சித்தப்பா என்று ஒரு இளைஞர் வந்தார், "அம்மாவை கூப்பிடுங்கள்", என்று சொல்ல, நாலைந்துப் பெண்களுடன் அந்த ஆணும் என ஒரு குடும்பமே உள்ளே வந்தது, ஒருவர் முகத்தில் கூட, குழந்தையைத் தொலைத்த பதட்டமோ வருத்தமோ இல்லை, "என் குழந்தைதான், கவனிக்காமல் விட்டு விட்டோம்" என்று சதாரணமாகச் சொல்லி குழந்தையை வாங்கிக் கொண்டார் அப்பெண்மணி! 

"ஏம்மா குழந்தை விஷயத்தில் இவ்வளவு அஜாக்ரதையா இருக்கலாமா, அதுவும் இவ்வளவு நகைகளைப் போடலாமா?!" என்று ஒவ்வொருத்தர் சொன்னவைகளையும் அவர்கள் காதில் வாங்கினதுப் போலவே தெரியவில்லை!

குழந்தையும் அழ, உண்மையில் அவர்கள்தான் சொந்தமா என்று சந்தேகம் எழ, குழந்தையை பாதுகாத்த அங்கே நின்றிருந்த ஒரு தகப்பன் அவர்கள் பின்னேயே சென்று பார்த்து விட்டு வந்தார்!

அவர்கள் உணர்வு எப்படிப்பட்டது என்பதை விட்டுவிடுவோம், எனினும் சில விஷயங்களை கருத்தில் கொள்ளுங்கள்;

குழந்தையின் பாதுகாப்பு எங்கு சென்றாலும் முக்கியம், குழந்தையின் கைகளை விட்டுவிடாதீர்கள், உங்கள் பார்வையிலேயே அவர்கள் இருக்க வேண்டும் வீடு என்றாலும் பொது இடங்கள் என்றாலும்!

குழந்தையே பெரும் செல்வம், அச்செல்வத்திற்கு பொன் நகைகள் எதற்கு? அப்புன்னகைக்கு முன் எந்தப் பொன் நகையும் மின்னுவதில்லை! ஆசைக்காக நகைகள் அணிவித்தாலும், இது போன்ற பொது இடங்களிலும், பள்ளிக்கு அல்லது விளையாடப் போகும் போதெல்லாம் அவைகள் எதற்கு?

பணத்தையோ நகையையோ நீங்கள் மீட்டு விடலாம், உங்கள் குழந்தையைத் தொலைத்துவிட்டால்...? வேண்டாம், யோசிக்கவே வேண்டாம், பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள் உயிருள்ள செல்வத்தை!

ஸ்மார்ட் போனோ அல்லது வேறு எந்த போனோ குழந்தைகளுக்கு அவை எதற்கு, பதினான்கு வயது வரை செவியின் உள்ளூருப்புகள் வளர்ச்சிபெறும் நேரத்தில், கைப்பேசிகளுடனான விளையாட்டு குழந்தைகளுக்கு தீங்கையே தரும்!

குழந்தை வளர்ப்பு, மாபெரும் பொறுப்பு, பார்த்துக் கொள்ள வேண்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!