Tuesday 16 December 2014

தீவிரவாதிகளே!

 
திருநீறு,
குங்குமம் இடுவதை
நிறுத்திக் கொள்கிறோம்

சிலுவை சுமப்பதை
மண்டியிடுவதை
மறந்து விடுகிறோம்

ஐந்து வேளை தொழுகை
என்பதை - குரான்
படிப்பதைத் துறந்துவிடுகிறோம்

நீங்கள் வகுத்து வைத்த 
மத அடையாளங்களை
விட்டுவிட்ட பிறகாவது
உங்களுக்கு
நாங்கள் மனிதர்கள் என்று
கண்டுகொள்ள முடியுமா
மதவாதிகளே?
உயிர்க்கொல்லும்,
பிள்ளைத் தின்னும்
தீவிரவாதிகளே?

எங்களின் மேல்
வெறுப்பை உமிழச் சொன்னவன்
சிவனும் என்றால், அவனும் வேண்டாம்,
பிரிவினை வளர்க்கச் சொன்னவன்
விஷ்ணுவும் என்றால் அவனும் வேண்டாம்,
அணு ஆயுதத்தில் உலகை அழிக்கச் சொன்னவன்
கர்த்தரும் என்றால் அவனும் வேண்டாம்,
உயிர்வதைச் செய்யச் சொன்னவன்
நபிகள் என்றாலும் அல்லா என்றாலும்
அவனும், எவனும் வேண்டவே வேண்டாம்!

இருப்பது ஓர் உலகு
வாழக் கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை
இதில் நீவிர்
காணாத கடவுளுக்காக
காக்காத மதத்துக்காக
எம்பிள்ளைகளை உண்பீர்களா?
அல்லது புல்லும் பூண்டும் வாழும்
உலகில் - எம்மையும்
பயமின்றி வாழ விடுவீர்களா?!

இப்படித்தான் மதம் என்றால்
இதுதான் உங்கள் கடவுள் என்றால்
உயிர் பலி கேட்கும்
உங்கள் காட்டுமிராண்டி
மதங்களும் கடவுளர்களும்
நாசமாய்ப் போகட்டும்!

 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!