Monday 3 June 2013

குருதியின் ஒரே நிறம்!



பொன்னும் பொருளும் பூட்டி,
இரும்பு வேலியும் அமைத்து,
காத்திடு என்று கடவுளை
வேண்டி நின்றோம்!

பாலும், வெண்ணையும்
சாற்றி - தேனும் நெய்யும் ஊற்றி
பசியின் குரலை புறந்தள்ளி
வெறுமையை வேண்டித்  தின்றோம்!

நித்தம் தொழுது - சரித்திரம் போற்றி
பிறர் ரத்தத்தில் திளைக்கிறோம்
படைத்தவன் ஒருவனே எனச் சொல்லி
சக மனிதனை வெட்டிச் சாய்க்கிறோம்!

பாவம் மன்னித்து - பணம் இறைத்து,
மந்தையில்  ஆடுகள் சேர்த்தோம்
வறுமையை ஏய்த்து - தேவனின் பெயரில்
கல்விக் கொள்ளை கலாச்சாரக் கொலை தொடர்கிறோம்!

எல்லாம் துறந்து போனவனை
தொழுது - ஏதும் துறக்க இயலாமல்
கொன்று குவித்தோம் - காவி உடையின்
கறையில், சிசுவின் ரத்த சிகப்பு சேர்ந்தே அணிந்தோம்!

வனங்களில் திரிந்து சிலைகளில் பிரிந்து
மதங்களில் வகுத்து அறிவினை கெடுத்து 
சாதியில் சிதைந்து உயிரினை கொடுத்து
எதைத் தேடுகிறோம்? - எந்த  உயிர்
இழந்த பின் தெரியும் - பெருகி வரும்
குருதியின் ஒரே நிறம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!