Monday 7 April 2014

கடவுள்!

வலி தெரியாத வயதில்
பசிக்கு அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

வன்கொடுமைக் கடக்கையில்
வலியில் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

கல்வித் தொலைத்த வேளையில்
கவலையில் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

காதல் மறந்த பொழுதினில்
விடுதலையில் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

சுயம் மரித்த நேரங்களில்
இயலாமையில் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

சிறைப்பட்ட வாழ்க்கைச் சிக்கலில்
தாளாமல் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

நம்பிக்கை நசிந்த நாட்களில்
தோல்வியில் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

துணை இல்லா பயங்கரத்தில்
துயரினில் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

உயிர் தின்னும் பிணியினில்
அச்சத்தில் அழுதிருக்கலாம்
உன்னை அழைத்திருக்க மாட்டேன்

எப்போதும் அழவில்லை
என் கண்ணீர் நீ காணவில்லை,
வலிகள் பழகியப்பின்
ஊன்றுகோலும் தேவையில்லை!
அட,
இன்னும் நான் தோற்கவில்லை
எப்போதும் சுயத்துடன் ஒளிந்து
கொண்டிருக்கும் கடவுள் உன்னிடம்!



No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!